அத்தியாயம் -32

மீனா ஹாஸ்பிடலில் மயக்கத்தில் இருக்க, அனைவரும் அவள் விழிப்பாதற்காக காத்திருந்தனர்.

மலையும், கண்ணம்மாவும் தனத்திற்கு போன் போட்டு நடந்ததை சொல்ல,

“ஐயோ…. என் சிங்கத்த சாச்சுபுட்டிங்களேடி. நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்களா. ஐயோ என் மனசு பதறுதே. என் சாமி எவ்ளோ கஷ்டப்பட்டுச்சோ தெரியலையே. உங்களை எல்லாம் பெத்ததுக்கு மலடியாவே நான் இருந்திருக்கலாம்டி” என்று நெஞ்சில் அடித்து கொண்டு அழுதவரின் வார்த்தைகள் அவர்களுக்கு தாய், தந்தை மீது இருக்கும் பாசத்தையே அழித்துவிட,

கண்ணம்மா கண்ணீரோடு “ம்மா…. அக்கா அப்பா அடிச்சதுல மண்டை ஒடஞ்சு ஹாஸ்பிட்டல்ல இருக்காம்மா. அவளைப்பத்தி நீ கேக்க கூட இல்ல”.

“அவளை ஏன்டி நான் கேட்கணும். அந்த ஓடுகாலியால நாங்க பட்ட அவமானம் போதாதா. உன்ற அப்பாரா இருக்க போய் அடிச்சதோட விட்டாரு. நான் வந்துருந்தேன் அவளை கணு கணுவா வெட்டி போட்ருப்பேன்”என்றவர் ஆங்காரமாக பேசி கொண்டிருக்கும்போதே “அம்மா……”என்று வெளியே யாரோ கத்தும் சத்தம் கேட்க,

அடுத்து என்ன நடக்கும் என்று தெரிந்த மலை அக்கா போனை வாங்கி கட் பண்ணிவிட்டு “அவங்கள திருத்த முடியாது. இங்க இருந்து போனவன் எவனாவது நடந்த எல்லாத்தையும் கொஞ்சம் மசாலா தூவி சொல்லுவான்.

உடனே அவங்க ரோட்ல உட்கார்ந்து ஒப்பாரி வச்சு. பெத்த புள்ளைங்கன்னு கூட பார்க்காம சாபம் விட்டுட்டு இருப்பாங்க. அதை நீ கேட்க வேண்டாம். வா நீ எதுவும் சாப்பிடாம இருக்க. ஜூசாவாது குடிச்சுட்டு வரலாம்”என்று செல்ல போக, அதற்குள் அஷ்வின் ஜூஸ் வாங்கி கொண்டு அங்கு வந்தான்.

தந்தையின் முன் தனக்காக பேசியவனை கண்கள் மின்ன பார்த்த கண்ணம்மா மனம் கணவனை எண்ணி கர்வம் கொண்டது. பெண்ணை சக மனுஷியாக நடத்துபவன்தான் உண்மையான ஆண் மகன்.

என் புருஷன் பெண்களை மதிக்கும் ஆண்’ என்று பெருமைப்பட்டவள் முன் ஜூஸ் டம்ளரை நீட்டியவன் “ரொம்ப டயர்டா தெரியற இதை குடி. மீனாட்சிக்கு ஒன்னும் ஆகாது. கவலைப்படாத”என்றவன் மலையிடமும் ஒரு டம்ளரை கொடுத்துவிட்டு சத்யாவிடம் சென்றவன் அவனுக்கும் ஒரு ஜூஸ் டம்பளரை கொடுக்க, அவனோ அதை மறுத்துவிட்டான்.

அவர்களை எல்லாம் சற்று நேரம் காக்க வைத்த பின்பே மீனா கண்களை திறந்தாள்.

அனைவரும் அவளை சூழ்ந்து நிற்க, அவள் கண்கள் தேடியது என்னவோ அவனவளைதான்.

அக்கா கண்களின் அலைப்புறுதலை கண்ட கண்ணம்மா “என்னக்கா பாப்பா எங்கன்னு பாக்குறீங்களா அவங்க……”

“இல்ல. அவரு எங்க?” என்று கேட்க,

அவளோ “அவரா…. மாமாவையா கேட்கிற. அவர எதுக்கு கேட்குற. ஏன்கா மாமா மேல உனக்கு கோவம் இல்லையா?” என்று முகத்தை தூக்கி வைத்து கொண்டு கேட்க,

அவளோ “கோவமா. அவர் மேலையா. நான் எதுக்கு கோபப்படணும்”என்று புரியாமல் கேட்டாள்.

