Advertisement

“ அதெல்லாம் இப்போ வேண்டாம். அதுக்கு நேரம் வந்ததும். சொல்லிக்கலாம். “ என சொன்னவன் இன்னும் அடுத்தடுத்து கட்சி ஆட்கள் வர, அவர்களுக்கு சில வேலைகளை பிரித்து கொடுத்தவன், பரமுவுடன் அவனது எண்ணெய் செக்கு ஆலைக்கு கிளம்பி விட்டான்.

அங்கே அவனுக்கு மாலை வரை நேரம் செல்ல, நிக்க நேரமில்லை. இவன் நிர்வகிக்க வந்ததும் இந்த மூன்றாண்டுகளில் மிகவும் பெரிதாக ஆலை இயங்க ஆரம்பித்திருந்தது. முதல் இரண்டாண்டுகள் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க, சுற்று வட்டாரத்தில் இவர்கள் செக்கு எண்ணெய்க்கு என தனி அடையாளம் வளர்ந்த்திருந்தது. அது இன்னும் மார்கெட்டிங் செய்து, பெரியளவில் கொண்டு சேர்த்திருந்தான். வேலையும் வரவும் மிக மிக அதிகம். மாலைக்கு மேல் அவனது சிலைகள் விற்கும் கிஃப்ட் ஷாப் செல்ல, நேரம் சரியாக இருந்தது. வீட்டிற்கு வர இரவு பத்து மணியாகி விட, வீட்டிற்கு வந்ததும் குடும்பத்துடன் இனிமையாக நேரம் கழிய, ஆதியை தூக்கி கொண்டு இரண்டாம் தளம் வந்தான். 

அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் வீடு புதுப்பித்திருக்க, மிக பெரியதாக இருந்தது. கீழ்த்தளம் வீட்டினார் அனைவருக்கும் என இருக்க, முதல் தளம் ராஜாவிற்கும் இரண்டாம் தளம் அழகனுக்கு என்றிருக்க, பகல் பொழுது எல்லாம் அனைவரும் கீழே இருக்க, இரவு படுக்க மட்டும் அவரவர் தளம் என பயன்படுத்தினர். 

ஆதியுடன் மேலே வந்தவன், டி‌வியில் பாடல் போட, குத்து பாடலுக்கு ஆதி ஆட இவனும் சில நேரம் சோபாவில் சாய்ந்தவன் சிறிது நேரம் சென்று ஆதியுடன் சேர்ந்து சரிக்கு சரியாய் ஆட, கீழே இருந்து பாண்டியன் அலைபேசியில் அழைத்தார். 

அழகன் ஸ்பீக்கரில் போட, 

“ அழகா, பாட்டு சத்தம் கீழ வரைக்கும் கேக்குது. அமர்த்திட்டு படு. அந்த பொடியனையும் படுக்க வை.” என சத்தமிட,

ஆதி வாய் மேல் இரண்டு பிஞ்சு கைகளையும் குவித்து வைத்து ‘ அச்சச்சோ ‘ என மெல்ல சொல்ல, ஆதிக்கு முகம் கூம்பி விட்டது. பாண்டியன் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் என்பதால் வீட்டில் இருக்கும் போதெல்லாம் ஆதியை கூட ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார். ஆண் பிள்ளைகளை அப்படி தான் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் வேரூன்றி போயிருக்க, எத்தனை பாசமோ அத்தனை கண்டிப்பு. ஆதி கூட அவர் வீட்டில் இருந்தால் சேட்டை செய்ய மாட்டான், பெரிதாக கத்த மாட்டான், ஆட மாட்டான், பெரிதாக அடம் செய்ய மாட்டான். ஆனால் பாண்டியன் வெளியே சென்று விட்டால் அவ்வளவு தான், ஆதி எல்லாவற்றையும் செய்வான்.

