Advertisement
“ப்ச் என்ன பேசணும் இனி முடிவெடுக்க என்ன இருக்கு? அதான் பேச வேண்டியதை பேசிட்டிங்களே சார், இப்போ வண்டி எடுக்க போறிங்களா இல்லையா?” என்று வாகனத்தில் அமர்ந்து கொண்டே கடுப்புடன் கேட்க.
“நா பேசவே இல்லையே இது வரைக்கும் நீ தான் பேசிறுக்க சஞ்சும்மா” என்றவன் “வண்டியில இருந்து இறங்குன்னு சொன்னேன்” என்று அவள் கையை பற்ற.
வெடுக்கென உதறியவள் கோபமாக இறங்கி முகத்தை திருப்பி கொண்டாள் “இப்டி கோபப்படாத சஞ்சும்மா சிரிப்பா வருது” என்று வாயை இடது கையால் மூடி துவாரகேஷ் சிரிப்பை அடக்க.
முறுக்கி கொண்டு நின்றவளின் விழிகளில் சட்டென நீர் திரள விருட்டென திரும்பி பார்த்தவள் “சிரிப்பா தான் இருக்கும்! ஏன் சிரிப்பு வராது? கேக்க யாருமே இல்லாத அனாதையோட கோபம் உங்களுக்கு சிரிப்ப தான் வர வைக்கும்” என்றாள் உடைந்து நலிந்து போன குரலில்.
சிரிப்பு மறைந்து அவன் முகம் நொடியில் கடுமையை சுமந்து கொண்டது “ப்ச் சஞ்சும்மா இப்போ எதுக்கு தேவையில்லாத வாரத்தையெல்லாம் பேசிட்டு இருக்க. இந்த உலகத்துல யாரும் அனாதை இல்லை உனக்கு நா இருக்கேன், அன்னைக்கே உன்கிட்ட சொன்னேனே இந்த மாதிரியெல்லாம் பேச கூடாதுன்னு“,கண்டன குரலில் கீறிச்சிட்டவன்.
கண்களை மூடி சற்று ஆசுவாசப்படுத்தி கொண்டு “சரி நா சிரிக்கலை நேரா விஷயத்துக்கு வறேன் உன்ன எனக்கு பிடிச்சிருக்கு நாம கல்யாணம் பண்ணிக்கலாமா சரவெடி?” என்று எந்தவித பாவனையும் காட்டாது பட்டென மனதில் உள்ளதை கொட்டிவிட.
அவன் வார்த்தைகளில் இமைக்க மறந்து ஆச்சர்யம் ததும்ப அவன் முகத்தை பார்த்தாள் சஞ்சளா. பதிலை எதிர்பார்த்த ஓர் ஆவல் அவனிடத்தில்.
கண்களில் மின்னிய கனிவையும், காதலையும் மறைத்து கொண்டு “ஓ.. நீங்க கேட்டதும் சரின்னு பல்லை காட்டிட்டு வந்து கழுத்தை நீட்டுவேன்னு நினைச்சீங்களா?. உங்கள என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது உங்க அத்தை பொண்ணு மீ.. னாட்சி தான் இருக்காளே..“, பெயரில் அதிக அழுத்தம் கொடுத்தவள்
“அவளையே கட்டிக்க வேண்டியது தானே?” என்று வெறுப்புடன் உதட்டை சுளித்து முன்பை விட முனைப்புடன் வீம்பு செய்ய தொடங்கினாள்.
“நீ சொல்ற மாதிரி நடக்க வாய்பில்லையே சரவெடி” என்று ஏமாற்றத்துடன் உரைத்தவன் “எனக்கு மட்டும் ஆசை இருந்து என்ன பிரயோஜனம் அவளுக்கு விருப்பம் இல்லையே” என்று சோகத்தை கிலோ கணக்கில் முகத்தில் காண்பித்தபடி பேச.
‘விருப்பமில்லையா..‘ என்று உள்ளிருந்து ஒலித்த உற்சாக குரலை பெரும்பாடு பட்டு கட்டுபடுத்தியவள் ‘அவ்ளோ சோகமா. இருடி உன்ன என்ன பாடு படுத்துறேன்னு பாரு‘ என்று மனதில் கறுவிகொண்டு.
