ஒரு மூன்று மணி நேரம்.. பரணியும் காயத்ரியும் சேர்ந்தே எல்லோரையும் எதிர்கொண்டனர். அவ்வபோது தன்னவளின் கைகளை பற்றுவது.. தன்னவளின் சிரித்த முகத்தின் வழியே.. கண்களின் நிறையும் அந்த காதலை கண்டுக் கொள்வது என பரணி அந்த நிமிடங்களை ரசித்தான்.
விழா இனிதாக முடிந்தது. காயத்ரி “கால் வலிக்குது” என்றாள் துளசியிடம். துளசி “சாப்பிட்டு மேலே ரூமுக்கு போய்டலாம் காயூ.. வாடா” என கூட்டி சென்றாள்.
இரவு பத்து மணிக்கு மேல்.. உறவுகள் எல்லாம் சென்றிருந்தது. முக்கிய உறவுகளும் உள்ளூர் என்பதால்.. வீடு கிளம்பிவிட்டனர். நெருங்கிய உறவுகள் மட்டுமே மண்டபத்தில்.
சாரதா.. ஷ்ரவன் இனி உமேஷ் என பிள்ளைகளை ஒரு அறையில் உறங்க வைக்க கூட்டி சென்றுவிட்டாள்.
பரணி உடைமாற்ற அறைக்கு சென்றிருந்தான்.
காயத்ரி அசதியில், எதோ கொறித்துவிட்டு.. அன்னையிடம் சொல்லிக் கொண்டு தன்னறைக்கு வந்துவிட்டாள். துளசி வேறு வேலையாக சென்றுவிட்டாள்.
பாவம் காயத்ரி சோர்ந்து போயிருந்தாள்.. அவ்வளவு வெயிட் அந்த லெஹங்கா.. பொறுமையாக அதை தூக்கிக் கொண்டு நடந்து வந்து சேர்ந்தாள், தன்னதறைக்கு.
அசந்து போனது கால்கள்.. காயத்ரி ‘ஏன் இவ்வளோ வலிக்குது.. எப்படி ஜூவ்வல்ஸ் எல்லாம் கழற்றுவது.. எங்க பியுட்டிசியன்’ என எண்ணிக் கொண்டே.. கைகளை விரித்துக் கொண்டு.. அப்படியே சாய்ந்தாள் அந்த கட்டிலில்.
கண்கள் தாமாக மூடும் நேரம்.. கதவு திறந்தது. காயத்ரி அண்ணியாக இருக்கும் என எண்ணிக் கொண்டே கண்களை மூடிக் கொள்ள.. பரணியின் குரல்.. “காயூ” என்றது.
லேசாக அசதியாக விழித்தாள் பெண்.. பரணியின் பிம்பம் கண்ணில் விழவும் நன்றாக விழித்தாள்.. ஆனாலும் எழவில்லை.. கனவோ நினைவோ என ஆராயத் தொடங்கினாள்.
பரணி “என்ன ஆச்சு.. “ என சொல்லி அவளின் அருகில் அமர்ந்தான். இப்போதுதான் காயத்ரிக்கு நிஜம் என புரிய.. எழுந்தாள் “என்ன நீங்க எப்படி வந்தீங்க..” என்றாள் அயர்ந்த புன்னகையோடு.
பரணி “தூங்கிட்டியா” என்றான்.
காயத்ரி பதிலளிக்கவில்லை.. தன் கழுத்தில் இருந்த பெரிய குந்தன் ஹாரத்தை கை தூக்கி.. பின்பக்கம் அதன் ஹூக் நீக்கி.. தன் தலை வழியாக அந்த ஹாரத்தை மேலே இழுத்தாள்.. ஹப்பா.. கைகள்தான் வலித்தது.. பரணி அமைதியாக அவளின் பதிலுக்காக அவளையே பார்த்திருக்க.. அவனின் கண்ணில் காட்சியாக இதெல்லாம்.
பரணி ரசனையாக அவளின் சிகை அலங்காரம் தாண்டி அந்த ஹாரத்தை எடுத்தான் மெல்ல.. காயத்ரி பின்னால் கைகள் ஊன்றி சாய்ந்து கொண்டு.. “ஹப்பா இவ்வளோ வெயிட் இருக்கும்ன்னு தெரிந்திருந்தால்.. இந்த லெஹங்காவை.. செலக்ட் பண்ணியிருக்கவே மாட்டேன்” என்றாள்.
பரணி அவளின் வலது கையை எடுத்து.. தன் வலையல்கள் எல்லாவற்றையும்.. கழற்றினான். காயத்ரியின் தேகம் சிலிர்த்து அவனின் தீண்டலில். நிமிர்ந்து அமர்ந்தாள்.. “என்ன ரூல்ஸ்.. இந்த நேரத்தில் இங்க.. ம்.. என்ன.. பார்வையும் சரியில்லையே” என்றாள் அலங்காரங்கள் தாண்டி மின்னிய பார்வையோடு.
பரணி “ஷ்…” என்றான், உதடுகள்தான் அப்படி.. கண்கள் கள்ளம் பேசியது பெண்ணவளிடம்..
