பிரகதீஸ்வரன் ஸ்ரீமதிக்காக கொண்ட கவலை அவளுக்கு அவளிடமே இல்லை போலும். யாரும் எதுவும் கற்றுத்தர வேண்டும் என எதிர்பார்க்கவேயில்லை. சுற்றம் பார்த்து கற்றுக் கொண்டாள்.
பஃப்வே உணவுமுறை புதிதென அவள் பார்வையே காட்டிக் கொடுத்தது. ஆனாலும் எல்லாரும் என்ன செய்கிறார்கள் என கவனித்து, அதன்பிறகு அவளே சென்று, அவளுக்கான உணவை வாங்கிக் கொண்டாள்.
அவள் அந்த ஸ்பூன்களோடு போராடியது தனிக் கதை! வெகுநேரமாக என்னவோ ஸ்பூனோடு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறாளே என்று இவன் சென்று அவளின் பின்னால் நின்று கவனிக்க, அவள் பேச்சுவார்த்தை செய்து கொண்டிருந்தது ஸ்பூன்களோடு இல்லை விரல்களோடு எனப் புரிந்து சுவாரஸ்யமாக கவனிக்கலானான்.
அந்த சின்னவளோ, “எனக்கும் புரியுது இத்தனை நாள் நீங்க செஞ்ச வேலையைத் தூக்கி பொசுக்குன்னு இவங்ககிட்ட கொடுத்தது உங்களுக்கு வருத்தமா தான் இருக்கும். ஆனா பாருங்க எப்பவும் நீங்க தானே இந்த வேலையைப் பார்க்க போறீங்க. ஏதோ இன்னைக்கு ஒரு நாள் பிரிய படறாங்கன்னு அவங்களை கூட்டிட்டு வந்திருக்கேன். அவங்களை வழி நடத்த வேண்டியது உங்க கடமை தானே… அதை விட்டுட்டு கோவிச்சிக்கிட்டு நீங்க இப்படி செஞ்சா எப்படி?
பார்க்கிறவங்களுக்கு உங்க கோபம் தெரியுமா? ஸ்ரீமதி பொண்ணுக்கு ஸ்பூன்ல சாப்பிட தெரியலைன்னு என்னை தானே தப்பா நினைப்பாங்க. அதுனால கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுங்க…” என பேசிக்கொண்டிருக்க, அதற்கு மேலும் கட்டுப்படுத்த முடியாமல் சிரிக்க தொடங்கி விட்டான் பிரகதீஸ்வரன்.
சிரிப்பு சத்தத்தில், அதிர்ந்து திரும்பிப் பார்த்த ஸ்ரீமதிக்கு ரொம்பவுமே வெட்கமாக போய்விட்டது. ஐயோ இந்த சார் எப்ப வந்தாருன்னு தெரியலையே என நுனி நாக்கை கடித்துக் கொண்டவள், மெல்ல நழுவி அவன் பார்வையில் படாத இடத்தில் அமர்ந்து கொண்டாள். அவனும் அந்த சின்ன பெண்ணை மேற்கொண்டு சங்கடப்படுத்தவில்லை. பலவீனங்களை அழகு போர்வையால் மறைக்க இந்த சின்ன பெண்ணிற்கு யார் கற்று கொடுத்திருப்பார்களோ? அவளின் தன்னம்பிக்கையும் உறுதியும் அவனை அவ்வளவு ஈர்த்தது.
முன்னர் பிறந்தநாள் விழா நடக்கும் போதும், நமக்கு இப்படி நடப்பதில்லையே என்ற ஏக்கம் ஸ்ரீமதிக்கு வந்துவிடுமோ என அவளை அவசரமாக பிரகதீஸ்வரன் அளவிட்டால், அவளோ சரணின் பிறந்தநாள் விழாவை ஆர்வமும் சந்தோசமுமாகப் பார்த்து கொண்டிருந்தாள்.
அவளை யாரும் கண்டு கொள்ளாததையோ, அவளிடம் யாரும் பேசாததையோ, அவளை யாரிடமும் முறையாக அறிமுகம் செய்யாததையோ… எதையுமே அவள் குறையாக நினைக்கவில்லை.
