Advertisement

கண்மணி நீ வரக் காத்திருந்தேன்….1…..

31-12-2001

ராமனாத புரம் மாவட்டம்…அதன் இரண்டாவது பேரூராட்சியான ராமேஸ்வரம்….என்றுமில்லாத  உற்சாகத்துடன் அங்கமைந்திருந்த அரசு அலுவலர் ஓய்வு இல்லம் அந்தப் புத்தாண்டுக்கான சகல கொண்டாட்டங்களுக்கும் கூடிய முன்னேற்பாடுகளுடன் காணப்பட்டது. வண்ணக் காகிதத் தோரணங்கள், வகை வகையான  சிற்றுண்டிகள், காபி, டீ ,குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், எல்லாவற்றுக்கும் சிறப்பான ஏற்பாடுகள்செய்யப் பட்டிருந்தன.

ஆனால் அந்த ஊர் பதட்டத்திற்கான அறிகுறிகளையும், போராட்டத்திற்கான மூல நபர்களையும், கலவரம் உருவாவதற்கு முகாந்திரமான  அனைத்து காரணிகளையும் தன்னகத்தே அடக்கி வைத்திருந்தது.இரண்டு நாட்களாக அங்கே மாவட்ட ஆட்சித் தலைவர் முகாமிட்டிருந்தார்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னதாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவர்களது புனித அந்தோணியார் கோயில் திருவிழா வருகிற மார்ச் மாதம் நடக்க இருந்தது. அதில் கலந்து கொள்ள அரசு சில பல நிபந்தனைகளை விதித்திருந்தது. அந்நியமங்களை உள்ளூர் மீனவர்கள் ஏற்க மறுத்தனர். குடும்பம் குடும்பமாக மாவட்டத்திலுள்ள அனைத்து மீனவர்களும் திருவிழாவிற்கான தமது உரிமைகளையும் திருப்பலி செலுத்துவதில் திருவிழா நிற்பதற்கு முன்னர் பங்கெடுத்த தங்கச்சிமடம் ரோமன் கத்தோலிக்கப் பாதிரிமார்களுக்கே முன்னுரிமை வேண்டுமென்று சிறு சிறு குழுக்களாகக் கூடி கூடிப் பேசிக் கொண்டிருந்தனர்.

அதை அறிந்த மாநில உள்துறை அமைச்சகம் மாவட்ட ஆட்சியருக்கு ஒரு பொறுப்பைத் தந்திருந்தது. மாவட்டம் முழுவதும் ஓர் ஆய்வு நடத்தி அந்த மாவட்டத்தில் இருந்து 10 பேரை மட்டும் வடிகட்டி வருகிற திருவிழாவிற்கு அனுப்ப வேண்டியது. செல்லுகிற மக்கள் இந்திய நாட்டின் சார்பாக அங்குள்ள மக்களுடன் அளவளாவி திருவிழாவைக் கொனண்டாடிவிட்டுத் திரும்ப வர வேண்டியது… இந்த ஏற்பாடுகள் சற்றே பிசகினாலும் இரு அண்டை நாடுகளுக்கான நல்லுறவு, வர்த்தக மற்றும் கலாச்சாரப் பரிமாற்றம் அனைத்தும் பாதிக்கப்படும் அபாயம்….அது மட்டுமன்றி அந்த அண்டை நாட்டின் ஒத்துழைப்பு இந்தியத் துணைக் கண்டத்தின் ஒரு புறக் கடல் எல்லைகளை ஆக்கிரமித்து போர் முரசு கொட்டப் போதுமானது.

 மத்திய அரசு சொல்வதை மாநில அரசால் ஏற்க முடியாது..மாநில அரசு சொல்வதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை…எல்லார்க்கும் எல்லாவற்றையும் புரிய வைக்க முடிவதில்லையே…இவையனைத்தையும் விட முக்கியமாக இங்கிருக்கும் மக்கள் இராம நாத புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிக் குப்பன் படையாச்சி கட்டியதுதான் கச்சத் தீவின் அந்த அந்தோணியார் கோவில் என்பதையும், தங்கள் உரிமையைப் பறைசாற்றும் கச்சத் தீவு இராம நாத புரம் மாவட்ட வருவாய்த் துறை எல்லைக்குட்பட்ட்து என்பன போன்ற ஆவணங்களையும், மறப்பதாக இல்லை என்பதுதான் பெரும் சவாலாக அரசின் முன் இருந்தது. அரசு இயந்திரம் பழுதின்றிச் செயல்படுவதாகக் காட்டிக் கொள்ள வேண்டிய நிலை மாவட்ட ஆட்சியருக்கு….

