பூத்தது ஆனந்த முல்லை -12

அத்தியாயம் -12

ஆனந்த் தன் மனைவி மகனுடன் கும்பகோணம் வந்தடைந்தான். தேனின் அக்கா வினயாவின் மாமனார் தவறி விட்டார். துக்கத்தில் பங்கெடுப்பதற்காக வந்திருந்தனர். 

எந்த பேருந்தில் எத்தனை மணிக்கு வருகிறோம் என அப்பாவிடம் சொல்லியிருந்தாள் தேன். மகளின் வரவை பற்றி கணவன் மூலமாக அறிந்திருந்த கலைவாணி மகனிடம் கார் எடுத்து சென்று அவர்களை அழைத்து வா என சொல்லியிருக்க, ராஜ்குமாரும் சரியான நேரத்துக்கு பேருந்து நிறுத்தம் வந்து விட்டான். 

இத்தனை நாட்கள் தங்கையிடம் பேசியிருக்கா விட்டாலும் இப்போது எந்த சங்கடமும் இல்லாமல், “அம்மு…” என அழைத்துக் கொண்டே தேனை நெருங்கினான். 

அண்ணனை எதிர் பார்த்திராதவள் நொடி நேரம் திடுக்கிட்டு,  பின் முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டாள். 

ஆனந்த் கையிலிருந்த பையோடு சற்று தள்ளி நின்று கொண்டான். தங்கையின் கையிலிருந்த தருணை கை நீட்டி அழைத்தான் ராஜ்குமார். வர மாட்டேன் என்பது போல முகத்தை திருப்பிக் கொண்டான் தருண். 

“என்னடா மாமாவை மறந்து போயிட்டியா, வா வா…” வற்புறுத்தி குழந்தையை வாங்க பார்த்தான் ராஜ். 

“இல்லண்ணா இருக்கட்டும், இன்னும் தூக்கம் கலையல, அழுவான்” என்றாள் தேன். 

“ஏன் பெர்த் உள்ள பஸ்தானே?” ஆனந்தை குற்றமாக பார்த்துக் கொண்டே கேட்டான் ராஜ். 

ஆனந்துக்கு கோவம் வந்தாலும் காட்டிக் கொள்ளாமல் நின்றிருந்தான். 

கணவனின் முன்னிலையில் அண்ணனை கடிந்து கொள்ள முடியாமல், “நீ என்ன ண்ணா இங்க?” எனக் கேட்டாள் தேன். 

“உங்களை கூப்பிடத்தான் வந்தேன், இங்கேயே ரெஃப்ரெஷ் ஆகிடுறியா அம்மு? அங்க ரொம்ப கூட்டம், எல்லாம் முடிய ஈவ்னிங் ஆகிடும்”என்றான் ராஜ். 

“ரூம் புக் பண்ணிருக்கார் ண்ணா” என தேன் சொல்ல, எங்கு என விவரம் கேட்டுக் கொண்டவன், காரிலேயே கொண்டு போய் அந்த தங்கும் விடுதியில் விடுவதாக சொன்னான். 

எங்கே சம்மதித்து விடுவாளோ என கலவரமாக இருந்தான் ஆனந்த். தன்னை ராஜ் கேவலமாக பேசி விட்டதற்காக கோவம்தான் என்ற போதும் அவனது உறவை இல்லாமல் செய்து விட வேண்டும் என்றெல்லாம் ஆனந்த் நினைக்கவில்லை. அதே சமயம் அவனுடன் தேவையில்லாமல் எதுவும் வைத்துக்கொள்ள கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தான். 

உன் அண்ணனிடம் பேசக்கூடாது என மனைவியிடம் சொல்லவில்லை, ஆனால் அவனால் மச்சானிடம் எளிதாக பேச முடியவில்லை. இப்போது இவனது காரில் ஏறினால் தன்மானம் அடி வாங்குமே, அதற்கு மனம் இடம் தரவில்லை. 