எல்லாவற்றையும் கவனிக்கக் கவனிக்க மாலதி ஆன்ட்டியை காட்டிலும், வேதாச்சலம் அங்கிள் மீது தான் அவனுக்கு கோபமாக வந்தது. அவர் பெரிதாக குடும்பம், பந்தம், பாசம் என ஒட்டுறவு இல்லாத மனிதர் என்பது அவனுக்கு மிக நன்றாகத் தெரியும் என்றாலும், இப்படி தாயில்லா பிள்ளையிடம் கூட… பணத்தை மட்டும் தருவதோடு தன் கடமை முடிந்தது என்றா இருப்பார்? என்ன மனிதரோ என்று அவரிடம் அதிருப்தி கொண்டான்.
என்னவோ இதயத்தின் ஏதோ ஒரு மூலையில் ஆழமாகப் பாதிப்பை ஏற்படுத்தி விட்டாள் போலும்! அதன்பிறகு வந்த நாட்களில், அந்த வீட்டிற்குச் செல்வதற்கு எந்த வாய்ப்பு வந்தாலும் அவன் மறுப்பதில்லை. உடனே கிளம்பிச் சென்று விடுவான். நேரடியாக அவளிடம் பேசியதில்லை என்றாலும் அவள் என்ன செய்கிறாள் என்றொரு பார்வை பார்த்துவிட்டே போவது அவனது வாடிக்கையானது.
ஸ்கிப்பிங், நொண்டி, பந்து என அவள் மட்டுமாக தன்னந்தனியே எதையாவது விளையாடிக் கொண்டிருப்பாள். சிலசமயங்களில் சுடோகு சால்வ் செய்து கொண்டிருப்பாள். தனியாக கேரம் போர்டு விளையாடிக் கூட பார்த்திருக்கிறான். தோட்டத்தில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது, புதிதாக ஏதாவது செடி வளர்ப்பது, பூ கட்டி பழகுகிறேன் என சுற்றிலும் பூவை அடுக்கிக்கொண்டு அமர்ந்திருப்பது என தன்னைத்தானே எங்கேஜிங்காக வைத்திருப்பது அவளுக்குக் கைவந்த கலையாக இருந்தது.
அந்த வருடம் அவள் திரும்பி ஹாஸ்டலுக்கு சென்றதும் கொஞ்சம் வெறுமையாகக் கூட உணர்ந்திருக்கிறான். மீண்டும் நாட்களின் ஓட்டத்தில் அவளின் நினைப்பு பின்னால் சென்றிருந்தது. ஆனால், மறுவருட விடுமுறையில் பின்சென்ற நினைவுகள் எல்லாம் வீறு கொண்டு முன்னே வந்து நின்று அவனை ஆச்சரியப்படுத்தின.
கடந்தாண்டு போலவே வேதாச்சலம் வீட்டுக்குப் போக வேண்டிய வேலை ஏதாவது இருந்தால், இவனாகவே முன் வந்து செய்தான். அவளைத் தூர நின்று பார்த்து செல்லும் பழக்கமும் மாறவில்லை.
ஒருநாள் அவள் கண்ணிலேயே சிக்கவில்லை. அவளைக் காணாமல் செல்ல அவன் மனம் ஒப்பவில்லை. போன் பேசிக்கொண்டே நடப்பது போன்ற பாவனையில் வீட்டைச் சுற்றி வந்து அவளைத் தேடினான்.
அதோ அங்கே ஒரு ஓரத்தில் கண்ணில் சிக்காமல் அமர்ந்திருக்கிறாள். அவன் விழிகள் அவளைக் கண்டுகொண்ட மகிழ்ச்சியில் மின்னியது. நடையில் துள்ளல் வந்திருக்க வேகமாக அருகே சென்றான்.
