பரிமளா ரெசிடென்சி 2

தனது செல்ல பிராணி ஸ்வீட்டியால் ஆர்த்தி அந்த அபார்ட்மெண்டில் வெகு சீக்கிரமே பிரபலம் ஆனாள். அந்த ஆஸ்திரேலியன் பூனையை பற்றி விசாரிக்கவாவது, தெரியாதவர்கள் கூட நின்று இரண்டு வார்த்தையாவது பேசிவிட்டு சென்றார்கள். 

பூனையின் ரகம் என்ன? எவ்வளவு விலை? எங்கே வாங்கினாள்? என்ன சாப்பிடும்? இப்படி பல கேள்விகள். 

சிலரை போல பேச பிடிக்காத ஆள் இல்லை ஆர்த்தி. சிரித்த முகமாகவே எல்லோருக்கும் பதில் தருவாள். அவளுக்கு மனிதர்களோடு உறவாடுவது பிடித்தே இருந்தது. அதனால் தான் அவளுக்கு நிறைய நண்பர்களும் கூட. 

ஆர்த்தி அந்த அபார்ட்மெண்டில் நிறைய பேரிடம் பேசினாலும், உண்மையாக பழகியது ஷ்யமளாவோடு தான். இருவரும் பக்கத்து பக்கத்து வீடு அல்லவா… ஆர்த்தி எப்போதுமே பால்கனியின் கதவை திறந்து தான் வைத்திருப்பாள். அவளின் ஸ்வீட்டியும் பால்கனியில் தான் அதிகம் இருக்கும். 

பால்கனி வழியாகவே  ஷ்யமளாவும் ஆர்த்தியும் பேசிக் கொள்வார்கள். 

அன்று ரேகா எதோ புது விதமான பலகாரம் செய்திருந்தார் என்று கோமதிக்கு வந்து கொடுத்துவிட்டு செல்ல… அதை கணவர் மகனுக்கு கொடுத்து விட்டு தானும் சாப்பிட்ட கோமதி, போன்னில் யாரையோ அழைத்து அது குறித்து கிண்டாலாக பேச…. சரத்திற்கு கோபம் வந்துவிட்டது.

“அம்மா, உன்னை மதிச்சு வந்து கொடுத்திட்டு போறதுக்கு நீ இப்படித்தான் பண்ணுவியா? இவங்க போய் அதை அவங்ககிட்ட சொன்னா உன்னை பத்தி என்ன நினைப்பாங்க?”

“எனக்கு இதுதான் மா உன்கிட்ட பிடிக்க மாட்டேங்குது. எதாவது குறை இருந்தா ஒன்னு உன் மனசுல வச்சுக்கோ… இல்லைனா கொடுத்தவங்ககிட்ட நேரா கூட சொல்லு பரவாயில்லை. ஆனா இது மாதிரி மத்தவங்க கிட்ட கிண்டல் பண்ணி பேசுறது நல்லாயில்லை சொல்லிட்டேன்.”

“ஹப்பா போதும் டா சாமி நீ கொஞ்சம் நிறுத்து. ஆமாம் எதிர்வீட்டு பொண்ணுகிட்ட கீழ நின்னு ரொம்ப நேரம் பேசினியாமே? என்னவாம் அவளுக்கு?”

“நீ எந்த கம்பனியில வேலை பார்க்கிற, நான் இந்த கம்பெனியில வேலை பார்க்கிறேன்னு தான் பேசிட்டு இருந்தோம்.”

“ரொம்ப பேச்சு எல்லாம் வச்சுக்காத. அப்புறம் யாராவது பார்த்தா எதாவது நினைப்பாங்க.”

“ம்ம்… வேற கம்பனியில நல்ல வேலை இன்னும் அதிகமான சம்பளத்தோட இருந்தா சொல்றேன்னு அந்த பொண்ணு சொல்லுச்சு. வேண்டாம்னு வேணா சொல்லிடவா…”

“ஹான் அப்படி அவசரப்பட்டு எல்லாம் சொல்லிடாத. பார்த்து பேசுன்னு சொன்னேன், அவ்வளவு தான்.”

