பூத்தது ஆனந்த முல்லை -13

அத்தியாயம் -13

எதிர்பாராத வகையில் கணவனுடன் தனியாக விடப் பட்டதில் திவ்யாவுக்கு வித்தியாசமாக இருந்தது. தங்கை பேசி சென்றதில் சற்றே தெளிவு ஏற்பட்டதில் ராஜ்குமார் கோவமில்லாமல் மனைவியை பார்த்தான். 

அவள் அமைதியாக இருக்க, அவளுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்தான். இதுவரை தெரியாத பசி, இப்போது வயிற்றை படுத்தவும் பிகு செய்யாமல் சாப்பிட ஆரம்பித்தாள் திவ்யா. 

“அம்மு இருந்த நிலைமை உனக்கு தெரியும்தானே, அவ மேல உள்ள அக்கறையில… நமக்குன்னு குழந்தை வந்திட்டா அவளை செட்டில் பண்ண லேட் ஆகிடுமோ இல்லை என்னால அவளை கவனிக்க முடியாம போயிடுமோன்னுதான் நான் அப்படி சொன்னேன். இந்த காலத்துல குழந்தையை தள்ளி போடுறதுலாம் பெரிய விஷயமா? உன் கோவத்துல நியாயம் இருக்கா?” என பொறுமையாகவே பேசினான். 

அவள் மீதுதான் தவறு எனும் நிலையிலிருந்து மாறி, பேசி பிரச்சனையை சரி செய்ய நினைக்கிறான் என்பதிலேயே திவ்யாவுக்கு பெரிய நிம்மதி.

“ஒரு வேளை அந்த டைம்ல நான் ப்ரெக்னெண்ட்டா இருந்தா என்ன பண்ணியிருப்பீங்க?” எனக் கேட்டாள். 

“என்ன பண்ணியிருக்க முடியும்? அப்போதைக்கு வேணாம்னு சொன்னேனே தவிர… என் குழந்தைய எப்படி பார்த்துப்பேன்னு உனக்கு தெரியாதா?  நான்  முன்யோசனைதான் சொன்னேன்” என்றவன் அவளை கூர்மையாக பார்த்துக் கொண்டே, “நீ பிரெக்னெணட்டா இருக்கியா என்ன?” எனக் கேட்டான். 

ஆனந்துடன் மனக் கசப்பாகி தேன் பிறந்த வீடு வந்த நாளில் இருந்தே இந்த கணவன் மனைவியின் தனிமையான நேரம் குறைந்து விட்டது. தங்கையின் வாழ்க்கை பற்றிய சிந்தனையிலேயே இருந்தவன் மனைவியை ஆசையாக இல்லை ஆதரவாக கூட அணைத்தது இல்லை. பின்னொரு நாள் திவ்யாவும் பிறந்த வீட்டுக்கு சென்று விட்டாள். 

இப்போது கர்ப்பமாக இருக்கிறாயா என சந்தேகமாக கேட்பவனை என்ன செய்யலாம் என்பது போல பார்த்தாள். 

குரலை செருமிக் கொண்டவன், “அதில்ல… அம்மு வர்றதுக்கு முன்னாடியே நீ ப்ரெக்னெண்ட் ஆகி என்கிட்ட சொல்லலையோன்னு கேட்டேன்” என்றான். 

“குழந்தைன்னா எனக்கு எவ்ளோ பிடிக்கும்னு உங்களுக்கு தெரியாதா? ஒவ்வொரு மாசமும் எவ்ளோ எதிர்பார்ப்போட செக் பண்ணுவேன்னும் தெரியும்தானே, தங்கியிருந்தா இவ்ளோ நாள் மறைச்சு வச்சிருப்பேனா?” குழந்தைக்காக எவ்வளவு ஏங்குகிறாள் என்பது அவளின் பேச்சிலேயே வெளிப்பட்டது. 

“சரி சரி, அதுக்கு ஏன் இவ்ளோ எமோஷனல் ஆகுற? சாப்பிடு”

“என்னமோ எனக்கு எல்லா ஸேஃப்டியும் பண்ணி வச்சிட்டதா பெருமை பட்டுக்குறீங்க, நான் உங்களுக்கு எதுவுமே செஞ்சது இல்லையா?” எனக் கேட்டாள். 

குழந்தை பிரச்சனைக்கு முன்பு வரை கணவனுடன் எதற்காகவும் அவள் சண்டை போட்டதாகவோ வாக்குவாதம் செய்ததாகவோ அவனுக்கு நினைவே இல்லை. அவனுடைய சகோதரிகளுக்கு செய்யும் போதும் தடை சொன்னது இல்ல. குடும்ப நிர்வாகம் முழுக்க கலைவாணிதான், அதிலும் பெரிதாக தலையிட்டுக் கொண்டதில்லை. 