நெருங்கிச் செல்ல செல்ல அவளின் முகத்தைப் பார்த்ததும் தவித்துப் போனான். என்னவாயிற்று இவளுக்கு? ஏன் இப்படி அமர்ந்திருக்கிறாள்? என அவன் உள்ளம் அடித்துக்கொண்டது. என்ன செய்வதென்று புரியாத பரிதவிப்பில் முகம் சுருங்க அமர்ந்திருந்தவளின் தோற்றம் அவனையும் கலவரப்படுத்த, “ஸ்ரீமதி…” என்றான் அருகே சென்று.
அவசரமாக திரும்பியவள், “ஹாய் சார்…” என்றாள் இளஞ்சிரிப்புடன். அவளின் முகம் பயத்திலும் கலவரத்திலும் வெளிறி இருந்தது. உள்ளங்கைகள் வேர்த்து கொண்டிருக்கும் போல ஒருமாதிரி உடையோடு கோர்த்துப் பிடித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன இங்க தனியா?”
“அது… அது…” என தடுமாறியவள், “உங்க போன் தரீங்களா? பெரியம்மா கிட்ட பேசணும்” என்றாள் சிரிப்பு வாடாமலே! தன் வலியை மறக்க இந்த புன்னகையோ? அவளின் கண்ணோரம் தேங்கிய நீர் அவனுக்கு அப்படித்தான் என்று உறுதியாகக் கூறியது.
“ஓ… சுயூர்…” என்றவன் அன்லாக் செய்த அவனது போனை அவளிடம் நீட்டினான்.
பெரியம்மாவின் எண்ணை அழுத்திவிட்டு தயக்கமாக அவனை ஏறிட, அது புரிந்து அவனும் சற்று நகர்ந்து கொண்டான். ஆனால், சின்ன பெண் இல்லையா ஏதாவது பிரச்சினையாக இருந்து சொல்லத் தயங்கி, தங்களிடம் சொல்லாமல் விட்டுவிட்டால் என்ன செய்வது? அதோடு அவளின் பெரியம்மாவும் இங்கே அருகில் இல்லை என யோசித்தவன், தவறெனப் புரிந்தும் அவளின் பேச்சை ஒட்டுக்கேட்டான்.
மிக மிக மெதுவாகப் பேசிக்கொண்டிருந்தவளின் குரலைக் கவனிப்பது ரொம்பவும் சிரமமாக இருந்தது. “ஆமாம் பெரியம்மா… எழுந்து வீட்டுக்குள்ள கூட போகலை. ஆனா ரொம்ப நேரம் இங்க உட்காரவும் முடியாது. நான் இப்ப என்ன பண்ணனும் பெரியம்மா?” என கேட்டுக் கொண்டிருந்தாள்.
ஒட்டு மொத்த பேச்சையும் விட்டு விட்டுக் கவனித்தவனுக்கு அவளின் நிலை என்னவென்று புரிந்து போனது. ‘அம்மா இல்லாமல் வளரும் பெண் குழந்தைகளுக்கு எத்தனை அவஸ்தை?’ என எண்ணியவனுக்கு இந்த சூழலில் அவளைத் தனியே விடவே மனமில்லை. வேகமாகக் கடைக்கு சென்று அவளுக்குத் தேவைப்படும் நேப்கின்னை வாங்கி வந்தான்.
அவள் பேசி முடித்து இவனைத் தேட, அவனோ சற்று நேரத்தில் அவளின் அருகே வந்து மண்டியிட்டு அமர, அவள் பதறினாள். “என்னாச்சு சார்?”
“ஒன்னுமில்லை ஸ்ரீம்மா. ரிலாக்ஸ்…” என குழந்தையிடம் பேசும் குரலில் பேசினான்.
அவள் அவனையே பார்த்திருக்க, “உனக்கு ஏதாவது உதவி வேணுமா? என்னால எதுவும் உதவி செய்ய முடியுமா?” என பரிவாகக் கேட்டான்.
“ஒன்னும் பிரச்சினை இல்லை சார். சின்ன விஷயம் தான். நான் சமாளிச்சுப்பேன். அதோட பெரியம்மா கிட்டயும் சொல்லியிருக்கேன். அவங்க கிளம்பி வராங்க. அப்பாகிட்டயும் சொல்லிடுவாங்க. இனி நான் பார்த்துக்கிறேன்” என்றாள். இக்கட்டிலும் உதவி மறுப்பவளை என்ன சொல்லவெனத் தெரியாமல் பார்த்தான்.
