Advertisement
“எனக்கு இது ஒன்னு போதும் மலரு. எப்போதும் என் கூட சந்தோஷமா பேசு. உன்னோட வார்த்தைகள் தான் என்னைய உற்சாகமாக வச்சிக்கிற ஊக்க மருந்து. நான் என்னோட இன்டர்வியூக்கான படிப்பை தொடரலாம்னு இருக்கேன் மலர். கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அப்போதுதான் இந்த முறையாவது ஜெயிக்க முடியும்” என்று முத்து கூற.
“தாராளமா படிக்கத் தொடங்குங்க மாமா. நான் எப்போதும் உங்க கூடவே இருப்பேன். படிக்கிறதுக்கு தேவையான மெட்டீரியல்ஸ் என்ன வேணுமோ அதையெல்லாம் வச்சி இருக்கீங்களா? இல்ல இன்னும் ஏதாவது வாங்க வேண்டி இருக்குமா?” என்று கேட்டாள்.
“படிக்க என்ன தேவையோ அத்தனையும் வாங்கிட்டேன். இதுக்கு மேல படிக்கறது மட்டும் தான். இந்த முறை நிச்சயமாக விடமாட்டேன் மலரு” என்று முத்து கூற.
“இப்படியே இரண்டு பேரும் மாறி மாறி பேசிகிட்டு இருந்தா நேரம் போயிடும் கிளம்பலாம்” என்றாள் மலர்.
“கிளம்பலாம் மலர்” என்று கூற.
“மலர் பிரிய மனமின்றி முத்து தவித்தாலும் சூழ்நிலை அறிந்து நேரமாகுது கிளம்பலாம்” என்று மருதுவை கையில் பிடித்துக் கொண்டான்.. வசீகரப் புன்னகையுடன் அவளை பார்த்தபடியே முத்து நடக்க.
அவனுக்கு பதில் கொடுப்பதை போல தன் இதழ்களை இதமாய் பிரித்து மென்மையாக சிரித்தாள். இருவருமாக சேர்ந்து மாடுகளை புளியந்தோப்பில் ஓட்டிச்சென்று கட்டிவிட்டு முத்து வீட்டிற்கு கிளம்ப தயாரானான்.
“நான் கிளம்பட்டுமா? மலர்” என்று பிரிய மனமில்லாமல் முத்து வார்த்தைகளை தொடுக்க.
முத்துவின் பரந்த நெற்றியின் கீழ் சுழலும் முடிக்கற்றைகளும், முகத்தில் இருக்கும் காந்த விழிகளும், அடர்ந்த குறும்பான மீசையும், அதன் கீழ் பளிச்சிடும் வசீகர புன்னகையுடன் கூடிய இதழ்களும், திடமான உடற்கட்டு கூடிய ஆண்மையின் கம்பீரமும் அவனை புதுசாக பார்ப்பது போலவே கண் இமைக்காமல் பார்த்து ரசித்துக்கொண்டு நின்றாள் மலர்.
“மலர் என்ன இது. விழிகளைத் திறந்து கொண்டே பகல் கனவா?” என அவளது நெற்றியில் படரும் கற்றை முடிகளை வருட.
அப்போதுதான் உணர்வுக்கு வந்தவள் போல் அவள் முகம் சிவக்க. தன் இரு கரங்களை கொண்டு முகத்தை மூடினாள்.
இந்த வெட்கம் தான் என்னைக் கட்டிப் போடுது. இப்படியே நின்னு பேசினா வீட்டுக்கு போக முடியாது. நேரம் ஆகுது மலர். நான் தோட்டத்துக்கு போய் கண்ணனுக்கு கொஞ்சம் உதவி செஞ்சுட்டு அப்படியே வீட்டுக்கு போகணும். நான் கிளம்புறேன். நீயும் கிளம்பு மலர் என்றான்.
“சரிங்க மாமா. கிளம்புங்க. போயிட்டு போன் பண்ணுங்க” என்றாள்.