அருகிலுள்ள சிற்றூர்களின் முக்கியப் புள்ளிகளை இங்கு சந்திக்க ஒழுங்கு செய்யப் பட்டிருந்த்து. காலை அதைச் செவ்வனே செய்து முடித்த மாவட்ட ஆட்சியர், அங்கிருந்த காவல் துறை, தீயணைப்புத் துறை, கடலோரக் காவல் படை மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் ஆகியோருடனான சந்திப்பைத் தொடர்ந்த மாவட்ட ஆட்சியர் முக்கிய சில முடிவுகளை எடுத்த பின் கூட்டத்தை முடித்து வைத்தார்.

ஆட்சியர் உறங்கச் சென்றாலும் அவருடன் அந்த மீட்டிங்கில் பங்கேற்ற அனைத்துப் பிரிவு அதிகாரிகளும் அந்த புத்தாண்டின் இரவில் உறங்கச் செல்லவில்லை. ரோந்துப் பணி ஏற்பாடுகள், கோவில்கள், சர்ச்சுகள் என புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள், அதையொத்த பாதுகாப்பு ஏற்பாடுகள், இன்ன பிற பணிகளில் மூழ்கி மிகுந்த களைப்புக்காளான அவர்கள் உறங்கச் சென்றிருந்த ஆண்டின் முதல் நாள் பின்னிரவு நேரம்…

முந்தைய தினத்தின் சந்தடிக்கும் சலசலப்புக்கும் கூட்டத்திற்கும் சற்றும் சம்பந்தமின்றி அமைதியைப் போர்த்தியிருந்த அந்த ஓய்வில்லத்திற்குள் மழை வரும் அறிகுறிகளுடன் கூடிய இரவின் கருமையை ஒத்த கரும்போர்வையைப் போர்த்தியிருந்த அந்த உருவம் சுற்றுச் சுவர் வழியே உள்ளே குதித்தது. முதல் மாடியிலுள்ள ஒரு குறிப்பிட்ட அறைக்குள் நுழைந்து உறங்கிக் கொண்டிருந்த குழந்தையின் மூக்கில் மயக்க மருந்து தெளிக்கப் பட்ட கைக் குட்டையை வைத்து மயங்கச் செய்து தோளில் தூக்கியவாறே அருகிலிருந்த மரக் கிளையின் உதவியுடன் அம்மரத்தில் ஏறிக் கயிறு கட்டி வெளியில் குதித்தது.

கிளைகளின் சலசலப்பினால் கண்விழித்த செண்ட்ரி (ஆட்சியரின் வருகை முகாந்திரமாக ஓய்வு இல்லப் பாதுகாப்பிற்காக அமர்த்தப் பட்டிருந்த காவலர்) ஒரு உருவம் உள்ளே இருந்து வெளியில் குதித்ததைப் பார்த்து அவசரமாக கையிலிருந்த வயர்லெஸில் தகவல் கொடுத்தவாறே பின் தொடர்ந்து ஓடத் தொடங்கினார்.

 

“சார்..! நான் 402…இங்கே கலெக்டர் தங்கியிருக்கற ட்ராவலர்ஸ் பங்களால இருந்து யாரோ வெளியில ஓடறாங்க…எப்போ எப்படி உள்ள போனாங்கன்னு தெரியலை…”

 

“……………………………………………………………………….”

 

“நானும் பின்னாடி ஓடிட்டுதான் இருக்கேன் சார்…ஒரே ஆளுதான்…ஆனால் நல்ல தாட்டியா இருக்கான்…கையில எதுவும் இல்லை போல…இருந்தாலும் வலது கையை மட்டும்தான் வீசி வீசி ஓடறாப்போல இருக்கு….”

 

“……………………………………………………………………………..”

 

“இருட்டில எப்படி சார் பார்க்க….?”

