Advertisement

14 – முத்தக் கவிதை நீ
பொதுவாகவே நமக்கு மிகவும் பிடித்தவர்களுக்கும் நம்மை பிடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும் தான். காதல் என்று வரும் போது அந்த எதிர்பார்ப்பு கட்டாயம் இருக்கும் தானே. நேத்ரா தன்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிப்பிடித்து காதல் வசனம் பேசுவாள் என்ற எதிர்பார்ப்பு இல்லை தான் மைக்கேலுக்கு. ஆனால் குறைந்த பட்சம் தெரிந்தது போலாவது காட்டிக் கொள்ளலாமே. ஏனிந்த பாராமுகம்.
மனம் சோர்ந்து போனது மைக்கேலுக்கு. ‘ஒருவேளை அவள் நிஜமாகவே கடந்து வந்துவிட்டாளா? தான் மட்டுமே தான் அவளை நினைத்துக் கொண்டே காலத்தைக் கழித்திருக்கிறோமா? பேபி ஹௌ கேன் யூ டூ இட்? என் மனசு உனக்குப் புரியவேயில்லையா? என் காதலை உனக்கு புரிய வைக்காமல் நான் தோற்றுப் போனேனா? நீ உன்னோட முடிவுல உறுதியாக தான் இருக்கியா?’ கண்கள் பனிக்க கிளாசுக்குள் இருக்கும் நேத்ராவையே பார்த்துக் கொண்டிருந்தான். 
முந்தைய நாள் மாலை பெங்களூர் வந்து இறங்கிய சற்று நேரத்திற்கெல்லாம் அவனுக்கு தகவல் அனுப்பிய அந்த பெண் மீண்டும் அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள். மைக்கேலுக்கு உதவுவதாக அவள் உறுதியளித்தாள். ஆனால் அதற்கு முதலில் அவன் நேத்ராவின் புகைப்படத்தை இணையத்திலிருந்து அழிக்க வேண்டும் என்றாள். அதற்காக அவள் சொன்ன காரணமும் ஏற்றுக் கொள்ளும்படி இருந்ததால் அதற்குண்டான ஏற்பாடுகளை மைக்கேல் உடனே செய்தான்.
அடுத்த படியாக நேத்ரா படிக்கும் கல்லூரி விபரங்களைத் தந்தவள் ஒரு கோரிக்கையும் வைத்தாள். எக்காரணம் கொண்டும் தான் தான் அவனுக்கு விபரம் தந்தாள் என்பதை அவன் நேத்ராவிடம் சொல்லக் கூடாது என்றும் தன் பேபியின் சந்தோஷத்திற்காக மட்டுமே தான் இதை செய்வதாகவும் சொன்னாள். மேலும் எக்காரணம் கொண்டும் நேத்ராவைக் காயப்படுத்த கூடாதென்றும் அப்படி ஏதாவது நடந்தால் அவள் அவனை சும்மா விடமாட்டாளென்றும் சொல்லியிருந்தாள்.
எப்பேர்ப்பட்ட நட்புடா இது என்றே எண்ணத் தோன்றியது. நேத்ராவின் சந்தோஷம் அவளது நட்புக்கு அவ்வளவு முக்கியமா? ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அவனது பேபியும் அப்படித்தான். நட்பென்றால் உயிரையும் கொடுப்பாள். அவனுக்கு அவள் முதலில் நல்ல தோழி, அப்புறம் தானே அவனது உயிரானாள். எண்ணங்களோட நேத்ராவின் மறுப்பு அவனுக்கு விரக்தி மேலிட அசையாது நின்றுவிட்ட அவன் கிளம்பும் முன் ஒருமுறை கிளாசுக்குள் எட்டிப் பார்த்தான். 
நேத்ரா தனது மேஜையில் இருந்த புத்தகத்துக்குள் தலையை நுழைத்துக் கொண்டிருந்தாள். அடுத்து என்ன என்ற கேள்வியுடன் அவன் திரும்ப யத்தனிக்க அவனது மொபைலில் நோட்டிஃபிகேஷன் வந்து அவனது கவனத்தை திசை திருப்பியது. “நீங்க கேண்ட்டீன்ல வெய்ட் பண்ணுங்கண்ணா. ஒரு டென் மினிட்ஸ்” என்று செய்தியனுப்பியிருந்தாள் அந்தப் பெண். 
