Advertisement
3
உன் விழிகளில் வானவில்
கனவுகள்.,
கலைந்து போகாமல்
காத்துக்கொள்ள
காவல் இருக்கவா.,
இமையாக மாறி
இணைந்தே இருப்பேன்
உன் கனவுகளுக்குள்
சிறு இடம் எனக்கென
ஒதுக்கி கொடு.,
ஊசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதியாக இருந்தது.,
அனைவரும் கூடி இருந்த இடத்தில் யாரும் எதுவும் சொல்லாமல் இருக்க., அத்தனை பேரின் கண்களும் சிவாவையும் மதுவையும் நோக்கி இருந்தது.
மதுவோ மெதுவாக சிவாவின் காதுக்கு மட்டும் கேட்கும் படி “என்னடா எல்லாரும் ஷோகேஷ் ல வச்ச பொம்மைய பார்க்கிற மாதிரி நம்ம ரெண்டு பேரையுமே பார்த்துட்டு இருக்காங்க., என்னன்னு சொல்லி தொலைச்சா தானே தெரியும்” என்று சொல்லும் போதே…
அவனும் உதடு அசையாமல் “வாய மூடிட்டு இரு பக்கி மாடு., எனக்கு மட்டும் என்ன தெரியும்., என்ன விஷயம் ன்னு தெரியாது., இங்க நம்ம ரெண்டு பேரும் இப்படி பேசிட்டு இருக்கோம் அப்படிங்கிறத பார்த்தாலே இன்னொரு பஞ்சாயத்தை கூட்டிடு வாங்க அமைதியா இரு“., என்று சொல்லி முடிக்கவும்.,
சரண் தான் “உங்க ரெண்டு பேருக்கும் வாய் சும்மாவே இருக்காதா., நொய் நொய் ன்னு பேசிட்டே இருக்கீங்க“., என்று சொல்லவும்.,
மது அவசரமாக உதடுகளை அழுந்த மூடுவது போல செய்தவள் வாய்மேல் ஒற்றை விரலை வைத்து அழுத்தி கொள்ளவும்., அதை பார்த்த சிவாவோ
“எரும எரும நல்லபிள்ளை மாதிரி தப்பிக்கவா பார்க்குற., உன்ன“., அவள் காலில் மிதிக்க வர அவளோ நகர்ந்து சென்றாள்., இருவரும் அதற்குள் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டு நின்றனர்.
இவர்கள் நடவடிக்கையை முகத்தில் சிறு மாறுதல் கூட வராமல் பார்த்து கொண்டே இருந்தான்., சரண்.
அதே நேரம் சரணின் அப்பா தான் “என்னடா பண்ணிட்டாங்க ன்னு புள்ளைங்க இரண்டையும் பிடித்து நிப்பாட்டி வச்சிருக்க., எல்லாரையும் வர வேற சொல்லி உட்கார வெச்சு இருக்க“., என்று கேட்டார்.
அமைதியாக அவரை பார்த்தபடி “இவங்க ரெண்டு பேரு என்ன பண்ணினாங்க ன்னு முதல்ல கேளுங்கப்பா“., என்றான்.
மதியின் அப்பா தான்., இவள் தான் ஏதோ வம்பு பண்ணியிருப்பாள் என்று நினைத்தபடி., “என்ன பண்ணாங்க தம்பி“., என்று அவனையே கேட்டார்.