இப்போது தாத்தா கீழே தானே இருக்கிறார் என ஆதி ஆட்டம் போட,  அழைப்பு வந்து விட்டது. ஆதி பாவமாய் அழகனை பார்க்க, “ சரி சித்தப்பா “ என அழகன் சொன்னாலும், ஆதியை பார்த்து கண்ணடித்து மெதுவாக பாட்டு வைத்து ஆட, ஆதியும் உற்சாகமாக ஆட, இருவரும் தலையணை, துண்டு என கையில் கிடைக்கும் பொருட்கள் என எடுத்து போட்டு ஆட, இரவு அமர்க்களமாய் இருந்தது. 

அழகன் பொறுத்தவரை குழந்தையுடைய நியாயமான அசைகளுக்கு இடம் கொடுக்க வேண்டும். அடக்கிய வைத்திருக்க கூடாது. அவனது இயல்புக்கு அவனை விட வேண்டும். வழி நடத்தலாம், ஆனால் அதிகாரம் கூடாது என நினைப்பவன். அதானால் ஆதி விஷயத்தில் எப்போதும் அழகனுக்கு ஒரு வாஞ்சை இருக்கும், அதே போல் அவ்வப்போது வழி நடத்துதலும் இருக்கும். 

சிறு வயதில் அவனுக்கு பாண்டியரிடம் எப்படி நடக்க வேண்டும் என எல்லாம் தெரியும் தானே, அதனால் ஆதியை இயன்ற வரை அவன் இயல்பில் வளர வேண்டும் என நினைத்திருந்தான். அன்று இரவு எப்போது தூங்கினார் என இருவருக்கும் நியாபகம் இல்லை. 

காலையில் விடிந்ததும், மலர் வந்து ஆதியை வாங்கி கொண்டு கீழே சென்றுவிட்டாள். ஆனால் அழகன் சோர்வாக இருக்க, மறுமுறையும் படுத்து உறங்க, நேரம் போனதே தெரியவில்லை. பத்து மணி போல் வள்ளி மேல வந்தவர், தரையில் மெத்தையில் படுத்திருந்த அழகனை எழுப்ப, 

“ வள்ளிமா பிளீஸ், இன்னும் கொஞ்ச நேரம். “ 

“ அழகா நேரத்துக்கு சாப்பிடணும். இல்லைனா வயிறு புண் ஆயிடும்டா. என்னப்பா இது எல்லாத்தையும் இப்படி கலச்சு போட்டு வச்சுருக்க ” என அவர் ஒவ்வொன்றாக எடுத்து வைக்க,

“ ம்ச்சு என்ன மா நீங்க. ச்சை இந்த வீட்ல ஒருத்தன் நிம்மதியா தூங்க முடியுதா. “ என சலித்து கொண்டே எழுந்தவன் நேரத்தை பார்க்க, மணியை பார்த்ததும் அடித்து பிடித்து கிளம்பியவன், கீழே சாப்பிட வர, 

“ மா சீக்கிரம். “ என அவசரபடுத்த, 

“ கை கழுவு. “ என வள்ளி கறார் காட்ட, கை கழுவி வந்து உட்கார்ந்தவன், 

“ இப்போ தோசை வருமா வராதா. “ என சத்தமிட்டான். 

சுட சுட வெங்காய தோசையும் தக்காளி சட்னி, காய்கள் போட்ட கலர்ஃபுல்  கிச்சடி, சாம்பார், வடை என வர, அவனது அவசரம் எல்லாம் பறந்து விட்டது. மெதுவாக ருசித்து உண்டவன், ஆலைக்கு செல்ல கிளம்ப, அலைபேசி இசைக்க, பரமு அழைத்திருந்தான்.

“ சொல்லு பங்கு “ 

“ நம்ப சூப்பர் மார்க்கெட்ல பிரச்சனையாம் டா. நான் ஆலைல இருக்கேன், நீ வர லேட் ஆனதும் மேனேஜர் எனக்கு கூப்பிட்டார் டா, டெலிவெரிக்கு லோட் ஏத்திட்டு இருக்கோம். 

