யோசித்து பார்த்ததில் கணவன் சொன்னதில் உண்மை இருப்பதாகவே பட்டது அவளுக்கு. இனி கவனமாக பேச வேண்டும் என நினைத்துக்கொண்டாள். 

அவன் குளித்து வரும் போது காபி வரவழைத்திருந்தாள். என் மீது தவறில்லாமல் ஏன் திட்டினாய் என்றெல்லாம் அவன் கேட்கவில்லை. எதுவும் நடக்காதது போல சாதாரணமாக இருந்தான். திரும்ப செல்வதற்கு இன்றைய இரவு பேருந்துக்கே டிக்கெட் புக் செய்திருந்தான். 

“உனக்கு பஸ் வசதி படாது, இன்னிக்கு நைட் இங்கேயே ஸ்டே பண்ணிட்டு, காலைல ட்ரெயின்ல போலாமா?”எனக் கேட்டான். 

தேனுக்கும் ஓய்வு மிக மிக தேவையாக இருந்தது. இப்போது ஓரடி கூட எடுத்து வைக்கும் மன நிலையில் இல்லை அவள். தன் நிலை புரிந்து தனக்காக பயணத் திட்டத்தை அவன் மாற்றியமைத்ததில் அவளது நெஞ்சம் இதமாக உணர்ந்தது. அவனது யோசனைக்கு உடனே சரியெனவும் சொல்லி விட்டாள். 

மனைவியை ஓய்வெடுக்க சொல்லி விட்டு, மகனை அவனே முழுக்க முழுக்க கவனித்துக் கொண்டான். 

நன்றாக உறங்கி எழுந்தாள் தேன். லேப்டாப்பில் ஏதோ வேலையாக இருந்தவன், “நாங்க சாப்பிட்டாச்சு, நீயும் சாப்பிட்டு படு” என்றான். 

தருண் உறங்கி விட்டான். 

“எனக்கு பசியே இல்லை, நான் அப்படியே தூங்க போறேன்” என படுத்துக் கொண்டே சொன்னாள். 

அவனுக்கு முன்னெப்போதோ பழக்கமான ஒருவர் சிறந்த மென்பொருள் நிறுவனத்தில் நல்ல பணியில் இருக்கிறார். அவரின் வழிகாட்டுதல் படி அந்த நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பித்திருந்தான்.  நாளை காலை பத்து மணிக்கு காணொளி மூலமாக இன்டர்வியூ நடக்கும் என செய்தி வந்திருந்தது. 

வேலை கிடைக்கும் முன் மனைவியிடம் சொல்லி ஏதாவது கோளாறு என்றால் ஏமாந்து போவாள் என்பதால் அப்போதைக்கு சொல்லவில்லை. இரவு உறக்கத்தை கெடுத்துக் கொள்வாள். காலையில் சொல்லிக் கொள்ளலாம் என நினைத்தான். 

தன்னையே பார்த்துக் கொண்டிருந்த மனைவியை உற்று பார்த்தான். கோவம், இறுக்கம், வருத்தம் என எந்த வித எதிர்மறை பாவனைகளும் இல்லாத நிர்மலமான முகம். 

“நடு ராத்திரில பசிக்கும், கொஞ்சமா சாப்பிடு” என்றான். 

அவள் வேண்டுமென்றே சாப்பிட மறுக்க, பொறுமையாக சொல்லிப் பார்த்தவன் பின் அமைதியாக மீண்டும் லேப்டாப்பில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான். 

என்ன நடந்தாலும் குரல் உயர்த்தி சண்டையிட தெரியாதவன், அவனது முகம் மட்டுமல்ல குரலும் சாந்தமாகத்தான் இருக்கும். அவனிடமிருக்கும் குறைகளை ஒதுக்கி வைத்து விட்டு நிறைகளை சீர் தூக்கி பார்த்து அவற்றை பட்டியல் போட்டுப் பார்த்தாள். 

நான் எதிர்பார்க்கிற சில அம்சங்கள் இல்லைனாலும், நான் எதிர்பார்க்காத மத்த ஆண்கள்கிட்ட எளிதா பார்க்க முடியாத சில அம்சங்கள் இவர்கிட்ட இருக்கத்தான் செய்யுது, பரவாயில்லை அம்சமானவர்தான் இவரும் என நினைத்தவளுக்கு சிரிப்பு வந்து விட்டது. 

எதேச்சையாக அவள் பக்கமாக திரும்பியவன், “என்ன தேனு ஆச்சு உனக்கு, தானா சிரிக்கிற?” குழப்பமாக கேட்டான். 

நினைத்ததை அவள் சொல்லவும் செல்லமாக முறைத்தவன், “நான் அம்சமோ இல்லையோ நீ அம்சக்காரிதான் தேனு” என்றான். 

