Advertisement
அவன் சொன்னதை கேட்டு அவள் முகத்தில் எந்த பாவமும் இல்லை. தனக்காக தான் அவன் இதை செய்திருக்கிறான் என்று அவள் மனம் சந்தோசப்படக்கூட முயற்சிக்கவில்லை.
“நயனா என்ன அமைதியா இருக்கே??”
“நான் என்ன சொல்லணும்ன்னு நினைக்கறீங்க. என்கிட்ட சொல்லாம நீங்களே எல்லாம் செஞ்சு முடிச்சாச்சு. அப்புறம் நான் சொல்ல என்ன இருக்கு” என்றாள் விட்டேத்தியாய்.
“நாம விரும்பி கல்யாணம் பண்ணிக்கறது அவ்வளவு பெரிய குற்றமா. நான் உங்களுக்காக காத்திட்டு இருக்க மாட்டேன்னு நினைச்சீங்களா??” என்றாள் தொண்டையத்த குரலில்.
“இங்க பாரு நீ உன் பக்கத்துல இருந்து யோசிக்கறே. எங்கம்மாக்கு நான் எப்பவோ புரிஞ்சும் புரியாம கொடுத்த ஒரு வாக்கு அது. அவங்களை எப்பவும் என்னால கஷ்டப்படுத்த முடியாது”
“அவங்க எங்களுக்காக ரொம்பவே கஷ்டப்பட்டிருக்காங்க. யாருக்கும் சங்கடம் வராம இதெல்லாம் நடக்கணும்ன்னு நினைச்சேன், அது தப்பா”
நயனா பதிலொன்றும் சொல்லவில்லை. அவனே தொடர்ந்தான். “நம்ம விஷயத்தை கல்யாணத்துக்கு முன்னாடியே நான் எங்கம்மாகிட்ட சொல்லிட்டேன் தெரியுமா” என்று அவன் சொல்லவும் அவள் கண்கள் தன்னைப்போல அவனை நிமிர்ந்து ஆச்சரியமாய் பார்த்தது.
அதுவரை ஏதோ சுவாரசியமில்லாமல் இறுக்கமான முகத்தோடு கேட்டுக் கொண்டிருந்தவளின் முகம் நெகிழ்ந்தது. அந்த நொடியில் இருந்து அவன் பேசுவதை ஆழ்ந்து கவனிக்க ஆரம்பித்தாள்.
“நீ எப்படி நினைச்சியோ அதே மாதிரி தான் எனக்கும் இருந்துச்சு. நாம அப்படி என்ன தப்பு பண்ணிட்டோம், லவ் பண்றது என்ன பெரிய குற்றமா அதை ஏன் மறைக்கணும்ன்னு தோணிச்சு”
“ஆரம்பத்துல எல்லாமே சரியா வரணும்ங்கற எண்ணத்துல தான் அதெல்லாம் செஞ்சேன். அம்மாவை பார்க்கும் போதெல்லாம் ஒரு மாதிரி இருக்கும். அவங்ககிட்ட ஒரு விஷயத்தை மறைக்கிறோமேன்னு”
“உன்னை கூட நான் பேஸ் பண்ணாம இருந்ததுக்கு அதுவும் ஒரு காரணம் தான். உனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு என்னால ஓரளவுக்கு கெஸ் பண்ண முடிஞ்சது அதுவும் கூட ஒரு காரணம் தான் நான் உன்னை பார்க்காம இருந்ததுக்கு. ஆனா அது மட்டுமே காரணம் இல்லை”
“நீயும் அம்மாவும் எனக்கு ரொம்ப முக்கியம் உங்க ரெண்டு பேரையும் நான் கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு நினைச்சேன்”
“உனக்கு தாலி கட்டுறதுக்கு முன்னாடி என் மனசுல இருந்த பாரத்தை எல்லாம் அம்மாகிட்ட இறக்கி வைச்சிட்டேன். அதுநாள் வரைக்கும் உன்கிட்ட கூட சொன்னதில்லை என் அம்மாகிட்ட சொன்னேன் உன்னை விரும்பறேன்னு” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே எக்கி அவனை அணைத்துக் கொண்டிருந்தாள் நயனா.