அண்ணனுக்கும் கணவனுக்கும் மேலும் பகை வளரக் கூடாது என மனதார நினைத்தாள் தேன்.  அதே சமயம் கணவனின் தன்மானமும் அடி வாங்க கூடாது, தன் மீது அளவில்லாத அன்பும் அக்கறையும் கொண்ட அண்ணனையும் நோகடிக்க அவளுக்கு விருப்பமில்லை. 

நல்ல வேளையாக அவளது தந்தையே அவளுக்கு அழைத்தார். மகள் தயங்கி தயங்கி வந்து விட்டோம், அண்ணா வேறு வந்திருக்கிறார் என சொன்ன விதத்திலேயே சூழ்நிலையை புரிந்து கொண்டார் தங்கப்பன். 

உடனடியாக மகனிடம் அலைபேசியை தர சொன்னவர், இரயில் நிலையத்தில் திவ்யாவின் குடும்பத்தினர் வந்திறங்கி விட்டனர், உடனே அங்கு செல் என பணித்தார். 

இதுதான் சந்தர்ப்பம் என ஆட்டோ ஒன்றை அழைத்து விட்டான் ஆனந்த்.  ஆனால் உடனே ஏறாமல் போகுமிடம் சொல்லி, ஆட்டோக்காரன் அதிக தொகை கேட்டதால் பேரம் பேசிக் கொண்டிருந்தான். 

தந்தையின் சொல்லுக்கு பணியாமல் முதலில் தங்கையை விட்டு விடுகிறேன், பின் இரயில் நிலையம் செல்கிறேன் என்றான் ராஜ். 

“ஹையோ அண்ணா இதோ இவர் ஆட்டோ பிடிச்சிட்டார் பாரு, நீ அண்ணிய கூப்பிட கிளம்பு” என்ற தேனு, ஆனந்த் பேரம் பேசி முடிப்பதற்குள் ஆட்டோவில் ஏறி விட்டாள். 

ராஜ் வேறு வழியின்றி கிளம்பி விட, மனைவியை அதிருப்தியாக பார்த்துக் கொண்டே ஆட்டோவில் ஏறினான் ஆனந்த். தங்கும் அறைக்கு வந்த பிறகுதான், “அப்படி என்ன அவசரம் தேனு, பாரு… நூறு ரூபாய்க்கு நூத்தம்பது ரூபா வாங்கிட்டான் அந்த ஆட்டோக்காரன்” என்றான். 

“ஆமாம் எவ்வளவையோ விட்டாச்சு, அந்த அம்பது வச்சுதான் அம்பானி ஆக போறீங்களா?” என எரிச்சலாக கேட்டாள் தேன். 

“பழச ஏன் பேசுற? இப்படி அம்பது அம்பதா விட்டா ஆண்டி ஆகிடுவோம் தேனு”

“என்னை சொல்லணும், என் அண்ணன் கார்லேயே போலாம்னு சொல்லியிருக்கணும் நான்” என அவள் முறைப்பாக சொல்லவும், “சரி சரி, சீக்கிரம் கிளம்பு” என தணிந்து போய் விட்டான். 

ராஜ் இரயில் நிலையம் வரவும் திவ்யாவின் அம்மா குழலி, “அதோ மாப்ள வர்றார்” என்றார். 

திவ்யா முகத்தை திருப்பிக் கொள்ள, மாமனார் மாமியாரிடம் பேசிய ராஜ், மனைவியிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. அவளின் பெற்றோரின் முன்னிலையில் தன்னை அழைக்காமல் அவமானம் செய்பவளிடம் அவனாக பேச மாட்டானாம். 

“கார்ல போலாம், வாங்க” மாமனாரிடம் சொன்னவன் முன்னே நடக்க, “நான் வரலப்பா” என்றாள் திவ்யா. 

“நீங்க வர்றீங்களா என்ன மாமா?” என மனைவியை முறைத்துக் கொண்டே கேட்டான் ராஜ். 

“என்னம்மா நீ, எதுக்காக வந்திருக்கோம், இப்ப போய்… வாம்மா” என்றார் திவ்யாவின் அப்பா. 

