Mounamaai 3 1060 Advertisement மௌனமாய்… அத்தியாயம் 03 வாயிலுக்கு நடந்து வந்த மகாவுக்கு அங்கு நின்றிருந்த பிரகாஷை கண்டதும்.. உள்ளுக்குள் பேரதிர்ச்சி தான். அவள் பிரகாஷின் தரிசனத்தை எதிர்ப்பார்க்கவில்லையே, சற்றும். விழிகளின் அளவுக்கு மீறிய அதிர்வை படரவிட்டு தன் விம்பத்தை விழிகளில் சுமந்து நின்றவளை கண்டதும் புன்னகையில் துடிக்கத் தான் செய்தன… பிரகாஷின் இதழ்கள். அவனோ, இயல்பாக அவளருகில் வர.. சற்று உள்ளுக்குள் ஆட்டம் கண்டது.. பெண்ணின் தைரியம். “மகா..” “அ..அண்ணா..எப்டி இருக்கீங்க..” “நல்லா இருக்கேம்மா..நீ எப்டி இருக்க..?” “நா..நானும் ந..நல்லா தான் இருக்கே..இருக்கேண்ணா..” “சரிமா..என்ன இந்த பக்கம்..?” “ஆ..அதுவாண்ணா..ப்ரெண்ட பாக்க வந்தேன்..” என்றாள், பொய்யாய். அவளின் திணறலும் விழிமொழியும் அவள் சொல்வது பொய்யென எடுத்துக்காட்டிட்டாலும் தனக்கு புரிந்ததை வெளிப்படுத்தவில்லை, அவன்…! “பாத்துட்டியாம்மா..” “ஆமாண்ணா..” “சரிம்மா..லேட் ஆகுதுல நீ கெளம்பு..அப்றம் பாக்கலாம்..” “சரிண்ணா..பொய்ட்டு வர்ரேன்..” சொல்லி விட்டு விட்டால் போதுமென தப்பித்து நடப்பவளை கண்டதும் அவனிதழ்களில், கீற்றுப் புன்னகையொன்று. அவனுக்கு தெரியுமே, அவனை கொஞ்சமும் அவள் இங்கு எதிர்ப்பார்த்திருக்க மாட்டாள் என்று. வாழவேண்டிய பெண்ணல்லவா இவள்..? அவள் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே..! அவளைப் பற்றி அனுதினம் எழும் எண்ணம் இன்று நேரில் கண்டதாலோ என்னவோ… வேரூன்றியது மனதில், ஆழமாய்…! இதழ்களில் ஒரு கசந்த புன்னகை, அவனையும் கேட்காமல். அழையா விருந்தாளியாய் தோழனின் நினைவும் ஒட்டிக் கொள்ள.. இத்தனை நேரம் இருந்த இதம் மொத்தமாய் காணாமல் போன உணர்வு. ஆனால், நிஜம் அது தானே.. ஏற்றுக் கொள்ளத் தானே வேண்டும். ஒரு வித அலைப்புறுதலில் மனம் சிக்கித் தவிக்க.. முயன்று தன்னை சமப்படுத்திக் கொண்டு தோழனை சந்திக்க பூங்காவினுள் நுழைந்தான், பிரகாஷ்…! ●●●●●● “சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்…” குளிர்பானத்தை சற்று சத்தமாகவே உறிஞ்சி விட்டு.. தன் தவறை உணர்ந்தவளாய்.. அகன்ற விழிகளின் கருமணிகளை அசைத்து சுற்றுப் புறம் அலசி தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின்னே அமைதி அடைந்தது, பெண்ணின் மனது…! எத்தனை முயன்றும் அவ்வப்போது அவளை மீறி இப்படி ஏதாவது நடப்பது சகஜம் தான். இத்தனை நேரம் கோபத்தில் பொங்கிக் கொண்டிருந்த திவ்யாவுக்கும்… கருவிழிகளை உருட்டி சுற்றும் முற்றும் பார்த்து நிம்மதி அடைந்த தோழியின் சிறு பிள்ளைத் தனமான செயலில் தனை மீறி