“என்னக்கா. மாமா மட்டும் கொஞ்சம் முன்னாடியே அப்பாட்ட பேசியிருந்தா. நீ இவ்ளோ அடி வாங்கியிருக்க வேண்டாமே”

“ம்ம்ம்….. நான் முன்னாடியே என் புருஷன்தான் எனக்கு முக்கியம். உன்னால முடிஞ்சதை செஞ்சுக்கோன்னு. என் புருஷன் பக்கம் போய் நின்னுருந்தா கூடதான் அடி வாங்கியிருக்க மாட்டேன்”.

“ஆனா…. அக்கா…. நீ……”

“எங்க விஷயத்த பொறுத்தவரை நீ பேசியிருக்கலாம்…நான் பேசியிருக்கலாம்ங்கறது பிரச்சனை இல்ல. எங்க மனசுல என்ன இருக்குங்கறதுதான் விஷயம்.

எதுக்கு தேவையில்லாம பேசற அவரு எங்க”என்றவள் எழுந்து அமர,

கதவு நிலையில் சாய்ந்து கைகளை கட்டி அவளைதான் பார்த்து கொண்டிருந்தான் அவள் கணவன்.

இருவரும் ஒருவரை ஒருவர் அப்படியே பார்த்து கொண்டு இருந்தனர்.

கனைத்து அவர்களை கலைக்க நினைத்த அஷ்வின் அவர்கள் கவனம் தங்களிடம் இல்லை என்பதை உணர்ந்து “ச்சு…. ச்சு…. இந்த கொசு தொல்லை தாங்க முடியல”என்று சத்தம் கொடுக்க, அப்போதும் அவர்கள் அப்படியே இருந்தனர்.

இருவர் இடையில் வந்து நின்ற அஷ்வின் “டிங்கிரி டிங்காலே…மீனாட்சி டிங்கிரி டிங்காலே.,..,…” என்று கத்த,
தன்னிலை அடைந்த மீனாட்சி “என்னங்க சார். நீங்க தள்ளுங்க. எப்போ பாரு காமெடி பண்ணிக்கிட்டு”

“அட பாவி. மனுஷங்களா நீங்க. சுத்தி இத்தனை பேரை வச்சுக்கிட்டு ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கீங்க நீங்க ஒன்னும் யங் கப்பில் இல்ல. ரெண்டு குட்டி போட்ட ஓல்டு கப்பில். அதை நியாபகம் வச்சுக்கோங்க”என்று சொல்ல,

மீனாட்சி அவன் கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லாமல், அவன் கையை பிடித்து ஓரமாக நிற்க வைத்துவிட்டு மீண்டும் கணவனை சைட் அடிக்கும் வேலையை தொடர்ந்தாள்.

இருவரின் பார்வையை உணர்ந்து கொண்ட கண்ணம்மா கணவன் அப்போதும் பேசி கொண்டிருப்பதை கண்டு தலையில் அடித்து கொண்டு “அவங்க உங்களை இப்போவும் கண்டுக்கல, சும்மா கத்தி தொண்டை தண்ணி வேஸ்ட் பண்ணாதீங்க வாங்க போகலாம்”என்று இழுத்து செல்ல,

அஷ்வினோ “டேய்…. இதெல்லாம் அநியாயம்டா….”என்று சொல்லி கொண்டே சென்றான்.

சத்யா அருகில் வந்த கண்ணம்மா “அவ உங்க மேல கோபப்படாமல் இருக்கலாம். ஆனா…. அவ இப்போ இந்த நிலைமைல இருக்க நீங்கதான் காரணம். எனக்கு உங்க மேல பயங்கர கோபம்தான் மாமா” என்க, அவனோ ஒன்றும் சொல்லாமல் அமைதியாக நின்றிருந்தான்.

