Advertisement
தங்கள் பண்ணை வீட்டில் செங்கன் அமைத்து தரும், தற்காலிக ஊஞ்சலில் ஆடியபடி, அவன் பறித்து வந்து துண்டம் போட்டு உப்பு தூவி தரும் மாங்காய்களை உண்டுக் கொண்டே புத்தகம் படித்தாள் என்றால் நாட்சி தன்னை சுற்றி இயங்கும் உலகத்தையே மறந்துவிட்டு புத்தகத்தில் மூழ்கி விடுவாள்.
அன்றும் அப்படித் தான், கையில் கல்கியின் சிவகாமியின் சபதம் புத்தகத்தோடு நாட்சி தங்கள் பண்ணை வீட்டை நோக்கி நடந்துக் கொண்டிருந்தாள்.
தங்கள் வீட்டிற்க்கான பாதை வளைவில், ஏதோ குரல்கள் கேட்க, நாட்சியா தயங்கி நின்றாள். அவள் பின்னோடு அவளுக்கு தேவைப்படும் பொருட்களை சுமந்து வந்த செங்கன், “சின்னம்மா..?’’ என கேள்வியாய் அவளைப் பார்க்க,
“நம்ம வீட்டுப் பின் பக்கத்துல வேற யாரோட குரலோ கேட்குது செங்கா…வா மெதுவா போயி யாருன்னு பாக்கலாம்…’’ சொன்னவள் பூனை நடை நடந்து பின் பக்க கதவை நோக்கி முன்னேற, அவளைத் தடுத்த செங்கன், “அம்மா… நீங்க இருங்க….. நான் போயி பாக்குதேன்..’’ என்று பதட்டத்தோடு முன் வந்தான்.
அவன் அப்படி சொன்னதும் அவனைப் பார்த்து முறைத்தவள், “என் பின்னாடி வரியா..? இல்ல நான் தனியா போகவா…’’ என்று மிரட்டவும் வேறு வழி இல்லாமல் செங்கன் அவளைப் பின் தொடர்ந்தான்.
அவர்கள் வீட்டின் பின் புறத்தில் இருந்த திட்டில் பரணி அமர்ந்திருக்க, அவனுக்கு எதிரே கஜபதி பாண்டியன் எரிச்சலோடு நின்றிருந்தார். தந்தையைக் கண்டதும் அவரைக் கட்டிக் கொள்ள மனம் பறந்தது.
ஆனால் ஏற்கனவே சூடு கண்ட பயம், அவளை நகர விடாமல் தடுக்க நாட்சியா அங்கேயே நின்று அவர்கள் என்ன செய்கிறார்கள் என கவனிக்கத் தொடங்கினாள்.
“டேய் மாப்பிள்ளை வேண்டாம்டா…. நீ ஒரு ஸ்போர்ட்ஸ் மேன் உனக்கு தம்மு ரொம்ப முக்கியம்… இந்த பழக்கம் தொத்திக்கிச்சின்னா விடாது… நானே நாலு வருசமா இந்தக் கருமத்தை விட முயற்சிப் பண்றேன். முடியல… புதுசா நீ வேற ஏண்டா…’’ அவர் குரலில் ஆற்றாமை அப்பட்டமாய் ஒலித்தது.
“யோவ் மாமோய்…. நேத்து மொளச்ச பொடுசுங்க எல்லாம் காஜா பிடீ குடிச்சி ஸ்டைலா மூக்குல புகை விட்டுக் காட்டுதுங்க…. என் பிரண்டு மணி வேற தம்மடிச்சா… இப்படி இருக்கும் அப்படி இருக்கும் ரிலாக்ஸா பீல் பண்ணுவ அப்படி இப்படின்னு ஓவரா அளந்து விடுதான்.
எனக்கு அது எப்படி இருக்கும்னு இன்னைக்கி தெரிஞ்சே ஆகணும். நான் வேணா உனக்கு ஒரு உத்தரவாதம் தரேன். உன் கையால பொருத்தி தர அந்த ஒரே தம்மை தவிர வேற தொட மாட்டேன் போதுமா…’’
அவரிடம் விடாமல் வாதிட்டுக் கொண்டிருந்த பரணி தற்போது பனிரென்டாம் வகுப்பில் நுழைய இருப்பவன். பதினெட்டு தொடங்க இன்னும் சிறிது நாட்களே மீதம் இருந்தது.
