அவன் அம்மாவிடம் ஏதோ சொல்ல வாய் திறப்பதற்குள், “உன் கூட பொறந்த பொண்ணுக்கு செய்ய யோசனை பண்ணாதடா. இத்தனைக்கும் ஒரே ஒரு அக்காதான் உனக்கு. அவ சந்தோஷமா இருந்தாதான் நீ நல்லா இருக்க முடியும்”என்றார் சுந்தரி.
அம்மாவை என்ன சொல்வதென சங்கடமாக நெளிந்தான் ஆனந்த். கணவன் வாய் திறக்க போவதில்லை என்பதை உணர்ந்த தேன், “அண்ணியோட ரெண்டாவது மகனுக்கு இது ரெண்டாவது மொட்டை. குழந்தைக்கு மொட்டை போடுறேன்னு அவன் மாமாக்கும் சேர்த்து போட வேணாம் அத்தை”என்றாள்.
வாயே பேசாத மருமகள் இப்படி பேசியதை சுந்தரியால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.
“யார் யாருக்கு மொட்டை போடுறா? ஏன் உன் பொறந்த வீட்டுல உனக்கு செய்யலையா?” எனக் கேட்டார் சுந்தரி.
“முறைன்னு எது இருக்கோ அதைத்தான் என் அப்பா வீட்ல செய்றாங்க, அளவுக்கு மீறி அவங்களும் செய்ய மாட்டாங்க, நாங்களும் வாங்கிக்க மாட்டோம்” என்றாள் தேன்.
வேதாச்சலம் மகனை பற்றி கவலை பட்டு கொண்டே இருக்க, அப்பாவிடம் மட்டும் விஷயத்தை சொல்லியிருந்தான் ஆனந்த். அவரோ மனைவியிடம் உளறி விட்டார்.
“என் அப்பா கடனா கொடுத்திருக்கார், என்னிக்கா இருந்தாலும் அதை இவர் திருப்பி தந்திடுவார்” என்றாள் தேன்.
“அவ்ளோ கடனை தர்ற என் பையன் இந்த அம்பதினாயிரம் கடனை மட்டும் தராம போயிட மாட்டான்” என்ற சுந்தரி, மகனை உக்கிர பார்வை பார்த்தார். உன் மனைவியின் வாயை மூடச் செய் எனும் மறைமுக செய்தி தாங்கியிருந்த பார்வை அது.
“உள்ள போ தேனு, நான் பேசிக்கிறேன்”என்றான் ஆனந்த்.
“தாராளமா பேசுங்க, அதுக்கு ஏன் நான் உள்ள போகணும்? இங்கேயே என் முன்னாடியே பேசுங்க. இவ்ளோ பட்டு இப்பவாவது உங்களுக்கு சுதாரிப்பு வந்திருக்கான்னு நானும் தெரிஞ்சுப்பேன்” என்றாள் தேன்.
மனைவி பேசியதில் ஆனந்துக்கு கோவம் வந்து விட்டது. போதாதற்கு மோவாயில் கை வைத்து அதிசயித்து பார்த்த சுந்தரி, “நல்லா இருக்குடா உன் பொண்டாட்டி உனக்கு தர்ற மரியாதை, எல்லாம் வேலைக்கு போற திமிரு. புள்ளைங்களுக்கு ஆயா வேலை பார்க்கிறப்பவே இப்படின்னா இன்னும் நல்ல வேலைக்கு போயிட்டான்னா உன் கதி அதோ கதிதான்”என்றார் சுந்தரி.
“அம்மா நீயாவது சும்மா இரேன்” என ஆனந்த் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “அடுத்தவங்களை சுரண்டி சுரண்டி வாழுறத விட ஆயா வேலை ஒண்ணும் கேவலம் இல்லை” என சொல்லி விட்டாள் தேன்.
பெற்ற மகனிடம் நாங்கள் அடைந்து கொள்வது சுரண்டி வாழ்வது என்றாகி விடுமா? உன் அம்மா பேச கற்று கொடுத்தாரா? என மருமகளிடமும் மனைவியை அடக்க தெரியாமல் அவளை பேச விட்டு வேடிக்கை பார்க்கிறாயா என மகனிடமும் கோவப்பட்டார் சுந்தரி.
