Advertisement

அத்தியாயம் முப்பத்தி ஒன்று :
மலங்க மலங்க விழித்து பார்க்கும் சுந்தரியை பார்த்தவன், “என்ன இப்படி முழிக்கற?” என்றான்.
“எதுக்கு இப்போ என்னை கட்டி பிடிக்கறீங்க, நீங்க என் பக்கத்துல வர்றது இல்லைன்னு சொன்னதுனாலையா?” என்றாள்.  
கண்ணனின் முகம் சுருங்கி விட்டது. அடுத்த நொடி அவளை விடுவித்து விட்டான். மெதுவாய் அவனை விட்டு விலகி எழுந்து சுவர் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
இத்தனை நாட்கள் ஏங்கிய ஏக்கம் தான், ஆனால் இன்று பேசிய பிறகு நடக்கவும் அவளுக்கு பிடிக்கவில்லை.    
நேராய் படுத்த கண்ணன் தன் இரு கைகளையும் தலைக்கு பின் கொடுத்து தளர்வாய் படுத்தவன், “அப்படியும் சொல்லலாம், இல்லை என்னை பக்கத்துல வர்றதுக்கு நீ இப்போ தான் அனுமதி கொடுத்தேன்னும் சொல்லலாம்”
“நான் உங்களை பக்கம் வர வேண்டாம்னு சொன்னேன்னா?”
“ஆமா சொன்ன”
“எப்போ சொன்னேன்?” என்றாள் ரோஷமாக.
“வார்த்தையால சொல்லலை, ஆனா செய்கையால சொன்ன! நான் வந்த நாளா நீயும் உன் மகனும் மேல படுக்கறீங்க, நான் கீழ படுக்கறேன், பின்ன வெளில படுக்கறேன், வெளில படுத்த நாளா ஒரு நாளாவது உள்ள வந்து படுங்கன்னு கூப்பிட்டு இருக்கியா? இப்படி இருக்க நீ அனுமதி கொடுக்கலைன்னு தானே அர்த்தம்” என்றான்.
இதற்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் “அது எப்படி நீங்க வந்தவுடனே உங்க கூட ஒட்டிக்கிட்டு திரிய முடியுமா?” என்றாள்.
அந்த பதில் அவனுக்கு புன்னகையை கொடுக்க “என் கூட உன்னை எங்க ஒட்டிக்கிட்டு திரிய சொன்னேன், என்னை கட்டிக்கிட்டு தானே படுக்க சொன்னேன், அது முடியாதா?” என்றான் இலகுவாக.
“எப்படி முடியும்?”
“அப்போ நான் பக்கத்துல வரலைன்னு ஏன் குறை சொல்ற?”
“நீ ஒன்னும் எங்க வீட்டுக்கு வரலை, நான் தான் உங்க வீட்டுக்கு வந்திருக்கேன், நீ எங்க வீட்ல இருக்கும் போது நான் உன்னை விட்டு தனியா படுத்திருக்கேனா என்ன முன்னையும் சரி, இப்போவும் சரி” என்றான்.
“நீங்க படிச்சவங்கன்னு பேச்சுல காமிக்கறீங்க, அப்போ நீங்க சரி, நான் தப்பா?” என்றாள் காரமாக.
“படிப்புக்கும் பேச்சுக்கும் என்ன சம்மந்தம்? லூசு மாதிரி உளறக் கூடாது! நான் சரி நீ தப்புன்னு எப்போ சொன்னேன்?”
“நீங்க அப்படி தான் பேசறீங்க!” என்றாள் ஸ்திரமாக.
“அது நீயா நினைக்கறது!” என்றான் அதையும் விட ஸ்திரமாக.
என்ன பேசுவது என்று சத்தியமாய் சுந்தரிக்கு தெரியவில்லை, மௌனமாகி விட்டாள்.