‘தீ’ சுடும் என்றால் தொட்டு பார்த்து,‘ஆமாம்’ என்று ஒத்துக்கொள்ளும் பதின் பருவத்தில் இருந்தான். ஆனால் எதைச் செய்தாலும் அதையெல்லாம் அப்படியே வந்து கஜபதியிடம் ஒப்பித்து விடுவான்.
பரணி தன் பிடிவாதத்தில் இருந்து கொஞ்சமும் இறங்கப் போவதில்லை என்பதை உணர்ந்துக் கொண்ட கஜபதி, “லேய் இந்த விஷயம் உங்க அப்பனுக்கு தெரியனும்… உன்ன இல்ல என்ன தலை கீழா தொங்க போட்டு அடிப்பான்…’’ அவனிடம் சலித்துக் கொண்டே, தன் பாக்கெட்டில் இருந்த கோல்ட் பில்டர் சிகரெட் ஒன்றை எடுத்தவர், அதன் முனைக்கு தன் கையில் இருந்த லைட்டரால் கொல்லி வைத்தார்.
இதையெல்லாம் அவர்கள் அறியாமல் கவனித்துக் கொண்டிருந்த நாட்சியாவிற்கு சுவாரசியமாய் இருந்தது. அவளுமே பதின்ம வயதின் தொடக்கத்தில் இருந்தாள்.
அதோடு அவள் தந்தை யாரோ ஒரு புதியவனிடம் பேசும் போது அவர் கண்களில் வெளிப்படும் அன்யோன்யத்தை மிகவும் ரசித்தாள். எதிரில் இருப்பவன் அவருக்கு மிக மிக வேண்டியவன் என அவர் கண்களே அவளுக்கு அறிவுறுத்தின.
நாட்சியா கடைசியாய் அவர்கள் பள்ளியில் நடந்த நீச்சல் போட்டியில் கலந்துக் கொண்டு முதல் பரிசு வென்று வந்த போது அவர் கண்கள் அப்படி ஒரு அன்யோன்யத்தோடு அவளைப் பார்த்ததை உணர்ந்திருந்தாள்.
நாட்சியா தன்னை மறந்து அவர்களை ரசித்துக் கொண்டிருக்க, அவளுக்கு பின்னால் நின்றுக் கொண்டிருந்த செங்கன், “சின்னம்மா… நாம வீட்டுக்கு போயிடலாம் தாயி..’’ என அவளை அழைத்துக் கொண்டிருந்தான்.
“சு… பேசாம அமைதியா நில்லு.. இல்ல அப்படியே கிளம்பி வீட்டுக்கு போ…’’ அவள் வார்த்தைகளில் வெளிப்பட்ட கடினத்தில், செங்கன் வாயை மூடிக் கொண்டு அவளுக்கு பின்னால் நின்றான்.
கஜபதி தன் கையில் இருந்த சிகரெட்டை பரணியிடம் கொடுக்க, பரணி ஒரு வித எதிர்ப்பார்போடு அதை கையில் வாங்கிக் கொண்டான். அதன் அவன் உதட்டின் அருகே ஸ்டைலாக கொண்டு சென்றவன், ஆழ்ந்து மூச்சை உள் இழுத்து அக்கார நெடியை தனக்குள் வாங்கினான்.
அடுத்த நொடி, அவன் நுரையீரலே வெளியே வந்து விழுந்துவிடுமோ எனும் வண்ணம் அவன் இரும தொடங்கவும், “லேய் பரணி… பாத்துலே… பாத்து… இதுக்கு தான் சொன்னேன்… கேக்குறியா…?’’ என்றபடி அவன் தலையை வாஞ்சையுடன் தட்டிக் கொடுக்க தொடங்கினார்.
கையில் இருந்த சிகரெட்டை தூக்கிப் போட்டவன், “சைக் கருமம்… இது என்ன மாமா இப்படி இருமலா வருது… இந்த சனியத்தை எப்படி குடிச்சிட்டு இப்படி இருக்கு அப்படி இருக்குன்னு பீத்துதானுங்களோ தெரியல…’’
பரணி புலம்பிக் கொண்டே அருகில் இருந்த சொம்பில் இருந்த நீரைக் குடித்து இருமலை நிறுத்த முயன்றான். கஜபதி, “முதல்ல அப்படித்தாம்லே இருக்கும்… போக போக பழகிடும்…. ஆனா உனக்கு அது வேணாம்..’’ என்றபடி அவனையே பார்த்துக் கொண்டு நின்றார்.