வருடக் கணக்காக தேனின் மனதில் அடை பட்டுக் கிடக்கும் கோவம் இன்று வெளிப்பட்டது. எப்படியெல்லாம் ஆனந்தின் உழைப்பு இவர்களால் சுரண்டப் பட்டது என பட்டியல் போட்டாள் தேன்.
“அவரோட கடமைகளை தாராளமா செய்யலாம், என்னைக்கும் நான் தடை சொல்ல மாட்டேன். கடமை கடமைன்னு சொல்லி இவரை இளிச்சவாய் ஆக்கினா நான் பேசுவேன். உங்க சின்ன பையன் படிப்பை முடிச்சு எத்தனை வருஷம் ஆகுது? உங்க பொண்ணோட பசங்களுக்கு அவரும் மாமாதான், தாய்மாமா முறையெல்லாம் அவரும் செய்யலாமே. இப்ப எந்த நிலைமைல இவர் இருக்காருன்னு தெரிஞ்சும் அவசியமே இல்லாம செலவ இழுத்து விட்டா கண்டிப்பா நான் பேசத்தான் செய்வேன், அது உங்க கண்ணுக்கு திமிரா தெரிஞ்சா அப்படியே இருக்கட்டும்” தேன் போட்ட சத்தத்தில் மலைத்து போனார் சுந்தரி.
ஆனாலும் மனம் தளராமல், “அப்புனுவே பாவம்… சிரமத்துல இருக்கான், அவன் நல்ல நிலைமைக்கு வந்ததும் அண்ணனுக்கு நிறைய செய்றதா சொல்லியிருக்கான். நல்ல பொண்ணு குடும்பத்தை அனுசரிச்சு நடப்பேன்னு உன்னை பத்தி நான் நினைச்சத பொய் ஆக்க பார்க்காத” என்றார்.
“உங்க அப்புனுதான் ஏற்கனவே எங்களுக்கு நிறைய நல்லது செஞ்சிட்டாரே, இன்னும் என்ன செய்ய காத்திருக்கார்? அவ்ளோ நல்லதெல்லாம் தாங்குற அளவுக்கு சக்தி படைச்சவங்க இல்லை நாங்க, அதனால உங்க அப்புனுகிட்ட போதும் இனிமே எந்த…”என்றவள் முகத்தை இன்னும் கோவமாக்கி, வார்த்தையில் அழுத்தம் கூட்டி, “நல்லதும் செய்ய வேணாம்னு சொல்லுங்க”என்றாள்.
தேனுக்கு பதில் சொல்ல முடியாமல் மகனை பார்த்து அழ ஆரம்பித்து விட்டார் சுந்தரி.
“அடுத்த நாடகத்தை ஆரம்பிச்சிட்டாங்க, இத பார்க்கிற அளவுக்கு நேரமோ பொறுமையோ எனக்கில்லை, நீங்களே பார்த்து நல்லா நடிக்கிறீங்கன்னு கை தட்டி விசில் அடிங்க” என்றவள் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
அம்மாவிடம் இந்தளவுக்கு பேசியிருக்க வேண்டாம் எனதான் நினைத்தான் ஆனந்த். நிஜத்தில் இப்படியெல்லாம் பேச வேண்டும் என தேனிடமும் எந்த திட்டமும் இல்லை. அந்த நேர கோவம் வார்த்தைகளாக வடிவம் பெற்று வெளி வந்து விட்டன.
“இந்த அவமானத்தை அடையவாடா இங்க கிளம்பி வந்தேன். நெஞ்சே வெடிச்சிடும் போல இருக்கேடா. எங்க அவர்? அவரை கூப்பிடு, அடுத்த பஸ்ல ஊருக்கு கிளம்புறேன் நான்” என்றார் சுந்தரி.
அம்மாவை சமாதானம் செய்து இன்னொரு அறையில் படுக்க வைத்தவன் மனைவியை காண சென்றான். அவளும் படுத்துக் கிடந்தாள்.