திவ்யாவுக்கு வேண்டியது கிடைக்கிறது, இவனும் இவனது பெற்றோர்களும் அனாவசிய செலவுகள்  செய்வது கிடையாதுதான், ஆனால் அப்படி இல்லையென்றால் கூட அதற்காக பேசியிருப்பாளா என்பது சந்தேகம்தான். 

பணம் பொருளை பெரிது படுத்தாத பெண் இவள். கணவனுடன் வெளியில் செல்வதை காட்டிலும் எந்த இடமானாலும் அவனுடன் சேர்ந்து பொழுது கழிந்தாலே மகிழ்ச்சியுடன் இருப்பாள். வீட்டின் நிம்மதி பெருமளவு இவளது கைகளில்தான் இருந்திருக்கிறது. அவளால் இயன்ற வரை அனுசரித்து நடந்திருக்கிறாள். 

தாடையை தடவிக் கொண்டவன், “சொல்லி காட்டியிருக்க கூடாதுதான், நீ விட்டுட்டு போயிட்டேங்கிற கோவத்துல… ஏதோ… மறந்திடு திவ்யா, இனிமே அப்படி பேச மாட்டேன்” என்றான். சில நொடி தயக்கத்துக்கு பின் மன்னிப்பும் கேட்டான். 

அவசரக்காரன் கோவக்காரன் என்றாலும் குடும்பத்தின் மீது அவ்வளவு அக்கறை கொண்டவன். ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்வான், சகோதரிகளுக்கும் பெற்றோருக்கும் செய்பவன் மனைவிக்கும் பார்த்து பார்த்து செய்வான். அவனுக்கென குழந்தை இருந்தால் தந்தையாக எப்படியெல்லாம் தாங்குவான் என கூட திவ்யாவிடம் நிறைய கற்பனைகள் இருக்கும். 

குறைகள் இல்லாத மனிதர்கள் யார், திவ்யாவுக்கும் கணவனை பிரியும் எண்ணமெல்லாம் இருந்தது இல்லை. 

உடனடியாக இறங்கிப் போக நினைத்தாலும் அவனுடன் தொக்கி நிற்கும் ஈகோ அவளை கொஞ்சம் இழுத்து பிடித்தது. அவன் இன்னும் கொஞ்சம் இறங்கி வர வேண்டும் என நினைத்து விட்டால் போலும். 

ஆதலால் சாப்பிட்டு முடித்திருந்தவள், “அப்பாட்ட கொண்டு போய் விடுங்க, பஸ்ஸுக்கு லேட் ஆக போகுது” என்றாள்.

மனைவியின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்டதோடு அல்லாமல் அதை நிறைவேற்றவும் மனது வைத்து விட்டான் போலும் ராஜ். 

ஆகவே அவனும் அவளின் வேண்டுகோளில் அதிராமல், “அதுக்கென்ன கொண்டு போய் விடுறேன்” என்றான்.

என்னோடே  வந்து விடு என கெஞ்சாமல் இப்படி அவன் சொன்னது அவளுக்கு ஏமாற்றம்தான், ஆயினும் முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை. 

வினயாவின் வீட்டுக்கு அவர்கள் வந்து சேர்ந்த போது இருவரும் இணைந்து விட்டார்களா அல்லது பிரிவு இன்னுமே தொடர்கிறதா என யாருக்கும் புரியவில்லை. பெற்றோருடன் புறப்பட்ட திவ்யா கணவனிடம் தலையசைத்து விடை பெற்றாள். அவனும் தலையசைக்க பெரியவர்கள் ஓரளவு நிம்மதி அடைந்தனர். 

உணவகத்திலிருந்து புறப்பட்ட தேன்முல்லை  நேராக தங்கும் விடுதிக்கு வந்து விடுவதாக கூறி,  ஆனந்தையும் மகனோடு அங்கு வந்து விடும் படி சொன்னாள். அவனும் சரியென சொல்லியிருந்தான். 

தேன் இருக்கும் இடத்திலிருந்துதான் அந்த விடுதி தூரம், ஆனந்துக்கு பக்கம். ஆகவே தான் செல்வதற்குள் அவன் வந்து விடுவான் என நினைத்துக் கொண்டே சென்றாள். ஆனால் அவள் வந்தடைந்து பத்து நிமிடங்கள் ஆகியும் அவன் வந்து சேரவில்லை. 

அவனுடைய அலைபேசிக்கு முயன்றால் அணைந்து போயிருப்பதாக செய்தி சொன்னது. தேனுக்கு மாதவிடாய் வந்து விட, இன்னும் வந்து சேராத கணவன் மீது கோவமாக வந்தது. 

அப்பாவுக்கு அழைத்து கேட்க, அவன் முன்னரே புறப்பட்டு விட்டதாக சொன்னார். அவரை பதற்றப் படுத்த விரும்பாதவள், தான் இப்போதுதான் சென்று கொண்டிருக்கிறேன், நீங்கள் அங்கே பாருங்கள் என சொல்லி விட்டாள். 