“எனக்கு முதல்ல ஒன்னு வேணாம்னு நான் முடிவு பண்ணிட்டா அது எப்படி இருந்தாலும் கடைசி வரை எனக்கு அது வேண்டாம் தான். என்னைப் பத்தி உனக்கு தெரியாதா மாமூ…. சரி சரி இன்னைக்கு உன்னை நான் நீச்சல்ல ஜெயிச்சா கிளப்பு கடையில முட்டை பரோட்டா வாங்கி தரேன்னு சொன்ன இல்ல வா வா போலாம்…’’
அவரோடு பேசியபடியே தன் ஆடைகளை அவன் கலையத் தொடங்க, அவனை சிரிப்போடு பின் தொடர்ந்த கஜபதியும்,
“பிடிவாதம் அதிகம்லே உனக்கு..’’ என்றபடி தான் அணிந்திருந்த வேட்டி சட்டையை கலைத் தொடங்கினார்.
அவர்கள் உடையை கலையத் தொடங்கவுமே, நாட்சியா எதிர்புறம் திரும்பி நின்றுக் கொண்டாள். மீண்டும் செங்கன் அவளிடம் பார்வையாலேயே, “போகலாமா..?’’ எனக் கேட்க, மௌனமாய் தலை அசைத்தவள், அவனோடு வெளியேறி நடக்க தொடங்கினாள்.
அப்படி நடக்க தொடங்கியவள் ஏதோ தோன்றியவளாய், தங்கள் பண்ணைக் குளத்தை திரும்பிப் பார்க்க, அங்கே மார்பு வரை நீரில் மூழ்கி நின்ற பரணி, “யோவ் மாமா முடிஞ்சா என்னை முந்துப் பாக்கலாம்..’’ என்றபடி நீரைக் கிழித்துக் கொண்டு முன்னேறினான்.
அவள் தந்தை அவனைத் தொடர்ந்து நீந்துவதும் தூரத்தில் நின்றுக் கொண்டிருந்த அவளுக்கு தெளிவாய்த் தெரிந்தது. நாட்சியா ஒரு வருடத்திற்கு முன்பு பார்த்திருந்த பரணியை முற்றிலும் மறந்து இருந்தாள்.
அதோடு பரணிக்கு முளைத்திருந்த அரும்பு மீசையும், அதிகரித்து இருந்த உயரமும், உடல் வளர்ச்சியும் அவனைப் புதியவனாகவே அவளுக்கு அடையாளம் காட்டியது.
உதட்டில் மலர்ந்த முறுவலோடே நாட்சியா அன்றைக்கு வீட்டிற்கு திரும்பினாள். அன்று மாலைத் தன்னை சந்திக்க வந்த தந்தையிடம் சற்று நேரம் செல்லம் கொஞ்சிக் கதை பேசியவள் இறுதியாய்,
“அப்பா இன்னைக்கு கொஞ்ச நேரம் புக் படிக்கலாம்னு நம்ம தோப்பு வீட்டுக்கு வந்தேனா… அப்ப நீங்க யார் கூடவோ நம்ம குளத்துல நீந்திக்கிட்டு இருந்தீங்க… யார்ப்பா அது… நான் உங்ககிட்ட பேச வரலாம்னு தான் நினச்சேன்… அப்புறம் வேண்டாம்னு திரும்பி வந்துட்டேன்…’’
மகள் அப்படி சொன்னதும் அவளை அதிர்ச்சியாய் பார்த்தவர், “நீங்க ஏன் ராணிமா அங்க எல்லாம் தனியா வந்தீங்க… செங்கன் உங்களைப் பாத்துக்காம இங்க என்ன வேலை செய்யிறான்… செங்கா..’’
அவர் உரத்தக்குரலில் செங்கனை அழைக்கவும், அவரைப் பார்த்து முறைத்தவள், “ அப்பா… நான் இன்னும் சின்ன பொண்ணு இல்ல… எங்க ஸ்கூல்ல ஜூனியர் ஸ்கவுட் லீடர் நான் தான் தெரியுமா…? எப்ப எந்த டேஞ்சர் வந்தாலும் எதுத்து நிக்க சொல்லி எங்க ஸ்கூல்ல சொல்லிக் கொடுத்து இருக்காங்க. நீங்க இப்படி என்னை கின்டர் கார்டன் கிட் மாதிரி ட்ரீட் பண்ணாதீங்க… ஐ டோன்ட் லைக் இட்…’’ அவள் முகத்தை சுளித்துக் கொண்டு சொன்ன விதத்தில் கஜபதியின் முகத்தில் புன்னகை அரும்பியது.