மலை, “சரி நீங்க பேசுங்க மாமா. நாங்க வெளிய இருக்கோம்” என்றுவிட்டு அனைவரும் வெளியே சென்று கதவை அடைத்துவிட,

மீனாட்சி கண்ணீருடன் கணவனை நோக்கி கையை நீட்டி
“மாமா……”என்று அழைக்க,

இதற்காகவே காத்திருந்தது போல் அவள் அருகில் வேக எட்டு வைத்து வந்தவன், தன் கரத்தை அவள் கரத்துடன் கோர்க்க,

அவளோ அவன் மார்பில் சாய்ந்து கொண்டு கதறி அழ துவங்கினாள். அவள் முதுகில் தடவி சமாதானப்படுத்திய சத்யாவின் கண்களும் கலங்கி போய்தான் இருந்தது.

மீனா, “இன்னும் என் மேல கோபமாங்க” என்க,

அவனோ பெருமூச்சுடன் “ம்ம்…. இருந்தது. என் மேல நம்பிக்கை வச்சு பேசுனல அப்போ இல்லாம போயிடுச்சு”.

“உங்க மேல எப்போவும் எனக்கு நம்பிக்கை இல்லாம போனது இல்லங்க . ஆனா…. என் கூடவே இருக்க பயம் அதுதான்…அதுதான்…எல்லாத்துக்கும் காரணமாகி என்னை யோசிக்க விடாம பண்ணிடுச்சு”.

“என்னடி பயம். என்ன பயம். இன்னும் எத்தனை நாளுக்கு இப்படி பயந்து பயந்து வாழ போற. யார் என்ன மிரட்டுனாலும் என் புருஷன் எனக்கிருக்கான்னு நீ தைரியமா சொல்லியிருக்கணுமா இல்லையா. அதை விட்டுட்டு சின்ன புள்ளைங்க மாதிரி அவங்க மிரட்டுனாங்கன்னு கையெழுத்து வாங்கி,

அவங்க மிரட்டுனாங்கன்னு வீட்டவிட்டு அர்த்த ராத்திரில வெளிய போய்.

கார்ல மோதி. எதாவது ஆகியிருந்தா என்ன பண்ணியிருப்ப. கொஞ்சமாவது யோசிச்சியா. அதுவும் குழந்தைய சுமந்துட்டு. தனியா எப்படிடி? எப்படி?.

வீட்டவிட்டு போகணும்னு யோசிச்சப்பக்கூட என் நியாபகம் உனக்கு வரலைல. தனியா சமாளிச்சுக்கலாம்னு இருந்த தைரியம் என்கிட்ட வர ஏன்டி இல்ல?

என்னைபத்தி நினைக்கவே இல்லல்ல. சிரிச்சுட்டு காமெடி பண்ணிட்டு இருக்கதால காமெடி பீஸ்னு நீயே முடிவுபண்ணிட்டியா” என்று கோபம் போல் கேட்க,

தலை குனிந்தவள் “இல்லங்க அப்போ நீங்க ரொம்ப உடம்புக்கு முடியாம இருந்தீங்க. அதான் அவங்களால உங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்துருமோனு பயந்துட்டேன்”.

“ரெண்டு வருஷம் முன்னாடி உன்னை காணோம்னு உன் அப்பா இங்க வந்து கலாட்டா பண்ணுன்னப்ப எவ்ளோ பயந்து போயிட்டேன் தெரியுமா?

உன்னை காணோம்ங்கற பயத்தைவிட, இப்போகூட நம்மகிட்ட வர தோணலையேன்னுதான் எனக்கு கோபம்.

“இல்லங்க. அப்போ எனக்கு குழந்தைகளை காப்பாத்தணும்னு மட்டும்தான் தோணுச்சு அதான் கிளம்பிட்டேன். ஆனா மலை கிளம்புன அப்புறம்தான் பயம் வந்துச்சு.

எங்க போக போறோம். என்ன பண்ண போறோம்னு. அதுக்கப்புறம் ஸ்ரீ அக்காவ பார்த்தவுடன்தான் நிம்மதி ஆனேன். ஆனா அதுக்கப்புறம் என்னோட கில்டினஸ்னாலதான் உங்ககிட்ட வர முடியாம போயிடுச்சுங்க”. ,

“என்னடி கில்டினஸ். என்கிட்ட வர உனக்கு என்ன யோசனை”.