அதை மனமார அனுபவித்தாலும் மனதில் இருந்ததை பேசிவிடும் எண்ணத்துடன் மேலும் தொடர்ந்தான் செங்கதிர். “அம்மாகிட்ட சொன்ன அந்த நிமிஷத்துக்கு அப்புறம் தான் என்னால இயல்பாவே இருக்க முடிஞ்சது. எங்கம்மா என்ன சொல்வாங்களோன்னு ஒரு பயம் இருந்தது”
“அவங்க அதை சாதாரணமா எடுத்துக்கிட்டாங்க. உன்னோட சந்தோசம் தான் எனக்கு முக்கியம்ன்னு சொன்னாங்க. என் மனசுல அழுத்திட்டு இருந்ததெல்லாம் காணாம போச்சு அப்போ”
“அவங்ககிட்ட சொன்ன சந்தோசத்தோட மணமேடைக்கு வந்தா, நீ என்னவோ போல வந்து என் பக்கத்துல உட்கார்ந்த. எந்த இடமா இருந்தா என்னன்னு என் மனசுல இருந்ததை உன்கிட்ட சொல்லிட்டேன்”
அவன் அன்னையிடம் கூறிவிட்டேன் என்று சொல்லியதில் இருந்தே இளகி இருந்தவளின் வருத்தமெல்லாம் எங்கோ காணாமல் போயிருக்க அதுவரை அவன் சொன்ன விளக்கமே போதுமானதாக இருந்தது அவளுக்கு.
அவன் இன்னும் ஏதோ சொல்லப் போக “போதும்” என்றாள்.
“என்ன போதும்??”
“நீங்க இதுவரைக்கும் சொன்னதெல்லாம் போதும்”
“ஏன் நான் பேசுறது பிடிக்கலையா”
“நான் ஒண்ணும் அப்படி சொல்லலை”
“வேற எப்படி சொன்னியாம்??”
“நீங்க இதுக்கு மேல எதுவும் சொல்ல வேண்டியதில்லை. எனக்கு நீங்க இவ்வளவு தூரம் விளக்கம் சொன்னதே போதும்” என்றாள்.
“அப்போ சமாதானம் ஆகிட்டியா நீ??”
“எனக்கு உங்ககூட சண்டை எல்லாம் இல்லை சரியா. இதுல சமாதானம் எங்க இருந்து வந்துச்சு. எனக்கு வேண்டியது உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா பிடிக்கலையாங்கறது தான். அது என்னைக்கோ எனக்கு உறுதியாகிடுச்சு”
“நடுவுல நீங்க காணாம போனதால கொஞ்சம் மனக்குழப்பம் இருந்துச்சு. அப்புறம் நீங்க பொண்ணு பார்க்க வர்றதா தெரியவும் ரொம்ப நெருடலா இருந்துச்சு”
“அன்னை நடந்த சம்பவத்துனால தானான்னு. ஆனா அன்னைக்கு நீங்க வராம போகவும் இன்னும் மனசொடிஞ்சு போச்சு. ஆதி மாமா தான் எல்லா ஏற்பாடு முன்னாடி நின்னு பண்ணதால அவர் தான் நம்ம விஷயம் தெரிஞ்சு ஏதோ முயற்சி எடுத்திருக்கார்ன்னு நினைச்சேன்”
“ஏன்னா எங்கயும் நீங்க முன்னாடி வரவேயில்லை. தவிர நீங்க என்கிட்ட பேசக்கூட இல்லை. எதுக்கு இந்த கல்யாணம்ன்னு கூட தோணிடுச்சு. மாமா தான் என்னென்னவோ பேசி என்னை ஒத்துக்க வைச்சாங்க”