அவளின் தலையை ஆறுதலாக வருடி, ஒரு கவரை அவளிடம் நீட்டி, “அவங்க வரும்போது வரட்டும். நீ இதை வெச்சுக்க” என்றான்.
அவள் குழப்பமாக ஏறிட, “என் கூட நிறைய பொண்ணுங்க படிக்கிறாங்க. அதில் எனக்கு நிறைய பேரு கிளோஸ் பிரண்ட்ஸ் கூட. வீட்டுல ஒரு அக்கா இருக்கா… நீ என்கிட்ட உதவி கேட்காட்டியும் பரவாயில்லை. நான் சமத்தா என்னால முடிஞ்சதை செஞ்சிட்டே போறேன். உங்க அப்பா, பெரியம்மா எல்லாம் வரும்போது வரட்டும். நீ எவ்வளவு நேரம் இங்கேயே உட்கார போற… வா உன்னை உன் ரூமில் விட்டுடறேன். நீ பிரஸ் அஃப் ஆகி வேற டிரஸ் மாத்திட்டு அவங்களுக்காக வெயிட் பண்ணு சரியா…” என கைப்பற்றி எழுப்ப, அவளும் அங்கே இருக்க முடியாமல் தானே தத்தளிக்கிறாள். பிரகதீஸ்வரன் தைரியம் தரவும், மனதில் ஆறுதலோடு அவனோடு எழுந்து சென்றாள்.
தனக்கென முதன்முதலாக தனக்குச் சம்பந்தமே இல்லாத ஒருவர் ஒரு விஷயத்தைச் செய்கிறார் என அந்த வயதில், அந்த சூழலில் புரியாவிட்டாலும் பின்னாளில் அது அவளுக்கு விளங்கவே செய்தது. அதில் பிரகதீஸ்வரன் மீது அவளுக்கு நிறைய நிறைய நல்லெண்ணம்.
அதன் பிறகான ஆண்டுகளில் பிரகதீஸ்வரன் மேற்படிப்புக்காக நான்கு ஆண்டுகள் டெல்லி சென்றுவிட, இருவருக்குமே சந்தித்துக்கொள்ளும் சூழல் அமையவில்லை. மீண்டும் அவன் படிப்பெல்லாம் முடித்து, தொழிலில் அடியெடுத்து வைப்பதற்காகச் சொந்த ஊருக்குத் திரும்பி வந்தபோது அவள் பள்ளிப்படிப்பின் இறுதியாண்டு என்பதால் அப்பா வீட்டிற்கு அந்த வருட விடுமுறைக்கு வரவில்லை.
மேலும் ஓராண்டு சென்று பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு அப்பா வீட்டிற்கு விடுமுறைக்கு வந்திருந்தவள் ரொம்பவுமே வளர்ந்து விட்டிருந்தாள். ஐந்து ஆண்டுகள் கழித்து அவளைப் பார்த்தவன் அசந்து தான் போனான். அவனுள் பல வண்ணங்களில் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தது.
கத்திரிக்காய் இவ்வளவு வளருமா என்ன? ஆச்சரியத்தோடு அவள் முன் சென்று கைகட்டி நிற்க, முதலில் அவளுக்கு அவன் யாரென்றே புரியவில்லை. இளம் புன்னகையோடான அவனின் முகம், அரும்பு மீசை முகமொன்றை அவளுக்கு நினைவு படுத்த, அவளின் கண்கள் நொடியில் நட்சத்திரமாக ஜொலித்தது.
விழிகளுக்கு இணையாக முகமும் மின்ன, “சார்… எப்படி இருக்க்கீங்க?” என்றாள் ஆர்ப்பாட்டம் விழிகளில் மட்டும் தெறிக்க மென்மையான குரலில்.
“ஓ… ஆல் தி பெஸ்ட்… நெக்ஸ்ட் என்ன செய்யலாம்ன்னு ஐடியா?”