“அப்படியா! எங்க விளக்கி சொல்லுங்க” என அவள் கேட்கவும் உற்சாகம் அடைந்தவன் அவளை வர்ணிக்க ஆரம்பித்தான். 

தேனுக்கு ஒரே வெட்கம் வெட்கமாக வர, “போதும் போதும்” என வெட்க குரலில் சொன்னாள். 

“இந்த வெட்கம் கூட அவ்ளோ அம்சம் தேனு” அவன் சொன்ன விதத்தில் கூச்சம் உச்சம் பெற, போர்வையால் தலை வரை போர்த்திக் கொண்டாள்.

படுக்கையின் நடுவில் தருண் உறங்கியிருக்க, அவனது ஒரு பக்கம் தலையணைகள்,  மறு பக்கம் தேன்.  அவளருகில் இருந்த சொற்பமான இடத்தில் படுத்துக் கொண்டவன் அவளை அணைத்துக் கொண்டான். 

நேராக படுத்திருந்தவள் ஒருக்கலித்து படுத்து அவனுக்கு இன்னும் கொஞ்சம் தாராளமாக இடம் கொடுத்தாள். 

எதுவும் பேசிக் கொள்ளாமல் ஒருவர் அணைப்பில் மற்றொருவர் அடங்கிப் போய் படுத்திருந்தனர். அவன்தான் நினைவு வந்தவனாக, “சாப்பிடு தேனு” என்றான். 

வாகாக இருந்த அவனது கன்னத்தை கடித்தவள்  மென்று தின்பது போல வாயசைத்தாள், கண்களோ கணவனை விழுங்கிக் கொண்டிருந்தது. இப்போது வெட்கம் அவனிடம் குடி பெயர்ந்திருந்தது. 

சில நொடிகளுக்கு பின் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். அவள் எழுந்து குளியலறை சென்று வந்து,  பின் சாப்பிட்டும் முடித்தாள். கட்டில் சுவரை ஒட்டி இல்லை, தருணை ஓரத்தில் போட்டால் விழுந்து விடுவான். ஆகவே குழந்தையை நடுவில் போட்டு ஆளுக்கொரு பக்கமாக படுத்துக் கொண்டனர். நன்றாக உறங்கினார்கள். 

காலை காபிக்கு பின் தனக்கு இண்டர்வியூ இருக்கும் விஷயத்தை சொன்னான். அவன் நம்பிக்கையாக சொல்லா விட்டாலும், இந்த வேலை கண்டிப்பாக கிடைக்கும் என அவளுக்கு அசாத்திய நம்பிக்கை. 

விரைவாக தயாராகி காலை உணவை முடித்துக் கொண்டனர். அவனுக்கு தொந்தரவாக இருக்க கூடாது என்பதால் பக்கத்திலிருந்துக்கும் ஜவுளிக்கடைக்கு செல்வதாக சொல்லி மகனோடு கிளம்பி விட்டாள் தேன். 

மகனுடைய பெரும்பாலான ஆடைகள் சிறியதாகி விட்டதால் புதிதாக வாங்க வேண்டும் என முன்னரே நினைத்ததுதான். அதனால் கடையிலேயே அவளுக்கு நேரம் ஓடியது. 

பனிரெண்டு மணி ஆனதும் அலைபேசியை எடுத்து பார்த்தாள். அவனிடமிருந்து எந்த செய்தியும் வந்திருக்கவில்லை. தானாக அழைத்து அவன் இன்னும் காணொளியில் இருந்தால் தொல்லையாகுமோ என நினைத்து  இன்னும் கொஞ்ச நேரத்தை அங்கேயே கடத்தினாள். 

மகன் “அப்பா அப்பா…” என அழைக்கவும் திரும்பி பார்த்தாள். ஆனந்தும் கடைக்கு வந்திருந்தான். அவனது முகத்தை வைத்து முடிவு என்ன என்பதை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. 

அவனாக சொல்லட்டுமே என நினைத்தவள் மகனை அவனிடம் தந்து விட்டு, “எல்லாம் வாங்கிட்டேன், பில் போட்டுட்டு வர்றேன்” என்றாள். 

“இரு இரு, எனக்கு வாங்க வேண்டியது இருக்கு” என்றவன் புடவைகள் பகுதிக்கு அழைத்து சென்றான். 

“நான் செலவு இழுத்து விடுறேன்னு சொல்வீங்க, இப்ப நீங்களே தேவையில்லாம செலவளிக்கிறீங்க, எனக்கு எதுவும் வேணாம்” என்றாள். 

“உனக்கு எதுவும் வாங்கி தந்து ரொம்ப நாள் ஆகிடுச்சு, வாங்கிக்க” என அவன் சொன்ன விதத்தில் மேலும் மறுக்காமல் புடவைகள் பார்த்தாள். 