அவளை பார்க்கும்படி திரும்ப படித்தவன் “சரி நம்ம பஞ்சாயத்தை அப்புறம் வெச்சிக்குவோம், அதாகப்பட்டது நான் உன் பக்கத்துல வரலையா? இல்லை நீ என்னை விடலையான்றதை. ஆனா அதுக்கு நீ ஒன்னு சொன்ன பார்த்தியா, நான் அழகா இல்லை அதான் நீங்க பக்கத்துல வரலைன்னு, அதை நான் ஒத்துக்க மாட்டேன்” என்றான் இலகுவாய்.
“அழகுன்றது என்னன்னு நீ சொல்லு, நான் நீ அழகா இல்லையான்னு சொல்றேன்” என்றான்.
“என்ன இங்க பேச்சு போட்டி நடக்குதா, இல்லை பட்டி மன்றம் நடக்குதா, இல்லை…” என்று கோபமாக பேசும் போதே..
“ரொம்ப சொதப்பிட்டு இருக்கேன் போல” என்றான் கண்ணன், லகுதன்மையும் மறைந்து இருந்தது.   
சுந்தரி அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை, பின்பு கண்ணன் அமைதியாகி விட்டான். சில நிமிட மௌன நேரம்.   
பின்பு கண்ணன் தீவிரமாய் பேச ஆரம்பித்தான். “உன் பக்கத்துல வரக் கூடாதுன்னு இல்லை. சில விஷயம் என்னை தடுத்துச்சு. முதல் விஷயம் நீ! நாம சேர்ந்து படுக்க நீ நினைக்கவேயில்லை, சின்ன கட்டில் உனக்கும் அபிக்குமே, அப்போ நான் அங்கே வர முடியாது! ஆனா நீ கீழ வரலாம் இல்லையா, ஆனா வரலை, ஒரு பேச்சுக்கு கூட என்னை நீ கூப்பிடலை!”
“மனக் காயங்கள் பெருசு தான், நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன்! ஆனா அதையே நினைச்சிட்டு இருந்தா வாழ்க்கை எப்படி நகரும் சொல்லு!”
“அதையும் விட எப்பவுமே குத்தி குத்தி பேசற எவ்வளவு தான் பொறுமையா இருந்தாலும் சலிப்பு தான் வருது, சில விஷயங்கள் கசப்பா இருந்தாலும் ஒத்துக்க தான் வேணும்!”
“நான் உன்னை பிடிச்சு கல்யாணம் செய்துக்கலை, அதையும் விட கல்யாணமே பிடிக்கலை, இப்படி இருந்த சூழல் நமக்குள்ள, நான் திரும்ப வந்த பிறகும் அதையே பேசினா நான் என்ன பண்ணுவேன்?”
“இப்போ உன்னை எனக்கு பிடிக்குதா இல்லையான்னு யோசிக்கக் கூட முடியலை, அப்புறம் எப்படி பக்கத்துல வரத் தோணும்”
“பல சமையம் தோணுது நீ என்கிட்ட காமிக்கிற திமிருக்கு நாம சேர்ந்து இருந்தாலும் கண்டிப்பா நான் போயிருப்பேன்” என்றவனின் பேச்சில் அவனை விழி விரித்து பார்த்தாள்.
அந்த பார்வை அப்பட்டமாய் குற்றம் சொன்னது இதை சொல்வதற்கு உனக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும் என்று.  
“நீ ஒத்துகிட்டாலும் ஒத்துகலைனாலும் உனக்கு சரியான திமிர். அது உண்மையா நேர்மையா கடுமையா உழைக்கறவங்களுக்கு இயலபாவே இருக்கும். அதையும் விட உன்கிட்ட பணமும் இருக்கு அப்போ திமிர் கொஞ்சம் அதிகமாகவே இருக்கு”
நேரடியான குற்றச்சாட்டு!
அந்த க்ஷணம் உண்மையாய் சுந்தரியின் பார்வை “நீ பேசுடா, பேசுடா” என்று திமிராய் தான் பார்த்தது.  