“தேங்க்யூ சார்… தெரியலை அப்பா என்ன சொல்லறாங்கன்னு பார்த்துட்டு டிசைட் பண்ணனும்” என்றாள். அவளின் குரலில் தந்தை தனக்காக இதை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கொட்டி கிடந்தது. ஏன் இப்படி எதிர்பார்த்து ஏமாந்து போகிறாள் என வேதாச்சலம் பற்றி நன்கு அறிந்தவன் நினைத்தான்.
“மார்க் வந்ததும் அப்பா கேட்பாங்க சார். அவங்ககிட்ட தான் முதல்ல சொல்லணும்” என்றாள் புன்னகையுடன். பத்தாம் வகுப்பிலேயே தந்தையிடமிருந்து இதை எதிர்பார்த்தாள். அப்பொழுது நடக்கவில்லை. இந்தமுறை கல்லூரி அல்லவா கண்டிப்பாகக் கேட்பார் என எதிர்பார்த்தாள்.
எல்லாருக்கும் வெகு சாதாரணமாகக் கிடைப்பது. அது கூட ஒரு வரம் போலக் காத்திருக்கிறாளே? அவன் வந்த பெருமூச்சை அடக்கிக் கொண்டான். “ஹ்ம்ம் குட்…” என்று மட்டும் சொல்ல, “தேங்க்ஸ் சார்…” என்றாள்.
அவளின் தொடர் சாரில் முகம் சுருக்கி, “அதென்ன சார்… சார்… நான் உன்னைவிட நாலைஞ்சு வருஷம் தான் பெருசா இருப்பேன்” என்றான் அவளின் அழைப்பு பிடிக்காத பாவனையில்.
“ஹ்ம்ம்… வேற எப்படி கூப்பிடணும். அங்கிள் சொல்லற அளவு நீங்க பெரியவங்க இல்லை. அண்ணான்னு கூப்பிட்டா பாய்ஸ்க்கு பிடிக்காதாச்சே…” என்றாள் யோசனையாக.
அண்ணாவா… என உள்ளுக்குள் அதிர்ந்தவன், அதுக்கு சார்ன்னு கூப்பிடறதே பரவாயில்லை என நெஞ்சை நீவி விட்டுக் கொண்டான்.
“ஆமா பாய்ஸ்க்கு அப்படி கூப்பிட்டா பிடிக்காதுன்னு எதை வெச்சு சொல்லற?”
“ஸ்கூல்ல சீனியர்ஸ் இருப்பாங்களே… அவங்களை சீனியர்ன்னு தான் கூப்பிடணும். அண்ணான்னு சொன்னா அவ்வளவு தான்… ‘இவ பெரிய உலக அழகி இவ அண்ணான்னு சொல்லாட்டி நாங்க இவளோட கையை பிடிச்சு இழுத்திடுவோம்’ன்னு வெச்சு செய்வாங்க. நமக்கெதுக்கு வம்பு சொல்லுங்க… எல்லாரையும் சீனியர்ன்னே கூப்பிட்டுடுவேன்” அவள் பாவமாகச் சொல்ல,
அவன் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, “ஓ…” என்றான் ராகமாக. “இல்லை உன் தம்பி தங்கச்சியே என்னை ஈஸா, பிரகான்னு பேர் சொல்லித் தான் கூப்பிடுவாங்க. நீ மட்டும் சார்ன்னு கூப்பிடறியேன்னு தான் கேட்டேன்” அவளுக்கு அவனை எப்படி அழைப்பது என எடுத்துக் கொடுத்தான்.
“ஓ…” என்று இப்பொழுது அவள் இழுத்தாள். முகமும் யோசனைக்குச் சென்றது.
“என்ன யோசிக்கிற?”