“ ஒரு பொண்டாட்டியா முக்கியமான நேரத்துல உங்ககூட நான் இருக்கல. அதான்……”

“போடி கிறுக்கி. நீயா எதாவது யோசிச்சு. நீயா எதாவது முடிவெடுப்பியா. உன்னை என்ன பண்ணலாம். அப்படிதான் அங்க மதுரைல குமாரி அம்மாட்ட தூரத்துல இருந்தே அவரை பார்த்துக்கறேன்னு சொல்ற. என்ன தைரியம்டி உனக்கு”.

“இல்லங்க. பிரச்சனை…. வராம…”

“வாழ்க்கைனா பிரச்சனைகள் இருக்கதான் செய்யும். அதை எதிர்த்து நிற்கணும். பயந்து ஓட கூடாது. எனக்கு உன்னை தூரத்துல இருந்து பார்க்கறது போதாதுடி.

என் பக்கத்துல நீ வேணும். உன் மடில நான் படுக்கணும். நீ, நான், நம்ம குழந்தைங்கன்னு ஒரு உலகமா வாழனும், அன்னைக்கு அவளோ திட்டுறேன். ஆமாடா, அப்படிதான் பண்ணுவேன். நீ ஏன்டா பொண்ணு பார்க்க போற விஷயத்தை என்கிட்ட சொல்லலன்னு கேட்டியா.

இல்ல, நான் உன் பொண்டாட்டிடா. என்னை பார்த்து யாருன்னு கேட்கறியான்னு சண்டைக்கு வந்தியா”.

“எதே….. சண்டையா….”என்றவள் வாயை பிளக்க,

“என்னடி உன் அப்பன். சண்டையை சட்ட போடற மாதிரி ஒரு வேலையா வச்சிருக்காரு. நீ என்னன்னா சண்டையான்னு அலர்ற. உண்மைய சொல்லு. உன்னை ஹாஸ்பிடல மாத்திதானே தூக்கிட்டு போயிட்டாங்க. அவங்க பொண்ணு இல்லதானே நீ”

“போங்க….அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. நான் வீட்லதான் பொறந்தேன்னு எங்க பாட்டி சொல்லுச்சு.

நீங்க திட்டவும் எனக்கு முதல்ல அழுகைதான் வந்தது. அப்புறம் எப்படி சண்டை போடறது. அதுமட்டும் இல்லாம நீங்க சொன்ன கோணத்துல எல்லாம் நான் யோசிக்கவே இல்ல”என்றவள் முகம் மூக்கு அனைத்தும் அழுததில் சிவந்து போய் இருந்தது.

“நீ எதைதான் யோசிச்ச. நல்ல அழ மட்டும்தான் கத்து வச்சிருக்க”என்று அவள் மூக்கை பிடித்து ஆட்டியவன் “நாம வாழ்ந்த மூணு மாசத்துல உன்னை நல்லா புரிஞ்சுக்கிட்டேன்னு நினைச்சேன்.

ஆனா நீ கையெழுத்து கேட்கவும், ஒருவேலை நாம இன்னும் அவளை புரிஞ்சுக்கலையோ. வீட்ல சொன்னதாலதான் கல்யாணம் பண்ணுனியோ.

நிஜம்மா என்னை உனக்கு பிடிக்காதோன்னு தோண ஆரம்பிச்சிடுச்சு. அதான் என்கூட பிடிக்காம இருக்கறதுக்கு, உன் அப்பாகூடவே இருன்னு ஒரு வீம்பு அதான் அவ்ளோ நேரமும் அமைதியா இருந்தேன்.

ஆனா எப்போ என் புருஷன்தான் முக்கியம். அவர் மேல இருந்த காதலாலதான் எல்லாம் பண்ணுனன்னு சொன்னியோ அப்போ உன் மனசுல எனக்கான இடத்தை தெரிஞ்சுக்கிட்டேன்.

அந்த செகண்ட் உன் மேல, நம்ம வாழ்க்கை மேல, நம்ம காதல் மேல எனக்கு நம்பிக்கை வந்துடுச்சு…”என்று அவள் காயம்பட்ட இடத்தை தடவ,

அவன் கண்ணீர் துளி அவள் கன்னத்தில் பட்டு தெரித்தது.

அவனை நிமிர்ந்து பார்த்த மீனாவிற்கு ஸ்ரீ சொன்ன வார்த்தைகள் காதில் ஒலித்தது. “அவரோட நம்பிக்கையை உடச்சுட்டு வந்திட்ட, இனி மறுபடியும் அந்த நம்பிக்கையை வாங்க நீ ரொம்ப கஷ்டப்படனும்” என்று.