மதுவோ லேசாக சிரித்துக் கொண்டே “டேய் உங்க அண்ணனுக்கு பஞ்சாயத்தை கூட்டாம தூக்கம் வராதா., எவன்டா இங்கேயும் பஞ்சாயத்து பண்ண கூப்பிட்டா., இந்த லட்சணத்தில் பஞ்சாயத்து பண்ணினா., வேலை பாக்குற இடத்திலாவது பஞ்சாயத்து தலைவர் வேலைய ஒழுங்கா பண்ணுவாங்க ன்னு நினைக்கிறீயா“., என்று லொடலொடத்து கொண்டிருந்தாள்.,
” வாயை மூடிட்டு இரு லூசு., அவன் பஞ்சாயத்து தலைவர் போஸ்ட அவன் எப்படி பார்த்தா நமக்கு என்ன வந்துச்சு., பேசாம இரு“., என்றான்.,
இவர்கள் பேசுவதை பார்த்தவனோ “முதல்ல நீங்க ரெண்டு பேரும் பேசுவதை நிறுத்துங்க“., என்று சொல்லி விட்டு
பெற்றோர்களிடம் திரும்பியவன் அவர்கள் என்ன காரியம் பண்ணினார்கள் என்று கூறத் தொடங்கினான்.,
அதுமட்டுமில்லாமல் அவர்களிடம் அங்கு பேச தொடங்கி அப்படியே இவர்களிடம் பேச தொடங்கினான்.,
“நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்குள் இருந்தாலும் எங்க போறாங்க ன்னு பாக்குறது இல்லையா” என்று இருவரின் அம்மாவையும் சத்தம் போட்டவன்.,
இவர்கள் இருவரையும் திரும்பி பார்த்து., “நீங்க எங்க போனாலும் யாருக்கும் தெரியாது ன்னு நினைச்சீங்களா., இல்ல யாரும் பார்த்து சொல்ல மாட்டாங்க ன்னு யோசிச்சீங்களா“., என்று கேள்வியை அவர்களை நோக்கி கேட்டு விட்டு.,
பெரியவர்களை பார்த்து., “கேளுங்க இந்த மேடம் காலேஜிலிருந்து மத்தியானம் இவன் கூட வண்டியில் வெளியே கிளம்பி போயாச்சு., இவன் அவளை கூட்டிட்டு எப்பவும் போல கடைகளுக்கு சுத்தாம., வெளிய ஒரு இடத்திற்கு கூட்டிட்டு போயிருக்கான்., கொஞ்சமாவது பொண்ண கூட்டிட்டு போறோம் ன்ற அக்கறை இருக்கா“., என்று சொன்னவன்.
நேராக சிவாவை பார்த்து திரும்பி “உனக்கெல்லாம் என்னடா அறிவு இருக்கு., கொஞ்சம் கூட யோசனை என்பதே கிடையாதா., ஒரு பொம்பள புள்ள வெளியே கூட்டிட்டு போறோமே எதுவும் பிரச்சனை ஆச்சுன்னா., என்ன பண்ண முடியும் ன்னு., அதெல்லாம் யோசிக்கவே மாட்டியா., எப்பவுமே எந்த காரியத்தையும் செய்றதுக்கு முன்னாடி யோசிக்கணும்., செஞ்சி பிரச்சனை வந்ததுக்கு அப்புறம் யோசிச்சு ஒரு பிரயோஜனமும் கிடையாது.,
நீ என்ன பெரிய பயில்வானா., நாலு பேர் சேர்ந்து உன்னை அடிச்சு போட்டுட்டு அவளை தூக்கிட்டு போனா என்னடா பண்ணுவ” என்று கேட்டான்.,
சிவாவின் பின்னே மறைந்து நின்ற மது., “உங்க அண்ணனே நம்மை பிரிக்க ஆள் வச்சு தூக்கச் சொன்னாலும் சொல்லுவாங்க., பார்த்துக்க., சொல்லாம கொள்ளாம போனா இப்படியா பயம் காட்டுவாங்க“., என்று பின்னிருந்து சொன்னாள்.,
அவள் பயந்து போய் ஒழிந்து இருக்கிறாள் என்று மற்றவர்கள் நினைத்துக்கொள்ள., அவள் கண்ணின் குறுகுறுப்பும்., உதடு அசையாமல் லேசாக பிரிந்த படி இருக்கும் போது வரும் மெதுவான சத்தமும் சரண்க்கு மட்டும் தெளிவாக தெரிந்தது., அவள் அவனிடம் ஏதோ கிண்டல் அடித்துக் கொண்டிருக்கிறாள் என்று.,
அதை எல்லாம் கண்டு கொண்டால் அவன் சரண் இல்லையே ., மீண்டும் சிவாவை பார்த்தவன் “அங்க என்ன சொல்லுறா” என்று கேட்டவன்.,
“ரெண்டு பேரும் கொஞ்சம் கூட யோசிப்பதே கிடையாது., சுத்தமா பொறுப்பே இல்ல., இரண்டு பேரும் ஊர் சுத்த கிளம்பினீங்களே., நீங்க போறது யாருக்கு தெரியும்., சரி வெளியே தான் போறீங்க வீட்ல சொல்லிடாவது போறீங்களா., அதுவும் கிடையாது..,
ஏதும் பிரச்சனை ஆயிட்டா என்ன பண்ணுவீங்க., காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் க்கும் எங்க போறீங்க வர்றீங்க ன்னு எதுவும் தெரியாது., அப்படி யார்ட்டையாவது ரெண்டு பேரும் சொல்லிட்டு போனிங்களா“., என்று கேட்டான்.