தாமர தான் ஏதோ ஸ்டோர் ரூம் காதவ திறக்க முடியாம நிக்குதாம். உங்க சித்தப்பாக்கு ஏதோ ஃபோன் பண்ணிருக்கு. “ என குண்டை போட, 

ஏதோ சிறு விஷயமாக இருக்கும் என அசராதவன், புருவம் சுருங்க “ என்னவாம் அந்த பச்ச மொளகாக்கு. நான் நேர்ல பாத்துக்குறேன். நீ வை “ என வைத்தவன், தன் இருசக்கர வாகனத்தில் கடை முன் நிற்க,  இவன் வருவது தெரிந்ததும், ஆண் பணியாளர்கள் சிலபேர் இவனை வரவேற்க, பெண் பணியாளர்கள் இருவர் மட்டுமே இருந்தனர், அவர்கள் தாமரை பக்கமே தயங்கி நின்றிருந்தனர்.

நேராக இவர்கள் பக்கம் வந்தவன், பெண்களை பார்த்து பொதுவாக, 

‘என்னாச்சு ‘என கேட்க, எங்கே இருக்கைக்கு வலிக்குமோ என தாமரை மெல்ல எழுந்தவள், அவனை நேராக பார்த்து, 

“ சங்கர் குடிச்சிட்டு நேத்து ஈவினிங் ஷிப்ட்க்கு வேலைக்கு வந்தார். கடைல யார் சொல்லியும் வெளில போக மாட்டேன்னு அடம் பண்ணார். நான் எவ்வளோவோ சொன்னேன். வெளிய போக சொன்னேன். 

நீங்க என்ன ஒனரா, அவங்க சொந்தக்காரங்க தான, நீங்க சொல்லி எல்லாம் வெளிய போக முடியாதுனு சொல்லிட்டார். அவர் எதுவும் கேக்கற நிலைல இல்லைனு நானும் ஸ்டோர் ரூம்ல உட்காரவச்சுட்டேன். அவர் இருந்தது மறந்து பூட்டிட்டு கிளம்பிட்டேன். இப்போ ஸ்டோர் ரூம் சாவி என்கிட்ட இல்லை. நேத்து கிளம்புர அவசரத்துல எங்க வச்சேன்னு தெரியல. 

உங்களுக்கு காலைல கூப்பிட்டேன். நீங்க எடுக்கல, அதான் பாண்டியன் மாமாக்கு கூப்பிட்டேன். “ என சொல்லி அவள் நிறுத்துவதற்கும், பாண்டியன் வருவதற்கும் சரியாக இருந்தது. 

“ என்னாச்சு மா. “ என அவரும் கேட்க, நடந்ததை மறுமுறையும் கொஞ்சம்  டோன் மாற்றி மரியாதையாக சொல்ல, அவர் அழகனை ஒரு ஆழமான பார்வை பார்த்து முறைத்தவர், தன் கைபையிலிருந்து  ஸ்பேர் சாவியை எடுத்து கொடுக்க, அதன் பின் கதவு திறக்க பட, உள்ளே இருந்து சங்கர் பயம் அப்பிய முகத்துடன் வெளியே வந்தார். 

கடையில் மற்றவர்களை கலைந்து செல்ல சொன்னவர். சங்கர், அழகன், தாமரை மூவரையும் ஆஃபிஸ் ரூம் அழைத்து செல்ல, கூலெர்ஸை கழட்டி தாமரையை கூர்மையாக முறைத்தவன், முன் செல்ல, அந்த பார்வையை பார்த்தாலும் பெரிதாக அலட்டாமல் அப்படி ஒருவன் தன்னோடு இருப்பது போலே காட்டாமல் பின் சென்றாள். 

பாண்டியன் உள்ளே வந்ததும் சங்கரை பிடி பிடியென பிடிக்க, வேலையிலிருந்து பத்து நாள் விலக்கி வைக்க, அவர் அரண்டு போய் வெளியில் சென்றதும்,

“ தாமர, என்ன மா இது. கடைய பார்த்துகுற இடத்துல இருந்துகிட்டு, சாவிய மறந்துட்டு இப்படி இருக்கலாமா. அந்த ரூம்ல இருந்து அவனுக்கு ஏதாவது ஒன்னு ஆகிருந்தா, உன் மேல தான பழி வந்துருக்கும் ? “ என அவர் மெல்லிய கோபமாக கேட்க, மெதுவாக அவள் பர்ஸை திறந்து சாவியை எடுத்து அவரிடம் தந்தவள்,

