சற்று நேரம் சென்றுதான் திவ்யாவின் அம்மா வந்து தேனிடம் பேசினார். இரயில் நிலையத்தில் நடந்ததை சொல்லி வருத்தப்பட்டார்.
“உன் அண்ணிகிட்ட எடுத்து சொல்லும்மா. எவ்ளோ பிராப்லம் இருந்தப்பவும் நீ உன் புருஷன் கூட இருந்து வாழலையா? இவளை நினைச்சி தூக்கமே இல்லம்மா எனக்கு” என்றார்.
“அண்ணிய குறை சொல்லாதீங்க அத்தை, அவங்க பாவம்” என மட்டும் சொன்னாள் தேன்.
எல்லாம் முடிய மாலை ஆறாகி விட்டது. அது வரையிலுமே ராஜ்குமாரும் ஆனந்தும் நேராக சந்திக்க நேர்ந்தால் ஒருவரையொருவர் தவிர்த்து விடுவார்கள். திவ்யா கணவன் முன் வராமல் இருந்து கொண்டாள். கலைவாணியும் மாப்பிள்ளையிடம் பேசவில்லை.
திவ்யாவுக்கு கணவனை நினைத்து மிகுந்த ஆற்றாமை. குழந்தை வேண்டாம் என அவன் முடிவாக கூறவும் வந்த சண்டைதான், அவனாக தன்னை பார்க்க நேரில் வந்து சமாதானம் செய்யவில்லை, இங்கே பார்க்க நேர்ந்த சந்தர்ப்பத்தில் கூட வீம்பாக சுற்றுகிறானே தவிர, அவளுடன் பேச முனையவில்லை. நீ வீட்டை விட்டு சென்றது தவறு எனும் நிலைப்பாட்டில்தான் இருக்கிறான்.
ஆதலால் அவளுக்கு நல்ல மன உளைச்சல். இடையில் சாப்பிட கடைக்கு சென்று வரலாம் என பெற்றோரும் தேனும் அழைத்த போது வயிறு சரியில்லை என சொல்லி விட்டாள். தந்தை வாங்கிக் கொடுத்த பழச்சாறையும் பருகியிருக்கவில்லை.
சம்பந்தி வீட்டுக்காரர்களை சாப்பிட வைக்கவென தங்கப்பன் குடும்பத்தினர் அங்கேயே இருக்க மற்றவர்கள் கிளம்பி விட்டனர். வீட்டு வாயிலில் தலைசுற்றி தரையில் அமர்ந்து விட்டாள் திவ்யா.
அருகிலிருந்த அவளது அம்மாவும் தேனும் என்னவென பார்க்க, உள்ளிருந்து பார்த்திருந்த ராஜ்குமார் பதை பதைப்போடு ஓடி வந்தான். அதற்குள் யாரோ பருக தண்ணீர் கொடுக்க, அருந்தியவள் தனக்கு ஒன்றுமில்லை என சொல்லி எழுந்து நின்றாள்.
ஏன் இப்படி ஆகியது, மருத்துவமனை அழைத்து செல்வோமா என ராஜ் மனதிற்குள் நினைக்க, “ஹாஸ்பிடல் போலாமாம்மா?”எனக் கேட்டான் ஆனந்த்.
“ஏதாவது நல்ல விஷயமா இருக்க போகுது” என்றார் அங்கிருந்த மூதாட்டி ஒருவர்.
சட்டென திவ்யாவின் முகம் மாறி விட்டது. தன் தோளை ஆதரவாக பிடித்திருந்த அம்மாவின் கையை விலக்கி விட்டு நடந்தவளுக்கு மீண்டும் நிலை தடுமாறியது. ஓடிச் சென்று அவளை பிடித்துக் கொண்டான் ஆனந்த்.
வேகமாக சென்று கார் எடுத்து வந்த ராஜ்குமார், மாமியாரை பார்த்து, “அவளை ஏற சொல்லுங்க, ஹாஸ்பிடல் போலாம்” என்றான்.
அதை அவன் திவ்யாவிடம் நேரடியாக சொல்லாமல் போனது அவளது ஆத்திரத்தை மேலும் சீண்டி விட்டது.
“அண்ணா, ஆட்டோ இல்லன்னா கார் ஏதாவது பிடிங்க ண்ணா, நீங்களும் அண்ணியும் என்னை ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போங்கண்ணா” என்றாள் திவ்யா.
வேறு யாராக இருந்தாலும் தன்னை அவமானம் செய்த மச்சானின் மூக்கை உடைக்க சந்தர்ப்பம் வாய்த்து விட்டது என அதை சரியாக பயன் படுத்தியிருப்பார்கள்.