நிமிர்ந்து நோக்கியவனின் பார்வையில் சிக்கிய பெண் நேத்ரா வின் அருகில் அமர்ந்திருந்தாள். அவளது முகம் நேத்ராவை நோக்கியே இருந்த போதும் கைகட்டை விரலைத் தூக்கி இவன் புறம் காட்டியபடி இருந்தது. இவள் தான் தனக்கு குறுஞ்செய்தி அனுப்பிய பெண் என்பது புரிந்தது மைக்கேலுக்கு. தனக்கு உதவும் இந்த தேவதைக்கு பார்வையில் ஒரு நன்றியுடன் அங்கிருந்து அகன்று கல்லூரி கேண்டீனை அடைந்தான்.
தன் பேபியை பார்க்கும் அவசரத்தில் காலை உணவைக் கூட மறந்திருந்தான். அவன் வந்து தனக்கான சாண்ட்விச்சை ஆர்டர் செய்து பெற்றுக் கொண்டு ஒரு மூலையில் காலி இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான். அவன் நினைவெல்லாம் அவனது ஸ்பிரிங் மட்டுமே நிறைந்திருந்தாள். எப்படி அவளால் இவனை மறுக்க முடிந்தது? மைக்கேலுக்கு நன்றாகத் தெரியும் நேத்ராவுக்கும் அவன் என்றால் உயிர் தான். ஆனால் இடையில் நிற்பது??????? ப்ரச்சனை என்ன என்று தெரிந்தால் தீர்க்க முயலலாம். இங்கே ப்ரச்சனை என்ன என்றே தெரியவில்லை. எப்படி தீர்ப்பதோ????
காலம் அவளிடம் எந்த மாற்றத்தையுமே ஏற்படுத்தவில்லையே!!… அன்று.., சில வருடங்களுக்கு முன் பார்த்த அதே உருவம். உயரம் கூட மாறவில்லை. ”ட்வார்ஃப்” சொல்லிப் பார்த்துச் சிரித்துக் கொண்டான். இதைச் சொன்னால் ஸ்பிரிங்கிற்கு கடுங்கோபம் வரும். அது அவளை எரிச்சல்படுத்தவென்றே அவன் அழைக்கும் பெயர். பள்ளிக்காலத்தில் அந்த கட்டம் போட்ட மேல்சட்டையும் யூனிஃபார்ம் ஸ்கர்ட்டும் அவளை இன்னும் குள்ளமாகவே காட்டும். இவர்கள் சந்திக்கும் போதெல்லாம் சண்டை தான். ஆனால் இவர்களது இரண்டாம் சந்திப்பை மைக்கேல் மறக்கவே முடியாதபடி அமைந்து போனது.
முதல் நாள் ப்ரேயர் நடக்கும் போது இவனைப் பார்த்து உறுத்து விழித்தவள் அதன்பின் இருதினங்களுக்கு இவன் கண்ணில் படவேயில்லை. அவளைப் பற்றிய எந்த விபரமும் தெரியாத போதும் ஏனோ அவள் முகம் அடிக்கடி அவனுக்கு நினைவில் வந்து போனது. ஆனால் அடுத்து அவளை எப்படி பார்ப்பது என்று தான் தெரியவில்லை. யாரிடம் கேட்பதெனவும் தெரியவில்லை. 
பிரின்ஸிபல் மைக்கேலிடம் அவனுக்கு எந்த வகுப்பில் இருந்து அவனுடைய ரிசர்ச்சை செய்ய வேண்டும் என்று விரும்புகிறானோ அங்கிருக்கலாம் என்று சொல்லி விட்டார். ப்ளஸ் ஒன் ப்ளஸ் டூ என்றால் நல்ல வளர்ந்த பிள்ளைகள் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும் என்று அந்த வகுப்புகளைத் தேர்ந்தெடுத்தான். ஒவ்வொரு வகுப்பிலும் ஐந்து செக்ஷன்கள் வேறு இருந்தது. நாளொன்றுக்கு ஒரு கிளாஸ் என்று செல்லத் தீர்மானித்தான்.
அன்று மதிய உணவு முடிந்த நேரம் இரண்டாவது தளத்தில் இருந்த வகுப்புக்குப் போகலாம் என்று முடிவெடுத்து படியேறத் தொடங்கினான். பெல் அடிக்காத காரணத்தால்  அத்தனை மாணவர்களும் வெளியில் தான் ஓடியாடிக் கொண்டிருந்தனர். முதல் தளத்திலிருந்து இரண்டாவது தளத்திற்கு ஏறிக் கொண்டிருந்த மைக்கேலுக்கு திடீரென ஏகப்பட்ட குரல்கள் கேட்கத் தொடங்கின. அதில் ஒரு குரல் அவன் வெகு ஆவலாக எதிர்பார்த்த குரல். முதல் நாள் அவனைக் கட்டிப்போட்ட குரல்.