எட்டிப் பார்க்கத்தான் செய்தது, இதழ்கடையோரப் புன்னகை. ஏனென்று, காரணம் கேட்டால் நிச்சயம் அவளிடம் பதில் இருக்காது. தோழியைப் பற்றி முழுதாய் அறிந்து கொண்டதால், அவளின் இவ்வாறான செயல்களை அவள் தடுப்பதில்லை. இப்படியாவது, அவள் தன் அழுத்தத்தை குறைத்துக் கொள்ளட்டும் என்று தான் எண்ணிக் கொள்வாள், இவ்வாறான தோழியின் நடத்தையை காணும் போது…! “மகாஆ…” “ம்ம்ம்ம்..” “யென்னாச்சு..” “அது…கெளம்பி வந்துட்டேன்டி…” “யேன்…” “பயமா இருந்துச்சு..” அவள் சொன்ன பாவனையில் அவள் பயத்தை பொய்யென நினைக்கத் தோன்றவில்லை, திவ்யாவுக்கு. பெருமூச்சொன்று திவ்யாவிடம் இருந்து. அவனை காதலிப்பதாக சொன்னால் அவளே சென்று மித்ரனிடம் பேசி விடுவாள். ஆனால், இவள் மித்ரனிடம் வைத்திருப்பது எந்த வகையான நேசம் என்று கண்டுபிடிக்கவே பல வருடங்கள் தேவைப்படும் போல் இருக்கிறதே.. அந்த எண்ணம் தான், பெண்ணுக்கு. நிச்சயம் அது காதல் இல்லை.. காதலாய் இருந்தால் மித்ரனை மகா விட்டுக் கொடுத்திருக்க மாட்டாளே.. அது நட்பும் இல்லை. சகோதர பாசமும் இல்லை. அதற்கென்று வெறும் ஈர்ப்பும் இல்லை. ஈர்ப்பாய் இருந்தால் அவனின் தோற்றத்தை மட்டும் தானே ரசித்திருப்பாள், மகா…! ஒரு வகையான நேசம் அது…! அவன் புன்னகையில் மலர்ந்திடக் கூடிய… அவன் கண்ணீரில் உடைந்திடக் கூடிய… அவன் மௌனங்களை உணர்ந்திடக் கூடிய… அவன் விழிமொழியை படித்திடக் கூடிய… அவன் வலிகளில் வலித்திடக் கூடிய… அவன் தவறுகளை மறந்திடக் கூடிய… தன் வேண்டுதல்களில் அவனுக்கென்று ஒரு தனி இடம் தந்திடக் கூடிய… வித்தியாசமான ஒரு நேசம் அது…! அது, என்னவென்று மகாவே அறிந்திடாத பொழுது திவ்யாவுக்கு மட்டும் எப்படி தெளிவு கிடைக்கும்…? ஏன், இப்போது கூட மித்ரனை பார்க்கத் தான் சென்றிருக்கிறாள்.. ஆனால், அதை தன்னிடம் தைரியமாக மறைக்காது கூறும் போதே திவ்யாவுக்கு புரிந்து தான் போனது, மித்ரனின் மேல் அவளுக்கு இருப்பது தூய அன்பு மட்டும் தான் என்று. அதை எந்த வகையில் சேரத்திட….? யோசிக்கும் போது தலைவலியே வந்திடும் போல் இருந்தது, மகாவின் தோழிக்கு. “திவ்ஸ்ஸ்ஸ்..” “…………” “திவ்யாஆஆஆஆஆ” “………..” “திவ்யாஆஆஆஆ” “ஹான்ன்ன்..” “யென்னடி யோசிச்சிகிட்டு இருக்க..இவ்ளோ நேரம் கத்துறேன் அது கூட தெரியாம..” “ஹான்..ஒன்னுல்ல..” “சரி..பிரியாணி ஆர்டர் பண்ணலாமா..?” ஆவலுடன் அவள் கேட்க எங்கனம் மறுத்திட தோன்றும் அவளுக்கு. சரி.. என்பதாய் தலையசைக்க பூரிப்பான முகத்துடன் பேரரை அழைத்து சொல்லி விட்டு திவ்யாவை பார்க்க.. திவ்யாவோ அவளை ஆராய்ச்சியுடன் தான் பார்த்திருந்தாள். இன்னும் அவளுக்கு குழப்பம் தீர்ந்த பாடில்லை. “யென்ன திவ்ஸ்..வச்சு கண்ணு வாங்காம பாத்துகிட்டு இருக்க..” ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கி.. வினாவினை விழிகளில் படரவிட்டு அவள் கேட்ட பாணியில் மித்ரனை தான் கண்டாள், திவ்யா. அவள் விழிகள் இன்னும் விரிந்து கொண்டன. “திவ்யாஆஆஆஆ..யென்னடி ப்ரீஸ் மோட்கு போயிர்ர..யென்னாச்சு..” தோழியின் திகைப்பு கண்டு.. புன்னகையுடன் அவள் கேட்க மறுப்பாக தலையசைத்தாள், திவ்யா…! திவ்யதர்ஷினி…! “யென்னடி ஆச்சு..யெதுக்கு இப்டி இருக்க திவ்ஸ்…” “ஹா..ஹான் ஒன்னுல்ல…சின்னதா ஒரு யோசன..” “வர வர நீ அடிக்கடி ட்ரீம்வர்ல்டுக்கு போயிட்ர..யென்னடி யெனக்கு அண்ணன் வந்துட்டாரா..?” சிறு சிரிப்புடன் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி கண்ணடித்தபடி அவள் கேட்க.. “ஆமா..ஆமா..உனக்கு அண்ணன் தேடிகிட்டு தான் யென்னோட டைம் போகுது..” போலியான கோபத்துடன் அவளுக்கு அடிக்க வருவது போல் பாவனை செய்ய தன்னை மறைத்துக் கொண்டாள் மகா… இதழ் விரிந்த புன்னகையோடு. நேரத்திற்கு அவளுக்கு அழைப்பு வர.. “இரு திவ்ஸ்..பேசிட்டு வர்ரேன்..” என்றவள் சற்றே நகர்ந்து செல்ல.. தோழியின் மீதே படிந்து நின்றது, திவ்யாவின் பார்வை. அவளின் ஒவ்வொரு செயல்களும் மித்ரனையே பிரதிபலித்தது. அவன் இயல்புகளை அவள் அறியாமலேயே உள்வாங்கி இருந்தாள், மகா.. மகாலக்ஷ்மி…! அதை, அவளே உணரவில்லை என்பது தான் உண்மையும் கூட. தோழியின் நடவடிக்கையில் பிழை எதுவும் தென்படவில்லை திவ்யாவுக்கு. ஆனால், கொஞ்சம் நெருடலாய் இருந்தது.. மனதுக்கு. ஒருவேளை மகா மித்ரனை காதலிக்க தொடங்கி விட்டால்…? அதன் பின் அவள் நிலை..! மித்ரன் அவளை விரும்பாவிடினும் அவளால் அந்தக் காதலில் இருந்து மீளமுடியாது போகும். வேறு யாரையும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டாள். தோழியைப் பற்றி தெரியும் ஆதலால் சரியாக புரிந்து கொண்டாள், அவள்.. இப்போது, தான் சற்று மீண்டு வந்து தன் இயல்பில் இருக்கிறாள்.. மறுபடியும் அவளை தன் அண்ணன் பிரச்சினையில் இழுத்து விட்ட வைஷ்ணவியின் மேல் அத்தனை ஆத்திரமாய் வந்தது, பெண்ணுக்கு. ஆனால், என்ன தான் செய்ய..? பலியாடு போல் தலையாட்டி விட்டு வந்த மகாவிற்கு தானே முதலில் நன்றாய் வெளுத்துக் கட்ட வேண்டும். அதன் பின் தானே, வைஷ்ணவி. கோபத்தில் கொந்தளித்து.. பின் தானே அடங்கி போக… அவளை ஆராய்ச்சியுடன் பார்த்தவாறு வந்து கொண்டிருந்தாள், மகா. நேரம் இரவு எட்டரை மணியைத் தாண்டிக் கொண்டிருந்தது. களைப்புடனேயே தன் வீட்டினுள் நுழைந்தாள், மகா…! தாயிடம் சொன்னதால் பிரச்சினையில்லை. தந்தை வேறு வீட்டில் இல்லாதிருந்தது வசதியாய் போனது, அவளுக்கு. குளித்து விட்டு தன் அறைக்குள் நுழைந்தவளுக்கு, இன்று தன் மனம் சற்று