“இல்லை அவங்களுக்கு உங்களைச் சின்ன பிள்ளையா இருக்கும்போது இருந்தே தெரியும். நல்ல உறவும் இருக்கும். அதுல உரிமை வரதும் சாதாரணம் தானே? அப்படி உங்களை உரிமையோட கூப்பிட்டிருக்கலாம். ஆனா நான் அப்பா வீட்டுக்கு வரதே வருஷத்துக்கு ஒருமுறை. உங்களையும் எப்பவாவது தான் பார்த்திருக்கேன். அதிகம் பேசினதும் இல்லை. அதனால அப்படி கூப்பிட வராம இருக்கும் போல…” என்றாள் விளக்கமாக.
அவனுக்கு அவள் சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்ன பேசுகிறோம் என்று கூட யோசிக்காமல், “அதுனால இப்ப என்ன குறைஞ்சு போச்சு? உனக்கும் என்கிட்ட எல்லா உறவும் உரிமையும் இருக்கு. நீ தான் எனக்கு எதுவும் தர மாட்ட போல?” என்று மனதை மறையாது சட்டென்று குறைபடுவது போலச் சொல்லிவிட்டான்.
சொன்னபிறகே சொல்லிவிட்ட விஷயம் உரைக்க “ஸ்ஸ்ஸ்…” என உள்ளுக்குள் அலறியபடி, பின்னந்தலையை அவஸ்தையாகக் கோதிக்கொள்ள, அவளோ கண்களைச் சுருக்கி அவனைத் தான் யோசனையாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
“சரி சார் எனக்கு கொஞ்சம் வெளிய போக வேண்டிய வேலையிருக்கு… நான் வரேன்” என்றவள், சார் என்ற வார்த்தையில் அதிக அழுத்தம் கொடுத்திருந்தாள். அவன் பதிலை எதிர்பாராமல் நடக்கவும் தொடங்க,
“ஹே குள்ள கத்திரிக்காய்… உனக்கு புரிஞ்சிருக்கும்ன்னு எனக்கும் தெரியும்…” என்றான் சட்டென்று. இத்தனை நேரம் இருந்த கண்ணாமூச்சி ஆட்டம் இப்பொழுது பிரகதீஸ்வரனுக்கு தேவைப்படவில்லை போலும்!
அவனை நோக்கி திரும்பி நின்று கண்களால் முறைத்தாள். “ஆமா நீங்க வளர்ந்துட்டே போனா நாங்க குள்ளமா தான் தெரிவோம்… சொல்லுங்க குள்ள கத்திரிக்காய். குண்டு கத்திரிக்காய்ன்னு… என்ன வேணா சொல்லிக்கங்க” என்றவள் போய்விட்டாள்.
அவளுக்குள்ளும் அவன்மீது நல்ல அபிப்பிராயம் இல்லாமல் இல்லை. ஆனால், அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அவள் என்றுமே யோசித்ததே இல்லை.
என்னவோ இத்தனை ஆண்டுகள் பணம் தந்ததோடு தன் கடமை முடிந்தது என்று வாழ்ந்து வந்த தந்தை, இனி என்ன செய்வார் என தெரிந்துகொள்ள அவளுக்கு ஆர்வமாக இருந்தது. அவளுடைய ஆசை, எதிர்பார்ப்பு எல்லாம் அது மட்டும் தான்! தனக்காக ஒரு சிறு துரும்பையேனும் தன் தந்தையே அசைப்பாரா என்று ஆவலாகக் காத்திருந்தாள். அது கல்வியாகட்டும், இல்லை அவளுக்கான மணவாளன் ஆகட்டும். எல்லாம் தந்தையின் முடிவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தது பேதையின் மனம்!
இந்த சூழலில் இப்படிச் சட்டென்று வந்து பிரகதீஸ்வரன் இவ்வாறு சொல்லிவிட, அவளுக்கு கொஞ்சம் சலிப்பு தான். அவளுக்கு நினைவு தெரிந்து சில ஆண்டுகள் கழித்து இன்றுதான் பிரகதீஸ்வரனை முதன்முதலில் நேரில் பார்க்கிறாள். இப்படிப் பார்த்த முதல் நாளே அவன் இவ்வாறு பேசிவிட்டது அவளுக்குப் பயங்கர அதிருப்தி தான். அவனை மாயக்கண்ணன் அம்சம் என நினைத்துவிட்டாளோ என்னவோ?