“சரி மலர். நான் வரேன்” என்று முத்து கிளம்பிப் போக. மலரும் கிளம்பினாள். ஜில்லுவும் மலர் பின்னாடியே போக. இருவரும் சென்று மறையும் வரை இரு ஜோடி விழிகளும் பார்த்துக் கொண்டே சென்று மறைந்தன.
இங்கு கண்ணன் வீட்டில் அவர்களுக்கு சாந்திமுகூர்த்தம் நடத்துவது பற்றி இருவீட்டாருடன் கலந்து நாள் குறிக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது..
எழில் பஞ்சாயத்து தலைவரிடம் நமது ஊர் மக்களிடம் சிறு தொழில் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், அதற்கு மக்களை ஓரிடத்தில் ஒன்று சேர்க்க அவரது உதவி வேண்டியும் கேட்டாள்.
“ஆனால் தலைவரோ பொம்பள பேச்சை நம்பி எல்லாம் ஊர கூட்ட முடியாது. அவங்கவங்க காட்டு வேலை பார்த்து வெள்ளாம பண்ணி நாலு பணம் சம்பாதிக்கிறாங்கலே. சிறுதொழில் அது இதுன்னு சொல்லிக்கிட்டு ஊர கெடுத்து வைக்காதலே. ஒழுங்கா வூட்டுக்கு போய் உன் குடும்ப பொழப்ப பாருலே” என்று ஊர் தலைவர் மாரிமுத்து கூற.
“எழில் சற்று மனவருத்தம் அடைந்திருந்தாலும், சோர்வடையாமல் நாமலே ஊருக்குள்ள போய் நாலு வீட்டில் பேசி பார்க்கலாம்” என்று முடிவெடுத்தாள். பேங்கில் இருக்கும் சிறு வேலைகளை முடித்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பினாள். வரும் வழியில் பழனிசாமியையும் அவரது மனைவியையும் எழில் சந்திக்க.
“பழனிசாமியின் மனைவி அன்னத்திடம் நாளைக்கு காலைல பத்து மணிக்கு நம்ம ஊர் அரசமரத்தடியில ஒரு சின்ன கூட்டம் இருக்கு நீங்க ரெண்டு பேரும் வரணும் என்று எழில்” கூற.
“என்ன கூட்டம் புள்ள” என்று அன்னம் கேட்க.
“மழையில்லாத காலத்துல விவசாயம் பண்ண முடியாம நம்ம கஷ்டப்படுறோம் இல்லையா. அந்த சூழ்நிலையில சிறு தொழில் செஞ்சு நாம எப்படி முன்னுக்கு வரலாங்கறத பத்தி தாங்க்கா அந்த கூட்டத்தில் பேசப் போறோம். நீங்களும் அந்த கலந்துகிட்டா ரொம்ப உபயோகமா இருக்கும்” என்றாள் எழில்.
“யாரடி இவ கூறு கெட்டவளா இருக்க. இத்தனை வருஷமா பஞ்சம் பொழக்கலயாலே. மழ பெஞ்சாலும், பெய்யலனாலும் வாழ்ந்துகிட்டுதே இருக்கோம்லே. இப்ப புதுசா வந்து சிறுதொழில் அது இதுன்னு வந்து நிக்கறவ. இங்கே விவசாயத்த யாருலே பார்க்கிறது. உங்க மாமே வரி வரியா வகுந்துபுடுவாக தாயி” என்று அன்னம் கூற.
எழில் பழனிச்சாமியின் பதிலை எதிர்பார்த்து அவர் முகத்தைப் பார்க்க.
“சின்னப்புள்ள வெள்ளாமை வீடு வந்து சேராதும்பாங்கலே. அது ஏதோ விளையாட்டுப் பிள்ள பேசிட்டு கிடக்கு. நீ வாடி போகலாம்” என்று பழனிசாமி அன்னத்தை இழுத்துக் கொண்டு போக.
எழில் விடாமுயற்சியுடன் முடிந்தவரை ஊருக்குள் சென்று பலரிடம் சிறு தொழில் பற்றி எடுத்துக் கூறினாள். “கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே” என்பதைப் போல நாம சொல்றதை சொல்லிட்டோம் பாக்கலாம். நாளைக்கு எத்தனை பேர் வராங்கன்னு என்று மனதில் நினைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றாள்.