அவரை அறியாமலேயே அவர் மனம், பரணியின் பிடிவாதத்தையும், நாட்சியாவின் கம்பீரத்தையும் ஒப்பிட்டு பார்த்தது. “சரிங்க ராணிமா… இனி அப்படிக் கேட்கமாட்டேன் சரியா..?’’ என அவர் சமாதானத்தில் இறங்கினார்.
“அப்பா நீங்க இன்னும் என் கேள்விக்கு பதில் சொல்லல…’’ என மகள் மீண்டும் முறைத்துக் கொண்டு நிற்கவும், என்னவென்று புரியாதவர், அவளிடமே சமாதானமாய், “என்னடா..?’’ என்றார்.
நாட்சியா அவரிடம், “அதான்பா நம்ம குளத்துல உங்க கூட நீந்திக்கிட்டு இருந்தாரே அவர் யாரு..?’’ மகள் அப்படிக் கேட்டதும், விழுந்து விழுந்து சிரித்தவர்,
“ராணிமா…. உங்களுக்கு அவரை மறந்துப் போச்சா….? போன வருஷம் எக்சிபிஷன்ல அப்பாவோட பாத்துட்டு யார்னு கேட்டீங்களே அவர் தான்மா. கலிங்கத்துப்பரணி. உனக்கு மாமா முறை ஆகணும். இப்ப கொஞ்சம் வளந்துட்டார் இல்ல அதான் உங்களுக்கு அடையாளம் தெரியல…’’
என்று அவரே மகளுக்கு சமாதானமும் சொன்னார். “ஓ…’’ என்றவள், அங்கிருந்த கூடை ஊஞ்சலில் அமர்ந்துக் கொள்ள, பரணியைப் பற்றிய எண்ணத்தை மகள் மனதில் விதைக்கிறோம் என்பதை உணராதவராகவே, அவனுடைய சிறப்புகளை எல்லாம் மகளிடம் பட்டியலிட தொடங்கினார்.
“பயங்கர கோபம் வரும் அவனுக்கு… ஆனா ரொம்ப பாசக்காரன் ராணிமா. புட் பால்னா உயிர் அவனுக்கு… அப்புறம் நான் வளத்த பையன் வேற எப்படி இருப்பான்… எதை சொன்னாலும் தானே செஞ்சிப் பார்த்து உணர்ந்தா தான் உண்மைன்னு ஒத்துக்குவான்… பிடிவாதம் அதிகம்…’’
அவனைப் பற்றிப் பேசிக் கொண்டே இருந்தவர் தனது அறைக்கு சென்று ஒரு ஆல்பத்தை கையில் கொண்டுவந்தார். அதில் முழுக்க முழுக்க பரணி. படிப் படியாய் அவன் வளர்ந்த விதம் அற்புதமாய் படமாக்கப்பட்டிருந்தது.
“முந்தா நாள் தான் நம்ம வீடியோ கடைக்காரன் சோமு கொண்டு வந்துக் கொடுத்தான். நான் இன்னும் ஊருக்கு கூட கொண்டுப் போகல. இங்கயே கிடக்கு.” என்றபடி,
அந்த ஆல்பத்தோடு மகள் அருகில் அமர்ந்தவர், அவன் சிறுவயதில் செய்யும் குறும்புகளை நினைவு கூறும் புகைப்படங்களை கண்டால் ஆர்வத்தோடு அந்த கதைகளை மகளிடம் பகிர்ந்துக் கொண்டார்.
நாட்சி அப்பா சொல்லியக் கதைகளைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தாள். ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல், “அப்பா போதும்.. எனக்கு வயிறே வலி வந்துடும் போல… ஆளை விடுங்கப்பா…’’ என்றபடி எழுந்தவள் தந்தையைப் பார்த்து,
“எனக்கும் உங்க கலிங்கத்துப்பரணியை ரொம்ப பிடிச்சிருக்குப்பா…’’ என்றுவிட்டு தன் அறையை நோக்கி நடந்தாள். அவள் அப்படிச் சொல்லும் போது அடர்ப் பழுப்பாய் மாறிய அவள் கண்களையே கஜபதி திகைப்போடு பார்த்திருந்தார்.
கூடு நெய்யும்.
Advertisement