Advertisement

மயங்கினேன்.! கிறங்கினேன்.! 
அத்தியாயம் 05
இனியா , அவன் ஏதாவது தன்னிடம் அவனின் காதல் கதையை பற்றி சொல்லுவானா மாட்டானா என்பது போல் ஓரப்பார்வையால் அவனை பார்ப்பதும் முகத்தை திருப்புவதுமாக இருக்க , பார்த்து பார்த்தே சோர்ந்து போய் விட்டாள் பெண்ணவள்.
” மிஸ்டர் .தடியன் சார் ” 
“தடியன் சார்ர்ர்ர்..” 
” சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்… “
” நான் பாவம் சார் , எனக்கு இப்போ தலையே வெடிச்சிடும் , நீங்க இப்போ சொல்லலைன்னா ” என அவனை பாவமாக பார்க்க 
அவனோ அவளை முறைத்து விட்டு ,கடமையே கண்னென்று வண்டி ஓட்டுவதிலே கூறியாய் இருந்தான் .
‘ஊஃப்ப் , இந்தாளோட ஒரே தொல்லையா இருக்கு பா ‘ என மனதோடு புலம்பியவள் முகத்தை திருப்பிக் கொண்டு ஜன்னலை வெறிக்க தொடங்கினாள்.
அவளால் , அது கூட சரிவர செய்ய முடியவில்லை.
முகத்தை திருப்பிக் கொண்டு , அமைதியாக இருக்க கூட அவளால் முடியவில்லை. 
” அப்படி என்ன நடந்திருக்கும்..?? நாம தான் தேவை இல்லாம கொசுவர்த்தி சுருள்ள உள்ள நுழைஞ்சிட்டோமோ ” என யோசனை செய்த படி இருக்க , அவள் முகமும் அழகாய் அவனுக்கு எடுத்து காட்டியது.
அவனுக்கு சிரிப்பு வந்தாலும் , ஏனோ அவள் இசையை தவறாக சொல்வது அவனுக்கு பிடித்தம் இல்லை.
சில மாதங்களே பேசி இருந்தாலும் , அவனின் உயிரில் அவனின் இசை கலந்திருந்தாள்.
இது யாவும் அறியாமல் அங்கே அம்மு என்ற பெண் , அவனுடனான வாழ்வை பற்றி கனவு காண தொடங்கி இருந்தாள்.
வெற்றி ‘இசை’ என்றிருக்க 
அங்கே அம்முவோ ‘ வெற்றி ‘ என்று மனதளவில் அவனை கணவனாக சுமக்க தொடங்கி இருந்தாள்.
ஒரு ஐந்து நிமிடம் சென்ற நிலையில் ,
“தடியன் சார்ர்ர்ர் , ப்ளிஸ் மீதி கதையை சொல்லுங்களேன் . அப்போ தானே உங்களால் இசையை‌ பற்றின என்னோட கருத்தை மாற்ற முடியும் சொல்லுங்க ” என சரியாக அவனை புரிந்து கொண்டது போல் சொன்னாள்.
அவளை பார்த்தவன் ,” சரி நான் சொல்றேன் . ஆனா இது என்னோட இசையை பத்தி நீ தெரிஞ்சிக்கனும்னு சொல்லல . நான் என் காதல் கதையை சொன்னா,  நீ அமைதியா இருப்பேன்னு ஒரே காரணத்துக்காக தான் சொல்றேன் ” என சொல்லி இதழுக்குள்ளே வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
“ம்ஹூம் ” என நொடித்து கொண்டாள் பெண்ணவள்.
அவனுக்கு அவளது செயல்கள் யாவும் சிறுப்பிள்ளையாகவே தோன்றியது..
“சரி சொல்றேன். நடுவில் இன்ட்ரப்ட் பண்ணாத புரியுதா ” என்று எச்சரித்தவன் அவன் காதல் கதையை முடிந்ததிலிருந்து சொல்ல துவங்கினான்.  