அதன் பிறகு வந்த நாட்களில் சரத்தும் ஆர்த்தியும் நேர் எதிரே பார்த்துக் கொண்டால்… நின்று பேசிவிட்டு தான் செல்வார்கள். ஆர்த்தி அவளது நண்பர்களை சரத்திற்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

ஆர்த்திக்கு எல்லா நாளும் அலுவலகம் செல்ல வேண்டியது இல்லை. வாரத்தில் மூன்று நாட்கள் சென்றால் போதும். மீதம் இரண்டு நாட்கள் வீட்டில் இருந்து தான் வேலை பார்ப்பாள். 

அவளே நன்றாகத்தான் சமைப்பாள். சில நேரம் மூட் இல்லையென்றால் வெளியே வாங்கி உண்பாள்.

இரவு நேரம் ஸ்வீடியை வாக்கிங் அழைத்து செல்லும் போது சில நேரம் ஷ்யமளாவுமே உடன் செல்வார்.

அன்று அதே போல நடந்து கொண்டிருந்த போது, இவர்கள் தளத்திற்கு மேல் தளத்தில் இருக்கும் துர்காவும் அவர் மருமகள் சுனிதாவும் எதிரே வந்தனர். அவர்கள் வீட்டில் எதோ பூஜை கண்டிப்பாக வர வேண்டும் என்றனர். 

அவர்கள் சொன்னதற்கு ஷ்யாமளா பிடி கொடுத்தே பதில் சொல்லவில்லை. வெளிய போற வேலை இருக்கு என்றவர், ஆர்த்தியையும் அவசரமாக அழைத்து கொண்டு வந்துவிட்டார்.

“ஏன் ஆன்ட்டி? பூஜைக்குதான போனா என்ன?”

“நீ வேற…. மாமியாரும் மருமகளும் யூ ட்யுப் சேனல் வச்சிருக்காங்க. அவங்க வீட்டுல இருந்து பாத்ரூம் வரை எல்லாம் போட்டாச்சு. அப்புறம் சமையல்ல இருந்து சகலமும் போட்டாச்சு.”

“இப்போ பூஜைக்குன்னு அவங்க வீட்டுக்கு கூப்பிடுறதே கண்டென்ட்க் காகத்தான்.

“உனக்கு போகனுமா நீ வேணா போ… நான் வரலை.”

“எனக்கும் இதெல்லாம், பிடிக்காது தான். ஆனா சில பேர் போடுறது நிஜமாவே நல்லா இருக்கும்.”

“ஆரம்பத்துல எல்லோரும் நல்லாத்தான் போடுறாங்க. அப்புறம் கண்டென்ட் கிடைக்காம வேற மாதிரி ஆகிடுறாங்க போல….”

“யார் யாரோ ஹெல்த் டிப்ஸ் சொல்றது என்ன? இந்த அறிகுறியா இருந்தா இந்த நோயா இருக்கலாம்னு எல்லாம் சொல்றாங்க. அதை எல்லாம் கேட்டாலே பயமா இருக்கு. அது மட்டுமா சமைக்க தெரியாதவங்க எல்லாம் சமையல் குறிப்பு சொல்றாங்க. அன்னைக்கு ஒரு அம்மா கீரைல ஒரு லிட்டர் தண்ணி ஊத்துது. சமைக்க தெரியாதவங்க இதை பார்த்து சமைச்சா என்ன ஆகிறது சொல்லு. அது பேர் கீரை மசியலாம்.” 

ஷ்யாமளா சொன்ன விதத்தில் ஆர்த்திக்கு சிரிப்பு வந்துவிட்டது.

“சரி அவங்களை விடுங்க நீங்க எப்படி சமைப்பீங்க”.”

“ம்ம்… நான் உன்னை நிறைய தடவை என் வீட்டுக்கு சாப்பிட கூப்டிட்டேன். இந்த வாரம் நீ கண்டிப்பா வர…”

“சரி வரேன்.” என ஆர்த்தியும் ஒத்துக் கொண்டாள்.

சனிக்கிழமை மதிய உணவிற்கு ஷ்யாமளா வீட்டிற்கு ஆர்த்தி செல்ல வெளியே வர… சரத்தும் வெளியே நின்றிருந்தான். 

அவளைப் பார்த்ததும், வெளிய போய் சாப்பிட போறியா என்றதற்கு, “வெளிய இல்லை… ஷ்யாமளா ஆண்டி வீட்டுக்குத்தான்.” என அவள் சொல்லும் போதே ஷ்யாமளா வெளியே வந்தவர், சரத்தையும் பார்த்துவிட்டு அவனை அழைக்க… எதோ சொல்ல அழைக்கிறார் என்று நினைத்து சென்றான். ஆனால் அவர் அவனையும் உணவுண்ண அழைக்க.. சரத் மறுக்க… 

“பரவாயில்லை வா…”  என ஆர்த்தியும் அழைத்து சென்றாள்.

