நவீன ஒலிம்பிக் போட்டியின் தந்தை என அழைக்கபடுபவர் பியரி டி குபேர்டின். இவரே நவீன ஒலிம்பிக் போட்டியை மறுமலர்ச்சி அடையச் செய்தவர்.
பரணி உள்ளே நுழைந்தவளை விழி அகற்றாது கூர்மையாக பார்த்தான். அந்த பார்வையே, “இதை நீ செய்யலாமா..?’’ என அவளைக் குத்திக் கிழித்து.
உள்ளே ஒரு புறம் உருகித் துடித்த உள்ளத்தை இழுத்துப் பிடித்தவள்,ஒயிலான தன் நடையைத் தொடர்ந்து அவனுக்கு எதிரே இருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள்.
வீட்டில் பாடல் ஒலி உரத்துக் கேட்கவுமே, வீட்டில் இருந்தவர்கள் அனைவரும், என்னவோ ஏதோவென்று வரவேற்பறையை எட்டிப் பார்க்க வந்தவர்கள் அவர்கள் கண்ட காட்சியில் அப்படியே திகைத்து போய் நின்றுவிட்டனர்.
நாட்சியா அன்றைக்கு தன் நிறத்தை மேலும் எடுப்பாக்கிக் காட்டும் கருநீலக் காட்டன் புடவையில் வந்து இருந்தாள். தலையில் இருந்த கொண்டை, அவள் பணியில் இருந்து நேரே அங்கே வருகிறாள் என அறிவித்தது.
சிவாத்மிகாவிற்கு அதிர்ச்சியில் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டே இருந்தது. நீண்ட நெடு நாட்கள் கழித்து கணவனையே நேரில் கண்டதைப் போல இருந்தது அவருக்கு. ஆனால் அவளை அன்பாகவும் பார்க்க முடியவில்லை. ஏதோ சுழலில் சிக்கினார் போல உணர்ந்தார்.
ராசு மதுரவன் அவளிடம் ஏதோ பேச வந்தார். பரஞ்சோதி வேண்டாம் என்று அவரைப் பார்வையால் அடக்கினார். பத்து நிமிடங்கள் வரவேற்பறையில் இருந்த அனைவர் முகத்தையும் ஆராய்ந்து முடித்தவள்,
“மூணு டிக்கட் குறையுதே… ஹும்… அவங்களும் வந்துட்டா… ரொம்ப நல்லா இருக்கும்…’’ அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சமயலறையில் இருந்து கைகளை முந்தானையால் துடைத்துக் கொண்டே செல்வாம்பிகை வெளிப்பட்டார்.
அடுத்து,ஊன்றுக் கோல் சத்தமிட, தியாகி கிருஷ்ணமூர்த்தி ஐயா மெதுவாய் மாடிப் படிகளில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தாள். அவரைக் கண்டதும் நாட்சி தன்னைப் போல வேகமாய் எழுந்து நின்றாள்.
ராசு மதுரவன், அவர் படிகளை கடக்க உதவிக்கு சென்றார். மூர்த்தி அதை ஏற்காமல் தானே கீழே இறங்கினார். இறங்கியவர் நேராய் சென்று நாட்சியின் முன் நின்றார்.
அவள் முகத்தை அளவிடுவதைப் போலப் பார்த்தவர், “ஹும்…. என் மருமகனை நேர்ல பாக்குற மாதிரி இருக்கு தாயி…. நீ எங்க மண்ணுல அடியெடுத்து வச்ச நாள் மொதோ வீட்டு நிம்மதி கொழஞ்சி போச்சு தாயி….
தாயி…!உனக்கு நடந்தது அநியாயம் தான். அதை விடப் பெரிய அநியாயம் எம் மகளுக்கு நடந்தது. ஒரு அப்பனா, ஒரு அண்ணனா எங்க வருத்தத்தையும் நீ புரிஞ்சிக்கிடனும். உன்னால எங்களை மன்னிக்க முடியாட்டி எல்லாத்தையும் மறந்துட்டு உன் வாழ்கையை நீ பாக்கணும் தாயி…’’
அதுவரை அவர் பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவள், கடைசி வரிகளை அவர் முடிக்கும் போது, முயன்றும் அடக்க முடியாமல் அவரை நோக்கி பெண் நாகமாய் சீறினாள்.
“எதை மறக்கணும்னு சொல்றீங்க… ஒரு பதினாலு வயசு பெண் குழந்தைக்கு மூணு நாளா சாப்பாடு கொடுக்காம அடைச்சி வச்சி அடிச்சி சித்ரவதை பண்ணீங்களே அதை மறக்கணுமா…?
