சுபர்ணாவின் மகனின் மொட்டையடிக்கும் விழாவுக்கு ஆனந்த் செல்லவே இல்லை. பெரிய மகனுக்கு அதி முக்கிய வேலை என அனைவரிடமும் சொல்லி சின்ன மகனை முன் நிறுத்தி, கடனாக வாங்கியிருந்த பணத்தை கொண்டு ஆடம்பரமாக விழாவில் முறை செய்து விட்டார் சுந்தரி.
பெரிய மகன் மீது கோவமாக இருந்தாலும் வாங்கிய கடனை அடைக்க அவனது தயவு வேண்டும் என்பதால் வீடு வந்த பிறகு அவனுக்கு அழைத்தார் சுந்தரி. விழா நன்றாக நடந்தது, நீ இல்லாதது தான் பெரிய குறை, பெரிய தம்பி இல்லையே என உன் அக்கா அழுதே விட்டாள், உன் அக்கா மகன் மாமா இல்லையா என கேட்டுக் கொண்டே இருந்தான் என்றெல்லாம் நடக்காத கதைகளை சொன்னார்.
“எனக்கு பதிலா அகிலன் நின்னாந்தானே, அப்புறம் என்னம்மா?” என சுவாரஷ்யமே இல்லாமல் கேட்டான் ஆனந்த்.
“நீ இருக்க வரைக்கும் நீதான்டா எல்லாத்துக்கும் முன்ன நிக்கணும், உனக்கான மரியாதை அது” என்றார் சுந்தரி.
“இனிமே அந்த மரியாதையெல்லாம் எனக்கு வேணாம்மா, அகிலன் ஏதாவது வேலைக்கு போறானா இல்லையா? புத்தி சொல்லுங்க அவனுக்கு, அடுத்த மாசம் வட்டி கட்டுற அளவுக்காவது சம்பாதிக்கணுமே அவன்” என்றான்.
“டேய் அவனே சிரமத்துல இருக்கான், ஆனாலும் அவன் வட்டி கட்டுறேன்னு சொல்லிட்டான், அசல மட்டும் நீ அடைச்சுடு. ஆளுக்கொரு பொறுப்ப எடுத்துக்கோங்க, என்ன?”என்றார் சுந்தரி.
உண்மையில் வட்டி கட்டுவதாக எல்லாம் எந்த வாக்குறுதியும் அகிலன் தரவில்லை, அவராக சொன்னதுதான். ஐம்பதினாயிரம் பணத்துக்கு பெரிதாக வட்டி இல்லை, சின்ன மகன் கொடுத்ததாக சொல்லி விட்டு அவரே அதை பார்த்துக் கொள்ள நினைத்தார்.
“வட்டி கட்டுற அளவுக்கு பெரிய ஆள் ஆகிட்டானா மா அவன்?” பொய்யான வியப்போடு கேட்டான் ஆனந்த்.
“ஆமாம் டா, முன்ன விட இப்ப பொறுப்பு கூடிப் போச்சு, எண்ணி ஆறு மாசத்துல உன் கஷ்டத்துல தோள் கொடுத்திடுவான் பாரு”
“வேணாம் மா, என் கஷ்டத்தை நான் பார்த்துக்கிறேன், இப்ப நீ வாங்கியிருக்க கடனையும் இனிமே ஏதும் கடன் வாங்குறதா இருந்தாலும் அதையும் சேர்த்து அவனை பார்த்துக்க சொல்லு, போதும்” என்றஆனந்த் அதற்கு மேல் பேச்சை வளர்க்கவில்லை.
மகனின் இந்த பேச்சில் மருமகளை தாளித்தவர், கொஞ்ச நாள் போன பிறகு கஷ்டம் என கண்ணீர் விட்டால் எப்படியும் கேட்பதை கொடுத்து விட போகிறான், என் மகனை பற்றி எனக்கு தெரியாதா என்ற நம்பிக்கையில் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் இருந்தார்.
ஆனந்த் பயந்த படியே சென்னையில் அவனுக்கு வேலை கிடைப்பது சிரமமாக இருந்தது. அவனுடைய திறமைக்கு தகுந்த படி நல்ல சம்பளத்தில் எங்கெல்லாம் வேலை பெறலாம் என கருதியிருந்தானோ அங்கெல்லாம் ஏன் வேலையை விட்டு விட்டு வேறு வேலை தேடுகிறாய் என்ற கேள்வியை பிரதானமாக்கி அவனை நிராகரிப்பு செய்தனர்.
மனைவியின் பாராமுகம் ஒரு பக்கம், சரியான வேலை கிடைக்காதது, போதாததற்கு இரவில் கண் விழித்து வேலை பார்ப்பது என ஆள் இளைக்க ஆரம்பித்து விட்டான்.
தேனின் கவனத்திலும் இது பதிய என்னவென அவளுக்கும் கவலை. ஆனால் இருவரும் மனம் விட்டு பேசிக் கொள்ளவே இல்லை.