“சரி சார்…நான் காலில சுட்டுடறேன்..நீங்க கொஞ்சம் பேட்ரோல் வண்டியை சீக்கிரம் வரச் சொல்லுங்க சார்….”

வயர்லெஸ் இணைப்பைத் துண்டித்துவிட்டு ஓடிக் கொண்டிருக்கும் அவனை நோக்கிச் சுட்டார். தடுமாற்றத்துடன் ஓடத் தொடங்கிய அவனை இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு வந்த ஒரு ஆட்டோ ஏற்றிச் சென்றது.

 

ஆட்டோவில் ஏறியதும் ஓட்டிக் கொண்டிருந்த அவன் கேட்டான்…”என்னடா..முகமே சரியில்லை..?”

“பின்னே,,,நமக்குப் பிடிக்கற காரியமா நாம செய்துட்டிருக்கோம்… எல்லாம் பித்தலாட்டம்..இதுல அந்த செண்ட்ரி காலில சுட்டுட்டாண்டா…வலி உயிர் போகுது…”

“ஐயோ…காலைக் கீழே வைக்காதே…சீட் மேலே தூக்கி வை..கொஞ்சம் பொறுத்துக்கோடா….இப்போ கைமாத்திறலாம்..”

“நான் பிள்ளையத் தூக்கினது தெரிஞ்சிருக்காதுன்னு தாண்டா நினைக்கிறேன்…. பிள்ளை எவ்வளவு அழகுடா..தங்க விக்கிரகம் மாதிரி..”

     சற்றுத் தொலைவில் பேட்ரோல் வாகனத்தின் சைரன் ஒலியைக் கேட்டவன் சட்டேன்று அருகிலிருந்த கடற்கரைச் சாலைக்குள் புகுந்தான்..

 

“மச்சான்.. எப்படியும் குண்டடி பட்ட உன் காலிலிருந்து சொட்டற ரத்தத்தை வெச்சு மோப்ப நாய் உதவியுடன்  உன்னைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வாங்க….அப்போ நீ கடலுக்குள்ள இருந்தியானா கண்டுபிடிக்கறது கஷ்டம்…வாக்கி தாக்கி வெச்சிருக்கேதானே..நாங்க உன்னை இன்னும் ரெண்டு மணி நேரத்தில் காண்டாக்ட் பண்றோம்..” என்று நடக்கப் போவதை அறியாமல் சொன்னவன் முடிந்தவரை படகின் அருகில் ஆட்டோவைக் கொண்டு சென்று அங்கிருந்த ஒரு படகில் அவனைத் தூக்கி ஏற்றிப் பிள்ளையையும் அதில் ஏற்றினான். ஆட்டோவில் இருந்து டீஸல் கேனையும் படகினுள் வைத்தவன் “கிளம்புடா…இந்நேரம் அந்த செண்டரி ஆட்டோ பத்தித் தகவல் குடுத்திருப்பான்…உன்னை எல்லாரும் ரோட்டுப் பக்கம்தான் தேடிட்டு இருப்பாங்க…நான் தயாராகிப் போகணும்” என்று விடை கொடுத்தவன் அந்தப் படகு கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்திருந்துவிட்டு ஆட்டோவிலிருந்த நீரை எடுத்து நம்பர் பிளேட்டில் படிந்திருந்த சகதியையும் உள்ளே சிந்தியிருந்த ரத்தத்தையும் துடைத்துவிட்டுக் கொஞ்சம் புகையிலையைத் தூவி சீட்டின் ஓரத்தில் ஒரு பான்பராக் பொட்டலத்தைப் பிரித்துக் கொட்டியவன் திருப்தியாகி வந்த வழியே செல்லாமல் வேறு சில சந்துகளின் உதவியோடு அவனது வீட்டை அடைந்தான்.