“வீட்டில் ஆச்சி, மீசை தாத்தா, அத்தை, மாமா, முத்து” என அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்தனர். கண்ணன் அப்போது தான் வயக்காட்டில் வேலைகளை முடித்து வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தான்.
“கண்ணன் எழிலைப் பார்த்தவுடன் என்ன மகாராணி கையெழுத்து போடுற வேலையெல்லாம் முடிஞ்சுதா?” என நக்கலாக கேட்டான்.
“நன்றாகவே முடிந்தது மன்னா”, என்று எழிலும் பதிலுக்கு கூற.
“முருகேசன் தாத்தா மீசையை முறுக்கிக்கொண்டு சபாஷ் சரியான போட்டிலே” என்று கூற.
“ஆச்சி தாத்தாவின் மீசையைப் பிடித்து முறுக்கி கொழுப்பு ரொம்பத்தே. அதுக சின்னஞ்சிறுசுக முட்டிக்கிட்டு கெடக்கு. கிழவனுக்கு குறும்ப பாரு” என்று கூற, அனைவரும் சிரித்தனர்.
“வெந்நீர் பானையில் கொதித்து கொண்டிருக்க. ரெண்டு பேரும் தண்ணிய ஊத்திகிட்டு வாங்க” என ஆச்சி கூறி கண்ணன் எழிலை விரட்ட.
“நான் முதல்ல போறேன் ஆச்சி” என்று கண்ணன் கூற.
“அவன்தான் போறானல்ல. அவனுக்கு வெந்நிர் எடுத்து வைலே. துண்டு கொண்டு போய் கொடுலே. பையனுக்கு முதுகு தேய்ச்சி விட்டு வாலே. ஒவ்வொன்னும் சொல்லுவாகலா போதாயி” என எழிலை ஆச்சி விரட்ட.
“எனக்கு அவ ஒண்ணும் எடுத்து வைக்க தேவை இல்ல ஆச்சி. நானே எடுத்துக்கிறேன்” என்று அவளைப் பார்த்து முறைத்து விட்டு முறுக்கிக் கொண்டு போனான் கண்ணன்.
“நான் ஒன்னும் இப்ப எடுத்துட்டு வரேன்னு சொல்லவேயில்லையே. முதுகு வேற தேய்க்கனுமோ.. ரொம்பத்தான். முதல்ல இடத்த காலி பண்ணுங்க” என்றாள்.
“நீ முதுகு தேய்க்க்கணும்னு யாரும் இங்க தவம் கிடக்கல. உன் வேலையே பாத்துட்டு போ. என் வேலைய எனக்கு செய்யத் தெரியும்” என்று கண்ணன் குளிக்க போனான்.
ஒருவழியாக இருவரும் குளித்து முடித்து வர. அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியோடு சாப்பிட்டு முடித்தனர்.
மாரியம்மாள் மல்லிகைச் சரத்தை எடுத்து வந்து எழிலுக்கு தலை நிறைய வைத்து விட.
“அதைப் பார்த்த கண்ணன் காலையிலேயே இவ ரொம்ப வம்பு பேசினாலே. இப்போ அம்மா வேற மல்லிகை பூ வச்சு விடுறாங்க. அப்போ இன்னைக்கு மல்லுக்கட்ட ரெடியா இருக்க வேண்டியதுதான்” என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்க.
“அப்போது ஆச்சி, டேய்! அங்க என்னடா அவளையே வெச்ச கண்ணு வாங்காம பார்த்துகிடக்க. எப்படியும் அவ உனக்கு தானே. சண்டைக்கோழி மாதிரி அந்த சிலுப்பு சிலுப்பி கிட்டுப்போனவன். இப்போ வெச்ச கண்ணு வாங்காம பார்க்கற” என்று கேட்க.
“கண்ணன் என்ன சொல்லி சமாளிக்கலாம்” என்று தடுமாறினான். வெளியே அவள் மீது கோபத்தை காட்டினாலும் மனதிற்குள் அளவு கடந்த பாசத்தை வைத்திருந்தான்.
தொடரும்….
Advertisement