கனமாகிக் கிடப்பதை உணர முடிந்தது தான். ஏனென்றும், அறிவாள் அவள்…! அவனைத் தவிர இதுவரை யாரின் வலியும் அவளுள் இது போல் ஆழமாய் இறங்கியதில்லை. அது அவளுக்கு நன்கு தெரியும். அன்று அவன் கண்ணீரை கண்டதும் அவள் கலங்கிப் போனதும்… அவன் முகத்தில் புன்னகையை தோற்றுவிக்க வேண்டும் என்று உறுதியெடுத்ததும் இன்று நினைவில் இருக்கத் தான் செய்கிறது. ஏன், இப்போது கூட அவன் புன்னகைக்காக தானே இத்தனை பாடு படுகிறாள்..? ஏன், இத்தனை தூரம் அவன் அவளுக்கு முக்கியமாகிப் போனான்…? அது அவளே அறியாதது. ஆனால், அவன் அதிமுக்கியமானவன் அவளுக்கு. இல்லையென்றால், விபத்தில் பழைய நினைவுகளை இழந்து இருப்பவனை மீட்டிட இத்தனை போராடுவாளா அவள்..! அதிலும் தன்னுடனான திருமணம் பற்றிய நினைவு முற்றிலும் மறந்து போயிருப்பவனிடம் எதற்கு மீண்டும் சென்றிட வேண்டும்..? வீட்டினர் எல்லோரும் அவனை மறந்திடச் சொல்லியதாயிற்று. தனக்கு வேறிடத்தில் மணம் பேச முற்பட்டதுமாயிற்று. ஏன், அவன் தந்தை தனக்கு மறைமுக மிரட்டல் கூட விடுத்ததாயிற்று. அவன் வீட்டில் வேறு பெண் படலமும் தொடங்கியதாயிற்று. அப்படி இருக்க.. அனைத்தையும் மீறி அவள் நடக்கிறாள் எனின், அவன் முக்கியமானவன் என்று தானே அர்த்தம். அவள் வெறும் மகாவாக இருந்தால் கட்டுப்பட்டிருப்பாளோ என்னவோ…? இப்போது, மித்ரனின் மனைவி என்பதால் அவள் மனமும் அவன் குணத்தை பிடித்துக் கொண்டு அடிபணிய மறுக்கிறது போலும். ஆனால், அவன் வாழ்வில் மீண்டும் இணைந்திடும் ஆசை இல்லை அவளுக்கு. அவனுக்கு ஒரு நல்லவாழ்வை அமைத்து கொடுத்திட வேண்டும்.. அது மட்டுமே அவளின் இப்போதைய ஒரே குறிக்கோள். அதைச் செய்திடத் தான் இத்தனை முயல்கிறாள். ஆனால், உரியவன் அதற்கு ஒத்துழைக்க வேண்டுமே…! அதுவே, அவளுக்கு பெரும் அலைக்கழிப்பாய். தன்னை அறியாமலே அவள் சிந்தனை மொத்தத்தையும் ஆக்கிரமித்து இருந்தான், அவன்…! அவளின் அவன்…! ●●●●●● தன் அறையின் பால்கனியில் நின்று நிலவில்லா கருவானத்தை வெறித்தவாறு நின்றிருந்தான், மித்ரன்…! தகித்துக் கொண்டிருந்தது, அவன் மனம். அந்தக் கணம் மொத்த மனமும் கனமாகிப் போன உணர்வு அவனுள். வரும் வழியில் அவளை சந்தித்தது தான், அனைத்திற்கும் துவக்கப் புள்ளியாய். தவறுதலாக சந்திக்க நேர்ந்ததே.. அவளை.. அவனின் முன்னாள் காதலியை.. சரியாய்ச் சொல்லப் போனால் அவன் உருவத்தை நேசித்தவளை. ஆம், அது உண்மை தானே. அவள் அவனின் உருவத்தையல்லவா நேசித்தாள். அதனால் தானே, உணர்வுகள் வேண்டி அவளிடம் யாசிக்க வேண்டி இருந்தது, அவனுக்கு. அவள் சந்தோஷமாக இருக்கிறாள்.. வேறு யாரையோ காதலிக்கிறாள் போலும். இல்லை..