“ஓ..செக்கெண்ட் ஆப்ஷனா..?. அவ கிடைக்கலன்னு தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்றிங்களா?” என்று பரிகாசம் செய்தவள் உறுத்து விழிக்க.
“அப்டியில்ல சஞ்சும்மா எல்லாத்துக்கும் விதண்டாவாதமா பதில் பேசுனா எப்டி?, ஏற்கனவே என்னோட மனசுல இருந்தது தான். அதை சொல்றதுக்குள்ள நீ ஊர விட்டு போறேன்னு முடிவெடுத்துட்ட. நா என்ன பண்ண முடியும் சொல்லு? அவ்ளோ கோபம் உன்மேல, முடிவெடுத்ததை பத்தி என்கிட்ட ஒரு வார்த்தை பேசலையேன்னு.
நீ எடுத்த முடிவ பத்தி விஷ்ணு சொல்லவும் எனக்கு எப்டி இருந்துச்சு தெரியுமா? அந்த நேரத்துல நீ ஏதாவது என்கிட்ட பேசிருந்தா கண்டிப்பா கைநீட்டிருப்பேன் எப்டி என்னவிட்டு போக முடிவெடுத்தன்னு” என்று உரிமையுடன் கோபம் கொண்டவன்.
“எனக்கு தெரியும் நீ கோயம்புத்தூர் போறேன்னு சொன்னது பொய்யின்னு” என்று கம்மிய குரலில் கூறியவன் வாடிய பயிராய் அவள் முகம் பார்க்க.
மின்னலாய் சிறு அதிர்வு அவள் வதனத்தில் ‘இது எப்டி இவருக்கு தெரியும்?’ என்று திகைத்து விழித்தவள் திகைப்பை மறைத்து கொண்டு “நா ஒன்னும் பொய் சொல்லலை உங்ககிட்ட பொய் சொல்ல வேண்டிய அவசியமும் எனக்கு இல்ல” என்றாள் அலட்சியமாக தோளை குலுக்கியபடி.
அவள் வார்த்தைகளில் மெல்லிய புன்னகை அரும்ப “இந்தோ இருக்குற கோயம்புத்தூர் போறதுக்கு டிக்கெட் என்ன நாலாயிரமா சரவெடி” என்று வியந்து கேட்டவன் “ம்ஹும் என்கிட்டயே பொய் சொல்ற..? உனக்கு பொய் சொல்ல வராது சரவெடி நீ எப்டி பேசுவன்னு எனக்கு தெரியும்? உன்னோட நேச்சர் இது இல்ல. இங்க இருந்து போனா கண்டுபிடிச்சிறுவாங்கன்னு கோயம்புத்தூர் போய் அங்க இருந்து டெல்லி போக போற அதுவும் பிளைட்ல” என்று இளக்காரமாய் பேச.
அதுவரை அவள் நின்ற தோரணை மாறி போனது தன் முடிவை நேரில் இருந்து பார்த்தவர் போல கூறுகிறாரே என்று தயங்கி அவன் முகத்தை பார்த்தாள் சஞ்சளா.
அவளின் விளங்கா பார்வைக்கான பதிலை கூற தொடங்கினான்“நீ கம்யூட்டர் சென்ட்ரல டிக்கெட் புக் பண்ணதை பத்தி கடைக்காரன் என்கிட்ட சொல்லிட்டான்” என்று அழுத்தமான பார்வையை அவள் மீது பதித்தவன்.
“மீனாட்சியோட அம்மாவ பத்தி என்கிட்ட விசாரிக்க வந்தியே நா என்ன சொல்ல வறேன்னு முழுசா விஷயத்தை கேட்காம கேட்ட வரைக்கும் போதும்னு சோகமா முகத்தை வச்சுக்கிட்டு போயிட்ட. அப்பவே கேட்டுருந்தா இதுவரைக்கும் வந்துருக்காது” என்று குற்றம் கடிந்தான் துவாரகேஷ்.
ஆக எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல இருந்திருக்கிறார் என்ற எண்ணமே கோபத்தை தூண்ட “வந்துட்டு போனவங்களை பத்தி ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லையேன்ற வருத்தம் தானே ஒழிய மத்தபடி வேற எந்த எண்ணமும் எனக்கு இல்லை நீங்க யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டா எனக்கு என்ன?”,வெடுக்கென கூறிவிட்டு முகத்தை சிலுப்பி கொண்டாள்.