“மணமேடை வரைக்கும் வந்தா கூட மனசுல ஒரு சின்ன உற்சாகம் கூட இல்லாம இருந்துச்சு. தாலி கட்டுற அந்த நேரம் நீங்க சொன்ன வார்த்தை என்னோட எல்லா கலக்கத்தையும் போக்குச்சு”
“அதுக்கு பிறகு எனக்கு எந்த குழப்பமும் இல்லை. உங்க மேல வருத்தம் கொஞ்சம் இருந்துச்சு அதுவும் இப்போ உங்க விளக்கத்துல சமாதானம் ஆகிட்டு”
“அன்னைக்கு என்னோட மனநிலை அப்படி இருந்துச்சுங்க. அதுல கொஞ்சம் முன்னப்பின்ன பேசியிருப்பேன் தான். அப்போ நான் என்னை பத்தி மட்டும் தான் யோசிச்சுட்டு இருந்தேன்”
“வேற எதுவும் என்னால யோசிக்கவே முடியலை. அதுவும் அன்னைக்கு பிறகு நீங்க இல்லனா என் லைப் எப்படியிருக்கும்ன்னு எனக்கு யோசிக்க கூட முடியலை. அதெல்லாம் அன்னைக்கு என்னோட மனநிலை. ஆனா நீங்க எனக்காக மட்டுமில்லை எல்லார்க்காகவும் யோசிச்சு இருக்கீங்க”
“நாம தான் சரின்னு எப்பவும் நினைக்க கூடாதுன்னு இந்த நிமிஷம் எனக்கு புரியுது. நான் ஒண்ணு சொல்லவா”
“சொல்லு”
“உங்களை பிடிச்சிருக்குன்னு இது வரைக்கும் சொல்லியிருக்கேன்”
“ஆஹான்” என்றவனுக்கு அவள் என்ன சொல்லப் போகிறாள் என்ற அனுமானம் இருந்தது இருந்தாலும் அதை அவள் வாயால் சொல்லி கேட்க அவனுக்குள் ஆர்வம் பிறந்தது.
“கிண்டல் பண்ணாதீங்க” என்றவளிடம் “நான் எங்க கிண்டல் பண்ணேன், சரி சரி நீ சொல்ல வந்ததை சொல்லு”
“சொல்லவா” என்றவளின் முகத்தில் லேசாய் வெட்கம் வந்து ஒட்டிக் கொண்டது. “சொல்லுன்னு தான் சொல்லிட்டு இருக்கேன் நீ தான் எதுவும் சொல்ல மாட்டேங்கற” என்றான் கதிர் அவள் கண்களையே உற்றுநோக்கி.
அவன் பார்வை தன்னை விழுங்குவது போலிருக்க அதை தாங்காமல் அவன் மார்பில் ஒட்டிக்கொண்டாள் அவள்.
“சொல்லுவியா மாட்டியா??” என்றான் அவளை தன்னில் இருந்து விலக்கி.
“ஐ லவ் யூ” என்று அவன் கண் பார்த்து சொன்னவள் அவன் மீது சாய அவன் அவளின் முகத்தை இரு கைகளாலும் தாங்கி அவள் நெற்றியில் கண்களில் என்று வரிசையாய் முத்தம் வைத்து இதழ்களின் மீது இளைப்பாறினான்.
சில நொடிகள் கடந்து அவளை அவன் விடுவிக்க அவன் மீது சாய்ந்திருந்தவளுக்கு சட்டென்று ஏதோ ஞாபகம் வர “ஆமா எனக்கு இப்போ தான் ஞாபகம் வருது. நீங்க எப்படி எங்க வீட்டுக்கே குடி வந்தீங்க??” என்றாள்.
“ஏன் நான் அங்க வந்தது உனக்கு பிடிக்கலையா??”