ஷ்யாமளா நிறைய விதவிதமாக சமைத்து வைத்திருந்தார்.   

“ஏன் ஆண்டி இவ்வளவு?” என்றதற்கு,

“எங்க பையன் இங்க இருக்கும் போது இப்படித்தான் விதவிதமா சமைப்பா… அவன் இல்லைனா இவளுக்கு சமைக்க மூடும் இல்லை. இன்னைக்கு தான் நீ வரேன்னு இவ்வளவு செஞ்சிருக்கா….” ஈஷ்வர் சொன்னதும், ஆர்த்திக்கு ஷ்யமளாவின் மனநிலை நன்றாகவே புரிந்தது.

“நாம நமக்காகவும் வாழலாம் ஆன்ட்டி. நீங்க எப்பவும் உங்க பையனையே நினைச்சிட்டு இருக்கணும்னு இல்லை. அவர் என்ன அங்க சாப்பிடாமலா இருக்க போறார்.”

“புரியுது, ஆனா மனசு கேட்க மாட்டேங்குதே…”

“நான் நிறைய தடவை சொல்லிட்டேன். அதெல்லாம் கேட்கிறதே இல்லை.” என்றார் ஈஷ்வரும். 

“நீங்களும் எங்களோட உட்கார்ந்து சாப்பிடுங்க.” என்ற ஆர்த்தி, ஷ்யமளாவையும் உட்கார வைத்து அவளே எல்லோருக்கும் பரிமாறினாள். 

உணவை ருசி பார்த்த ஆர்த்தி, “இப்படி நான் சாப்பிட்டா போதும், ரெண்டு நாள்ல ரெண்டு கிலோ ஏறிடுவேன்.”என்றாள்.

“உங்க அம்மா இப்படி சமைக்க மாட்டாங்களா?” என்றார் ஷ்யமளா.

“எனக்கு அம்மா இல்லை ஆண்டி. நான் காலேஜ் படிக்கும் போதே இறந்திட்டாங்க. அப்பா மட்டும் தான்.” 

“அப்பா தனியாவா இருக்கார். இங்க உன் கூட வந்து இருக்கலாம் இல்ல…”

“அப்பா தஞ்சாவூர் ஸ்கூல் ஹெட் மாஸ்டரா இருக்காங்க. அதோட கூட பாட்டியும் இருக்காங்க. பாட்டி தெம்பாத்தான் இருக்காங்க. அதோட அத்தை எங்க வீடு பக்கத்திலேயே இருக்காங்க. அப்பா இங்க வந்தாலும் அவருக்கு போர் தானே அடிக்கும். இதே அங்க நிறைய சொந்த பந்தங்கள் இருக்காங்க. அதனால நான்தான் ஊருக்கு போய் அவங்களை பார்த்திட்டு வருவேன்.” 

ஆர்த்தி அவள் தட்டில் கவனமாகத்தான் இத்தனையும் பேசினாள். அதனால் அவள் என்ன மனநிலையில் இருக்கிறாள் என சரத்திற்கு தெரியவில்லை. 

அவன் ஆர்த்தி என்று அழைத்ததும், அவனை நிமிர்ந்து பார்த்தவள் சாதரணமாக இருக்க… 

“உனக்கு அத்தை மட்டும் தானா…. இல்லை முறைப்பையனும் இருக்கானா?” என்றான் கிண்டலாக.

“முறை பையன் இருக்கான். ஆனா என்னை விட சின்ன பையன். அத்தைக்கு ரொம்ப நாள் குழந்தை இல்லை.”

“போ… நீ கொடுத்து வைக்கலை…”

“எங்க வீட்ல இந்த முறை பையனை தான் கட்டனும் அப்படி எல்லாம் இல்லை. எங்க அப்பா எனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கார். எனக்கு பிடிச்ச பையனை நான் கல்யாணம் பண்ணிக்கலாம்.”

“நீதான் காலமெல்லாம் வாழ போற, அதனால உனக்கு எப்படிப்பட்ட பையன் வேணும்னு நீயே முடிவு பண்ணிக்கோன்னு சொல்லிட்டார்.”