“பானு நோ!!! ஸ்டாப் தேர். வராத. உன்னால் என்னைப் பிடிக்க முடியாது.” அந்தக் குரல் வெகு அருகாமையில் கேட்கத் தொடங்கியது. இவள் தான்!!!!!!! இவளைத் தானே தேடினோம்???? உடலில் பரபரப்பு தொற்றிக் கொள்ள அவசர அவசரமாக படியேறினான் மைக்கேல். அவன் இரண்டாவது தளத்தை அடைய இருபடிகளே இருக்கும் போது அவனே எதிர்பாரா வண்ணம் அது நடந்தது. எதிரில் வருவது யார் என்றும் பாராமல் ஓடிவந்தவள் அப்போது தான் இவனைப் பார்க்க தனது வேகத்தை கட்டுப்படுத்த இயலாமல் மைக்கேலின் மீது மோதி எங்கே கீழே விழப்போகிறோமோ என்ற பயத்தில் அவன் மீது தொத்திக்கொண்டாள்.
என்ன நடந்தது என்று சுதாரித்து மைக்கேல் அவளைப் பார்க்க முயல அவனது கன்னம் அவளது உதட்டோடு உரச மைக்கேலின் உடலில் மின்சாரம் பாய்ந்தது. தான் என்ன மாதிரி உணர்கிறோம் என்று புரியவே அவனுக்கு சில நொடிகள் தேவைப்பட்டது. ஓரிரு நிமிடங்கள் இருவருக்குமே உலகம் சுற்றுவது நின்று போன உணர்வு.  இருவருக்குமே எங்கிருக்கிறோம் என்று உணர்வு இருந்ததாக பார்த்தவர்களுக்குத் தோன்றவில்லை.
உலகம் மறந்து அமர்ந்திருந்தாள்….. ஆம் அமர்ந்திருந்தாள் தான். அவனது இடுப்பில். ஓடி வந்த வேகத்தில் கீழே விழுந்துவிடுவோமோ என்ற பயத்தில் பற்றிக் கொள்ள கிடைத்த அவனின் இடுப்பில் ஏறி அமர்ந்து விட்டாள்.  போதாத குறைக்கு முத்தம் வேறு. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்த விழி பார்த்தபடி இருக்க சுற்றி வந்து நின்ற மற்ற மாணவர்கள் தான் கைகொட்டிச் சிரிக்கத் தொடங்கினர். “ஹோய்ய்ய்ய்” என்று பேரிரைச்சலும் கைதட்டி ஆரவாரமும் கேட்கவும் தான் தன்னுணர்வு பெற்ற நேத்ரா தானிருந்த நிலை உணர்ந்து வெட்கி கீழே குதித்து ஓடிவிட்டாள்.
அவள் ‌ஓடிய திசையையே பார்த்திருந்த மைக்கேலுக்கு முகத்தில் புன்னகை ஒன்று ஒட்டிக் கொண்டது. பெண்கள் ஒன்றும் புதிதல்ல அவனுக்கு. அவனுடைய பதின்வயதுகளில் அவனுடன் படித்த பெண்களில் பலர் அவனிடமே வந்து ப்ரபோஸ் செய்தது உண்டு தான். டேட்டிங்கிற்கு அழைத்ததுமுண்டு தான். ஆனால் ஏனோ மைக்கேலுக்கு அவன் தாயின் மீதிருந்த கோபம் வேறு பெண்கள் மீது ஈர்ப்பை ஏற்படுத்தவேயில்லை. எப்போதுமே பெண்களை விட்டு சில அடி தூரம் தள்ளியே இருப்பான். பள்ளி கல்லூரியில் அவனை நேர்ட் (Nerd) என்று தான் அழைப்பார்கள்.
முதல் முறையாக ஒரு பெண்ணின் ஸ்பரிசம். தன் மீது ஒரு பெண்ணின் மணம். அவனால் நம்ப முடியவில்லை. ஏனோ அவனுக்கு பெண்களைக் கண்டால் பொதுவாகவே வரும் ஒவ்வாமை நேத்ராவைக் கண்டு வரவில்லை. அவளை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வமே கூடியது. ‘ச்சே இந்த பசங்க மட்டும் இன்னும் கொஞ்ச நேரம் வராமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே’ என்ற எண்ணம் பேராவலாக எழுந்தது.
அவளது பெயர் கூடத் தெரியாமல் அவளின் முத்தம் பெற்றாயிற்று. அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வேறு. அவனுக்கே அவனது எண்ணப் போக்கு ஆச்சரியமாகிப் போனது. சில தினங்களுக்கு முன் சந்தித்த ஒரு பெண்ணால் தன்னை இத்தனை தூரம் அசைத்துப் பார்க்க இயலுமா என்று. புன்னகை மாறாத முகத்துடன் (அதாங்க அசுடு வழிந்த முகத்துடன்) எந்த வகுப்பை தேர்ந்தெடுக்கலாம் என்று பார்த்துக் கொண்டே நடந்தான்.