 

அங்கே ஓய்வு இல்லத்தில்…உள்ளே இருந்து வெளியில் ஒருவன் ஏறிக் குதித்தது அப்போதுதான் தெரிந்து பரபரப்பு தொற்றிக் கொண்டிருந்தது. ஒய்வு இல்லத்தினுள் கேட்ட பலவகையான சப்தங்களைக் கேட்டு மொட்டை மாடியினின்று இறங்கி வந்த கலெக்டர் நடந்ததைக் கேட்டு மனைவியை அறையினுள் அனுப்பிவிட்டு அந்தப் பகுதி காவல் அதிகாரியைத் தொடர்பு கொண்டார். இல்லத்தினுள் காணாமல் போனவை எதுவுமல்ல….கடுந்தவம் புரிந்து அவர்கள் பெற்றெடுத்த மழலைச் செல்வத்தைத் தவிர…

அதற்குள் அங்கு வந்து சேர்ந்திருந்த காவல் துறை அதிகாரிகள் புறவழிச் சாலைக் கண்காணிப்பையும் பேருந்து நிலையம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளையும், உடன் அழைத்து வந்திருந்த வெடிகுண்டு மற்றும் தடயவியல் நிபுணர்களைத் துரிதப் படுத்திக் கொண்டிருந்தனர். பிள்ளையின் புகைப் படம் எல்லா இடத்துக்கும் FAX மூலம் அனுப்பப் பட்டது.வீட்டுக்குள் இருந்த அனைவரது கைரேகையும் எடுக்கப் பட்டது.இல்லத்தில் இருந்து வெளியில் ஓடியவனைத் துரத்திய செண்டரியை அழைத்து வந்தனர். அவரிடம் விசாரணை தொடங்கியது.

“ஓடினவன் கையில எதுவும் வைத்திருந்தானா…? எப்படி இருந்தான்…? எவ்வளவு உயரம் இருந்தான்? என்ன எடை..? எந்தத் திசையில் ஓடினான்..? அவன் வீட்டுக்குள் எப்போது வந்தான்? வீட்டுக்குள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த பணியாளர்கள் நேர்மையானவர்களா? முன்பே அங்கே வேளை செய்பவர்களா? என்பன போன்ற கேள்விக்கணைகள் அங்கேயே பிறந்து வளர்ந்தவர் என்பதால் சற்று அதிகமாகவே அவரைத் தாக்கத் தொடங்கின.

அவர் சொன்ன திசையைச் சுற்றிலும் காவல்துறை வாகனங்களை அனுப்பியவர்கள் வெடுகுண்டு நிபுணர்களின் இல்லை என்ற பதிலில் திருப்தியானவர்கள் அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார்கள். செண்டரியிடம் இருந்து அவர்களுக்குச் சாதகமான பதில் எதுவும் வரவில்லை…அவனுக்குக் குண்டடி பட்டிருந்தது..அத்துடன் ஒரு ஆட்டோவில் ஏறினான் என்பதைத் தவிர…

மோப்ப நாய்களை அழைத்து வரச் செய்தவர்கள் அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களையும் உரிமையாளர்களையும் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உடனடியாகக் கூடச் செய்தனர். சிந்திய ரத்தத்தை முகர்ந்த மோப்ப நாய்கள் கடற்கரைக்குச் சென்று கடலருகில் தயங்கி நின்றன.

கலெக்டர் தூய்மையான கரங்களுக்கு சொந்தக்காரர்: மக்கள் உபகாரி: நியாய தர்மத்திற்குக் கட்டுப்பட்டவர்:சுய நலமில்லாதவர்:  வார்த்தை தவறாதவர் என்பன போன்ற பல சிறப்புகளை உடையவர்.. ஆதலால் காவல் அதிகாரிகள் சிக்கலின் நுனி பிடிபடாமல் குழம்பினர்.

புயல் சின்னம் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை என்பதால் கடலுக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்ற எச்சரிக்கை இருந்தபோதிலும் அது அன்று சற்று நேரத்திற்கு முன்னர் மட்டுமே அனுப்பப் பட்டதால் அவர்கள் கடலுக்குள் பிள்ளையை அழைத்துச் சென்றிருப்பர் என்ற கோணத்தை ஒதுக்கினர்.குண்டடி பட்ட காலுடன் அவனால் கடலில் கால் நனைத்திருக்க இயலாது என்பதால் அவனது உடைகளை மாற்றி அவன் கடலில் எறிந்திருக்கக் கூடும் என நினைத்தனர்.

 

விரைந்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை அடைந்து இன்னும் இருள் பிரிந்திருக்காத அந்த அதிகாலை வேளையில் கூடியிருந்த ஆட்டோ ஒட்டுனர்களிடமும் உரிமையாளர்களிடமும் தனித் தனியே விசாரணையைத் துவக்கினர்.