“நான் எங்க அப்படி சொன்னேன்?? சும்மா கேள்வி கேட்காம நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க”
“எனக்கு எங்கம்மா எவ்வளவு முக்கியமோ அது மாதிரி உனக்கு உங்கப்பா ரொம்ப முக்கியம்ன்னு கூட என்னால புரிஞ்சுக்க முடியாதா…”
“ஆதி உங்கப்பாவை பார்த்துக்க மாட்டான்னு நான் சொல்ல வரலை, ரொம்பவே நல்லா பார்த்துப்பான். ஆனா அவரோட வீட்டில தான் அவர் சுயமா இருக்க முடியும்”
“அது அவருக்கு மட்டுமில்லை எங்கம்மாவுக்கும் பொருந்தும். நான் வீட்டோட மாப்பிள்ளையாவோ அவர் நம்ம வீட்டோட இருக்கறதோ நல்லா இருக்காது. அதான் வாடகைக்கு வந்திட்டேன்” என்று அவன் முடிக்கவும் அவனை இறுக அணைத்துக் கொண்டவள் அவன் இரு கன்னத்திலும் மாறி மாறி முத்திரை பதித்தாள்.
விழியில் இருந்து கண்ணீர் தன்னைப்போல் வழிந்தோடியது. அவள் தந்தையை பற்றிய அக்கறை அவளுக்கு இருக்கலாம் அவளுக்காக அவனும் யோசித்திருப்பது அவளுக்கு அப்படியொரு பேரானந்தத்தை கொடுத்தது. அவன் மீது எங்கோ ஒட்டியிருந்த கொஞ்ச நஞ்ச வருத்தமும் இருந்த சுவடே தெரியாமல் போனது அக்கணம்.
நயனா அவன் இதழில் லேசாய் ஒரு முத்தம் வைத்தாள். “இது செல்லாது ஏதோ ஸ்டாம்ப் முத்திரை மாதிரி வைக்குறே” என்றான் அவன்.
“அன்னைக்கு மாதிரி நல்லா கொடு”
“அது அன்னைக்கு ஏதோ ஒரு ப்ளோல கொடுத்திட்டேன் எப்படி கொடுத்தேன்னு எனக்கு ஞாபகமே இல்லை”
“இப்பவும் நீ அதே ப்ளோல தானே கொடுத்தே”
“போங்க…” என்றாள் சிணுங்கலாய்.
“நான் வேணா சொல்லிக் கொடுக்கவா”
“அதெல்லாம் அப்புறம் கத்துக்கலாம், இப்போ எனக்கு இன்னொரு டவுட் அதை மட்டும் கிளியர் பண்ணுங்க”
“இன்னுமா?? சரி சொல்லு என்ன டவுட்??”
“அன்னைக்கு வீட்டுக்கு பெயின்ட் அடிக்க வந்தாங்கல. அப்போ அப்பா மாடிக்கு யாரோ குடி வர்றாங்கன்னு சொன்னாங்க. நீங்கன்னு என்கிட்ட சொல்லவே இல்லை. நீ கல்யாணம் ஆகி போய்டுவ அதான் இங்க ஒரு குடித்தனம் வைக்குறேன்னு சொன்னாங்க”
“அன்னைக்கு நான் எவ்வளவு பீல் பண்ணேன் தெரியுமா. ரொம்ப அழுதேன் அன்னைக்கு. மாமாக்கு போன் கல்யாணம் வேணாம்ன்னு சொல்லி அன்னைக்கும் ஒரு கலாட்டா பண்ணேன்”
“அதுக்கு உன் மாமன் என்ன சொன்னான்”
“அவர் பிரண்ட் வேற ஒருத்தர் இருக்காராம் அவரை கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னாரு”
“அப்படியா சொன்னான் அந்த மடையன்” என்று பல்லைக் கடித்தான் கதிர்.
“எங்க மாமாவை மடையன்னு என் முன்னாடியே சொன்னீங்க அவ்வளவு தான் சொல்லிட்டேன்”
“என்னடி பண்ணுவே??”
“கடிச்சு வைச்சிருவேன். நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க முதல்ல”
“நானும் ஆதியும் தான் மாமாகிட்ட சொல்ல வேணாம்ன்னு சொன்னோம். அது உனக்கு சர்ப்ரைசா இருக்கட்டும்ன்னு நினைச்சோம். லாஸ்டா எங்களுக்கே அது பல்ப் ஆகிடுச்சு, நீ பால் காய்ச்சுற அன்னைக்கு வரலைன்னு சொல்லிட்ட”
“அதுக்கு அப்புறம் மாமாவோ இல்லை ஆதியோ உனக்கு சொல்லி இருப்பாங்கன்னு நினைச்சேன். உனக்கு தெரியாதுங்கறது நான் அங்க வந்து நிக்கவும் நீ முழிச்சப்போ தான் எனக்கே புரிஞ்சது”
“உங்களுக்கு என்னைய பார்த்தா எப்படி தெரியுது??”
