Advertisement

மயங்கினேன்.!கிறங்கினேன்.!
அத்தியாயம் 03
காலமும் விதியும்
இருவரின் பயணத்தை
ஒருங்கிணைக்க 
இவர்களோ ஏதும் 
அறியா சண்டை 
கோழிகளாக பயணத்தை
தொடர்ந்தனர்…!!!!
இருவரின் பயணமும் அமைதியாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் செல்ல , இனியாவால் அமைதியாக வாயை மூடிக்கொண்டு வர முடியவில்லை.
அனைவரிடத்தும் அன்போடும் கனிவோடும் பேசும் வெற்றியால் ,ஒரு வார்த்தை கூட அவளிடம் பேச இயலவில்லை. 
தன் இசையுடன் சேர்ந்து செல்ல வேண்டிய பயணத்தை , இப்படி யாரோ ஒரு பெண்ணுடன் செல்லுகிறோமே என்று நினைக்கும்போதே மூச்சு முட்டுவது போல் இருந்தது அவனுக்கு.
காதல் ஒரு அழகான உணர்வு என்று புரிய வைத்தும் அதை அனுபவிக்க வைத்ததும் அவளே.! அவனின் இசையே.!
அதனை முழுமையாக அனுபவிக்க விடாமல் அவனை உயிரோடு மண்ணுக்குள் புதைத்ததும் அவனின் இசையே..
எங்கும் எதிலும் அவனின் இசையே அவனுக்கு நிரம்பி இருக்க ,பக்கத்தில் இருக்கும் பெண் கூட அவன் எண்ணத்தினுள் நுழையவில்லை.
அவனையும் அந்த இருட்டையும் மாறி மாறி பார்த்தவள் ,சலிப்போடு அமர்ந்திருந்தாள்.
“பச் ,இப்போ நாம எங்க பொய்ட்டு இருக்கோம்.?” என அமைதியை மெதுவாக கலைத்தாள் இனியா.
” என்னது நாமலா.? நான் மட்டும் தான் ” என்றவனின் பேச்சில் தன்னை அவன் அசிங்கப்படுத்துவது புரிந்தும் அதை உதாசினப்படுத்தினாள்.
“சரி ,நீங்க எங்க பொய்ட்டு இருக்கீங்க.?”
” அதை எதுக்கு நான் உன்கிட்ட சொல்லனும்.?” 
“அப்போ தானே , நான் எங்க இறங்கனும்னு சொல்ல முடியும். உங்க டெஸ்டினேஷன் தெரியாம ,என்னோட டெஸ்டினேஷனை எப்படி சொல்றது சொல்லுங்க ” என்க 
” நான் எங்க போறேன்னு நீ தெரிஞ்சிக்க வேண்டிய அவசியமில்லை ” என‌ அவளோடு ஒத்தைக்கு ஒத்தை புரிய 
“அவ்வ் ,ஏன் தடியன் சார் ,நீங்க  இப்படி இருக்கீங்க.? உங்களுக்கு வரப்போற வீட்டம்மா ரொம்பவே பாவம் சாரே ” என நமட்டு சிரிப்புடன் அவள் சொல்ல 
” அதான் அவ பறந்து பொய்ட்டாளே , இது காதலே இல்லைன்னு ” என அவன் வேதனையுடன் சொல்ல ,அவனுக்கு ஆதரவாய் அவன் கரம் பற்றி அதனின் அழுத்தத்தை கொடுத்தாள்.
ஏனோ ,அந்த அழுத்தம் அவனுக்கு தேவைப்பட்டது. ஆனாலும் அது இசைக்கு செய்யும் துரோகம் என்றெண்ணி அவள் கையை தட்டி விட்டான்.
” என்னைய டச் பண்ணி பேச வேண்டிய அவசியம் இல்லை உனக்கு . இன்னொரு தடவை இப்படி பண்ண , தென் யூ ஹேவ் டூ பேஸ் மை அனதர் ஃபேஸ் காட் இட் ” என கோபமாக மொழிந்தவன் அவள் தொட்ட இடத்தை கர்சீப் கொண்டு துடைத்து ,அதை தூக்கியும் எறிந்தான் வெற்றிமாறன்.