ஏதோ சிந்தனையில் தான் கடந்து வந்த வகுப்பை ஒரு நொடி பார்த்தவன் உள்ளுணர்வு உந்தித் தள்ள திரும்பிச் சென்று அந்த வகுப்பிற்குள் நுழைந்தான் மைக்கேல்.  அவன் கிளாசுக்குள் நுழைந்ததும் அத்தனை மாணவ மாணவிகளும் சிரிக்கத் தொடங்கினர். காரணம் புரியாமல் முழித்தவனின் பார்வை இரண்டாவது வரிசையில் சன்னலோரம் கீழே குனிந்தபடி அமர்ந்து  இருந்தவளின் மேல் படர்ந்தது. அவளின் முகம் செங்கொழுந்தாகிப் போயிருந்தது கோபத்தில்.
பழைய நினைவுகளில் ஆழ்ந்து போனவனாய் பசி மறந்து அமர்ந்திருந்தான் மைக்கேல்.  அவனுக்கு அவன் பேபி கோபமாக இருந்தால் அவள் முகமாற்றமே சொல்லி விடும். இன்று அவளைப் பார்த்தால் அப்படி ஒன்றும் கோபப்பட்டது போல் தெரியவில்லை. அதிர்ச்சி இருந்தது தான். ஆனால் வெறுப்போ கோபமோ மருந்தளவு கூட இல்லை.
நேத்ராவிற்கு படபடப்பு இன்னும் அடங்கவில்லை. இந்தியாவிற்கு வந்துவிட்டான் என்று தெரியும். ஆனால் இப்படி அடுத்த நாளே கண்முன் வந்து நிற்பான் என்று கனவிலும் நினைக்கவில்லையே. இவனுக்கு இப்போது என்ன சொல்லி புரிய வைப்பது. தனக்கு அவனைத் தெரியவே தெரியாது என்று சொன்னதை நம்புவான் என்று அவள் நினைக்கவில்லை தான். அவளுக்கு நன்கு தெரியும் இதெல்லாம் மைக்கேலைத் தடுக்கக் கூடியதில்லை என.
தன் மீது அவனுக்கிருக்கும் காதலும் அவளுக்கு நன்கு புரியத்தான் செய்தது. இல்லையென்றால் ஒருவன் தனது தாய்நாட்டை விட்டு விட்டு இப்படி வந்து நிற்பானா? ஆனால் அன்று வேண்டாம் என்பதற்கு அவளுக்கிருந்த காரணம் இன்னும் அப்படியே தானே இருக்கின்றது. இவனுக்கு எப்படி புரியவைக்க என்று தலையை உடைத்துக் கொண்டாள்.
‘இவனுக்கு நாமிருக்கும் இடம் எப்படி தெரிந்திருக்கும்? இந்த ரெண்டு வால்களிடம் தான் நேற்று சத்தியம் வாங்கியிருக்கிறோம். அதனால் இந்த ஓட்டைவாய்கள் உளறி வைக்க வாய்ப்பில்லை.’ சிந்தனை ஓட தன்னருகில் அமர்ந்திருக்கும் இருவர் மேல் பார்வையை ஓட்டினாள். மியா கர்மசிரத்தையாக வகுப்பை கவனித்து நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தாள். டெட்டியோ வழக்கம் போல் தனது டெஸ்கிற்கு கீழே மொபைலை வைத்து ஏதோ நோண்டிக் கொண்டிருந்தாள்.
ஒருவேளை இவள் தான் அந்த எட்டப்பியா என்று எட்டிப் பார்த்தால் அம்மணி விஜய் தேவரகொண்டாவின் புகைப்படத்தைப் பார்த்து அண்டா அண்டாவாக ஜொள்ளிக் கொண்டிருந்தாள். ‘ஐயோ டெட்டியப் போய் சந்தேகப்பட்டுட்டோமே. தெரிஞசா பிசாசு நம்ம இரத்தத்தைக் குடிச்சிருவாளே’ என்று எண்ணிக் கொண்டிருக்க  மியா தனது வயிற்றைப் பிடித்தபடி “பேபி நான் காலையில் சாப்பிடலயா. ரொம்ப பசிக்குது. எனக்கு கொஞ்சம் சாண்ட்விச் வாங்கிட்டு வர்றியா? ப்ளீஸ் பேபி. நான் நோட்ஸ் எடுத்து வைக்கிறேன்” என்றாள்.
கேட்டுக்கொண்டிருந்த டெட்டியின் கண்கள் மின்னின.
கவிதையாவாள்.!!!!!!!!!!!!!

Advertisement