எதை தேர்வு செய்வது என அவள் ஒரு முடிவுக்கு வராமல் போக, அவனே ஒன்றை தேர்வு செய்து, “இது பிடிச்சிருக்கா தேனு, உனக்கு ரொம்ப நல்லாருக்கும்” என்றான். 

பரிசீலனைக்கு இடமில்லாமல் உடனே தலையாட்டி விட்டாள். அவன் சொல்ல சொல்ல கேளாமல் அவனுக்கும் ஆடை எடுத்துக் கொடுத்தாள். 

அறைக்கு திரும்பிய பின்  வேலை பற்றி  ஏதாவது சொல்வானா என அவனது முகத்தையே அடிக்கடி பார்த்தாள். 

கொஞ்சமாக அவளிடம் விளையாடியவன், “இந்த வேலை கிடைக்கலைனா என் பொண்டாட்டி அடிச்சிடுவான்னு அழுதிட்டேன்,  ச்சீ உன் அழுகாட்சி மூஞ்ச பார்க்க சகிக்கலடா, இந்தா வச்சுக்கோன்னு கொடுத்திட்டாங்க” என்றான். 

புரிந்தும் புரியாமலும் அவள் பார்க்க, அவனோ சிரிப்புடன் அவளை பார்த்தான். 

“என்னன்னு வாய தொறந்துதான் சொல்லுங்களேன்” என பதற்றமாக சத்தம் போட்டாள். 

“வேலை கிடைச்சிடுச்சு தேனு” என அவனும் சத்தமாக சொன்னான். 

நம்பிக்கையாக இருந்தாலும் அது நடக்கும் போது அவளால் நம்ப முடியவில்லை. சில நிமிட பர பரப்புக்கு பின்னர்தான் நிதானம் அடைந்தாள். 

அவனுடைய  படிப்பு, திறமை, அனுபவம் அனைத்துக்கும் ஏற்ற நல்ல வேலை. முன்பை விட பத்து சதவீத அதிக சம்பளம். என்ன… வேலைதான் சென்னையில் இல்லை, பெங்களூருருவில். அதெல்லாம் சமாளித்துக் கொள்ளலாம் என சொல்லி விட்டாள் தேன். 

“நீ சொன்னா சரிதான்” என சாதாரணமாக சொன்னான். 

“எவ்ளோ பட்டுட்டோம், கிடைக்குமான்னு எவ்ளோ பயந்தீங்க? இப்போ நல்லாவே கொண்டாடலாம் நீங்க, சப்புன்னு இருக்கீங்க” என குறை பட்டாள். 

“நீ என்னை விட்டு போய் திரும்பி வந்தப்ப என்ன ஃபீல் ஆச்சோ அத விட ரொம்ப ரொம்ப கம்மி இப்போ நான் ஃ பீல் பண்றது. இதுக்கு இவ்ளோதான் ரியாக்ஷன்” என்றான். 

“ஹப்பா எதுவும் எக்ஸைட் பண்ணாதே உங்கள”என்றாள். 

“யார் சொன்னது, நேத்து நைட்  எக்ஸைட் ஆனேனே”

“எப்போ?”

“நீ என் கன்னம் கடிச்சு தின்னப்போ” என அவன் சொல்லவும், செல்லமாக முறைத்தாள்.  

“ச்சே… நமக்கு ரெண்டே ரெண்டு கன்னம்தானான்னு ஃபீலாகிட்டேன்.  அப்புறம்தான் நினைவு வந்துச்சு என் ரெண்டு கன்னத்துலேயே ஒன்னைத்தான் நீ பிச்சு சாப்பிட்ட, இன்னொன்னு ஏக்கமா காத்திட்டே இருக்கு” கன்னத்தை தடவிக் கொண்டே  சொன்னான். 

“பேச்செல்லாம் ஒரு மார்க்கமாதான் இருக்கு, எங்கேருந்து இப்படி பேச கத்துக்கிட்டீங்க?” என கிண்டல் செய்தாள். 

“இதுக்குன்னு தனி கோர்ஸா போவாங்க?” எனக் கேட்டவன் அவளை நெருங்கி, “ஊருக்கு போனதும் சீக்கிரமே நல்ல நாள் பாரு” என்றான். 

“எதுக்காம்?” 

“மொத்தமா என்னை பிச்சி தின்னத்தான்” கண்கள் கிறங்க கூறினான். 

இப்படியெல்லாம் பேசியதே இல்லை ஆனந்த். 

இப்போது ஆசையாக அவளின் கன்னங்களையும் உதடுகளையும் கையால் கிள்ளி தின்பது போல செய்தான். 

 வாய் விட்டு கல கலவென சிரித்தாள் தேன்முல்லை.