இல்லை.. வேறு யாராலும் ஈர்க்கப்பட்டு இருக்கிறாள் போலும். அது தானே, உண்மை. விரக்தியாய் சிரித்தது, அவன் மனம்…! “நீ யென்ன விட்டுப் போனாலும் உன்னால யென்ன மறக்க முடியாது.. அப்டியே மறந்தாலும் உன்னால யென்னோட யெடத்த வேற யாருக்கும் கொடுக்க முடியாது விஷு..” அவள் சொன்னது, அச்சுப் பிசகாமல் அவன் காதில் ஒலிக்கத் தான் செய்தது, அந்நிமிடம். அவனுக்கும் அது பெருத்த சவால் தான். அவள் அவன் நினைவுகளில் வருவதில்லை. அவ்வப்போது காணும் போது என்னவோ போல் இருக்கும்… அவ்வளவே…! ஆனால், ஏன் இன்னொரு பெண்ணை அவன் மனம் ஏற்க மறுக்கிறது என்பது இன்னும் புரியாத புதிர் தான் அவனுக்கு. அவள் கொடுத்த காயம் எந்த பெண் மீதும் அவனுக்கு நம்பிக்கை ஏற்பட பெரும் தடங்கலாய், இன்னும். அதை, உணர்ந்து தான் சொன்னாளோ..? ஏன், எந்த பெண்ணாவது இயல்பாக ஏதாவது செய்தால் கூட அது நடிப்பாக இருக்கும் என்று தான் எண்ணத் தோன்றுகிறது, அவனுக்கு. அதற்கென்று, அவன் பெண்களை இழிவாக எண்ணவில்லை. கொடுக்கும் கண்ணியத்தை கொடுக்க மறக்கவுமில்லை. நம்பிக்கை வரவில்லை. வரவில்லை என்பதை விட வர பயப்படுகிறது என்பது தான் உண்மையாய் இருக்கும். அவன் மனம் ஒன்றை ஒன்றை அடித்துச் சொன்னது. அவன் மனதில் இனி யாரும் நுழைந்திட முடியாது என்று. ஆனால், இதே உறுதி அந்த மகாவிடம் தவிடுபொடியாகிடப் போவது அவன் மனதுக்கு தெரியாதே. எண்ணங்களின் பிடியில் திணறியவன் தன் அறைக்குள் நுழைந்து கையில் எடுத்துக் கொண்டது, தாயின் புகைப்படத்தை தான். தாய் என்றால், அவனுக்கு அதீத விருப்பம். மெல்ல தடவிக் கொடுத்தான், அதை. கண்கள் கலங்கிச் சிவந்தன. ஆனால், மனம் மரத்துப் போயிருந்ததால் விழிகள் வியர்க்கவில்லை. அவனின் வலிகளை சொல்லிட யாரும் இல்லை. தனிமையே பெரும் வலியாய்…! “ஊமயன்…” “இந்த ஊமப்பய எதுக்கு வந்தானோ…” “இந்த ஊமப்பயலுக்கு எல்லாம் யென்னோட பொண்ண கட்டிக் கொடுக்க முடியாது..” “சொத்து இருக்குன்னு ஊமப்பயலுக்கு எல்லாம் பொண்ணு கொடுக்க முடியுமா…?” “ஹலோ மிஸ்டர்..இது உங்களுக்கே சரியா.. நீங்க ஒரு ஊமன்னு தெரிஞ்சும் யென்னோட தங்கச்ச பாக்க வந்துருக்கீங்க…” “ஒரு ஊமயோட யொன்னோட வாழ முடியாது..” அவனுக்கும் மனதென்று ஒன்று இருப்பதை புரிந்து கொள்ளாமல் பேசிய வார்த்தைகள் காதில் எதிரொலிக்க தொண்டை அடைத்தது அவனுக்கு. ஆனால், கத்தி கதறி கொட்டித் தீரத்திட முடியாதே…! அனைத்தையும் மனதில் அல்லவா வைத்துக் கொள்ள வேண்டும். அப்படியே, சொல்வதென்றாலும் யார் கேட்பார்கள்…? அதுவும் இந்த ஊமையின் மொத்த வலியையும் கேட்டிடும் பொறுமை யாருக்கு தான் இருக்கும்…? கேள்வி கேட்டது, அவன் மனம். தோழர்கள் இருந்தாலும், அவர்களை எந்த நேரத்திலும் தொந்தரவு செய்திட