அதை உணர்ந்த கண்ணனுக்கு இப்படி நான் பேசத் தான் வேண்டுமா என்ற ஈகோ தலை தூக்கிய போதும் “நான் சொல்றதை சரியா புரிஞ்சிக்கணும், ஏறுக்கு மாறா புரிஞ்சிக்க கூடாது” என்றான் பொறுமையாகவே.   
“எல்லோருக்கும் அவங்க அவங்க வாழ்க்கையை வாழ அவங்களுக்கு உரிமை இருக்கு, கல்யாணம்ன்றது ஒரு புனிதமான உறவு தான். ஆனா யோசிச்சு பார், உன்னை எனக்கு பிடிக்கலை, எனக்கு கட்டாயமா ஒரு கல்யாணம், அந்த வயசுக்குரிய முட்டாள்தனம் ஆண் பெண் உறவு பிடித்தம் குடுக்குமோன்னு, என்னோட ஒரு செயல்! ஆனா நிறைஞ்ச சபையில விமர்சிக்கப் படுத்து. அப்போ நான் எப்படி ஃபீல் பண்ணுவேன் ரொம்ப அசிங்கமா ஃபீல் பண்ணினேன். என்னால இப்போ வரைக்கும் அதுல இருந்து வெளில வர முடியலை”
“உனக்கே பிடிக்கலையே அப்புறம் எதுக்குடா என் பக்கம் வந்தேன்னு நீ கேட்கலாம். அப்போ எல்லாம் இந்த கல்யாணம் நடந்துருச்சி அது நிலைக்கணும் தான் நினைச்சேன். அதுக்கான என்னோட செயல் தான். அது ஆனா இப்போ அதை நினைச்சா எனக்கே என்னை பிடிக்கலை, நான் பண்ணினது தப்பா தெரியுது”  
அவளின் முகம் மாற “சரியா புரிஞ்சிக்கணும், அப்போ என் பக்கம் வந்தது உனக்கு பிடிக்கலையான்னு கோக்கு மாக்கா நினைக்கக் கூடாது” என்றான் அதட்டலாக.
அப்போதும் அவளின் பார்வையில் முறைப்பு தான்.
“ஆனா இன்னொரு உண்மையும் நீ ஒத்துக்கணும். அப்படி ஒன்னு நடக்கலைன்னா நிச்சயம் நாம திரும்ப சேர்ந்து வாழ்ந்திருக்க மாட்டோம். இது தான் யதார்த்தம்”
அவ்வளவு தான் சுந்தரிக்கு எங்கிருந்து ஆத்திரம் வந்ததோ தெரியவில்லை. “சும்மா எனக்கு திமிர், உண்மை, யதார்த்தம், அது இதுன்னு பேச வேண்டாம். பொண்ணு பிடிச்சதோ இல்லையோ, அது அழகோ இல்லையோ, ஆனா அது பொண்ணு, அது தான் பாஞ்சிட்டீங்க இல்லையா?” என்றாள்.
மிக மிக கடுமையான வார்த்தைகள்.
கண்ணன் அடுத்த நிமிடம் அவளை பார்த்து எழுந்து அமர்ந்தான். அவன் எழுந்த வேகத்திற்கு அடிக்க போகிறானோ என்று சுந்தரி நினைக்க, “ரைட் யு ஆர் ரைட், எக்சேக்ட்லி, பல முறை நான் அப்படி தான் நினைச்சிருக்கேன். ரொம்ப கேவலமா ஃபீல் பண்ணியிருக்கேன். பாரு இப்போ நீ கூட கேட்டுட்ட , இது தான் முக்கிய காரணம் என்னால உன் பக்கத்துல வர முடியலை” என்றான்.
சுந்தரியிடம் பேச்சே இல்லை. அப்படியே தலை சாய்த்து அமர்ந்து விட்டாள்.
   
பேச்சற்ற மௌனம், ஆனால் மனதில் அல்ல மௌனம். என்ன வென்று தெரியாத சத்தம்.