ஒரு பெரு மூச்சுவிட்டவள் “அத்த.. மாமா எல்லாருக்கும் என் மேல கோபம் இருக்கும்”.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. அவங்க எனக்காக பாக்குறாங்க. மத்தபடி உன் மேல அவங்களுக்கு கோபம் எல்லாம் இல்ல.

நடந்ததுல உன் தப்பு இல்லன்னு அவங்களுக்கும் தெரியும். அதுமட்டும் இல்லாம ரெண்டு குட்டீஸோட வந்திருக்க எப்படி கோபப்படுவாங்க. நீங்க எல்லாம் சேர்ந்துட்டு என் மேல கோபப்பட்டாதான் உண்டு”.

“ச்ச…ச்ச… நான் உங்க மேல கோபம் எல்லாம் பட மாட்டேங்க….” என்றவள் அவன் மார்பில் சாய்ந்து கொள்ள, அவனும் அவளை அணைத்து கொண்டான்.

அப்போது “ஹலோ…. நான் உள்ள வரலாமா….”என்ற கேள்வியோடு உள்ளே வந்தனர் ஸ்ரீயும், தீரனும்.

தீரன் கையில் அவன் குழந்தையும். ஸ்ரீ கையில் சத்யா மகளும் இருந்தனர்.

“அக்கா நீங்க எப்போ வந்தீங்க”.

“ம்கூம்….சரியா போச்சு போ. நாங்க வீட்டுக்கு வந்து உன்னை சர்ப்ரைஸ் பண்ணலாம்னு பார்த்தா, நீ ஹாஸ்பிடல் வந்து படுத்து எங்களுக்கு சர்பிரைஸ் குடுத்துட்ட” என்றவள் “ஆமா இன்னும் ஒரு வாரத்துல நம்ம குட்டீஸ்க்கு பர்த்டே வருதே என்ன பிளான். இங்க ஹாஸ்பிடல்லயே இருக்க போறியா. இல்ல வீட்டுக்கு வர போறியா”.

சத்யா, “இல்லங்க காயம் ஆழமா இருக்குன்னு டாக்டர் சொன்னாங்க. ரெண்டு வாரமாவது இங்க ரெஸ்ட் எடுத்தே ஆகணும்”.

“இல்லங்க. இங்க நாலு நாள் இருந்துட்டு, வீட்டுக்கு போயிடலாங்க”என்று மீனாட்சி கெஞ்ச,

சத்யாவோ டாக்டரிடம் பேசிவிட்டு சொல்வதாக சொல்ல, அதன்பின் அந்த இடமே கலகலப்பாக மாறியது.

நர்ஸ் வந்து “அமைதியா இருங்க…. அமைதியா இருங்க…”என்று சொல்லி சொல்லியே சலித்து போனார்.

தனம் ஹாஸ்பிடலில் யாரும் இல்லாமல் அனாதையாக கிடந்த கணவனை கண்டு நெஞ்சில் அடித்து கொண்டு அழ, நர்ஸ் வந்து திட்டவும் அமைதியானவர் டாக்டரிடம் என்ன ஆனது என்று கேட்க,

அவரோ “அவ்ளோதான்ம்மா ஒன்னும் பண்ண முடியாது கை, கால் நரம்பு எல்லாம் ஒன்னோடு ஒன்னு பின்னி செயல்பட முடியாம இருக்கு.

கொஞ்ச நாள் போகட்டும் எதாவது மாற்றம் வருதான்னு பார்க்கலாம். இல்லைன்னா….. இனி அவர் வாழ்க்கை கட்டில்லதான்” என்றுவிட தனம் முகம் பேயடித்தது போல் ஆனது.

மீனாட்சியை டாக்டர் வீட்டுக்கு போகலாம் ஆனால் முழு ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்றுவிட,

அனைவரும் அவளை வீட்டிற்கு அழைத்து சென்றனர். லதா அவளை நன்றாக பார்த்து கொண்டார். ஸ்ரீ, தீரன் இருவரும் குழந்தைகள் பிறந்தநாள் விழாவிற்கு வருவதாக சொல்லி கிளம்பிவிட, கண்ணம்மாவும் கணவனுடன் கிளம்பிவிட்டாள்.