இல்ல அப்படி அடிக்கும் போது எல்லாம் தேவதையான அவளோட அம்மாவை அசிங்கப்படுத்திப் பேசினீங்களே அதை மறக்க சொல்றீங்களா…? அது எல்லாத்தையும் விட…’’
மேற்க் கொண்டு பேச முடியாமல் மூச்சு வாங்க நாட்சியா நிறுத்தினாள். முகம் செந்தனலைப் போல ஜொலித்துக் கொண்டிருந்தது. அவள் பேச பேச பரணி அவளை அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
“நாட்சி..’’ அவனை அறியாமலேயே அவளை நோக்கி ஒரு அடிக் கூட எடுத்து வைத்து இருந்தான். ஆனால் கை உயர்த்தி அவனைத் தடுத்தவள், “அங்கேயே நில்லுங்க மிஸ்டர் கலிங்கத்துப்பரணி…. நீங்க எப்ப என்னை நோக்கி வந்தாலும் உங்க குடும்பத்தை முழுசா துறந்துட்டு என்கிட்ட வரணும்.
அது உங்களால முடியாது. சாதாரண ஆறுதலைக் கூட கிருஷ்ணமூர்த்தி பேரன்கிட்ட இருந்தும், ராசு மதுரவன் மகன்கிட்ட இருந்தும், பரஞ்சோதி மருமகன்கிட்ட இருந்தும் நான் ஏத்துக்கவே மாட்டேன் மிஸ்டர் கலிங்கத்துப்பரணி.’’
அவளின் அந்த வார்த்தைகளில் பரணி நின்ற இடத்திலேயே ஆணி அடித்ததைப் போல நின்றான். அனைவரும் அவளது ஆக்ரோசமான பேச்சில் ஸ்தம்பித்து நிற்க, கிருஷ்ணமூர்த்தியைக் கண்டுக் கையை உயர்த்தியவள்,
“தப்பு செய்யிறது மட்டும் பாவம் இல்லை மிஸ்டர் மூர்த்தி… அதை கையைக் கட்டிக்கிட்டு வேடிக்கை பாக்குறதும் பாவம் தான். தப்பை செய்யிறதை விட பெரிய பாவம். உங்களுக்காக இல்லைனாலும் உங்க வயசுக்கு மரியாதைக் கொடுக்க ஆசைப்படுறேன். ஏன்னா எங்க அப்பா வளர்ப்பு அப்படி. சோ நீங்க உங்க ரூமுக்கு போனீங்கன்னா… நான் பேச வந்ததை பேசி முடிச்சிட்டு கிளம்புவேன்…’’
அவள் அப்படி சொன்னதும், அந்த முதியவர் தளர்ந்து போய் அங்கிருந்து தன் அறையை நோக்கி நடந்தார். அவர் தன் அறைக்குள் நுழைந்து கதவடைக்கும் வரை, நாட்சியா ஒரு வார்த்தை பேசவில்லை.
அவர் கதவை அடைத்தாரோ இல்லையோ, அடுத்த நொடி முன்பை விட திமிராய் சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவள், ராசு மதுரவனை நோக்கி,
“மாமா...!பாத்து ரொம்ப நாள் ஆச்சு…!தொப்பையும் தொந்தியுமா அட்டகாசமா இருக்கீங்களே. எல்லாம் அத்தை சமையல் மகிமை. இருக்கட்டும் இருக்கட்டும்… அதான் மொத்தமா வத்த வைக்க வந்து குதிச்சி இருக்கேனே.
ஏன் மாமா எங்க அப்பா தொழிலை கவனிச்சிக்கிட்டீக சரி…. உங்க தொழில்ல எங்க லாபத்தை முதலாக்குறது எந்த விதத்துல நியாயம் மாமோய்… கஜபதி சம்சாரத்துக்கு மூளையில்லாமா இருக்கலாம் மகளுக்கு….
அனுபிட்டேன் இல்ல சம்மன்னு… அதோட சரத்து என்னனா எங்க அப்பாவோட முதல் சம்சாரம் அல்லியான எங்க அம்மா தான்… உங்க தங்கச்சி கல்யாண பத்திரிக்கை தேதியை காட்டிலும் ஒரு வருஷம் முன்னாடி எங்க அம்மா அப்பாவுக்கு கல்யாணமானதா ரிஜிஸ்டர் சர்டிபிகேட் அட்டாச் பண்ணி இருக்கேன் இல்ல…
இப்ப இங்க இருக்குற எல்லா சொத்துக்கும் ஒரே லீகல் வாரிசு நான் தான். உங்க பேங்க் அக்கௌன்ட் தொழில் பரிவர்த்தனை ஏற்றுமதி இறக்குமதி… எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா எல்லாத்தையும் கேஸ் நடந்து என் பங்கை பிரிச்சி தர வரைக்கும் முடக்க சொல்லி கோர்ட் மூலமா ஸ்டே ஆர்டர் வாங்கிட்டேன்…
இந்த வழக்கு சம்மந்தமா நீங்க, உங்க ஆசை தங்கச்சி எல்லாரும் ஆஜர் ஆகத்தான் இந்த சம்மன்… ஏன் மாமா கேஸ் நடந்து முடிய எப்படியும் ஒரு ஏழு எட்டு வருஷம் இழுக்காது…
அதுவரைக்கும் புவ்வாக்கு என்ன பண்ணுவீங்க…. மே… ஆடு கூட மேய்க்கலாம்… ஏன்னா மலை ஜாதிப் பொண்ணு தான் ஆடு மேய்க்கனும்னு இல்ல மாமா சோத்துக்கு வழி இல்லனா யார் வேணா ஆடு மேய்க்கலாம்…
அப்புறம் என்னை அடிக்கும் போது என் அம்மாவை ஒரு வார்த்தை சொல்லித் திட்டுவீங்க இல்ல… இனி அந்த வார்த்தையை சொல்லி இந்த ஊர் உங்க தங்கச்சிய தான் கூப்பிட போகுது…’’
அவள் அந்த வார்த்தையை உதிர்க்கும் போது அவள் கண்கள் அடர் பழுப்பாயின. “வப்பாட்டி…’’ அவள் அந்த வார்த்தையை உச்சரித்து முடிக்கும் முன் ராசு மதுரவன் தன் கைகளை உயர்த்தி இருந்தார் அவளை அடிக்க.