தேனுக்கு முதல் மாத சம்பளம் கிடைத்த நாள் அது. குறைவாக இருந்தாலும் நிறைவாக உணர்ந்தாள். வேலை முடித்து கோயிலுக்கு செல்ல நினைத்தவள் கணவனோடு சேர்ந்து போக பிரியப் பட்டு, அவனுக்கு செய்தி அனுப்பினாள்.
வெகு நாட்களுக்கு பிறகு மனைவி சுமூகமாக பேசவும் சற்றே நல்ல மன நிலைக்கு மாறியவன் வருகிறேன் என சொல்லி, உடனே கிளம்பியும் விட்டான்.
கோயிலுக்கு செல்லும் வழியிலேயே சம்பளம் பற்றிய விவரம் சொன்னாள் தேன். வாழ்த்து சொன்னவன், “என்ன ட்ரீட் தர போற தேனு?”என ஆசையாக கேட்டான்.
“என்ன வேணும் உங்களுக்கு?” என அவள் கேட்க, என்ன கேட்பது என அவனுக்கு தெரியவில்லை, வெறுமனே விழித்தான்.
உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவள் அப்போதைக்கு எதுவும் சொல்லவில்லை. கோயிலுக்கு சென்று விட்டு வருகிற வழியில் பனியாரக் கடை ஒன்று இருக்கும். பைக்கை அங்கு நிறுத்த சொல்லவும், “இவ்ளோ சிம்பிலா ட்ரீட் தர்றியே?” என கிண்டலாக கேட்டான்.
“என் சேலரிக்கு இவ்ளோதான், வாங்க. எப்படியும் உங்களுக்கு வேலை கிடைக்கும்ல, அப்போ வேணா ஸ்டார் ஓட்டல் கூட்டிட்டு போங்க. அப்ப நிறைய செலவு வைக்கிறேன் உங்களுக்கு” என அவளும் கிண்டலாக சொன்னாள்.
அவனது முகம் சுணங்கி விட்டது. கவனித்தவள் அப்போதைக்கு ஏதும் சொல்லவில்லை.
சுத்தமான கடை என்பதால் மகனுக்கும் அங்கேயே பனியாரம் சாப்பிட கொடுத்தாள். சிற்றுண்டிக்காக வந்தவர்களுக்கு இரவு உணவே முடிந்து விட்டது. இன்று ஆட்டம் அதிகம் என்பதால் வீட்டுக்கு வரும் வழியிலேயே உறங்கி விட்டான் தருண்.
ஆனந்த் வேலைக்கு புறப்பட வேண்டும். உற்சாகமே இல்லாமல் தயாராகிக் கொண்டிருந்தான்.
“லீவ் போடலாம்னா இன்னிக்கு லீவ் எடுங்களேன்” என தேன் சொன்ன வேகத்திற்கு, உடனடியாக விடுப்பு எடுத்து விட்டான்.
கணவன் மனைவி இருவரும் ஹாலில் அமர்ந்து பால் பருகினார்கள்.
“ஏங்க ரொம்ப டல்லா இருக்கீங்க?” என கேட்டாள்.
“நைட் ஷிஃப்ட் வேலைங்கிறதால இருக்கும்” என சமாளித்தான்.
“நீங்க படற கஷ்டத்தை என்கிட்ட சொன்னா நான் வருத்த படுவேன்னு நினைக்குறீங்களா? ஆனா எதையுமே என்கிட்ட ஓபனா நீங்க சொல்லாம போறதுதான் என்னை அதிகமா வருத்த பட வைக்குது. இல்லை இவகிட்ட சொல்லி என்னாக போகுது, இவளுக்கு என்ன தெரியும்னு யோசனையா?”எனக் கேட்டாள்.
கணவனை எப்படியும் பேச வைத்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் இருக்கிறாள் என்பது அவளின் பார்வையிலேயே புலப்பட்டது.
“எம்மேல நிறைய கோவம் வருத்தம்லாம் இருக்குதானே உனக்கு?” என்றான்.
“கண்டிப்பா இருக்கு, அதுக்காக உங்க மேல அக்கறை இல்லைனு ஆகிடாது. நல்ல படியா வாழணும்… வாழ்ந்திடுவோம்ங்கிற நம்பிக்கைலதான் திரும்ப வந்தேன். உங்கள இப்படி பார்க்க பயமா இருக்கு, என்ன பிரச்சனை?”அவனது கையை பிடித்துக்கொண்டு அவள் கேட்ட விதத்தில் இளகினான் ஆனந்த்.
அவளது மடியில் படுத்துக் கொண்டவன் சற்று நேரம் மௌனமாக இருக்க, அவளும் வேறு கேட்காமல் அமைதியாக இருந்தாள்.
கால் மணி நேரமாகவும் உறங்கிப் போய் விட்டான் போல என கருதியவள், அதை உறுதி செய்ய லேசாக அவனது தோளை அசைத்துப் பார்த்தாள்.
கண்கள் திறவாமலேயே வேலை கிடைக்காமல் இருப்பதை சொல்லி, “இனி என்ன செய்றதுன்னு தெரியலை தேனு” என்றான்.
“ஹையோ, நான் கூட நாளைக்குத்தான் இந்த உலகத்தோட கடைசி நாள்னு அறிவிச்சிட்டாங்க போல, அதனாலதான் இப்படி இருக்கீங்கன்னு நினைச்சிட்டேன்” என்றாள் தேன்.