“இப்ப நான் அந்த கார்ல வந்தா, அப்படியே அவர் கூட அனுப்பிடலாம்னு நினைக்குறீங்களா ப்பா? எதுக்காக வந்தோமோ அத மட்டும் பார்க்கலாம். இல்லைனா நீங்க போங்க, எனக்கு எப்படி வரணும்னு தெரியும்” என்றாள் திவ்யா. 

அவளிடம் ராஜ் நல்ல மாதிரியாக ஒரு வார்த்தை இல்லை, ஒரு பார்வை பார்த்திருந்தால் கூட அவளுக்கு சமாதானமாக இருந்திருக்கும். எல்லா தவறும் இவள் மீதுதான் என்பது போலவே அவன் நடந்து கொண்டதால்,  காலத்தால் நீர்த்து போக வேண்டிய கோவம் தகிக்க ஆரம்பித்து விட்டது. 

ராஜ் உக்கிரமாக பார்த்தான். தேன்தான் அவளது கணவனோடு வாழ சென்று விட்டாளே, இன்னும் இவளுக்கு என்ன பிரச்சனை என மகள் மீது கோவம் கொண்ட குழலி, “உங்க பொண்ணுக்கு புத்தி சொல்லி மாப்ளயோட கார்ல ஏற சொல்லுங்க” என்றார். 

திவ்யா இயல்பாகவே அடம் செய்யும் ரகம் இல்லை, அமைதியான பெண், அவளே இப்படி பேசவும் அவளுள் மனக் குறை இருப்பதை தெரிந்து கொண்டார் அவளின் அப்பா. மகளின் குறை தீராமல்  மாப்பிள்ளையுடன் அவசரம் அவசரமாக அனுப்பி வைக்க வேண்டாம் என நினைத்தவர், “நீ வேணும்னா போ, நாங்க வந்துக்கிறோம்”என மனைவியிடம் சொல்லி விட்டார். 

ராஜ்குமாரின் முகத்தில் ஏகத்திற்கும் கோவம். மனைவியை பார்வையாலேயே சுட்டான். என்னவோ திவ்யாவின் கண்கள் கலங்கி விட்டன. மகளை இப்படி பார்க்கவும் அவளின் தந்தைக்கு கவலையாகி விட்டது. 

“என்னங்க நீங்க, மாப்ள கோச்சுக்க போறார்” பதறினார் குழலி. 

“இத்தனை நாள் என் பொண்ண தேடி வரலையே இவர், இவங்க பிரச்சனை என்ன ஏதுன்னு பேசி தீர்க்காம எப்படி என் பொண்ணை அனுப்புறது?”என்ற திவ்யாவின் அப்பா, எங்கே மகள் உடைந்து போய் அழுது விட போகிறாளோ என்ற பயத்தில் அவளின் கையை பிடித்துக் கொண்டு தள்ளி  அழைத்து சென்றார். 

ராஜ்குமார் அங்கிருந்து வெளியேற நடக்க, “நில்லுங்க மாப்ள…”என சொல்லிக் கொண்டே நான்கு தப்படிகள் நடந்தார்  குழலி. அவனது வேகத்திற்கு அவரால் ஈடு கொடுக்க முடியவில்லை. வெகுதூரம் சென்றிருந்தான் ராஜ். 

விடுதி வந்த  ஒரு மணி நேரத்திற்குள் எல்லாம் குளித்து தயாராகி, குழந்தையையும் கவனித்து, அங்கேயே காலை உணவை முடித்துக் கொண்டு புறப்பட்டு விட்டனர் ஆனந்த் தம்பதியினர். 

அவசரத்தில் மாலை வாங்க மறந்து விட்டனர். கலைவாணி மகளுக்கு அழைத்தார். தானாக அழைப்பவரிடம் ஏன் பேசாமல் இருக்க வேண்டும் என்ற நினைவில் பேசினாள் தேன். 