********
உற்சாகம் வடிந்து போய் ,சென்னை செல்லும் ரயிலில் அமர்ந்திருந்த அவனுக்கு மனம் முழுவதும் பாரமாக இருந்தது.
அவனே எதிர்பார்க்காத விதமாக அனைத்தும் நடந்திருக்க ,அவனால் தான் படும் துக்கத்தை கூட வெளியே சொல்ல முடியவில்லை.
மனம் முழுவதும் ரணமாக இருக்க ,அவனால் எதுவும் செய்ய முடியா நிலையை எண்ணி உள்ளுக்குள்ளே மறுகி போனான்.
ஊரிலிருந்து திருச்சிக்கு வரும்போது அத்தனை சந்தோஷத்தோடு இங்கே தன் தமையனின் மகவை காண ஆவலோடும் , அத்தோடு சேர்த்து இசையின் காதலோடு சேர்த்து ஊருக்கு வந்தவனுக்கு அந்த நிகழ்வு இடியாய் இறங்கியது.
மனம் ‘ இசை ‘ ‘ இசை ‘ என முணங்கலிட்டது..
” இது மட்டும் என்னோட இசைக்கு தெரிஞ்சா ,என்ன ஆகுறது.‌ ஐயோ கடவுளே ! இந்த சோதனை எனக்கெதற்கு.? ” என புலம்பினான்.
அவனின் புலம்பலை எல்லாம் கண்டுக் கொள்ளாது , அவன் கையில் மின்னிய பிரேஸ்லெட்டையே பார்த்து கொண்டிருந்தது அவனது மனசாட்சி. 
அவன் கையினில் அது புதிதாக சேர்ந்தது. அதை பார்க்கும் போது எல்லாம் , மனதினுள் அவனுக்கு ஒருவிதமான வலி எடுக்க தான் செய்தது. 
காலையில் நடந்ததை தானாக மனம் சிந்திக்க தொடங்கியது…
திருச்சியில் இறங்கி முதலில் வீட்டிற்கு சென்றவன் ,குளித்து முடித்து பரமசிவம் வளர்க்கும் சேவலை சிறிது நேரம் வெறுப்பேற்றிய பின் உள்ளாச மனதுடன் மருத்துவமனைக்கு சென்றான் வெற்றிமாறன்.
அவன் அறைக்குள உள்ளே நுழைந்ததும் பார்த்தது என்னவோ , தூங்கி கொண்டிருந்த பூங்கோதையையும் , பரமசிவமும் விஜயசாந்தியும் அங்கிருந்த சிறிய பெட்டில் அமர்ந்திருந்த வாக்கில் உறங்கி கொண்டிருப்பதையும் தான்..
அவர்கள் மூவரையும் ஒரு முறை பார்த்தவன் ,அண்ணிக்கு பக்கத்தில் இருந்த குழந்தை தொட்டிலில் அழகாய் பூக்குவியலாய் உறங்கி கொண்டிருந்த தன் தமையனின் மகவை காணும் போதே கண்கள் பனிக்க செய்தது.
இது மற்றொரு  அன்னையாக விளங்கும் பூங்கோதையின் தவமல்லவா இக்குழந்தை.
அவனின் கண்ணில் வழிந்த ஒரு சொட்டு கண்ணீர் , அந்த பிஞ்சுவின் கையில் தெரிக்க , அக்குழந்தையோ தன் மீன் போன்ற அழகிய விழிகளை மெதுவாக திறந்து பார்வையை சுழல விட்டு மெலிதாக சிரித்தது.
‘கடவுள் குழந்தையை சிரிக்க வைக்கிறாரு போல’ என்று நினைத்தவன் ,பஞ்சு போன்று இருந்த வலக்கரத்தை தொட , குழந்தையோ சிரித்தபடி அவனின் கையை பிடித்து கொண்டது.