“கொஞ்சம் பொறுமையா பேசியிருக்க கூடாதா தேனு?” என அவன் கேட்டதுதான் தாமதம். எழுந்தவள் பொங்கி விட்டாள்.
“உங்கம்மா எவ்ளோ இளக்காரமா என்னை என் வேலையை பத்தி பேசுவாங்க. எனக்காக எங்கப்பா இப்போ உங்க கடனை அடைச்சதும் உங்கக்காக்கு நீங்க செய்றதும் ஒண்ணா? ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டதும் அவங்க பக்கம் நியாயம் கூடிப் போச்சா? எங்கப்பாக்கு கொடுக்க வேண்டிய கடனை அடைச்சு என் நகையை மீட்குற வர அனாவசிய செலவு எதுவும் செய்யக் கூடாது நீங்க?”என்றாள்.
மனைவி சொல்லிக் காட்டியதில் அவனது முகம் கறுத்துப் போனது.
“என்னை சொல்லணும், இத்தனை அனுபவிச்சவருக்கு புத்தி வந்திருக்கும், மாறியிருப்பாருன்னு நம்பி வந்த என்னைத்தான் சொல்லணும்” என சொல்லி நெற்றியில் சுள் என அடித்துக் கொண்டவள் மீண்டும் படுத்து விட்டாள்.
சில நாட்களாக வீட்டில் நிலவி வந்த இலகுத் தன்மை மறைந்து இறுக்கமான சூழல் உண்டானது.
மதிய சாப்பாடு கடையிலிருந்துதான் வரவழைத்தான். வேதாச்சலத்துக்கு என்ன சண்டை என்றே தெரியவில்லை. ஆனாலும் மகன் கஷ்ட படும் படி எதுவும் செய்யக் கூடாது என மனைவிக்கு அறிவுரை சொன்னார். சுந்தரியின் கோவ பார்வையில் அத்தோடு வாயை மூடிக் கொண்டார்.
தேன் சாப்பாட்டையெல்லாம் தியாகம் செய்யவில்லை. இனி எதற்காகவும் தனது நலனில் சமரசம் செய்து கொள்ளப் போவதில்லை என முடிவு செய்திருந்தவள் மகனுக்கும் சாப்பாடு கொடுத்து, தானும் நன்றாக சாப்பிட்டுக் கொண்டாள்.
தருண் உறங்கிப் போக, வீடு பயங்கர அமைதியில் இருந்தது. மாலையில் ஆனந்தே அனைவருக்கும் தேநீர் போட்டு வழங்கினான். கணவனின் முகத்தை பாராமல் தேநீர் டம்ளரை வாங்கிக் கொண்டாள்.
அம்மா தேநீர் பருகியதும், “நைட் ட்ரைனுக்கு டிக்கெட் போட்ருக்கேன் மா” என்றான்.
“இல்லை நான் வரலைமா, அகிலனை வச்சு பார்த்துக்கோங்க” என அவன் சொல்லவும், சுந்தரி ஏதோ சொல்லப் போனார்.
அம்மா பேச இடம் தராதவன், “ஆஃபிஸ் கடன் அடைபட்டாலும் இன்னும் நான் கடனாளிதான் மா. இப்ப பார்க்கிற வேலை ஒண்ணுமே இல்லை. அதனால என்னால வேற பத்தியெல்லாம் யோசிக்க முடியாது. என்னை கேட்காம கடன் வாங்கினா நான் பொறுப்பேத்துக்க மாட்டேன்னு உங்ககிட்ட முன்னாடியே சொல்லியும் கடன வாங்கியிருக்கீங்கன்னா என்ன அர்த்தம்?” எனக் கேட்டான்.
“எனக்கு தெரியாதுடா, எல்லாம் இவளும் இவ சின்ன மகனும் பண்ற வேலை” என்றார் வேதாச்சலம்.
“சும்மா இருங்க!” என கணவரை அதட்டிய சுந்தரி, “என்னடா உன் பொண்டாட்டி பேச்சை கேட்டு இப்படி பேசுறியா?” எனக் கேட்டார்.