அவனின் செய்கையை பார்த்து “பைத்தியம் முத்திடுச்சி போலையே..” என நினைத்து கொண்டாள் நமட்டு சிரிப்போடு…
சிறிது நேரத்திலே ,” ஹலோ ,ஏதோ உன்னோட வண்டி மாதிரி ஒய்யாரமா உக்காந்துட்டு வர .நீங்க எங்க இறங்கனும்னு யாரு சொல்லு வா” என அவன் அவளை கோபமாய் பார்த்து மொழிந்தான்.
‘இவனுக்கு மண்டைல ஏதாவது அடிப்பட்ருக்குமோ , இறங்கும் போது நல்ல ஹாஸ்பிடலா பார்த்து போய் செக் பண்ணிக்க சொல்லனும் ‘ என மனதோடு நினைத்தவள் அவனையே பார்த்திருந்தாள்.
” என் முகத்துல என்ன  படம் கிடம் ஏதாவது ஓடுதா என்ன ” என அவள் புறம் திரும்பி புருவம் உயர்த்திட 
” படம் ஓடுனா கூட நான் பாக்க மாட்டேன் தடியன் சார் ” என்று இதழ் சுளித்தாள் இனியா.
அவளை முறைத்தவன் ,” இப்போ நீ எங்க இறங்கனும்னு சொல்ல போறியா இல்லையா ” என்க 
” சரி ..சரி நான் சொல்றேன் .ஆனா எனக்கு ஒரு டௌட் அது மட்டும் க்ளியர் பண்றீங்களா ” 
அவளை ஏற இறங்க பார்த்தவன்,”சரி கேளு..” என்றான்.
” இதே கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி தானே , நான் நீங்க எங்க போறீங்கன்னு சொல்லுங்க. நான் இறங்குற இடம் சொல்றேன்னு சொன்னேன் .அப்பவே நீங்க பதில் சொல்லி இருக்கலாமே தடியன் சார் . எதுக்கு எனக்கு பதில் சொல்லாம அதே கேள்விய திரும்ப நீங்க கேக்குறீங்க” என தன் சந்தேகத்தை முன் வைக்க
” ஹான் , இந்த கார் என்னோடது தானே . அப்போ நான் தானே கேள்வி கேக்கணும். அதான் நீ கேட்கும்போது நான் சொல்லல தட்ஸ் இட்” என்றவன் பேச்சு முடிந்தது என்பது போல் வண்டி ஓட்டுவதில் கவனம் வைத்தான்.
” யார்ரா இவன்..” என்பது போல் பார்வையை அவன் மீது செலுத்தினாள்.
” என்னைய லால்குடில  இறக்கி விட முடியுமா ” என கனிவாய் கேட்க 
” ஹோ ,லால்குடியா சரி சரி விட்டறேன் ” என்றான்.
சிறிது நேரம் மௌனமாகவே அந்த பயணம் செல்ல , அமைதியே பிடிக்காத இனியாவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
அவனின் முகத்தை ஓரவிழிகளால் ஏறிட்டு பார்க்க ,அவனோ இறுகிய முகத்துடன் கடமையே கண் கண்ட தெய்வம் போல் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.
‘பச் ,என்ன டா இது இனியா வந்த சோதனை ‘ என்று மனதினுள் நினைத்தவள் ,அமைதி பொறுக்காமல் மெதுவாக அவனிடம் பேச்சு கொடுக்க துவங்கினாள்.
” தடியன் சார்..” 
“தடியன் சார்..”
“தடியன் சார்ர்ர்ர்ர்…” என இழுத்து அழைக்க 
அவனின் கோபப் பார்வை மட்டுமே அவள் மீது செலுத்தப்பட்டது.
‘ஹோ , கோபமாக்கும் பார்க்க காமெடி பீசாட்டம் இருந்துக்கிட்டு கோபடுறானாமே ‘ என மனது அவனுக்காய் கவுண்டர் கொடுத்தது.
“தடியன் சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்…” என ராகம் போட 
” பச் , இப்போ உனக்கு என்ன தான் வேணும் ” 
”  உங்களுக்கு கொஞ்சமாவது மேனர்ஸ் இருக்கா சார்ர்ர்ர்ர்ர்” என்றிட 
அவளை அனல் தெரிக்க பார்வை பார்த்து வைத்தான் வெற்றிமாறன்.