அதற்குள் , குழந்தையின் கீச் கீச் சத்தத்தில் பெரியோர்கள் இருவரும் எழுந்து விட்டனர்.
” எப்போ டா வந்த , வந்ததும் எழுப்பி இருக்கலாம்ல .?” என்றவாறே கலைந்திருந்த முடியை நேர்படுத்தி கொண்டயை போட்டார் விஜயசாந்தி.
” இப்போ தான் மா வந்தேன். ஒரு அஞ்சு நிமிஷம் தான் இருக்கும். அதான் எழுப்பல ” என்றவன்
” என்ன மா பேரன் உங்களை படுத்தி எடுத்துட்டானா.?” என்று சிரிப்போடு கேட்க 
” அவன் எங்க டா படுத்தி எடுத்தான் . அவனுக்கு அப்பான்னு ஒருத்தன் உனக்கு முன்னாடி என் வயித்துல பிறந்தானே , அவன் தொல்லை தான் தாங்க முடியல ” என்றார்.
” ஏன் மா , அப்படி என்ன அவன் பண்ணிட்டான்.?” 
” அதை ஏன் டா கேக்குற , குழந்தையை தூக்கிட்டு வந்து டாக்டர் கொடுக்கிறாரு . வாங்க மாட்டேன் ,அவனுக்கு வலிக்கும்னு ஒரே அடம் டா. சரி ,நீ வாங்கலைன்னா என்ன நாங்க வாங்கிட்டு போறோம்னு சொல்றோம். அதுக்கு விடலை டா அவன் வலிக்கும் சொல்லி ” என்றவர் முந்தைய தினம் ஏதோ இப்போது நடந்தது போல் சிரிக்க தொடங்கினார்.
” பெரியவனே இப்படின்னா , இந்தா அடுத்து சின்னவன் இருக்கான் . அவனோட ரகளை எப்படி இருக்க போகுதோ ” என அமைதியாக இருந்த பரமசிவம் சொல்ல 
” எல்லாம் உள்ள ஓடுர இரத்தத்திற்கு உரிய சொந்தக்காரன் காரணமா இருக்கும் ” என மனையாள் சொன்னதை கேட்டு கணவன் முறைக்க 
மைந்தன் புரியாமல் ,” அப்படின்னா.?” என இருவரையும் பார்த்து கேட்க
” ஹான் , அப்பனை போல பிள்ளைன்னு சொல்லுறா உங்க அம்மா ” என்று நொடித்து கொண்டார் பெரியவர்.
மனையாளும் மகனும் இதனை கேட்டு சிரிக்க , குழந்தையும் அவர்களோடு இணைந்து கொண்டது.
அந்த ஷணத்தை அணு அணுவாய் இரசித்த வெற்றிக்கு , இசையின் நினைவு வந்து போக , தனக்கும் அவளுக்குமான இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் எவ்வாறு இருப்போம் என்று யோசிக்க தொடங்கிய நேரம் ‘ மாப்பிள்ளை ‘ என்ற ஒற்றை அழைப்பு அவனின் யோசனையை களைத்தது.
குரல் வந்த திசையை நோக்கி திரும்பி பார்த்தவன் , யாரென்று தெரியாத நிலையிலும் ‘சொந்தமாக இருக்கும் ‘ என்று நினைத்து புன்னகை புரிந்தான்.
” வாங்க சம்பந்தி … வாங்க சம்பந்தி மா  ” என்று பரமசிவம் புன்னகையோடு வரவேற்க 
“ம்ம்ம்” என்ற படி உள்ளே நுழைந்தார் தன் மனையாளோடு..
‘என்னது சம்பந்தியா , இது யாரு டா நமக்கு தெரியாத சம்பந்தி ‘ என்பது போல் மூலையை போட்டு குடைந்தான்.
” எப்படி இருக்கீங்க அண்ணா அண்ணி.?” என விஜயசாந்தி கேட்க
” ஹான் , நாங்க எல்லாம் நல்லா தான் இருக்கோம் ” என்று சொன்னவர் அறையை சுற்றி பார்வையிட்டார்.