“திரும்ப திரும்ப சண்டை வர்ற மாதிரியே பேசாதம்மா. அக்காவோட ரெண்டு பசங்களுக்கும் காது குத்து, மொட்டை போடுறது எல்லாம் சிறப்பா செஞ்சாச்சு. இனியும் கூட பொறந்தவனா அக்காக்கு என்னென்ன செய்யணும்னு இருக்கோ அதையெல்லாம் செய்வேன், அதை மட்டும்தான் செய்வேன். புள்ளைக்கு திரும்ப மொட்டை போட்டா நீங்க போயிட்டு வாங்க, வரக்கூடிய சூழல்ல நான் இல்லை” என அழுத்தம் திருத்தமாக கூறினான் ஆனந்த்.
“என்னடா இப்படி கையை விரிக்கிற? அப்புனுக்கு கூட பொண்ணு பார்க்கலாம்னு இருக்கேன்டா. அவன் ராசிக்கு கல்யாணம் ஆனா ஒஹோன்னு வந்திடுவானாம். அண்ணனா இருந்து நீதானே நடத்தி கொடுக்கணும்” என்றார் சுந்தரி.
“முன்ன நின்னு நடத்தி வைக்கிறதுன்னா என்னம்மா என்ன அர்த்தத்துல சொல்றீங்க?” என ஆனந்த் கேட்கவும் அதிர்வோடு பார்த்தார் சுந்தரி.
“முதல்ல யாரு அவனுக்கு பொண்ணு கொடுப்பா?” என ஆனந்த் கேட்கவும், வேதாச்சலம் ஏதோ சொல்ல வர, அவரை பார்வையால் அடக்கினார் சுந்தரி.
கவனித்தாலும் ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை ஆனந்த். வேறு எதுவும் அதிர்ச்சிகளை அந்த நேரம் தாங்கும் சக்தியற்று விசாரிக்காமல் அப்படியே விட்டான்.
“அவன் கல்யாணத்துக்கு தேவையான பணத்த அவன்தான் சம்பாதிச்சுக்கணும்மா. அவன் விஷயத்துல வேற எதுவும் எதிர்பார்க்காத”என்றான் ஆனந்த்.
“நீ அவனோட அண்ணன் டா” என்றார் சுந்தரி.
“ஆமாம் மா, ஆனா அவனுக்கு அண்ணன் மட்டுமே இல்லை. என் புள்ளைக்கு அப்பா, என் வைஃபுக்கு ஹஸ்பண்ட். இவங்களையும் நான் பார்க்கணும் மா. அத விட என் வாழ்க்கைய இனியாவது சந்தோஷமா வாழணும்னு நினைக்கிறேன்” என அவன் சொல்லவும் வேதாச்சலத்துக்கு மனம் கலங்கி விட்டது.
“போதும் நீ பேசினது. சின்ன வயசிலிருந்து இவனை கெட்டிக்காரன் எப்படியும் பொழச்சிப்பான்னு சொல்லி சொல்லி, சின்னவனை உருப்படாதவன் ஆக்கினது கூட பரவாயில்லை, இவனை வாழ விடாம பண்றது பெரிய பாவம். ஒழுங்கா ஊருக்கு கிளம்புவோம்” என்றார் வேதாச்சலம்.
கணவரும் இப்படி பேசுகையில் இனி தான் பேசினால் மகனின் கண்களுக்கு கெட்டவளாகி விடுவோமோ என அஞ்சி அமைதியாகி விட்டார் சுந்தரி.
இரயில் நிலையம் செல்ல பெற்றோரை கார் ஏற்றி விட்டவன் வீடு வந்தான். மனைவியின் மீது கோவத்தில் இருந்தவன் அவள் சமைத்ததை சாப்பிடாமல் பைக் சாவி எடுத்துக் கொண்டு வெளியேறி விட்டான்.
கோவம் சற்றே தணிந்து இவன் வீடு வருகையில் தேனும் தருணும் வீட்டில் இருக்கவில்லை. அவளுடைய அலைபேசியும் வீட்டிலேயே இருந்தது. நேரமோ பத்தை கடந்திருந்தது.