ஆனால் ஆனந்தோ அப்படி செய்யவில்லை. தான் அப்படி செய்தால் அனைவரின் மத்தியிலும் ராஜ்குமாரின் தன்மானம் வீழ்ந்து போகும், கணவன் மனைவிக்கிடையில் மிகப்பெரிய விரிசலையும் உண்டு செய்யும் என்பதை உணர்ந்தவன், “உனக்கு முடியலைங்கவும் பதறிப் போய் கார் எடுத்திட்டு நிக்கிறார். சின்ன சின்ன சண்டைகளுக்காக உண்மையான அக்கறைய அலட்சியம் செய்யக் கூடாதுமா. முதல்ல கார்ல ஏறும்மா”என்றான்.
திவ்யா மாட்டேன் என நின்றாள். ஆனந்த் தன் மனைவிக்கு கண் காட்டினான்.
மகனை கணவனிடம் கொடுத்து விட்டு, “சமாதானமா போக வேண்டிய நேரத்துல எல்லாம் எங்க அண்ணனுக்கு கண்ணுதான் பேசும், தேவையில்லாதப்போதான் வாய் பேசும். அது கண்ண பாருங்க, ஏறுங்க”என சொல்லி அண்ணியை காரில் ஏற்றி தானும் அமர்ந்து கொண்டாள் தேன்.
இந்த மருத்துவமனை பிரயாணம் மகளையும் மருமகனையும் சேர்த்து வைக்கும் என நம்பிய திவ்யாவின் பெற்றோர் காரில் ஏறவில்லை.
வழியிலேயே தான் சரியாக சாப்பிடாததால்தான் இப்படி ஆகி விட்டது, மருத்துவமனையெல்லாம் வேண்டாம் என்றாள் திவ்யா.
“அம்முவோட வீட்டுக்காரர்கிட்ட கார் புடிக்க சொன்ன, நான் அழைச்சிட்டு போறதால இப்படி சொல்றியா? ஒழுங்கா டாக்டர்கிட்ட காட்டலாம், நீ என்னவோ போலருக்க” என நேரடியாக மனைவியிடம் பேசினான் ராஜ்குமார்.
“அதானே, நீங்களும் ஹாஸ்பிடல் போலாம்னு சொன்னீங்கதானே அண்ணி?” எனக் கேட்டாள் தேன்.
“உங்க அண்ணன் மேல உள்ள கோவத்துலதான் அண்ணன்கிட்ட வேணும்னு அப்படி சொன்னேன்” என மெல்லிய குரலில் சொன்னாள் திவ்யா.
“ஏன் ஏன்… எம்மேல என்ன கோவம் உனக்கு? நானா உன்னை வீட்ட விட்டு போன்னு அனுப்பி வச்சேன்?” காட்டமாக கேட்டான் ராஜ்.
தேனின் முன்னிலையில் கணவனிடம் வாதம் செய்ய விரும்பாத திவ்யா அமைதி காத்தாள்.
“என்ன குறை வச்சேன் உனக்கு? நான் இருக்கப்ப மட்டுமில்லை, இல்லாம போனா கூட யார்கிட்டேயும் கையேந்தி நிக்க வேண்டிய அவசியம் இல்லாம அத்தனை ஸேஃப்டி பண்ணி வச்சிருக்கேன் உனக்கு. போனா வந்தா கார், என்ன வாங்க நினைச்சாலும் உடனே ஷாப்பிங், ஆறு மாசத்துக்கு ஒரு தடவ வெளியூர் ட்ரிப், உன் வீட்ல உனக்கு போட்ட நகையை விட நான் வாங்கி கொடுத்ததுதான் அதிகம், பீரோ நிறைய புடவை வாங்கி குவிச்சிருக்கேன்…அப்ப எம்மேல கோவம் இருக்க வேண்டியதுதான்” என சொல்லிக் கொண்டே கார் ஓட்டினான் ராஜ்.
“காரை நிறுத்த சொல்லுங்க அண்ணி, நான் இறங்கிக்கிறேன்” என்றாள் திவ்யா.
“கொஞ்சம் பேசாம இரு ண்ணா” என்ற தேன், உணவகம் எங்கேயாவது போக சொன்னாள். வர மாட்டேன் என்ற திவ்யாவையும் சமாதானம் செய்தாள்.
உணவகம் வரவும், முகம் கழுவி வருகிறேன் என சென்று விட்டாள் திவ்யா. அண்ணனும் தங்கையும் மட்டும் தனியாக அமர்ந்திருந்தனர்.
“உன் பேச்சு நினைப்பு எதுவும் சரி கிடையாது அண்ணா” என்றாள் தேன்.
“என்ன… என்ன சரி கிடையாது, உன் ஹஸ்பண்ட் போல…” என கோவமாக ராஜ் பேச ஆரம்பிக்க, “அவரை பத்தி பேசாத ண்ணா”என அழுத்தமாக சொன்னாள் தேன்.
ராஜ் எரிச்சலாக பார்த்தான்.