” சரிங்க சம்பந்தி மா .வாங்க வந்து உங்க பேர பிள்ளையை பாருங்க “என்று பவ்யமாக கூப்பிட்டு காட்ட
” என்ன இது அறை சின்னதா இருக்கு. கொஞ்சம் நல்ல வசதியான ஹாஸ்பிடலா பார்த்து இருக்கலாம்ல ” என்று முகம் சுளிக்க விஜயாவின் முகம் கறுத்து போய் விட்டது.
” காந்திமதி.. ” என சிறு கோபமாய் அவரது கணவன் ஞானவேல் அழைக்க 
” இல்லங்க , நம்ம பொண்ணு எப்படி எல்லாம் வசதியா வாழ்ந்த பொண்ணு. இங்க வந்து இப்படி கஷ்டப்படுறாலேன்னு ஒரு ஆதங்கம் தான் ” என காந்திமதி அங்கலாய்த்து கொள்ள 
” அவுங்க என்னோட அண்ணாவுக்கு மட்டும் இல்ல , இனி நமக்கும் அவுங்க சம்பந்தி வீட்டுக்காரவுங்க தான். அதை முதல ஞாபகத்துல வை ” என மனையாளை பார்த்து முறைத்து வைத்தார்.
வெற்றிக்கு காந்திமதியின் பேச்சு சுத்தமாக பிடிக்கவில்லை என்று அவனது கடுகடுக்கும் முகமே காட்டிக் கொடுத்தது. அதையும் விட அடுத்ததாக சொன்னதை கேட்டு அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றிருந்தான் அவன்.
” என்னை மன்னிச்சிடுங்க சம்பந்தி.. அவ ஏதோ புத்தி கெட்டு போய் பேசிட்டா . இதை பெருசா எடுத்துக்காதீங்க ” என ஞானவேல் வருத்தப்பட , பதறிபோனார் விஜயசாந்தி.
” அய்யோ  அண்ணா ! என்ன இது , நீங்க போய் மன்னிப்பு அது இதுன்னு எல்லாம் கேட்டுக்கிட்டு ” என்று பதறிய குரலில் சொன்னார்.
” பெரிய மனசு மா உனக்கு.. என் பொண்ணு இப்படி பட்ட ஒரு குடும்பத்துல வாழ போறதை நினைக்கும்போதே எனக்கு சந்தோஷமா இருக்கு மா ” என்று உள்ளார்ந்து சொன்னார் .
பரமசிவம் மட்டுமே மகனின் அதிர்ச்சி அடைந்த முகத்தினை கண்டு புருவம் சுருக்கினார்.
காந்திமதியும் அவரது கணவரான ஞானவேலும் குழந்தையை தூக்கிக் கொஞ்ச , வெற்றி ஒரு ஓரமாய் அமர்ந்துவிட்டான் எதுவும் பேசாமல்…
அதற்குள் மணிமாறன் மனைவிக்காக ஜூஸ் வாங்கி வந்திருந்தான்.
கோதையின் சித்தப்பா சித்தியை பார்த்தவன் ” வாங்க ” என்று இன்முகத்தோடு வரவேற்றான்.
குழந்தைக்காக வாங்கி வந்த தங்க காப்பை எடுத்த ஞானவேல் , அதனை மணிமாறனிடம் நீட்டி ” இது என்னோட பேரனுக்காக வாங்கி வந்தது ” என்றார்.
அதனை இன்முகத்துடன் பெற்றுக்கொண்டவன் புன்னகைத்தான்.
அடுத்ததாக , வெற்றியின் புறம் திரும்பி ,” அம்முக்கு பூ வச்சி உறுதி படுத்தும் போது மாப்பிள்ளை வரலை . அதனால , அவருக்கு நாங்க ஒரு சின்ன பரிசா ப்ரேஸ்லெட் வாங்கி வந்திருக்கோம். அதை போட்டு விடலாமா ” என்று தன்மையாக சம்பந்தி வீட்டாரிடம் கேட்டார்.