“அப்போ ஜாலி தான் இல்ல…”

“அப்படியெல்லாம் இல்லை. அது பெரிய பொறுப்பு தெரியுமா? நீதானே பார்த்த, என்ன இந்த லட்சனத்துல பார்த்து வச்சிருகேன்னும் கேட்கலாம். நீதான பார்த்த அப்போ நீயே எந்த பிரச்சனை வந்தாலும் சமாளின்னு சொல்லலாம்.”

“என்னை இப்படி என் விருப்பத்துக்கே விட்டுருக்க வேண்டாம்னு கூட சில நேரம் தோணும்.”

“இப்பவும் என்ன கெட்டு போச்சு? உங்க அப்பாவையே மாப்பிள்ளை பார்க்க சொல்லு.” என ஷ்யமளா சொன்னதற்கு ஆர்த்தி பதில் எதுவும் சொல்லவில்லை. அவள் எதோ யோசனைக்கு சென்றுவிட்டாள்.

சரத்தும் ஈஸ்வரும் வேறு விஷயங்கள் பேசிக்கொண்டே உண்டனர்.

உண்டு முடித்ததும், ஷ்யமளாவிற்கு எல்லாவற்றையும் எடுத்து வைக்க ஆர்த்தி உதவினாள்.

“இன்னைக்கு சமைச்சது நாளைக்கு வரை வரும் போல…” 

“இன்னைக்கு பார்த்த வேலைக்கு நாளைக்கு சமைக்காம ரெஸ்ட் எடுங்க.

“நீ கொஞ்சம் எடுத்திட்டு போறியா?”

“நான் இப்போ சாபிட்டதுக்கு நைட் சாப்பிடவே மாட்டேன். நாளைக்கு ப்ரண்ட்ஸ் கூட வெளிய போறேன்.”

“நீ ஒன்னும் அப்படி நிறைய எல்லாம் சாப்பிடலை. இவ்வளவு கொஞ்சமா சாப்பிடுறதுனால  தான் குட்டியா இருக்க போல… உனக்கு இருபத்தியாறு வயசுன்னு சொன்னா நம்ப முடியலை.”

“என்னது உனக்கு இருபத்தியாறு வயசா…” என கேட்டுக்கொண்டு சரத் வர….

“அதுக்கு ஏன் டா இப்படி கத்துற?” என ஆர்த்தி முறைக்க…

அவர்களை பார்த்து சிரித்தபடி ஷ்யமளா இருவருக்கும் கிண்ணத்தில் பாயசம் கொடுத்தார். அதை உண்டபடி இருவரும் வீட்டை சுற்றிப் பார்த்தனர். 

படுக்கை அறையை தவிர இருந்த இன்னொரு அறையில் ஈஸ்வர் ஷ்யமளா தம்பதியரின் செல்ல புதல்வன் அருணின் புகைப்படம் இருக்க… அதை பார்த்து ஆர்த்தி முகத்தை சுளிக்க….

“ஏன் நல்லா தானே இருக்கார்? உன் மூஞ்சி ஏன் இப்படி போகுது?” என சரத் கேட்க…

“ஆளு நல்லாத்தான் இருக்கான். ஆனா குணம் சரியில்லையே… பாவம் ஆன்ட்டி எவ்வளவு கவலைப்படுறாங்க.”

“நீ ஒன்னு யோசிச்சு பாரு. படிச்ச படிப்புக்கு வெளிநாட்டில வேலை கிடைக்கிறதே கஷ்ட்டம். அவரும் போனதுக்கு நல்லா சம்பாதிச்சிட்டு வரணும்னு தானே நினைப்பார்.”

“ஏன் வெளிநாட்டில வேலை பார்க்கிறவங்க எல்லாம் இப்படித்தான் ஊர் பக்கமே வராம இருக்காங்களா… வேலையும் விட்டுடாம  குடும்பத்தையும் பார்த்துக்கிறவங்க எல்லாம் இல்லையா?….”

“நீ சொல்றதும் சரிதான்.” என சரத்தும் ஒத்துக் கொண்டான்.

   

ஷ்யமளா கணவரை விட்டு எங்கும் நகர மாட்டார். ஆனால் அவரை வற்புறுத்தி ஆர்த்தி வெளியே அழைத்து செல்ல ஆரம்பித்தாள்.

“நீங்க உங்க உலகத்தை ரொம்ப சுருக்கி வச்சிருக்கீங்க. உங்க வீட்டுக்காரரும், பையனும் மட்டும் உலகம் இல்லை.” என்றாள்.

