“ப்ச் அம்மாவை குறை பேசாத. உன் முன்னாடிதானே பேசுறாங்க, அவங்களுக்கு இதெல்லாம் அக்செப்ட் பண்ணிக்க கஷ்டம், ஆனாலும் செய்யவே கூடாதுன்னு கண்டிப்பா ஏதும் சொன்னாங்களா?”
அவன் முறைக்க, “என்ன ஒட்டிக்காத, காஃப் சிரப் சாப்பிட்டு நேரமாவே நேத்து நைட் தூங்கிட்டேன். அப்படியே விடாம நடு ராத்திரி ரெஸ்ட் ரூம் போய்ட்டு வந்தவள இழுத்து புடிச்சு வச்சுக்கிட்டு தூங்க விட்டீங்களா? நைட் என் மூச்சுக்காத்து முழுக்க உங்க லங்க்ஸ்குள்ளதான் போயிருக்கும். இன்னிக்கு வேலை காட்ட ஆரம்பிச்சிடும்”
“ம்ம்ம்… இப்ப உட்காருங்களேன், முக்கியமான விஷயம் சொல்லணும்” என சொல்லி அவனை தன் பக்கத்தில் அமர வைத்துக்கொண்டாள்.
திருமணமாகி யுகி சொன்ன ஆறு மாத கால கெடு போன மாதமே முடிந்து விட்டது. வேலை பற்றி எப்போது இவள் பேச்செடுத்தாலும் பிடி கொடுக்கவே மாட்டேன் என்கிறான் யுகி.
ஆகவே அஞ்சலி அவளாகவே சில வேலைகளுக்கு விண்ணப்பம் செய்திருந்தாள். இணைய வழியாகவே இன்டர்வியூ முடிந்திருந்தது. அவளின் முயற்சி பற்றி முன்னரே யுகியிடம் சொல்லியிருக்கவில்லை அவள்.
இப்போது அந்த வேலைக்கு தேர்வாகி விட்டாள். சற்று முன்னர்தான் மெயில் பார்த்திருந்தாள். இனியும் இவனிடம் சொல்லாமல் இருக்க முடியாதே.
கோவையிலேயே பார்ப்பது போலான வேலைக்குத்தான் விண்ணம் செய்திருந்தாள். ஆனால் அனுபவம் இல்லாதவர்கள் முதலில் சென்னையில்தான் பணி புரிய வேண்டுமாம், ஒரு வருடத்துக்கு பின்தான் வேறு கிளைகளுக்கு மாறிக் கொள்ளலாம்.
பொறுமையாக யுகியிடம் எல்லாம் சொன்னாள் அஞ்சலி.
“அப்ளை பண்ணினப்ப இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணினப்பன்னு எப்பவுமே என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லை நீ?” என அதிருப்தியாக சொன்னான் யுகி.
“சிக்ஸ் மன்த்ஸ் டைம் கேட்ருந்தீங்க, அது முடிஞ்சு போய் ஒரு மாசம் ஆகிடுச்சுங்க. வீட்ல சும்மா இருக்க முடியலை என்னால. நந்து அண்ணி ப்ரெக்னெண்ட்னு போன வாரம் சொன்னதிலிருந்து உங்கம்மா வேற என்னை ஒரு மார்க்கமா பார்த்திட்டே இருக்காங்க, அந்த பார்வைக்கு அர்த்தம் நானும் சீக்கிரமா ப்ரெக்னெண்ட்னு சொல்லனுமாம். அதுக்கெல்லாம் நான் ரெடி இல்லை இப்போ”
“ம்ம்… ஆறு மாசம்னா கரெக்ட்டா ஆறு மாசத்துல எல்லாம் நடக்கணுமா உனக்கு? அப்ப என்னை நீ நம்பல?”
“இந்த விஷயத்துல மட்டும் உங்க எண்ணம் என்னன்னு என்னால கண்டுபிடிக்கவே முடியலைங்க” என்றவளிடம் ஏதோ சொல்ல வந்தான்.
அதற்குள், “இது நல்ல வேலை, ஒரு வருஷம் சென்னைக்கு வேலைக்கு போறேன். லீவ்னா இங்க வரேன், நீங்களும் முடியறப்போ அங்க வாங்க. விட்டுட்டு இருக்க முடியாது, அம்மா விட மாட்டாங்கன்னு சில்லியா காரணம் சொல்லாதீங்க” என கோவமாக சொன்னாள்.
“அப்ப முடிவே பண்ணிட்டியா?”
“ஆமாம், ஆஃபரை அக்செப்ட் பண்ணிகிட்டதா ரிப்ளை கூட பண்ணிட்டேன்”
“ரிப்ளை பண்றதுக்கு முன்னாடி கூட என்கிட்ட கேட்கனும்னு தோணலையா?”
“நீங்க கூடாதுன்னு சொல்லிட்டா… எங்க நானே அதை வேணாம்னு சொல்லிடுவேனோன்னு எம்மேலயே எனக்கு பயம். எப்படியும் உங்களை கன்வின்ஸ் பண்ணிக்கலாம்னு நினைச்சேன், எல்லா விஷயத்திலேயும் எனக்கு சப்போர்ட் பண்றவர்தானே நீங்க, ப்ளீஸ் நோ’ன்னு சொல்லிடாதீங்க. உங்களை மீறி செய்ய எனக்கும் கஷ்டம் இல்லையா?” அவனது மோவாயை பிடித்துக்கொண்டு கெஞ்சலாக பேசினாள்.
“ஒரு வாரம் வெயிட் பண்ணு” என்றான் யுகி.
“ஒன் வீக் கழிச்சும் என் முடிவு மாற போறது இல்லைங்க” கடினமான தொனியில் சொன்னாள்.