முடியாதே. அவனுக்கு வேண்டும் ஒரு ஆறுதல். தன் மௌனமொழியை உணர்ந்து கொள்ளக் கூடிய ஓர் உறவு. ஆனால், அதை அவன் ஏற்பானா…? அது சந்தேகம் தான். தாயின் புகைப்படத்தை அணைத்த படியே அவன் உறங்கிப் போக… இங்கு மகாவோ, அவன் நினைவில் விழித்திருந்தாள், விட்டத்தை வெறித்த படி. “அந்த பெர்பெக்ட் நம்மல திட்டிருமோ..?” அவள் தன் மனசாட்சியிடம் கேள்வி தொடுக்க “ம்ம்ம்..திட்டினாலும் பரவால..கொஞ்ச நாளக்கி இந்த ரோஷத்த தூக்கி போட்ரு.. அவன் உன்ன கழுவி கழுவி ஊத்தப் போறான்..” என்று பதில் கொடுத்தது, அவள் மனசாட்சி. அதில், மறுப்பதற்கில்லையே. “ஆனாலும் அந்த பெர்பெக்ட் செம்ம ஸ்மார்ட்ல..யெப்டி தான் அந்த பிசாசுக்கு அவர விட்டுப் போக மனசு வந்துச்சோ..?” தனக்குள்ளே கேட்டுக் கொண்டாள், பெண். அவளைப் பொறுத்த வரையில் அவன் மனதில் இருப்பது அவனின் முன்னாள் காதலி தான். அவள் கொஞ்சமும் தன்னை பற்றி எண்ணவில்லை. ஆனால், இந்த எண்ணமே பல சிக்கல்களின் மூலமாய் அமையும் என்று அவள் அறிந்திருக்க மாட்டாளே. தூக்கம் தூரப் போயிருந்தது. தன் அலைபேசியை எடுத்து நோண்டலானாள். ஏனோ, மித்ரனின் எண்ணைப் பார்வையிடத் தோன்றவே, “மிஸ்டர் பெர்பெக்ட்” என்று சேமிக்கப்பட்டிருந்த அவன் இலக்கத்தை கண்டதும் இதழ்கடையோரம் பூத்தது, அழகிய புன்னகையொன்று. திருமணத்திற்கு முன் சேமித்தது..! அந்த நிமிடம் அவனைப் பற்றி அவள் எண்ணங்கள் வேறல்லவா…? தவறுதலாக விரல் பட்டு அவனுக்கு அழைப்பு செல்ல.. பதறித் துடித்து படக்கென்று துண்டித்தாள், அழைப்பை. தடக் தடக்கென்று தண்டவாளத்தில் நகர்ந்திடும் ரயிலுக்கு நிகராக துடித்தது, அவள் இதயம். இலேசாய் வியர்வை வேறு. இந்த நடவடிக்கைகளே சொல்லும் அவள் அவனுக்கு எத்தனை பயமென்று. ஓரமாய் இருந்த துப்பட்டாவை எடுத்து தன் முகத்தை துடைத்துக் கொண்டவளுக்கு இன்னும் பதட்டம் அடங்கியபாடில்லை. “போன பாத்திருப்பானோ..” “இல்ல..இல்ல பாத்திருக்க மாட்டான்..நாம தான் ஒரே ரிங்க்ல கட் பண்ணிட்டோமே..” “ஆமா..ஆமா..” தன் சமாதானத்தாலே தன்னையே தேற்றிக் கொண்டாள், பெண். அதன் பின் பதட்டத்தில் சற்றே வரவிருந்த தூக்கமும் மொத்தமாய் பறிபோக… விடியலுக்காய் தவமிருந்தாள், பயத்திலும் அவன் நினைவுகளை அசைபோட்ட படியும். ●●●●●● தலையை துவட்டிக் கொண்டே தன் அலைபேசியை பார்த்தவனின் கண்களில் நொடியில் தோன்றி மறைந்தது, சிறு அதிர்ச்சியொன்று. பின்னே, வாய் பேச முடியாத அவனுக்கு அழைப்பு வந்திருந்தால் அவனும் என்னதான் செய்வான்..? “இது யாரு..மிஸ்ட் கால் வந்துருக்கு..” என்ற சிந்தித்தவன் நொடியும் தாமதியாது அவ்வெண்ணுக்கு அழுத்த… அழுத்த… அழுத்தத… தொடரும். அதி…! 2023.04.22 Advertisement