காயத்ரி பரணியோடு ஒன்றிக் கொண்டு “வேண்டாம் வேண்டாம்.. நீங்க.. பரணி மாமாவாகவே இருங்க.. அதான் சரி.. நான் மட்டும் ரூல்ஸ் மீறிக்கிறேன்” என்றவள்.. தன்னவனை நிமிர்ந்து பார்த்து.. அவன் இதழ்களை முத்தமிட தொடங்கினாள்.. தொடங்கியது வேண்டுமானால்.. அவளாக இருக்கலாம்.. அதனை வழிநடத்தி.. அவளின் தெள்ளமுதை.. ருசித்து.. அவளை ஆனந்த மூர்ச்சையாக்கி.. தன் காற்றையும் அவளுள் கொடுத்து.. தன் நேசத்தை அதில் கலந்து.. என் எல்லாம் நீயடி என அவளுக்கு வார்த்தைகள் தாண்டி.. தனனக்கான உரிமையை அவளிடம் சொல்லி.. அதன் தடத்தையும் புரிய வைத்தே நிமிர்ந்தான் பரணி.
காயத்ரியின் விழிகள் இமைக்க மறந்தது.. காதலின் வேகமும் நேசமும்.. வார்த்தையில் சொல்லாத காதலும்.. புது ரத்தம் பாய்ந்த உடலும் சிலிர்த்து அடங்கிய தேகமும்.. அவன் நேசத்தை மீளமுடியா மனமும்.. அவனுள் கலந்த உதடுகளும்.. தொலைந்த பார்வையும்.. என இமைக்க மறந்து தன்னவனையே பார்த்திருந்தாள் பெண்.
பரணி “ம்.. இது லவ் கிஸ்.. ஒகேவா.. காயத்ரி பாவமில்லையே” என்றான் ஒருமுறை அவளின் உதட்டில் தன் உதடுகளை ஒற்றி.
காயத்ரிக்கு பேச்சுகளே வரவில்லை.. சற்று நேரம் ஏதும் பேசாமல் அவனின் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.
இப்போது.. கதவை தட்டி விட்டு.. அந்த அலங்காரம் செய்த பெண்கள் வந்தனர்.. இருவர். மணமக்கள் இருவரும் விலகினர்.
பரணியின் கைகள் அவனையும் மீறி.. தன்னவளின் கன்னம் தீண்டியது. காயத்ரி விழி விரித்து பார்த்தாள்.. சட்டென சுதாரித்தவன்.. தன் விரல்களை எடுத்துக் கொண்டான். காயத்ரியை பார்த்து போனையும் பார்த்துவிட்டு.. விரல்களால் பை சொல்லி கிளம்பினான்.
!@!@@!@!@!@!@!@!@
மறுநாள்.. அழகாக விடிந்தது.
மணமேடையில்.. பரணீஷ்வரன் அருகில் காயத்ரி. மிளகாய் பழ வண்ணப்பட்டு கட்டிக் கொண்டு.. வாசனை மலர் கொண்ட மாலையை தாங்கிக் கொண்டு.. பந்தமாக அமர்ந்திருந்தாள்.
காதல் என்பது குறிப்பறிதல். அதுதானே தொடங்கும் இடம்.. தன்னை அவனுக்கு பிடிக்கும் என சரியாக பெண் குறிப்பறிந்து கொண்டாளே.. காதலை கண்டுக் கொண்டாளே.. அன்பை பறைசாற்றவும்.. அதற்காக போராடவும்.. காத்திருக்கவும்.. காவந்து செய்துகொள்ளவும் எது தைரியம் தந்தது இந்த பெண்ணுக்கு என.. பரணி புன்னகைத்துக் கொண்டான். அன்பு நேசம் என்பதே தைரியம்தானே. ஆயுதங்கள்.. பொன்.. பொருள்.. படை.. தராத தைரியத்தை அன்பு கொண்ட மனிதர்கள் தருவார்கள் தானே. இப்படிதான் இந்த இளம் பெண்ணின் தைரியமே.. இவன்தான் இந்த காதலன்தான் அந்த தைரியமே என.. அந்த காதலனிடமே யார் சொல்லுவது.
அந்தணர் மங்களநாண் எடுத்து பரணியின் கையில் கொடுக்க.. காதல் கொண்டு.. அறவழியில் பொருள் தேடி.. பெருவீடு காண.. தன்னோடு வாழ்நாள் துணையாய் ஏற்க.. தன்னவளின் கண்வழி ஊடுருவினான் சம்மதத்திற்காக.. காயத்ரியும் உன் வழியில்.. அறம் கொண்டு.. நல்வழி சொல்லி.. பெருவீடு செல்ல.. வழித்துணையாய் வர சம்மதம் இமை தாழ்த்தி.. அவனின் முன் தலை தாழ்ந்து.. ஏற்றுக் கொண்டாள் மங்களநாணை.
‘ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே..’ என மேளதாளம் முழங்க.. இப்போது மணமேடை.. உறவுகளின் வசமானது. உறவுகள் வாழ்த்தி.. சடங்குகளை செய்தது.. என மணமக்களை வாழ்த்தி சென்றது. முகம் மிளிர.. ஆசீர்வாதங்களை ஏற்றுக் கொண்டனர் தம்பதி.