“நீ வந்ததும் தான் என்னை கொஞ்சம் ப்ரீயா விடுறா….” என்று  ஈஸ்வரும் சொல்லி இருந்தார். “ஆன்ட்டியை நான் பார்த்துக்கிறேன், நீங்க கவலைப்படாம, உங்களுக்கு என்ன பண்ணுமோ பண்ணுங்க.” என்றாள். 

அப்படி ஒருநாள் வெளியே கடை வீதிகளில் சுற்றிவிட்டு இருவரும் உணவுண்ண ஹோட்டலுக்கு சென்றனர்.

அங்கிள் இல்லாம எப்படி போறது என்ற ஷ்யமளாவை ஆர்த்தி வற்புறுத்தி தான் அழைத்து சென்றாள்.

அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால்… அந்த ஹோட்டலில் நிறைய கூட்டம். காத்திருந்து தான் உண்ண வேண்டியது இருந்தது. 

வீட்டில் சமைத்து வைத்து விட்டுத்தான் ஷ்யமளா வந்திருந்தார். கணவருக்கு ஒன்றும் உணவு இல்லாமல் இல்லை. அப்படி இருந்தும் புலம்பிக் கொண்டே இருந்தார். 

இடம் இல்லாத காரணத்தால்… இவர்கள் இருந்த டேபிளில் இன்னொரு வயதான பாட்டியும் வந்து அமர்ந்தார். 

“என்ன வேண்டும்?” என்று கேட்ட சர்வரிடம்,

அளவு சாப்பாடும், நல்லி எலும்பு வருவலும் கேட்க….

“பாட்டி உன்னால எலும்பு கடிக்க முடியுமா? கறி வேணா எடுத்திட்டு வரட்டுமா என்று கேட்ட சர்வரிடம், 

“எனக்கு எலும்பு தான் பிடிக்கும். நான் சொன்னதை எடுத்திட்டு வா… நான் வாரம் ஒரு நாள் இந்த ஹோட்டலுக்கு வரேன். நீ என்ன இந்த ஹோட்டலுக்கு புதுசா…” என்றார்.

ஆர்த்தி அவரிடம் பேச்சு கொடுத்தாள்.

“நீங்க வார வாரம் வருவீங்களா பாட்டி. இந்த ஹோட்டல்ல சாப்பாடு நல்லா இருக்குமா?” என்று கேட்டதற்கு, “என் வீடு இங்க பக்கத்தில தான். நான் அடிக்கடி வருவேன். சாப்பாடு நல்லா இருக்கும்.” என்றார்.

உண்டு முடித்து கிளம்பியதும், “பாருங்க அந்த பாட்டியை பார்த்து நாம கத்துக்கணும். எனக்கு வயசு ஆகிடுச்சு, என் பிள்ளை கூட தான் வருவேன். என் புருஷன் கூட தான் வருவேன்னு இல்லாம அந்த அம்மா வாழ்க்கையை வாழுறாங்க பார்த்தீங்களா….”

“ஆமாம் நானும் அதைத்தான் நினைச்சேன்.”

“உங்க பையன் அங்க சந்தோஷமா தான் இருப்பார். அதனால நீங்களும் இங்க சந்தோஷமா இருங்க.”

“அவன் சந்தோஷமா தான் இருக்கான்னு உனக்கு எப்படி தெரியும்?” என்றதும், ஒரு நொடி விழித்தவள், “உங்களை பார்த்தாலே தெரியுது, நீங்க உங்க பையனை எப்படி சொகுசா வளர்த்திருப்பீங்கன்னு. அப்படி வளர்ந்தவர், கஷ்ட்டப்பட்டு எல்லாம் எங்கையும் இருந்திட மாட்டார். அவருக்கு அங்க நல்லா இருக்கு. அதனால தான் அங்க இருக்கார்.” என்றாள்.

“நீ சொல்றது சரிதான். புருஷன் பிள்ளைன்னு யோசிச்சு, மண்டை காஞ்சது போதும். இனி நான் என்னை பார்த்துக்கிறேன்.” என்றார்.

“ம்ம்… அப்படி நினைச்சுக்கோங்க. அதோட நீங்க அவரை கொஞ்ச நாள் கண்டுக்காம விடுங்க. அவர் தானா வழிக்கு வருவார்.” என்றும் சொன்னாள்.