தேன் ஏதும் பேசாமல் கணவன் என்ன சொல்ல போகிறான் என அவனையே பார்த்திருந்தாள்.
“இப்ப என் நிலைமை தெரியாதாமா உனக்கு?” என்றான் ஆனந்த்.
“தெரியாமா என்னடா? எல்லாம் நானே ஏற்பாடு பண்ணிட்டேன். நீ வந்தா போதும், சாயந்தரம் ட்ரெஸ் எடுக்க கூட நீ பணம் தர வேணாம், எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்” என்றார் சுந்தரி.
இப்போது ஆனந்த் தன் மனைவியின் முகத்தை பார்த்தான்.
“எப்படி அத்தை பணம் ரெடி பண்ணுனீங்க?” எனக் கேட்டாள் தேன்.
“நம்மள மாதிரி உள்ளவங்க அவசரத்துக்கு என்ன செய்வாங்களோ அத பண்ணித்தான் ரெடி பண்ணினேன்” என்றார் சுந்தரி.
வேதாச்சலத்துக்கும் எதுவும் விளங்கவில்லை. சென்னைக்கு போக மனைவி துணைக்கு அழைத்ததால் மகனையும் பேரனையும் பார்க்கலாம் என கிளம்பி விட்டார். வழியில்தான் மொட்டை போடுவது பற்றியெல்லாம் அவருக்கு தெரியும்.
தருண் சிணுங்கியதால் அவனை தூக்கிக் கொண்டே வெளியே சென்று விட்டார் வேதாச்சலம்.
எப்படி பணம் ஏற்பாடானது என்பது பற்றி பேசாமல் சம்பந்தம் இல்லாத கதைகள் பேசத் தொடங்கினார் சுந்தரி.
தேன் விடவில்லை, “பணத்துக்கு என்ன செஞ்சீங்கன்னு நேரடியா சொல்லுங்க அத்தை, நகை ஏதும் அடகு வச்சீங்களா?” எனக் கேட்டாள்.
“சொந்தத்துல ஒரே விஷேஷமா வருதே, எல்லாம் அடகுக்கு போயிட்டா எத போட்டுக்கிட்டு நிப்பேன்?” எனக் கேட்டார் சுந்தரி.
“அப்போ யார்கிட்டேயும் கடன் வாங்குனீங்களா?” என அடுத்த கேள்வியை கேட்டாள்.
“ரொம்ப ஒண்ணும் இல்லை, அம்பதினாயிரம்தான். அதுவும் ரெண்டு காசு வட்டிதான். ஆறு மாசம் கழிச்சு கொடுத்தா போதும். அதுக்குள்ள ஆனந்த் வேற வேலைக்கு போயிடுவான்”என்றார்.