“அதெல்லாம் எனக்கு ஒன்னும் செய்யாது, ஏன் நான் போட்ருந்ததுன்னு யோசிக்கிறியா?” என அவன் கேட்கவும், “குளிர்ல வாடினாதான் தெரியும்!” என முறைப்பாக சொல்லிக் கொண்டே சட்டையை வாங்கி அணிந்து கொண்டாள்.
“புது போன் வாங்கித் தாரேன், அம்மாட்ட எந்த கதையும் சொல்லிட்டு இருக்காத” என்றான்.
“கண்டிப்பா சொல்லுவேன். அவுங்க புள்ள லட்சணம் பத்தி அவங்களுக்கும் தெரிய வேணாமா?” எனக் கேட்டாள்.
“நான் ஏதும் சொன்னா சரின்னு சொல்லி பழகு. உனக்கு நல்லது” என்றான்.
“நீங்களும் என்கிட்ட சொல்றத கொஞ்சம் நல்ல விதமா சொல்லி பழகுங்க, நமக்கு நல்லது” என்றாள்.
“வாய்க்கு வாய் பேசுறத பாரு!” என்றான்.
“ஆமாம் நான் நல்லா பேசுவேன், எனக்கு பதில் சொல்லி மாளாதுன்னு எல்லாரும் சொல்லுவாங்க”
“ம்ம்…” என அவன் கேட்டுக் கொண்டிருக்க, வெள்ளையன் காளை எழுந்து கொண்டது. பயத்தில் அவள் மிரள, “அதெல்லாம் ஏதும் செய்யாது. அதுக்கு பயம் காட்டாம இரு” என்றாள்.
ஆனாலும் அவளுக்கு பயம்தான், எழுந்து விட்டாள். அவனும் எழுந்து கொள்ள, அவனுக்கு பக்கத்தில் வந்து நின்று கொண்டாள். முக்காலியை தள்ளிப் போட்டு அமரும் படி சொன்னான்.
“வெறும் தரை சில்லுனு இருக்கு புள்ள, ஏற்கனவே மழைலலாம் நனைஞ்சு போயிட்ட, ஆவாம போயிடும், பேசாம உட்காரு” என்றான்.
“நான் வீட்டுக்கு போய் உங்களுக்கு சட்டையும் நாற்காலியும் எடுத்திட்டு வர்றேன்” என்றாள்.
“ம்… பாய் தலைகாணி எல்லாம் எடுத்திட்டு வா, செத்த நேரத்துல போவ போறோம், அதெல்லாம் வேணாம்” என்றவன் அவள் தோளில் கிடந்த துப்பட்டாவை எடுத்துக் கொண்டான். காதுகளில் குளிர் காற்று புகாத வண்ணம் தலையை சுற்றி கட்டிக்கொண்டான்.
உடல்நிலை பாதிக்க பட்ட மாடு எப்போது பிறந்தது, எத்தனை கன்றுகள் ஈன்றது என கேட்க ஆரம்பித்து அப்படியே ஒவ்வொரு மாட்டை பற்றியும் விசாரித்தாள். அவளிடம் பேசிக் கொண்டே அவனுக்கும் நேரம் சென்றது.
ஒரு மணி நேரம் கழிந்த பிறகு மருத்துவரை எழுப்பி விட்டான். சிவாவை கண்டவர், “என்னம்மா புருஷன் சட்டையை நீ போட்ருக்க? அதெல்லாம் சட்டை பண்ணாதீயன்னு சொல்றியா?” எனக் கேட்டு அவராகவே சிரித்துக்கொண்டார்.
“மாட்ட பாருங்க டாக்டர்” என ருத்ரன் சொல்லவும், “நீ என்னப்பா பொஞ்சாதிய தலைல தூக்கி வச்சிட்டு ஆடுவேன்னு சொல்லி காட்டுற போல” என சொல்லி துப்பட்டாவை சுட்டிக் காட்டினார்.
“கடிக்காதீய டாக்டர், அம்புட்டு ஒன்னும் ரசனையா இல்லை உங்க ஜோக்கு” என ருத்ரன் வாரி விடவும்தான் மாட்டை பரிசோதித்து பார்த்தார். இனி பயப்பட ஒன்றுமில்லை, காலையில் பார்க்க வருகிறேன் என்றவர் கிளம்ப தயாரானார்.
பணம் எடுத்து வருகிறேன் என சொல்லி சிவாவையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றான். திண்ணையில் வைத்தே, “சட்டையை கொடு புள்ள” என்றான்.
“பணம் எடுக்க வேணாமா?” என கேட்டுக் கொண்டே சட்டையை கழட்டி அவனிடம் கொடுத்தாள்.
“எல்லாம் பாக்கெட்ல இருக்கு, நீ போயி தூங்கு, கதவ சும்மா சாத்தி வை, வந்திடுறேன் நான்” என சொல்லி அவளின் துப்பட்டாவை அவளின் தோளிலேயே போட்டு விட்டவன் கொட்டகை பக்கம் நடந்தான்.
“ஜாக்கிரதையா கார் ஓட்டுங்க” என்றாள்.
அவளை திரும்பி பார்த்தவன், சரி என்பதாக தலையசைத்து விட்டு கிளம்பினான்.
சிறிது காலத்துக்கு இவர் முன்னிலையில் கௌரி பற்றிய பேச்சை எடுக்காமல் கவனமாக இருந்து கொள்ள வேண்டும் என மனதில் குறித்துக் கொண்டே மாடிக்கு சென்றாள் சிவா.