மலை குழந்தைகளுடன் விளையாடி கொண்டு இருக்க, தம்பி அருகில் சென்று அமர்ந்த மீனாட்சி “அம்மா தனியா என்ன பண்ணுறாங்கன்னு கேட்டியா மலை” என்க,

அவனோ பதில் சொல்லாமல் விளையாடி கொண்டு இருந்தான்.

“மலை………”

“அக்கா ப்ளீஸ்…. அவங்களப்பத்தி பேசாத. அவங்களைப்பத்தி நினைச்சாலே எரிச்சலா இருக்கு. ஏன்தான் அவங்களுக்கு புள்ளைங்களா நாம வந்து பிறந்தோமோ தெரியல”.

“அப்படி சொல்லாத மலை. அவங்க எப்படி வேணா இருக்கட்டும். ஆனா…அவங்க நம்ம அம்மா, அப்பா அதை மாத்த முடியாது.

நாம குழந்தையா இருக்கும்போது அவங்க கவனிப்புலதானே இருந்தோம்.

இப்போ நாம அவங்கள கவனிச்சிக்கற காலம். இப்போ போய் அவங்க குணத்தை காரணம் காட்டி விலகி வர்றது ரொம்ப தப்புடா.

எவ்ளோ தப்பு பண்ணுனாலும் அந்த வீட்டு புள்ளைங்களா இருக்கும்போது நமக்கு அவங்க எந்த குறையும் வைக்கலதானே. அப்புறம் என்ன? நீ போய் அவங்கள பாரு. எதாவது உதவி வேணும்னா செய். அதான் அவங்க புள்ளைங்களா நாம செய்யற கடமை.

பெத்தவங்களா அவங்க தப்பு பண்ணியிருக்கட்டும், ஆனா புள்ளைங்களா நாம தப்பு பண்ண கூடாது. சரியா”என்க,

மனமே இல்லாமல் சரியென்று தலையாட்டியவன் உடனே தாயை பார்க்க சென்றுவிட்டான்.

மனைவி பேசுவதை அறை வாயிலில் நின்று கேட்டு கொண்டிருந்தவன் சத்யா “பார்றா என் பொண்டாட்டிக்கு அப்பா, அம்மா மேல எம்புட்டு பாசம்னு” என்று சொல்லியவாறு அவள் அருகில் அமர,

மீனாவோ, “நான் எதாவது தப்பா சொல்லிட்டேனாங்க. உங்களுக்கு கோபம்……”

“ச்ச…ச்ச…. அதெல்லாம் ஒரு தப்பும் இல்ல. பெத்தவங்கள பார்த்துக்கறது புள்ளைங்களோட கடமை. அதை சூழ்நிலை காரணம் காட்டி, விருப்பு, வெறுப்பு காரணம் காட்டி தட்டி கழிக்கறது ரொம்ப தப்பு”என்ற கணவனை ஆசையாக பார்த்தவள் “லவ் யூ புருஷா……”என்று சொல்லி அவன் இதழில் தன் இதழை மென்மையாக பதித்து எடுக்க,

திகைத்து போன சத்யா “ஹேய்….. என் பொண்டாட்டியா இது. லவ் யூ எல்லாம் சொல்றாளே. நீ என் பொண்டாட்டிதானா இல்ல உள்ள ஆவி ஏதும் புகுந்துடுச்சா”என்றவன் கிண்டல் பண்ண, பெண்ணவளோ முகம் சிவந்து போனாள்.

அவர்களிடம் ஓடி வந்த குழந்தைகள் இருவர் மடியிலும் அமர்ந்து மழலை மொழி பேச, புரியாவிட்டாலும் “ம்ம்ம்…” கொட்டி கேட்டு கொண்டிருந்தனர் இருவரும்.

அப்போது அங்கு வந்த லதா மகன், மருமகள், பேர குழந்தைகள் என அனைவரின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியை பார்த்து கண் கலங்கியவர் ‘இவர்களுக்குதான் இந்த சந்தோஷம் கிடைக்க எத்தனை கஷ்டம். இனியாவது எந்த பிரச்சனையும் இல்லாமல் இவங்க சந்தோசமா இருக்கணும் கடவுளே என்ற வேண்டுதலோடு அங்கிருந்து சென்றார்.

நாமும் அவர்கள் சந்தோஷம் நிலைக்கட்டும் என்ற வேண்டுதலோடு அவர்களிடம் இருந்து விடை பெறுவோம்.