“அவர் ஹண்ட்ரட் பெர்சண்ட் கரெக்ட் கிடையாது. ஃபினான்ஸியலா அவரை அவர் வீட்ல ஏமாத்துறாங்கன்னா இவரும் ஏமாளியா இருந்திட்டாரு. ஆமாம் என்கிட்ட நிறைய விஷங்கள சொல்லாம என்னை காய படுத்தினார், கார்ல வரும் போது அண்ணிக்காக நீ என்னல்லாம் செஞ்சு வச்சிருக்கேன்னு சொல்றியோ அத அவர் எனக்கு செய்யல. ஆனா நான் அவரை விட்டு போனப்போ அப்படியே போயிடுன்னு என்னை விட்ரல. என்கிட்ட ஈகோ பார்த்தது இல்லை அவர், செஞ்ச தப்புக்கு ஸாரி கேட்க தயங்கினது இல்லை அவர். நீ பார்த்த மாப்பிள்ளைதான் அவர், என் தங்கச்சிக்கு தெரியாம ஏன் இவ்ளோ லாஸ் பண்ணுனீங்க, வீட்டு பத்திரம் விஷயத்தை ஏன் சொல்லலை, வேலை போனத ஏன் சொல்லலை இதைதான் நீ அவர்கிட்ட கேட்ருக்கனும். அத விட்டுட்டு…” என்றவளின் முகம் சிவந்து போயிருந்தது.
தான் பேசியது தங்கைக்கு தெரிந்து போனதில் குறு குறுப்பாக உணர்ந்த ராஜ் பார்வையை தாழ்த்திக் கொண்டான்.
“ஒரு நாளும் என்கிட்ட ஆம்பளங்கிற திமிர் காட்டினது இல்லை அவர், சொல்லப் போனா அதுதான் நல்ல ஆம்பளைக்கான அடையாளம் அண்ணா” என அவள் சொல்லும் போது, தான் சொன்ன வார்த்தைகளின் வீரியம் புரிந்து தலையையும் கவிழ்த்துக் கொண்டான்.
“நீ அண்ணிக்காக செஞ்சு வச்சிருக்க எல்லாம் செகண்ட்ரி அண்ணா. அதனாலதான் உன்னை விட்டு போயிட்டாங்க, எது பிரைமரின்னு இன்னும் உனக்கு புரியலை, அதனாலதான் இன்னும் அவங்க உன்னை தேடி வரலை” என்றாள்.
“நான் என்னதான் பண்ணனுங்கிற?” உள்ளே போன குரலில் கேட்டான்.
“அவங்கள தவிர எல்லாமே எல்லாருமே உனக்கு செகண்ட்ரிதான், அத அவங்களுக்கு புரிய வை. உனக்கு முக்கியமானவங்க எல்லாரையும் அவங்க தாங்கிக்குவாங்க. திவ்யா அண்ணி மாதிரி ஆளுங்கள மெட்டிரியல் திங்ஸ் வச்சு சேட்டிஸ்ஃபை பண்ண முடியாது, சொல்ல போனா எந்த பொண்ணையுமே அப்படி செய்ய முடியாது”
“உங்க ரெண்டு பேருக்குமான சில விஷயங்கள்ல உங்கள வச்சு மட்டும்… நல்லா கேட்டுக்க, உங்க ரெண்டு பேரோட வசதி என்ன எப்படின்னு வச்சு மட்டும் முடிவு பண்ணுங்க. மூணாவது ஆளை…” என்றவள் ஒரு வாய் தண்ணீர் பருகினாள்.
“நேராவே சொல்றேன், என்னையவோ என் பிள்ளையைவோ உங்க வாழ்க்கையோட முக்கிய முடிவுகளோட சம்பந்த படுத்தாத. அண்ணிய காய படுத்தும், அத விட எங்ககிட்ட நல்லா பழகுற அண்ணி விலகி போவாங்க. நான் ஆட்டோ பிடிச்சி போயிக்கிறேன், இங்கேருந்து கிளம்புற வரை டைம் இருக்கு. சாமர்த்தியம் இருந்தா அண்ணிய சமாதானம் பண்ணி உன்னோட கூட்டிட்டு போ”என சொல்லி எழுந்து கொண்டாள்.
என்ன சொல்லவென தெரியாமல் அமர்ந்திருந்தான் ராஜ்.
“நீ என்ன காரணம் சொன்னாலும் என் வீட்டுக்காரரை அப்படி பேசினத என்னால ஏத்துக்க முடியாது அண்ணா. ரொம்ப தப்பு, நீ அப்படி பேசியிருப்பேன்னு இப்பவும் நம்ப முடியலை. அவர்கிட்ட ஸாரி கேட்க வேணாம், அது தப்புன்னாவது உணரு ண்ணா” என சொல்லி நிற்காமல் சென்று விட்டாள்.