“ஒன் வீக் நல்லா யோசி அஞ்சலி, என்னை விட்டுட்டு இருக்க முடியும்னு உனக்கு ஸ்ட்ராங்கா தோணினா அப்புறம் இதை பத்தி பேசலாம்” என்றான்.
அஞ்சலி கோவமாக ஏதோ சொல்லப் போக, அவளின் வாயை கையால் மூடியவன், “நான் நாளைக்கு வேலை விஷயமா சென்னை போறேன், வர ரெண்டு மூனு நாளாகும். நீ யோசி” என சொல்லி வெளியேறி விட்டான்.
கணவனிடம் கோவம் கொண்டவள் படுக்கையில் சுருண்டு விட்டாள். யுகி குளித்து தயாராகிக் கொண்டிருக்க, அவன் பக்கம் திரும்பவே இல்லை. சாப்பாடு எடுத்து வைக்கும் படி அவன் அழைத்தும் அசைந்து கொடுத்தாள் இல்லை.
“வர்றியா இல்லை சாப்பிடாம போகவா?” எனக் கேட்டான்.
ஆத்திரமாக அவனை பார்த்தவள், “உங்களுக்கு சர்வீஸ் பண்ணிட்டே வீட்டோட இருக்கணும்னு நினைக்குறீங்க இல்லை? ஒரு வருஷம் எனக்காக விட்டு கொடுக்க முடியாதா?” எனக் கேட்டாள்.
“எது எனக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறது சர்வீஸா உனக்கு? டேபிள்ல இருக்கிறத எடுத்து போட்டுக்க முடியாம உன்கிட்ட கேட்கிறேனா? ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடுறது வழக்கம்தானே அஞ்சலி? எப்படி பேசிட்ட நீ?” என ஆதங்கமாக சொன்னவன் வெளியே சென்று விட்டான்.
பைக் எடுக்க தயாராகி விட்டவனிடம் ஓடி வந்து நின்றாள். அவளை பார்த்தாலும் முகத்தை கடினமாக வைத்துக்கொண்டு செல்வதிலேயே முனைப்பாக இருந்தான்.
“ஒழுங்கா சாப்பிட்டு போங்க” என்றாள்.
அவன் அழுத்தமாக அவளை பார்க்க, “இந்த லுக் எல்லாம் வேணாம், என்னடி சண்டையை போட்டு என் புள்ளைய பட்டினியா அனுப்பி வச்சன்னு உங்கம்மா கேட்டா என்னால பதில் சொல்ல முடியாது” என்றாள்.
“நான் அம்மாகிட்ட பேசிக்கிறேன், அவங்க உன்னை ஏதும் கேட்க மாட்டாங்க” என சொல்லி பைக்கில் ஏறப் போனான்.
பைக் சாவியை எடுத்துக் கொண்டவள், “சாப்பாடு வேஸ்ட் ஆகிடும்” என்றாள்.
“பேக் பண்ணி கொடு, போற வழில யாராவது இல்லாத பட்டவங்களுக்கு கொடுத்திட்டு போறேன்”
“ப்ச், உள்ள வாங்க. சாப்பாடு மேல எல்லாம் கோவத்தை காட்ட கூடாது. எனக்கும் பசிக்குது” என்றவளை ஊன்றிப் பார்த்தான். மூக்கை உறிந்து கொண்டு அவளும் அவனையே பார்த்தாள்.
“நிதானம் வேணும் அஞ்சலி உனக்கு” என சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் சென்றான்.
அமைதியாக சாப்பிட்டு கிளம்பி விட்டான். மதியமும் அதிகமாக இருவரும் பேசிக் கொள்ளவில்லை. மாலையில் மனைவிக்கு அழைத்து மருத்துவ மனை போக வேண்டுமா என கேட்டான். இப்போது பரவாயில்லை, மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியமில்லை என சொல்லி விட்டாள்.
இரவில் வீடு திரும்பியவன் உணவுக்கு பின் சென்னைக்கு கிளம்பி விட்டான். திரும்பி வர நான்கு நாட்கள் ஆகின. கைப்பேசியில் இருவரும் பேசிக் கொண்டாலும் அதிக பேச்சுக்கள் இல்லை. அவளின் கோவமும் குறையவில்லை.
கோவை திரும்பிய அன்றைய இரவு சாப்பாட்டுக்கு பின் அவன் நடக்க அழைக்க வர மறுத்தாள். இன்னொரு முறை கெஞ்சி அழைப்பான் என அவள் எதிர்பார்க்க, அவன் படுக்க சென்று விட்டான்.
அருகில் படுத்த தன்னை சீண்டாமல் உறங்கி விட்டவனை பார்த்து அவளுக்கு அழுகை வரும் போலிருந்தது. முயன்று தன்னை கட்டுப் படுத்திக் கொண்டாள். இரவெல்லாம் அவனுக்கு நல்ல இருமல்.
மறுநாள் அவளே அவனுக்கு கஷாயம் வைத்துக் கொடுத்தாள். அமைதியாக பருகினான். ஏதும் பேசுவான் என அவள் எதிர்பார்க்க, அவன் தன் அப்பாவை பார்க்க சென்று விட்டான்.
தேவைக்கு பேசுகிறான், பரிமாறினால் மறுக்காமல் சாப்பிடுகிறான், நடக்க வரும்படி அழைப்பதில்லை, இரவில் ஒரே படுக்கை என்றாலும் தள்ளிப் படுத்துக் கொண்டு உறக்கம். சென்னையிலிருந்து வந்ததிலிருந்து மூன்று நாட்களாக இப்படி தவிக்க விடுபவன் மீது அவளுக்கு கட்டுக்கடங்காத கோவம்.