“சொல்லுங்க சார்ர்ர்ர்ர்ர்..” என ராகம் பாட 
தன் கோபத்தை சமநிலை படுத்த ,  பெரிய மூச்சொன்றை இழுத்து வெளியே விட்டவன் ,” இப்போ உனக்கு தான் பிரச்சினை..?” என பொறுமையாகவே கேட்டான் வெற்றி.
” உங்க கிட்ட நான் என்னோட பேரு சொன்னேன்ல ,அப்போ நீங்களும் உங்களோட பேரை என்கிட்ட சொல்லனும்ல சார்…?” என கேள்வியாய் அவனை நோக்கினாள்.
” நானா வந்து உன்கிட்ட பெயரை சொல்ல சொல்லி கேட்டேன் ” என புருவம் உயர்த்திட
“அது… அது… அது…வந்து ” என திக்கியவள் பார்வையை அங்கும் இங்கும் அழைய விட்டாள்.
“என்ன அது அதுன்னு திக்குற ,உனக்கே தெரியுதுல அப்புறம் எதுக்கு நொய்யுன்னு நொய்யுன்னு மனிசன் உயிரை வாங்குற . என்னைய கொஞ்சமாவது காதல் தோல்வியை ஃபீல் பண்ண விடுறீயா ” என்றவன் 
” இனியாவது கொஞ்சம் அமைதியா வா ” என்று முடித்தான்.
” தடியன் சார்ர்ர்ர் , நான் சொல்றேனேன்னு கோவப்படாதீங்க . உங்களோட காதல் கதையை என்கிட்ட பகிர்ந்துகலாம்ல . உங்களுக்கும் ஒரு ஆறுதல் கிடைக்குமே சார். வேணாம்னு சொல்லிட்டு போனவுங்களையே நினைக்கிறது முட்டால் தனமா தெரியலையா சார் ” என‌ அவனுக்காய் இனியா பேச 
” எது முட்டாள்தனம், அவளை பத்தி நினைக்கிறதா . அவளை நான் இன்னைக்கு தான் முதல் முறை பார்த்தேன். அவ எப்படி இருப்பான்னு தெரியாத போதே காதலிச்சவன் நான் . அவ வேண்டாம்னு சொன்னதும் அவளை விட்டுட்டு பொய்டுவேன்னா என்ன “
” சரி ,நீங்க உண்மையா காதலிச்சீங்கன்னே வச்சிக்குவோம் . ஆனா அந்த பொண்ணு உங்களை உண்மையா தான் காதலிச்சான்னு எப்படி உங்களால சொல்ல முடியும் சொல்லுங்க ” என கேள்வியாய் நோக்க 
” அவளோட காதல் ஒன்று மட்டும் தான் ,இப்போ அவளை நினைச்சு புலம்ப வைக்குது. ஒருத்தவுங்க உண்மையா காதலிக்கிறாங்களா இல்லையான்னு நமக்கு தெரியாதா என்ன‌ .அவ தான்  என்னோட வாழ்க்கைன்னு என்னை நினைக்க வச்ச தேவதை அவள் ” என்றான் காதலை உள்ளார்ந்து உணர்ந்து..
” முட்டால் மாதிரி பேசுறீங்க..?? இப்போ இருக்கிற பாதி பொண்ணுங்க டைம் பாஸ்க்கு தான் லவ் பண்றாங்க” என கோபமாய் மொழிய 
” நீயே சொல்லிட்டியே பாதி பேருன்னு , அப்புறம் என்ன..? நீ சொன்ன பாதி பேருல என்னோட இசை வர மாட்டா ” என்றான் உறுதியாக 
“ஹோ , அப்போ உங்க காதல் கதையை என்கிட்ட சொல்லுங்க .உங்க இசை எப்படி பட்டவன்னு நான் சொல்றேன் “என்க
” என்னோட இசை உண்மையா தான் காதலிச்சான்னு ,உனக்கு நான் காதல் சர்ட்டிபிகேட் தரணும்னு எனக்கு அவசியம் கிடையாது. ஆனாலும் நான் சொல்றேன் ,அவளோட காதல் டெப்த்தை பத்தி தெரிஞ்சிக்கோ மிஸ். இனியா ” என்றவன் தனது காதல் கதையை சொல்ல துவங்கினான்.
அவளும் கதை கேட்க ஆர்வமாய் அவன் புறம் திரும்பி அமர்ந்து , கதவு புறம் சாய்ந்து கொண்டாள்.

Advertisement