“ மாமா, நான் மறக்கல. அந்த ரூம்ல ஒரு தண்ணி கேன் எப்போமே நம்ப வச்சிருப்போம். கூடவே பிஸ்கட் பேக்ல இருந்து பிரட் வரை சாப்பிடறதுக்கு எல்லா ஐட்டமும் அங்க பண்டெல் பண்டெலா இருக்கு. பசிச்சா எடுத்து சாப்பிட்டுப்பாரு சின்ன வயசு தான் அவருக்கு. சுகர், பி‌பிக்கு மாத்திர போடுற அவசியமும் இல்ல. அங்க வெளில காத்து போறதுக்கு சின்ன விண்டோவும் இருக்கு. 

அவருக்கு ரெண்டு பெண் குழந்தைங்க இருக்காங்க மாமா. முந்தாநாள் அவரோட தர்ட் ஸ்டாண்டர்ட் படிக்குற பொண்ணு குடிச்சிட்டு ரோட்ல கிடக்குற அவர எழுப்பி கூட்டிட்டு போகுது. 

அவங்க வொய்ஃப் எங்க இங்க வந்து சொன்னா அவர் வேல போயிடும்னு வரமா இருக்காங்க போலனு இங்க எல்லாம் பேசிகுறாங்க. இத்தன நாள் அவர் குடிச்சிட்டு கடைக்கு வந்ததில்ல, எல்லாம் வெளிய தான், நேத்து தான் அப்படி கடைக்கு வந்தார்.

நான் வேணும்னு தான் மாமா செஞ்சேன். இப்படி நடந்தா ஒனர் என்ன செய்வார்னு அவருக்கு தெரியணும். இத அவர் முன்ன சொன்னா அவர் கோபம் என் மேல கூட திரும்பும். அதான் எல்லார் முன்னவும் சாவி மறந்துட்டேன் சொன்னேன்.

நீங்க கேட்கவும் எல்லாத்தையும் சொல்லிட்டேன். “ என அசராமல் நிறுத்தி நிதானமாக சொல்ல, பாண்டியன் கண் இமைக்கவில்லை. அசந்து தான் போய்விட்டார்.

“ ஏன் மா, நீ இந்த விஷயத்த பத்தி அழகன் கிட்ட சொல்லிருக்கலாமே. அவன் டெய்லியும் வரான் தானே. “

“ அவர் வரார் மாமா, ஆனா அவருக்கு வேறு நிறைய வேலையும் இருக்கே. சோ கொஞ்ச நேரம் இருந்துட்டு கிளம்பிடுவார். நேத்து கூட வந்ததும் கிளம்பிட்டார். அதான் ஈவினிங் நான் மட்டும் டெஸ்க்ல இருந்தப்போ தான் இப்படி நடந்துச்சு. இம்மீடியட்டா ஏதாவது பண்ணனுமே அதான் நானே டிசைட் பண்ணிட்டேன். “ என சிந்தாமல் சிதறாமல் போட்டுக் கொடுத்தாள். 

அழகன் பல்லை கடித்து அமர்ந்திருந்தான். 

“சரி மா. போனது போகட்டும். இனிமே எதுனாலும் என்கிட்ட சொல்லு. உனக்கு இங்க எந்த பிரச்சனையும் வர்ரத நான் விரும்பல. நீ கிளம்பு மா.” 

என அவளை வெளியே அனுப்பியவர். அழகன் பக்கம் அவர் கண்களை திருப்ப, அவள் வெளியே வந்ததும் உள்ளே அவனுக்கு சரவெடி நடந்தது. அவனை குமுறு குமுறு என கும்மிவிட்டார் பாண்டியன். அவள் நினைத்தது போல் அவனை காயமல் காயவைத்து உப்பு கண்டம் போட்டுவிட்டு தான் அவள் இடத்தில் வந்தமர்ந்தாள்.

  

  

        

“       

          

“   

“  

    

Advertisement