நல விசாரிப்புகள் எதுவும் இல்லாமல் இன்னும் வராமல் என்ன செய்து கொண்டிருக்கிறாய்? சுற்றுலா வந்தாயா துக்கத்திற்கு வந்தாயா என வீம்பாகத்தான் பேசினார். மனதிற்குள் சலிப்பாக இருந்தாலும் அருகில் வந்து விட்டோம் என பதில் தந்தாள். 

மாலை வாங்கி விட்டாயா என அவர் கேட்கவும்தான், “ஹையையோ இன்னும் வாங்கல மா” என்றாள் தேன். 

“அதான் தெரியுமே,  அவ்வளவு சொன்னோம், கேட்காம அவர்கிட்ட போன. பெத்த மனசு கேட்காமதான் உன் அண்ணனை பஸ் ஸ்டாண்ட் அனுப்பி வச்சேன். அவன் கூட வராம… இப்ப எந்த டவுன் பஸ்ல இழுத்துக்கிட்டு இவ்ளோ லேட்டா வர்றாரு உன் புருஷன்? ஒரு மாலை வாங்க கூட…” அடுத்து என்ன சொல்லியிருப்பாரோ, அழைப்பை துண்டித்து விட்டாள் தேன். 

“என்ன தேனு?” என ஆனந்த் கேட்க, “மாலை வாங்க மாட்டீங்களா நீங்க?”எனஅவனிடம் காய்ந்தாள். 

“நினைவே இல்லை, நீ சொன்னா வாங்க போறேன், அதுக்கு ஏன் காயுற” என்றான். 

அம்மாவின் மீதுள்ள கோவத்தில் கணவனிடம் பேசி விட்டாள். ஆட்டோக்காரன் முன்னிலையில் அம்மாவை பற்றி சொல்லவும் முடியாமல் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டாள். 

போகிற வழியில் மாலைக்காக ஆட்டோவை நிறுத்த சொன்னவன், “வேற ஏதும் வாங்கணுமா? எதுக்கும் உங்கப்பாகிட்ட கேட்டுக்க” என்றான். 

“மாலை மட்டும்தான்” என்றாள். 

“ம்ம்… அங்க வந்திட்டு ஏன் இது செய்யல அது செய்யலன்னு கேளு, அப்புறம் இருக்கு” என சொல்லிக் கொண்டே அவன் செல்ல, ஆட்டோக்காரன் முன் இப்படியா பேசுவது என அவளுக்கு இன்னும் கோவம். 

ஒரு வழியாக வினயாவின் வீட்டை வந்தடைந்தனர். வயதானவர், ஓராண்டு காலமாக படுக்கையில் இருந்தவர் வேறு, ஆதலால் பெரிதான அழுகை ஆர்ப்பாட்டம் எல்லாம் இல்லை. 

வினயாவின் சின்ன மாமனார் குடும்பம் மும்பையில் இருக்கிறது, அவர்கள் வந்த பிறகுதான் பூத உடலை எடுப்பார்கள் என்பதால் காத்திருந்தனர். 

திவ்யா தேனை தேடி வந்து பேசி தருணை வாங்கிக் கொண்டாள். 

“அண்ணங்கிட்ட பேசினீங்களா அண்ணி?” என ஆவலாக கேட்டாள் தேன். 

“தருண் நல்லா வளர்ந்திட்டானே அண்ணி, ஆனாலும் என்னை மறக்காம கூப்பிட்ட உடனே வந்திட்டான் பாருங்க” என சம்பந்தமே இல்லாத பதிலை சொல்லி விட்டு அகன்றாள் திவ்யா. 

அண்ணி செல்லும் திசையை விசித்திரமாக பார்த்தவள் அண்ணன் எங்கே என பார்த்தாள். மனைவி செல்லும் இடமெங்கும் பார்வையை வீசிக் கொண்டு வீம்பையும் கழட்டி வைக்காமல், மனைவியின் பிரிவால் பாதிப்பே இல்லை என வலிந்து காண்பிக்கும் உடல் மொழியோடு அமர்ந்திருந்தான் ராஜ்.