 

ஏற்கெனவே பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் இருந்து சந்தேகப் படும் விதமாக யாரும் இல்லை எனத் தகவல் வந்தபடியால் சாலைக் கண்காணிப்பு அதிகமிருந்தது. உள்நாட்டுப் படகுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்த படியால் அந்த வழியில் யாரும் யோசிக்கவில்லை..புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருந்த அந்த நேரத்தில் கடற்பகுதியில் கண்காணிப்பு அதிகமிருக்கும் என்றெண்ணினர். மேலும் கடற்படைப் பாதுகாப்பு எல்லைகளுக்குள் காவல்துறைக்கு பெருமதிப்பிருக்காது என்பதும் ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும்…

ஆனால் புயல் எச்சரிக்கை விடப்பட்ட அந்நேரத்தில் அப்பகுதியில் உட்செல்லும் கப்பல்கள் வெளியேறும் கப்பல்களுக்குமான பாதுகாப்பு மற்றும் தேவையான உதவிகளைச் செய்ய தயார் நிலைப் படுத்தவேண்டும்..மேலும் அவை பயணம் செய்யத் தகுந்த வானிலை மாற்றம் ஏற்படும்வரை அவை தங்கிச் செல்லவோ அல்லது வரும் கப்பல்களில் பழுது இருப்பின் அவற்றைச் சரிபார்த்து அனுப்பவோ அதுவரை அக்கப்பல்களை நிறுத்தவும், அவற்றின் பாதுகாப்புக்குப் பொறுப்பெடுப்பதும் போன்ற ஏற்பாடுகளைத் துறைமுகத்தைத் தொடர்பு கொண்டு செய்ய வேண்டிய கடமைகளும் கடற்படைக்கு உண்டு என்பதையும் பரந்துவிரிந்த வங்கக் கடலின் சிறு சிறு போட் ஜெட்டி எனப்படும் படகு நிறுத்துமிடங்களைக் காவல் காப்பது அதுவும் அங்கு குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நிறுத்த இயலக் கூடிய கடற்படைக் கப்பல்களின் வாயிலாக என்பது அவர்கள் அறிவுக்கு அப்பாற்பட்ட காரியமாகத் தோன்றியதோ அல்லது கலெக்டர் வீட்டுப் பிள்ளையைக் காப்பாற்ற இயலாவிட்டால் அரசு இயந்திரத்தின் சுழற்சியில் பணிமாற்றம் நிச்சயம் என்ற பதற்றம் அவர்களைச் சிந்திக்க விடாமல் செய்ததோ…?

ஒய்வு இல்லத்தில் அந்நேரத்தில் சிறு பிள்ளையைத் தனியே விட்டுவிட்டு மழை வரும் அறிகுறிகளை ரசிக்க மழைக்கு முன்னதான காற்றுக்கு மயங்கி மணாளனுடன் மாடிக்குப் போன தன்னுடைய எண்ணப் பிழையை கண நேரமும் மன்னிக்க முடியாமல் குற்றவுணர்வுடனும் பரிதவிப்புடனும் தவித்துக் கொண்டிருந்தாள் பிள்ளையின் தாய்…ஆட்சியரின் மனைவி என்ற கட்டுப்பாடு அவளுக்கிருந்தது…அவளால் பிறரைப் போலத் தன் கண்ணீரையோ தன் உணர்வுகளையோ வெளிக் காட்ட அவள் உரிமை மறுக்கப் பட்டவள்…அருகில் அவள் கணவனிருந்தும் அவன் அப்போது மாவட்ட ஆட்சியராக மற்றவருக்கு உயர் அதிகாரியாக இருக்கும்போது அவர்கள் கணவன் மனைவியாக இறுக்கம் தளர்ந்திருக்க இயலாது. அடிக்கும் ஒவ்வொரு தொலைபேசி மணிக்கும் ஒலிக்கும் ஒவ்வொரு வாக்கிடாக்கி அறிவிப்புக்கும் மட்டுமே அவள் மனம் இறைவன் திருவடியினின்று இவ்வுலகம் வந்தது. நேரம்தான் போய்க் கொண்டிருந்ததே தவிர அவள் பிள்ளையைப் பற்றிய தகவல் எதுவும் வந்து சேர வில்லை,.