நாட்சியா கொஞ்சம் கூட மிரளவில்லை. அவரையே பழி வெறி நிரம்பிய கண்களால் வெறித்துக் கொண்டிருந்தாள். அவரால் தான் எண்ணியதை நிறைவேற்ற முடியாமல் கைகளை கீழே இறக்கினார்.
அது அவள் கோபத்தை இன்னும் விசிறி விட்டார் போல ஆயிற்று. “என்ன வலிக்குதா..? இப்படி தான எனக்கும் வலிச்சி இருக்கும்.. உங்களுக்கும் வலிக்க வைப்பேன்… நான் அனுபவிச்ச வலியை விட ஆயிரம் மடங்கு வேதனையை நீங்க எல்லாரும் அனுபவிக்கணும்…’’ என்றவள் அனைவரையும் தன் பெரிய கண்களால் ஒரு முறை அளந்தாள்.
கடைசியாய் பரஞ்சோதியின் மீது தன் பார்வையை நிறுத்தியவள், “என்ன செத்தப்பு… கதை எல்லாம் பயங்கரமா அளந்து விடுற… கேக்குறவன் கேனைனா எலி ராக்கெட்டே ஓட்டுது… நீ வந்தா என்ன ஊரை விட்டே துரத்திடுவ.. மலைய வெறுங் கையில புடுங்கி நட்ருவ அப்படி இப்படின்னு உன் மருமவன் கதை அளந்தாப்ல… கடைசியா அவன் தான் உன்ன காப்பாத்திட்டு இருக்கான் போல…
கைவசம் நிறைய வீடியோ இருக்கு செத்தப்பு… உன் பதவின்ற பல்லை பிடுங்குற வரைக்கும் தாக்குதல்கள் தொடரும்… தினமும் இப்படியே ஜம்னு வீட்ல கூப்பிட்டு பேட்டி கொடுத்தே காலத்தை கழிச்சிடலாம்னு நினைக்காத… களி திங்கவும் ரெடியா இரு…’’
அனைவர் மீதும் தாக்குதல் நடத்தி முடித்தவள், இறுதியாய் சிவாத்மிகாவை நோக்கி திரும்பினாள். உடனே முகம் எல்லா உணர்வுகளையும் தொலைத்து வெறுமையானது.
“எங்க அப்பாவை நம்பள நீங்க… உங்கக் கூடஇருபது வருஷம் குடித்தனம் நடத்தின மனுசரை நம்பள நீங்க… அவர் யாருன்னு தெரிஞ்சும் இவங்கக் கூட சேர்ந்துக்கிட்டு அப்பா சொத்தை மட்டும் ஜீவனாம்சம் வாங்கி வாழ்ந்துக்கிட்டு இருக்கீங்க இல்ல…’’ அதற்கு மேல் அவரிடம் பேசப் பிடிக்காதவளாய் தன் முகத்தை திருப்பிக் கொண்டவள்,
“எல்லாரும் கேட்டுக்கோங்க…. எங்க அப்பா ஊரை விட்டு எல்லாம் ஓடிப் போகல… போக வச்சி இருக்காங்க… அவரை திரும்பி வர முடியாத அளவுக்கு மிரட்டி அனுப்பி இருக்காங்க… அது யாரு என்னன்னு தேடிக்கிட்டே இருக்கேன்…இந்த வேலு நாட்சியா கஜபதிபாண்டியன் மறுபடி எங்க அப்பாவை உலகத்துல எந்த மூலையில இருந்தாலும் இந்த வள்ளியூர் மண்ணை மிதிக்க வைப்பேன்… அதுவரைக்கும் யாரும் என்னைத் தடுக்க முடியாது….’’
சொல்லி முடித்தவள், “வரட்டா… மாமா..’’ என பரணியின் முன் உச்சிக் கூந்தலை கலைத்து விட்டு மறுபடியும் ஒயிலாக நடந்து வெளியேற, ஏதோ தானே புயல் தாக்கிவிட்டு சென்றதைப் போல அந்த வீட்டின் மனிதர்கள் மனநிலையாகிப் போனது.