“ஏற்கனவே நீ கேட்டே அப்போ சொல்ல முடியலை, இப்போ சொல்லிடவா”
“என்ன சொல்லப் போறீங்க??”
“உன்னை பார்த்தா எப்படி தெரியுதுன்னு சொல்றேன்”
“நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் நீங்க என்ன சொல்லிட்டு இருக்கீங்க?? ஆமா பொண்ணு பார்க்கிற அன்னைக்கு நீங்க ஏன் வரலை??”
“அன்னைக்கு நிஜமாவே எங்கம்மா என்னை வர வேணாம்ன்னு சொல்லிட்டாங்க. நானும் ஆதி வந்து உங்கக்காவை பொண்ணு பார்த்த மாதிரி நாமும் நம்ம ஆளை பார்ப்போம்ன்னு பல கனவோட தான் இருந்தேன்”
“அம்மா தான் நம்மல்ல இப்படி பழக்கமில்லை, தவிர நீ தான் அந்த பொண்ணை முன்னாடியே பார்த்திருக்கியே தனியா வேற எதுக்கு பார்க்கணும். சொந்தக்காரங்க எல்லாம் வர்றாங்க”
“எதுவும் நினைச்சுக்குவாங்க. நீ வர வேணாம்ன்னு சொல்லிட்டாங்க. நான் அதுக்காக புதுசா சட்டை எல்லாம் தைச்சு வைச்சிருந்தேன். மிஸ் ஆகிடுச்சு அதான் ஏற்கனவே வந்து பொண்ணு பார்க்க சீன் முடிஞ்சு போச்சேன்னு என்னை நானே சமாதானம் செஞ்சுகிட்டேன்” என்றான் ஏக்கப் பெருமூச்சோடு.
“நயனா…” என்று மெதுவாய் அழைத்தான்.
“ஹ்ம்ம்…”
“அது வந்து”
“என்னங்க”
“நான் தைச்சு கொடுத்த பிளவுஸ் எல்லாம் அளவு சரியா இருந்துச்சா??” என்று அவன் ஓரப்பார்வை பார்த்து கேட்க அதில் முகம் சிவந்தது அவளுக்கு.
“ஹ்ம்ம் சரியா தான் இருந்துச்சு” அவளும் அவனை பார்க்காது.
“அவ்வளவு தானா”
“வேறென்ன செய்யணும்”
“அதுக்கெல்லாம் ஒரு சன்மானம் கிடையாதா”
“பிளவுஸ் தைக்க தான் காசு வாங்கிட்டீங்களே”
“அடியேய் கல்யாணத்துக்கும் நான் தான்டி தைச்சேன். இதோ இப்போ நீ போட்டு இருக்கறதும் நான் தான் தைச்சேன்”
“அதுக்கு என்ன செய்யணும் இப்போ”
“அளவு சரியா இருக்கான்னு”
“அதான் பார்க்கறீங்களே சரியா தானே இருக்கு”
“எங்க ஒண்ணுமே தெரியலை” என்றவனின் பார்வையில் தெரிந்த கள்ளத்தனத்தை கண்டுக்கொண்டாள் நயனா.
“யோவ் அடிவாங்குவ நீ… சீய் ஒரு நல்ல பையன்னு நினைச்சு லவ் பண்ணா கெட்ட பையனா இருக்கேய்யா நீ”
“கல்யாணத்துக்கு முன்னாடி நல்ல பையன் தான். கல்யாணம் ஆகிட்டா கெட்ட பையன் ஆகிட வேண்டியது தானே” என்று அவன் முடிக்கும் முன்னே “என்னது” என்று பாய்ந்தாள் அவன் மனைவி.
Advertisement