இனியும் காத்திருக்க முடியாது என ஆன பிறகுதான் ரிசப்ஷன் சென்று வேறொரு சாவி கேட்கலாமே என அவளுக்கு யோசனை உதித்தது. 

அவள் அறைக்கு வந்து குளித்து உடை மாற்றிக் கொண்ட பிறகுதான் மகனோடு வந்து சேர்ந்தான் ஆனந்த். தருண் உறங்கி போயிருக்க, அவனது ஆடையை கழற்றி விட்டு படுக்கையில் விட்டான். 

இவ்வளவு தாமதம் ஏன், எப்போதுமே நான் சொல்வதை கேட்பதில்லை என திட்ட ஆரம்பித்து விட்டாள் தேன். 

இடுப்பில் கை வைத்து முறைத்தவன், “விவரமே கேட்காம நீ பாட்டுக்கும் பேசாத” என்றான். 

“அப்படி என்ன பொருத்தமான காரணம் சொல்றீங்கன்னு நானும் பார்க்கிறேன், சொல்லுங்க” என அவளும் இடக்காக பேசினாள். 

அவன் வந்த ஆட்டோ டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலியாம், பாதி வழியிலேயே நிறுத்தி விட்டாராம். அவரை அப்படியே விட்டு வர மனமில்லாமல் வேறு வாகனம் பிடித்து மருத்துவமனையில் சேர்த்து விட்டு வருகிறான். 

சிகிச்சைக்கு செல்லும் போதே ஆட்டோகாரனிடம் யாருக்கு சொல்ல வேண்டும் என கேட்டு அவனது நண்பருக்கு அழைத்து சொல்லி விட்டான். ஆதலால் சரியான நேரத்துக்கு அந்த நண்பன் மருத்துவமனை வந்து விட, ஆனந்துக்கு அங்கே அதிக வேலையில்லை. 

எதற்கென தெரியாமல் அழ ஆரம்பித்து விட்ட மகனை சமாதானம் செய்து மருத்துவமனை விட்டு வெளியே வந்த பிறகுதான் அவனுடைய அலைபேசி சார்ஜ் இல்லாமல் அணைந்து போயிருப்பது அவனுக்கு தெரிய வந்தது. 

மனைவிக்கு தகவல் தர வேண்டும் என்ற யோசனையே அவனுக்கு வர விடாமல் செய்து விட்டது மகனின் அழுகை. 

மகன் சாப்பிட்டு வெகு நேரமாகி விட்டது நினைவு வர, கடைக்கு சென்று பால் வாங்கி கொடுத்திருக்கிறான். பசியில்தான் அழுதிருக்கிறான் தருண். வயிறு நிறையவும் அமைதியாகி விட்டான். கடைக்காரரின் அலைபேசி வாங்கி மனைவிக்கு அழைக்க, குளியலறையில் இருந்தவள் அழைப்பை ஏற்றிருக்கவில்லை.

 “தெரியாத நம்பர்னு எடுக்கலையா, இல்லை இன்னும் நீ இங்க வந்து சேரலையான்னு எனக்கு ஒண்ணும் புரியலை, ரூம் சாவி என்கிட்ட இருந்ததால அதுக்கு மேல உனக்கு ஃபோன் பண்ண ட்ரை பண்ணாம கிளம்பிட்டேன். நல்ல தலைவலில வந்து சேர்ந்தா நீ காதுவலி உண்டு பண்ற” என்றான். 

அவளுடைய நிலைமையை விளக்கியவள், “எனக்கும் ஒரே டென்ஷன் அதான் இப்படி பேசிட்டேன், ஸாரி” என்றாள். 

“ஸாரி சொன்னா ஆச்சா?” 

“அதான் டென்ஷன்ல பேசிட்டேன்னு சொல்றேன்ல?”

“நல்ல டென்ஷன்! உன் அண்ணன் அம்மா மேலல்லாம் உனக்கு எவ்ளோ கோவம் இருந்தாலும் என்ன டென்ஷனா இருந்தாலும் இடம் பொருள் பார்த்து நிதானமா பேசுறதான?”

“அப்படிலாம் இல்லை” என உள்ளே போன குரலில் சொன்னாள். 

“அப்படிதான்னு உனக்கே தெரியும். என்கிட்ட மட்டும்தான் இப்படி, ஏன்னா நான்தான் நீ பேசுறத வாங்கிப்பேன், எங்க உடனே உடனே ரிட்டர்ன் கிஃப்ட் கிடைக்குமோ அங்கெல்லாம் அம்மணி பார்த்து பார்த்து பேசுவாங்க” கிண்டல் போலவே அவளை சாடி விட்டுக் குளிக்க சென்று விட்டான்.