மதுவின் “அப்பா இரண்டு பேரும் எங்க போயிட்டு வந்திங்க“., என்று கேட்டார்.
அவளோ சிவாவின் பின்புறம் நின்று கொண்டு “நீ சொல்லு டா லூசு“., என்றாள்.,
“நீ வாயை மூடு எரும“., என்று சிவா திட்ட இருவரும் குடுமிப்பிடி சண்டை போடாத குறையாக சண்டையை ஆரம்பித்து வைத்திருந்தனர்.
மதுவின் அம்மா தான்., “இப்போ வாய மூடிட்டு அமைதியா இருங்க., ரெண்டு பேரும் அப்படி சண்டை போடுற மாதிரி சண்டை போட்டு பிரச்சனையை திசை திருப்பி விட்டுட்டு., அப்படியே ரெண்டு பேரும் எஸ்கேப் ஆகி போகலாம்னு நினைக்கிறீங்களா., அதுதான் நடக்காது உங்க தில்லாலங்கடி வேலை எல்லாம் எங்களுக்கு தெரியும்., அமைதியா இருங்க“., என்று சொல்லும் போதே..,
சிவாவின் தந்தை தான் சற்று அதட்டலாக., “டேய் என்னடா செஞ்சு வச்சு இருக்கீங்க ரெண்டு பேரும் சேர்ந்து., சொல்லி தொலைங்க டா., சரண் இவ்வளவு கோவமா பேசுறான் னா ஏதாவது காரணம் இருக்கும்“., என்று கேட்டார்.,
சிவா முனங்கலாக., “எங்க அப்பா எதுக்கு சம்மன் இல்லாம ஆஜராகுறார்., எப்பவும் அமைதியா தானே இருப்பாரு“., என்று சொன்னான்.,
“டேய்., அவருக்கு சம்மன் இருக்கோ இல்லையோ., உங்க அண்ணன் ட்ட யாருடா சொன்னா., அவரே பஞ்சாயத்த கூட்டி., அதுக்கு தலைவர் போஸ்ட்டையும் அவரே எடுத்துட்டு இங்க வந்து கெத்து காட்டக்கூடாது“., என்று பல்லைக் கடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தாள்.
சிவாவின் அம்மா தான்., “உங்க கிட்ட தானே கேள்வி கேட்குறாங்க., இங்க கேட்கும் போது இரண்டு பேருக்கும் அங்க என்ன பேச்சு., எங்ககிட்ட பதில் சொல்லுங்க., நீங்க ரெண்டு பேரும் குசுகுசுன்னு பேசினீங்க னா., என்ன பேசுறீங்க ன்னு எங்களுக்கு எப்படி தெரியும்., என்ன தான் டா பண்ணுனீங்க நீங்க ரெண்டு பேரும்., இப்ப நீங்க சொல்றீங்களா இல்லையா“., என்று இரண்டு பெற்றோர்களும் அதட்டி கொண்டிருந்தனர்.,
மாறி மாறி இருவரும் ரகசியம் பேசுவதையும்., இருவர் முகத்திலும் சிறிதும் பயம் இல்லாமல் இருப்பதை பார்க்கும் போதே., இவங்க எல்லாம் என்னத்த திருந்த என்று யோசித்தாலும்., இதை இப்படியே விடக்கூடாது என்ற எண்ணத்தோடு தான் அவர்கள் அம்மா அப்பாவிடம் என்று இவர்கள் என்ன பண்ணினார்கள் என்பதை சொன்னான்.
அதனுடன் இரண்டு பெற்றவர்களும் மாற்றி மாற்றி திட்ட தொடங்கிவிட்டனர்.
“அறிவு இருக்கா” என்று சிவாவின் தந்தைதான் தொடங்கினார்.