” இனி , அவன் உங்க வீட்டு மாப்பிள்ளை சம்பந்தி . உங்களுக்கும் இனி எல்லா உரிமையும் அவன்கிட்ட இருக்கு. எங்க கிட்ட கேட்டு தான் செய்யனும்னு அவசியம் இல்லை “என பரமசிவம் சொல்ல
வெற்றியோ எங்கேயோ வெறித்தபடி அமர்ந்திருந்தான். அவனுக்கு இப்போது தான் புரிந்தது , அன்னை அன்று கேட்டதும் அதற்கு தான் இசையின் ஞாபகத்தில் சரி என்று சொன்னதும்..
வின் வினென்று தலை வலிக்க தொடங்க , அந்த இடத்தில் இருக்கவே பிடிக்கவில்லை. ஏனோ மூச்சு முட்டுவது போல் இருந்தது.
” வெற்றி ” என தந்தையின் அழைப்பிலே சுயத்திற்கு வந்தான்.
” ஹான் , சொல்லுங்க ப்பா ” 
” டேய் , அவுங்க உன்னோட வருங்கால அத்தை மாமா டா .நீ பாட்டுக்கு அங்க போய் உட்கார்ந்திருக்க .இங்க வா ” என்று அழைக்க 
” ஹான் பா ” என எழுந்து அவர்கள் முன் வந்தான்.
“நல்லா இருக்கீங்களா மாப்பிள்ளை.?” என்று ஞானவேல் கேட்டிட 
” இருக்கேன். நீங்க ?” என மொட்டையாய் கேட்க
அவனது பதிலில் ஏனோ காந்திமதிக்கு நிம்மதி அளிக்க , அவர் அவரது மூலையில் சில பல திட்டங்களை போட தொடங்கினார்.
” மாப்பிள்ளை , இது உங்களுக்காக வாங்கினது ” என சிறு தயக்கத்துடன் ” நான் போட்டு விடட்டுமா ” என்று கேட்க
வெற்றிக்கு எப்படி அவரிடம் மறுப்பு தெரிவிப்பது என தவிப்பாய் இருக்க , அவரின் முகத்தை மெதுவாக ஏறிட்டு பார்த்தான். அதில் அத்தனை ஆவல் மிகுந்து இருந்தது.
கையை நீட்டுவதற்கு அவனுக்கு சங்கடமாக இருக்க ,
“வெற்றி கையை நீட்டு டா ” என தந்தையின் குரலில் கண்டிப்பு இருந்தது.
தந்தையை பார்க்க ,’ நீட்டு ‘ என்பது போல் கண்ணாலே அதட்டினார்.
மெது மெதுவாக கையை அவரின் முன்பு நீட்ட , சந்தோஷ முகத்துடன் அதனை மாட்டி விட்டார் ஞானவேல்.
“ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை . நீங்க வந்துருக்கீங்கன்னு அம்முக்கிட்ட சொன்னா ரொம்பவே சந்தோஷப்படுவா ” என்றார் மகளை பற்றிய நினைவில்..
குழந்தையோ கூட்டத்தை கண்டு சிணுங்க தொடங்கியது.
அதற்குள் கோதயையும் எழுந்து விட , சித்தப்பா சித்தியை பார்த்தவள் நலம் விசாரித்தாள்.
பின் , இருவரும் கிளம்புவதாக சொல்ல , பரமசிவம் அவர்களை அழைத்து வெளியே சென்றார்.
மகனின் செயலை புரியாமல் பார்த்த‌ பரமசிவம் அவனை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தார்.
வீட்டிற்கு வந்ததும் அறைக்குள் செல்ல பார்த்த வெற்றியை அவரது கேள்வியில் அவன் கால்கள் தானாக நிறுத்தம் செய்தது.
 

Advertisement