அவளை அமைதிப்படுத்தும் வழி தெரியாது ஒரு கணம் செயலற்று மலைத்து நின்றவன் பெருமூச்செடுத்து “நா என்ன சொன்னாலும் அதுக்கு ரெடிமேடா ஒரு பதில் வச்சுறுப்ப எதுக்கு வம்பு. நீ சொல்ற மாதிரி அப்டியே வச்சுக்கலாம்” என்று மென் சாரலின் இதமாய் அவள் மனதை குளிர்விக்க வேண்டி கூற்றை ஒத்து பேசினான் ஆடவன்.
“வச்சுக்கலாம் என்ன அப்டி தான்!” என்று ஆணித்தரமாக வார்த்தைகளில் அழுத்தம் கோர்த்து சஞ்சளா சொல்ல.
அவள் கோபம் மேலும் மேலும் அவனுக்குள் சிரிப்பையும் சிலிர்ப்பையும் அளித்தது, கோபம் கொள்ளும் போது துடிக்கும் அதரங்களையும் சிவக்கும் கன்ன கதுப்புகளையும் பற்றி கொஞ்ச வேண்டும் என எழுந்த பேராவலை அடக்க அவஸ்தையுடன் நெற்றியை அழுந்த தேய்த்து கொண்டவன் “சரி நடந்து முடிஞ்சத பத்தி இனி பேச வேணாம் நா கேட்டதுக்கு முடிவா என்ன சொல்ற? என்ன பிடிச்சிருக்கா பிடிக்கலையா?” என்று அழுத்தமாய் கேட்டு அவள் முகத்தை பார்த்தான்.
அவன் இறங்கி வர வர அவளின் வீம்பு உச்சானி கொம்புக்கு ஏறியது. காதலில் வீம்பு செய்வது கூட ஒருவித உற்சாகம் தான். சட்டென சாமாதனம் ஆவதென்றால் எப்படி? என்று மனம் இடும்பு செய்ய “எனக்கு உங்களை பிடிக்கலை உங்க கூட பேச பிடிக்கலை பாக்க பிடிக்கலை உங்கள விட்டு கண்காணாத தூரத்துக்கு தான் போக போறேன், உங்க நினைப்பே வராத ஒரு இடத்துக்கு போறேன்! போக தான் போறேன்!” என்று பெண்ணவள் பிடிவாதமாய் உரைத்திட .
பிடித்த பிடியில் உடும்பாய் இருப்பவளிடம் இனி
பேசி புரியவைப்பதில் பலன் இல்லை என்று நினைத்து கொண்டவன் “சரி விடு வந்தது வந்தாச்சு சாமி கும்பிட்டு போலாம்” என்று எதுவும் நடவாதது போல துவாரகேஷ் இயல்பாய் பேசியதில் பே..வென்று விழித்தாள் பெண்ணவள்.
‘பிடிக்கலைன்னு சொன்னா வேற மாதிரி சமாதானம் பண்ணுவாறுன்னு பாத்தா விடுன்னு சொல்றாரு, இவரு லூசா இல்ல நாம லூசா. ஐய்யோ எனக்கு மண்டை காயிது‘ என்று மனதோடு குழம்பியவள் “கோவில் இன்னும் திறக்கலை” என்றாள் முகத்தை சுண்டி வைத்தபடி.
“உள்ள போய் தான் சாமி கும்பிடனும்னு அவசியமில்ல வெளிய நின்னே கும்பிடலாம் முருகன் ஒன்னும் கோபப்பட மாட்டாரு” என்று பதில் கொடுத்தவன் “கண்ண மூடி சாமி கும்பிட்டா நாம கேக்கிறதை நிச்சயம் கொடுப்பாறாம் அம்மா சொல்லிருக்காங்க” என்று சிறு பிள்ளையிடம் உரைப்பது போல நளினாமாய் சொல்ல.
“ம்க்கும்” என்று நொடித்து கொண்டு சஞ்சளா கண்களை மூடி கொள்ள, அவனும் இமைகளை மூடி தன் எண்ணத்தை இறைவனிடம் முன் வைத்தான்.