“ஏன்டா ஒரு வார்த்தை வீட்டுல சொல்லீட்டு போகனும் ன்னு தோணல., அப்படி என்ன அவசரம்., அப்படியே போகனும் ன்னு சொல்லி இருந்தா நாங்க எல்லாரும் சேர்ந்து கூட்டிட்டு போய் இருக்க மாட்டோமா.,
ஒரு குடும்பமே தனியா போறதுக்கே யோசிப்பாங்க., அங்க போறதுன்னா எல்லாரும் சேர்ந்து ஃபேமிலி யா தான் போயிட்டு வருவாங்க., உங்க ரெண்டு பேருக்கு அப்படி என்ன திமிரு., போற வழியில் மறிச்சா., என்ன பண்ணுவீங்க., இப்போ உள்ள காலத்துல என்ன நடக்கும்னு யாருக்கு தெரியும்“., என்று இரண்டு பெற்றவர்களும் ஒரே சாராம்சத்தை தான் மனதில் கொண்டு மாற்றி மாற்றி பேசினர்.,
இருவரும் அமைதியாக இருந்தாலும் மதுவிற்கு தான் அவளறியாமல் பயம் வந்தது., “சிவா உனக்கு ஏதாவது சண்டை போட தெரியுமா” என்று மெதுவாக கேட்டாள்.
அவனும் அவளைப் பார்த்து திரும்பிய வண்ணம் லேசாக தலையை குனிந்து கொண்டு “எதுக்கு இப்ப கேட்குற” என்று கேட்டான்.
” இல்ல நான் பேசாம உன் கூட வந்திருந்தேனே., இவங்க சொன்ன மாதிரி எதுவும் ஆயிடுச்சு னா., நீ என்னைய சண்டை போட்டு காப்பாத்தி இருப்பியா“., என்று கேட்டாள்.
“இப்பதான் போயிட்டு வந்துட்டோமே., இனிமேல் அதை பத்தி எதுக்கு யோசிக்க., இனிமேல் போக வேண்டாம்., அப்படின்னு நெனச்சுக்கோ., இப்போ அதையே சொல்லி ரெண்டு பேரும் சரண்டர் ஆகிடுவோம்“.,என்று சொன்னான்.
“சரண்டர் ஆன மட்டும் இப்ப என்ன விடவா போறாங்க., அட்வைஸ் ன்ற பேர்ல நைட் 10 மணி வரை பஞ்சாயத்து வைப்பாங்கடா“., என்று சொன்னவள் “எனக்கு தூக்கம் வருது“., என்றாள்.
இரண்டு பெற்றவர்களும் “இங்க பாருங்க., நாங்க ரெண்டு நாலு பேரும் கேட்டுட்டு இருக்கோம்., இந்தா சரணும் உக்காந்து பாத்துட்டு இருக்கான்., எங்க 5 பேரையும் பாத்தா உங்களுக்கு எப்படி தெரியுது., நீங்க ரெண்டு பேரும் தனியாக தீவிரமா பேசிட்டு இருக்கீங்க“., என்று கேட்டார்.
“அது ஒன்னும் இல்லப்பா., இனிமேல் நாங்க ரெண்டு பேரும் அந்த மாதிரி எதுவும் பண்ண மாட்டோம்., உன்கிட்ட சொல்லாம எங்கேயும் போக மாட்டோம்.., அதை பத்திதான் பேசிட்டு இருந்தோம்., சொல்லாம இனிமேல் எங்கேயும் போக மாட்டோம்“., என்று சிவா சொன்னான்.,
அவளும் அமைதியாக உதட்டின் மேல் வைத்த விரலை எடுக்காமல் தலையாட்டிய படி இருந்தாள்.
மீண்டும் பெற்றவர்கள் பேச தொடங்கவும்., சிவா தான் “அப்பா பஞ்சாயத்து பண்ணினது போதும்., இழுத்துட்டே போகாதீங்க., பாருங்க இப்பவே 10 மணி வரை ஆக்கிட்டீங்க., இங்க ஒருத்திக்கு இந்நேரம் நடுராத்திரி ஆகியிருக்கும்., இப்பபாருங்க“., என்று சொன்னான்.
அவன் சொன்னதை கேட்ட மதுவோ., அவனை பார்த்து முறைக்க., “10 மணிக்கு முன்னாடி அம்மணிக்கு தூங்கணும்., அவ்வளவு சீக்கிரம் தூங்க போனவளை பிடிச்சி வைச்சு பஞ்சாயத்து பண்ணுறீங்க., அட்லீஸ்ட் கொஞ்சம் சீக்கிரம் முடித்து அனுப்பி இருக்கலாம்., அல்லது பகலில் பஞ்சாயத்து வச்சிருக்கலாம்“.,என்று சொன்னவனோ
அவளை பார்த்து “நீ சொன்ன மாதிரி சரியா சொல்லிட்டேனா மது“., என்றான்.
Advertisement