 

பொழுது விடியத் துவங்கிய வேளையிலே அவர்களது பிள்ளையைப் பற்றிய தகவல் வந்தது….அது அவர்கள் எண்ணிப் பார்க்க இயலாத நிபந்தனைகளைத் தாங்கியதாக இருந்தது..கதைகளிலும் திரைப்படங்களிலும் வருவது போல அவர்கள் பணத்தையோ அல்லது யாரேனும் தீவிரவாதிகளின் விடுதலையையோ தப்பிச் செல்ல வாகனங்களையோ கேட்கவில்லை… மாறாக அவர்கள் கேட்டது அவர்களது உரிமையை அல்லது உரிமையாக அவர்கள் நினைத்ததை…

     கச்சத் தீவுத் திருவிழாவுக்கு செல்வதற்கான நபர்களை அதிகப் படுத்தி, அங்கு செல்வதற்காக அரசு வசூலிக்கும் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்…அங்கு செல்ல தற்போது குறிப்பிட்ட வகைப் படகுகளுக்கு மட்டுமே அனுமதி என்ற நிலை மாறி அனைத்துப் படகுகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும்… முன்பு போலவே தங்கச்சி மடத்தைச் சார்ந்த பாதிரிமார்களுக்கு திருப்பலி செலுத்த அனுமதி வழங்கப் பட வேண்டும்…திருப்பலி தமிழில் மட்டுமே வழங்கப் பட வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகள்…

     அவற்றைக் கேட்ட ஆட்சியருக்கும் அதிகாரிகளுக்கும் பிள்ளையின் தாய்க்கும் தெரிந்துவிட்டது இனி என்ன நடக்குமென்பது… அவர்கள் விதித்த நிபந்தனைகள் யாவுமே இரு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்த விதிகளில் குறிப்பிடப் படாதவை….மதச் சார்பற்ற நாடாக இந்தியா தன்னை உலக நாடுகள் மத்தியில் நிலைநிறுத்த விரும்பி அதை உலக அரங்கில் முன்னெடுக்கத் துணியும்போது மதச் சார்பான கோட்பாடுகள் ஒப்பந்தங்களில் இடம்பெறாதிருப்பதும்…அது காலப் போக்கில் தன் வாழ்விற்கான களப் போராட்டத்தில் மக்கள் மனதினின்றும் நீங்கி விடுவதும் வழமையன்றோ…? அவ்வாறிருக்க இதில் எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப் படப் போவதில்லை என்பது திண்ணமாகத் தெரிந்தது அவர்களுக்கு..

எனினும் அவர்களது கடமையை நிறைவேற்றும்

வண்ணமாக அவர்களது நிபந்தனைகளை மாநில மற்றும் மத்தியப் பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சர்களுக்கும், முதலமைச்சருக்கும் தெரிவித்தனர். ஆட்சியரின் கருத்தைக் கேட்ட அவர்களிடம் அப்பிள்ளையின் தந்தை  ஒரு ஆட்சியராகவே “என் பிள்ளையை நான் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறேன் சார்…பிள்ளை வளர்ந்து நாட்டைக் காக்க ராணுவத்தில் சேர்ந்து உயிர்த்தியாகம் செய்திருந்தால்..அந்தப் பிள்ளைகளைப் பெற்றவரின் மன வழியை உணர இறைவன் எனக்குத் தந்த வாய்ப்பாக இதைக் கருதுகிறேன்..இருந்தாலும் நீங்கள் அதிகாரிகளுடனும் அந்த நாட்டுத் தூதரகத்துடனும் தொடர்பு கொண்டு சிறப்பாக ஏதேனும் செய்ய முடிந்தால் எங்களுக்காக் அதைச் செய்ய முயலுங்கள் சார் ப்ளீஸ்.” என்று மட்டும் சொல்லி முடித்துக் கொண்டார்.

வெறித்த பார்வையுடன் அவரை முறைத்ததைத் தவிர

வேறோன்றும் செய்யாமல் இறையடியை நாடினார் அவர் மனைவி…அவருக்கு ஆறுதல் தர வேண்டி அனைவரையும் அங்கிருந்து அனுப்பியவர் தாங்களும் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டனர்.

 

Advertisement