பொழுது நன்றாக புலர்ந்திருந்தது இதமான வெயில் கலைந்து தகிக்கும் தணலை பரப்ப தொடங்கியிருந்தான் செங்கதிரோன்.
“தேவிம்மா கிளம்பியாச்சா சீக்கிரம்” என்ற அவசர குரல் கேட்டு அறையில் இருந்து வெளிப்பட்ட வைதேகி.
“ஒரு அஞ்சு நிமிஷம் விணு” என்று கெஞ்சுதலாய் கூறிவிட்டு மீண்டும் அறைக்குள் சென்று தலை மறைத்து கொள்ள.
“என்ன தேவிம்மா அவசரம் தெரியாம நிதானமா கிளம்பிட்டு இருக்க, அங்க என்ன பிரச்சனையோ தெரியலை ஆன்ட்டி வேற ரொம்ப பதட்டமா பேசிட்டு வச்சுட்டாங்க” என்று துவாரகாவின் எண்ணிற்கு தொடர்பு கொண்டவாறே மனையாளிடம் சற்று எரிச்சல் மண்டிய குரலில் பேசினான் விஷ்ணு.
மறுமுனையில் அழைப்பு ஏற்க படவில்லை என்றதும் “ச்சே இவன் வேற எங்க போய் தொலைஞ்சானோ தெரியலை அவசரத்துக்கு போன் பண்ணா எடுக்குறதே இல்ல” என்று தனியாக புலம்பி கொண்டிருக்க.
கூறிய நிமிடத்திற்கு முன்னதாகவே கிளம்பி வந்தவள் “எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுறிங்க, பயப்படுற மாதிரி எதுவும் நடந்துருக்காது போய் பாத்தா தெரிஞ்சிட போகுது. வாங்க போலாம்” என்றதும் கதவை பூட்டி சாவியை எடுத்து கொண்டு இருவரும் துவாரகாவின் இல்லம் விரைந்தனர்.
சஞ்சளா வந்து நின்ற கோலம் விசாலாட்சியின் அடிவயிற்றில் கிலியை கிளப்பியது. முதலில் மகனுக்கு அழைப்பு விடுத்து பேச முயற்சி செய்தவர் அவன் அழைப்பை ஏற்கவில்லை என்றதும் விஷ்ணுவிற்கு அழைப்பு விடுத்து சீக்கிரம் கிளம்பி வருமாறு ஒருவித படபடப்புடன் கூறிவிட்டு இருவரின் வரவை நோக்கி காத்திருந்தார். அறையை நோட்டமிடுவதும் பின் வாசலை பார்ப்பதுமாய் பதைப்பதைப்புடன் அமர்ந்திருக்க அறையில் துவாரகேஷின் செயலை எண்ணி கண்களில் நீர்வடிய அமர்ந்திருந்தாள் சஞ்சளா.
சில நிமிட பயணத்தில் அரக்கபரக்க வேர்த்து விறுவிறுத்து விஷ்ணு வைதேகி இருவரும் உள்ளே நுழைய, அவர்களை கண்டதும் வேகமாக அருகில் சென்றவர் “ஏம்ப்பா விஷ்ணு, துவாரகா உனக்கு ஃபோன் எதுவும் பண்ணானா? நா போன் பண்ணேன் எடுக்கவே மாட்டிக்கிறான் ரொம்ப பயமா இருக்கு ப்பா.
ரெண்டுபேருக்குள்ள என்னாச்சுன்னு ஒன்னும் தெரியலை இவ வேற கழுத்துல தாலியோட வந்துருக்கா கேட்டா பதில் பேசாம அழுதுகிட்டே இருக்கா” என்று படபடப்புடன் பயம் கவ்விய முகத்துடன் பேச.
விசாலாட்சி கூறிய செய்தியில் திக்கென்றானது இருவருக்கும் “தாலியோடவா..!” என்று அதிர்ந்த வைதேகி “என்ன ஆன்ட்டி சொல்றிங்க இப்போ அவ எங்க இருக்கா?”.
“ரூம்ல இருக்காம்மா அழுதுகிட்டே இருக்கா“, கவலையுடன் விசாலாட்சி சொல்ல.
வேகமாக மூவரும் அறைக்கு சென்றனர். தலை கவிழ்ந்து விசும்பி கொண்டிருந்தவள் “சஞ்சும்மா” என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்.
Advertisement