பல நிமிடங்களுக்கு பிறகு மௌனம் கலைத்தான் கண்ணன், விட்டதை பேசி முடித்து விடும் எண்ணத்தில்.
“நாம பிரிஞ்சதுக்கு கொஞ்சம் தப்பு எங்கம்மா மேலயும் இருக்கு. எனக்கு பிடிக்குது பிடிக்கலை, எங்கப்பா செஞ்சு வெச்ச கல்யாணம். உன்னை நிச்சயம் அவங்க சரியா நடதியிருக்கணும் ஆனா செய்யலை, ஏன்டா பிடிக்கலை, பிடிக்கலைன்னு சொல்லிட்டு இப்படி செஞ்சிட்டியேடான்னு அபி உருவானதை சொல்லும் போது ரொம்ப அவமானமா இருந்தது”
“உன் பாட்டிய இன்னைக்கு எனக்கு புரியுது. உன்னை எங்கம்மா தப்பு சொல்லும் போது ஏன் உன் பையன் ஆம்பிளை இல்லையான்னு கேட்டிருக்காங்க”
“ஆனா அன்னைக்கு என்னை பத்தி இப்படி கேட்டுடாங்கலேன்னு அவ்வளவு அவமானமா உணர்ந்தேன். எங்கம்மா பேசினதுல உன்பாட்டி பேசினதுல அது தான் கோவத்துல போனேன், டிவோர்ஸ் கேட்டேன்”
“ஒரு சொல் நான் பொதுவாவே பொறுக்க மாட்டேன்”
“ஆனா கொஞ்ச மாசத்துல உன்னை வந்து பார்த்தப்போ டைவர்ஸ் வேண்டாம், என் கூட வந்துடுன்னு சொன்னேன். குழந்தையோட இருக்குற உன்னை விடறது தப்புன்னு தோணினது. என்னால அப்போ கூட எங்கப்பா வீட்டுக்கு வர முடியலை. நீ என்கூட வர மாட்டேன்னு சொல்லிட்ட, டைவர்ஸ் நான் வேண்டாம்னு சொன்ன போது கூட நீ தான் பிடிவாதமா குடுத்த”
“போனேன், உடனே வெளிநாடு போக வாய்ப்பு வந்தது, பணம் தேவையா இருந்தது, சம்பாரிச்சேன், திரும்ப வந்தேன், உன்னையும் பையனையும் பார்த்தேன், விட்டுட்டு போக முடியலை, வந்துட்டேன்!”
“சொல்லு எந்த எந்த இடத்துல நான் தப்பு செஞ்சேன்னு நீ சொல்லு, எல்லா இடமும் கூட தப்பா இருக்கலாம், ஒத்துக்கறேன்”  
“ஆனா இப்போ என்ன பண்ண? எப்பவும் இதை நீ சொல்லி சொல்லி காட்டும் போது, பல சமயம் எனக்கு இப்போ கூட போயிடலாம்னு தான் தோணுது. ஆனாலும் நீ என்னோட மனைவி, இவன் என்னோட குழந்தை இப்படி தான் சொல்லி சொல்லி சமாளிக்கறேன்”    
“உண்மையா இந்த நொடி உன்னை எனக்கு பிடிச்சிருக்கா இல்லையான்னு தெரியாது. ஆனா உன்னை விட்டு குடுக்க முடியலை அது தான் நிஜம்”
“நான் சரியா பேசறேனா? தப்பா பேசறேனா? எனக்கு தெரியலை! ஆனா இதுதான் நான்! உன்னோட வாழ்க்கை மட்டுமில்லை, என்னோட வாழ்க்கையும் உன் கைல தான் இருக்கு” என்று நீளமாய் பேசி முடித்து அவளை பார்க்க,
“ம்ம், பேசி முடித்தாகி விட்டதா?” என்ற பாவனை தான் சுந்தரியின் முகத்தில் இருந்தது.

Advertisement