மருத்துவரை அவரது வீட்டில் விட்டு திரும்பி வந்த ருத்ரன் படுக்க செல்லும் போது ஐந்து மணியாகி விட்டது. அவளும் உறங்காமல் அவனுக்காக காத்துக் கொண்டுதான் இருந்தாள்.
“வர்ற வழியிலேயே கண் அசந்து போயிருப்பேன், நீயென்ன கொட்ட கொட்ட முழிச்சு கெடக்க? உடம்புக்கு நோவில்லையே?” என விசாரித்தான்.
“கண்ணு முழிச்சு எனக்கு பழக்கம்தான். மாட்டை போய் பார்த்தீங்களா, சுகம் ஆகிடுச்சுதானே?”
“நல்லாயிடுச்சு, மாரியண்ணன் கூடவே இருக்கு” என சொல்லிக் கொண்டே படுத்துக் கொள்ள போனான்.
“உள்ள போய் படுங்க, இங்க குளிர் அதிகமா இருக்கு” என்றாள்.
“உள்ள நீ படுத்துக்க”
“நான் கொஞ்ச நேரத்துல எழுந்துப்பேன், இங்க நான் தூங்குறேன், ப்ளீஸ் உள்ள போய் படுங்க, என்னவோ போல இருக்கீங்க” என்றாள்.
மிகுந்த சோர்வாக இருக்க அவனும் உள்ளே சென்றே படுத்துக் கொண்டான். அவள் அந்த நாடாக் கட்டிலில் படுத்துக் கொண்டாள். தொண்டையில் தொற்று ஏற்பட்டிருக்கும் போல, உறங்க முடியாத அளவுக்கு அவளுக்கு நல்ல தொண்டை வலி.
எழுந்து சுடுதண்ணீர் பருகியவள் உள்ளே எட்டிப் பார்த்தாள். குறுகிக் கொண்டு படுத்திருந்தவன் அவளின் மனதை உறுத்த, அறைக்குள் சென்றவள் தயக்கத்தோடு அவனை தொட்டுப் பார்த்தாள். அவனுக்கு காய்ச்சல் வந்திருந்தது.
அவனை எழுப்பி விட்டாள். கண்களை திறக்காமலேயே, என்னவெனக் கேட்டான்.
“ஜுரம் அடிக்குதுங்க உங்களுக்கு” என்றாள்.
“ம்ம்…” என்றான்.
தன் கைப்பையிலிருந்து மாத்திரை எடுத்துக் கொடுத்து போட்டுக் கொள்ள செய்தாள். அவள் இரும செய்யவும், “உனக்கும் முடியலையா?” என சோர்வாக கேட்டு, “நீ இங்குட்டு படு புள்ள, வெளில குளிர்” என்றான்.
“உங்களுக்குத்தான் முடியலை” என அவள் சொல்ல, “சரிதான், வா நீயும் இப்படி படு புள்ள” என படுக்கையை காண்பித்து கூறினான்.
அவள் விழிக்க, “நீ படு, நான் போறேன்” என சொல்லி எழப் போனான்.
“படுங்க படுங்க” என சொல்லிக் கொண்டே அவனுக்கு பக்கத்தில் படுத்து விட்டாள்.
தான் போர்த்தியிருந்த கம்பளியை அவளுக்கும் சேர்த்து போர்த்தி விட்டான். காய்ச்சலின் தீவிரத்தில் நன்றாக அனத்தியவன் ஒரு கட்டத்தில் கை கால்களை குறுக்கிக் கொண்டான்.
“என்ன செய்யுதுங்க?” என பயந்து போனவளாக கேட்டாள்.
ஏதோ கனவுலகத்தில் இருப்பது போலத்தான் உணர்ந்தான். பக்கத்தில் சிவா இருக்கிறாள் என்பது புரிகிறது, தனக்கு உரிமையானவள் என்பது மனதில் பதிந்திருக்கிறது. குளிர் வாட்டியெடுக்க, அவளிடம் குளிர் காய ஆரம்பித்தான்.
அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்று விட்டாள் சிவா. அவன் முழு நினைவில் இல்லை என்பதை புரிந்து கொண்டவள், “என்னங்க, என்ன செய்றீங்க, கண்ண தொறந்து பாருங்க” என்றாள்.
“செத்த நேரம் தூங்குங்க, சரியாகிடும்” என அவள் சொல்ல, தலையசைத்துக் கொண்டே திரும்பி படுத்துக் கொண்டான்.
குரலை செருமிக் கொண்டவள், “பரவாயில்லை என்னை பார்க்கவே படுக்கலாம்” என்றாள். சொன்ன உடனேயே இப்படி சொல்லியிருக்க கூடாதோ தவறாக எடுப்பாரோ என்ற நினைவில் சங்கடமாக கண்களை மூடிக் கொண்டாள்.
கணவனின் கையும் கால்களும் தன் மேல் விழவும் உணர்ந்தாலும் மூடிய கண்களை மட்டும் திறக்கவே இல்லை அவள். சில நொடிகளில் மன உணர்வுகளை நிலைப்படுத்தி, அவனது நெருக்கத்தை இயல்பாக ஏற்றுக் கொண்டாள். அவனும் உறங்க ஆரம்பித்தான்.
நன்றாக விடிந்த பின் சிரமப் பட்டே கண்களை திறந்தவள் காய்ச்சல் தன்னையும் விட்டு வைக்கவில்லை என்பதை உணர்ந்தாள்.