கண்களை திறந்தவன், “உனக்கு கவலையா இல்லையா? எனக்கு பயமா இருக்கு? உனக்காக இங்க சென்னைல சொந்தமா வீடு வாங்கணும்னுலாம் ஆசை பட்டேன், இப்ப வீட்டு வாடகைக்கே… ப்ச்… உன் வீட்ல ஏதாவது கேட்டாங்களா? உன் அம்மா அண்ணன்லாம் எதுவும் சொன்னாங்களா?” என விசாரித்தான்.
“அப்பாவை தவிர இன்னும் யாரும் என்கிட்ட பேச ஆரம்பிக்கல. பேசினாலும் நம்ம கஷ்டத்தைலாம் அவங்ககிட்ட சொல்றதா இல்லை நான். நீங்க ஏன் அவங்கள பத்திலாம் இவ்ளோ யோசிக்கிறீங்க?”
வெகுநாளாக மனதில் காயமாகவே இருந்ததால் மருத்துவ மனையில் ராஜ்குமார் தன்னை கேவலமாக பேசியதை சொல்லி விட்டான்.
“இப்பவும் என் நிலைமை பெருசா என்ன மாறிடுச்சு? மாமாதான் பணம் கொடுத்தார்னு என்னிக்கு தெரியுதோ அன்னிக்கு இன்னும் கேவலமா பேசுவார் உன் அண்ணன், உன் நகை இன்னும் அடகுலதான் இருக்கு, சரி பண்ணிடுவேங்கிற நம்பிக்கை குறைஞ்சிட்டே இருக்கு” என்றவன், அவள் அழுது கொண்டிருப்பதை கவனித்து விட்டு அதிர்ந்து போனவனாக எழுந்தமர்ந்தான்.
கணவனது வேலை பறி போன சமயத்தில் அவன் மீது அத்தனை கோவம் இருந்த போதும் அதற்காக அண்ணன் அவனை பேசியதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
தேனின் அண்ணனாக தங்கைக்கு நியாயம் கேட்கவும் ஆனந்தை கேள்வி கேட்கவும் ராஜ்குமாருக்கு உரிமை இருக்கிறது, ஆயினும் இப்படி அவமரியாதை செய்ததை எந்த வகையிலும் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவளும் அவமானமாக உணர்ந்தாள்.
மூன்று வருட வாழ்க்கையில் அவர்களின் தனிமையான அந்தரங்க நேரத்தில் ஒரு நாளும் தான் ஆண் எனும் செருக்குடன் நடந்து கொண்டதில்லை ஆனந்த். அவளின் கண் பார்த்து, மூச்சுக் காற்றின் மொழி புரிந்து நடந்து கொள்பவன். அவளுக்கு விருப்பமில்லை என தெரிந்தால் கண்ணியமாக நடந்து கொள்பவன். குழந்தை பெறுவது பற்றிய அண்ணனின் விமர்சனத்தை அவளால் அத்தனை எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.
உதடுகள் கடித்து அவள் அழுகையை அடக்க, “சேச்ச என்ன தேனு இது, உன் அண்ணனுக்கு கோவம் வந்தா என்ன பேசுறோம் செய்றோம் எதுவும் தெரியாது. உன்கிட்ட சொல்ல நினைச்சதே இல்லை நான், இன்னிக்கு என்னை மீறி சொல்லிட்டேன். அழாத”என்றான்.
குளியலறை சென்று முகம் கழுவி வந்தாள்.
“தூங்கலாம் வா” என்றான்.
“உங்களுக்கு வேற நல்ல வேலை கிடைக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு, நீங்களும் நம்புங்க. விடாம முயற்சி பண்ணுங்க. பையனுக்கு படிப்பு செலவு, வீட்ல கல்யாணம் ஆகாத வயசுப் பொண்ணு, பெரிய ஹாஸ்பிடல் செலவு, லட்சக்கணக்குல லோன் அப்படினு எந்த கமிட்மெண்டஸும் இப்போதைக்கு நமக்கு இல்லை. நகைக்கு வட்டி கட்டிக்கலாம். அப்பாக்கு தர வேண்டியதை மெதுவா தந்துக்கலாம்”
“இருக்க ஒரு இடம் இருக்கு, போட்டுக்க துணியும், அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கஷ்டமில்லாமலும் இருக்கோம். நம்ம ரெண்டு பேர் சம்பாத்தியத்துல நல்லாவே குடும்பம் நடத்திக்கலாம். எதை பத்தியும் நினைச்சு பயப்படாம, கவலை படாம வேலை தேடுங்க, கண்டிப்பா கிடைக்கும்” தெளிவாக அழுத்தமாக சொன்னாள்.
வாழ்க்கைத் துணை சொல்லும் நான்கு வாக்கியம் ஒரு மனிதனுக்கு பலம் தருமா என்ன? ஆனந்திடம் கேட்டால் அது தரும் பலத்தையும் தைரியத்தையும் வேறெதுவும் தந்து விடாது என்பான்.