“சிவா சிவாய போற்றி ஓம்! நமச்சிவாய போற்றி ஓம்!” பாடலின் ஒலி வழிநடத்திய திசையில் சென்ற மணிவண்ணன் தாத்தா அவர்களைக் கண்டுபிடித்திருந்தார்.
மணிவண்ணன் அந்த குடும்பத்தின் மூத்த தலைமுறை. அவருடைய ஒன்றே கால் வயது கொள்ளுப்பேரனைத் தேடிக்கொண்டிருந்தார்.
அந்த சின்ன சிட்டோ திரையில் ஓடிய பாகுபலி திரைப்படப் பாடலை ரசித்துக்கொண்டு, வாக்கரில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது.
“வாங்க தாத்தா. என்ன ரொம்ப நேரமா உங்களை ஆளையே காணோம்…” பொற்செழியனுக்கு உணவை ஊட்டியவாறே வரவேற்றாள் ஸ்ரீமதி. பெயருக்கு ஏற்றாற்போல மதிமுகம் தான்! அவள் முகத்திலிருந்த பிரகாசமும் சிரிப்பும் இவரையும் தொற்றிக்கொள்ள நொடியில் பிரகாசித்தார்.
“உங்க ரெண்டு பேரையும் எங்கே எல்லாம் தேடறது ஸ்ரீ?”
அழகாய் சிரித்தவள், “அப்படி எங்கே எல்லாம் தேடுனீங்க?” சுவாரஸ்யமாய் கதை கேட்கத் தயாரானாள்.
“தோட்டத்துல…”
அவர் மேலே தொடரும் முன் குறுக்கிட்டு, “வெயில் வந்துடுச்சு தாத்தா” என்றாள் வேகமாக.
“காலையிலேயே வெயிலா? அதோட நடு தோட்டத்துல தான் விளையாடுவீங்களா என்ன? ஓரமா வேப்பமரம் எல்லாம் இருக்கே…”
“வேப்பமரம் இருந்து என்ன செய்யறது தாத்தா? செழியன் அங்கே இருக்கணுமே…”
“ஓ…”
“சரி அப்பறம் எங்க போனீங்க?”
“தண்ணியில விளையாட விடுவியே அங்க தான்…”
“இந்த ஒரு இட்லியை வெச்சுட்டு ரொம்ப நேரம் சுத்திட்டு இருக்கேன் தாத்தா. தண்ணிகிட்ட கூட்டிட்டு போனா, இவன் இந்த இட்லியை அந்த தண்ணியில தூவி அபிஷேகம் பண்ணுவான். அதுதான் இங்கே கடத்திட்டு வந்துட்டேன்” ஹோம் தியேட்டர் அறைக்கு வந்த கதையைப் பெருமையாகச் சொன்னாள்.
“சரிதான்… எப்படியும் நாளைக்குத் தேடும்போதும் ரெண்டு பேரும் அகப்பட போறது இல்லை… உன் போனை தான் கொஞ்சம் கூடவே வெச்சுக்கிறது…”
“ஹாஹா… இந்த சுட்டி கையால என் போன் புட் பால் மாதிரி பறந்துட்டே இருக்கும். என் வசதிக்கு அது பேங்க்ல கொள்ளை அடிச்சா கூட கட்டுப்படி ஆகாது தாத்தா…” என்று சொல்லிச் சிரிக்க,
“வாயாடி…” என செல்லமாக வைதபடி கூட சேர்ந்து சிரித்தாலும், இந்த பெண் வசதியான வீட்டில் பிறந்தும், வசதியான வீட்டில் வாக்கப்பட்டும் தனக்கு வசதி இல்லை எனக் கேலி போல உண்மையைச் சொன்னதில் அவருக்கு மனதிற்குக் கஷ்டமாகத்தான் இருந்தது. ஏன் இந்த பெண்ணுக்கு மட்டும் இப்படி ஒரு விதி என கடவுளை நிந்திக்காமல் இருக்க முடியவில்லை.
“அது ஒன்னும் இல்லைம்மா. லேப்டாப்ல, மொபைல்ல கேம் விளையாடி விளையாடி ரொம்ப போர் அடிச்சது”
“காலையிலேயே உங்களுக்கு விளையாட்டா தாத்தா?” என முறைத்தாள்.
“எனக்கு ஐஞ்சு மணிக்கே தூக்கம் கலைஞ்சிடுச்சும்மா. அந்நேரத்துல என்ன பண்ண சொல்லு…”
தியானம் செய்திருக்கலாம். அமைதியாகப் படுக்கையிலேயே படுத்து சிறிது நேரம் ஓய்வில் கழித்திருக்கலாம். பாடல்களை மெல்லிய ஒலியில் ஒளிபரப்ப விட்டு ரசித்திருக்கலாம். ஏன் தோட்டத்தில் நடைப்பயிற்சி கூடச் செய்திருக்கலாம்.
ஆனால், தாத்தா செய்வதற்கு எதுவுமே இல்லை என்பதுபோல கூறுகிறாரே? இவருக்கு இதெல்லாம் பழக்கத்துக்குக் கொண்டு வர வேண்டும் என தனக்குள் குறித்துக்கொண்டாள்.
“ஆக, போர் அடிக்கும் வரைக்கும் விளையாடி இருக்கீங்க… ரொம்ப நல்லது” என கேலி செய்தவள், “சாப்பிட்டீங்களா இல்லையா?” என்க,
“சாப்பாடா? இன்னும் இல்லைம்மா. இனிமே தான். மறுபடியும் விளையாட வேற ரொம்ப போரா இருந்ததா… அவன் ஒரு மணி நேரம் இட்லி சாப்பிட்ட கதையை நீ ரெண்டு மணி நேரம் பேசி டைம் பாஸ் பண்ணி விடற பாத்தியா… அதுதான் உன்கிட்ட பேசினா நேரம் போகும்ன்னு தோணிச்சு உங்களைத் தேடி வந்துட்டேன்” அவர் இவளின் காலை வாரிவிட இடுப்பில் கை தாங்கி மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க முறைத்தாள்.
“கொள்ளுப்பேரன் மேல பாசம்ன்னு சொல்லியிருக்கலாம். இல்லை எனக்கு குட் மார்னிங் சொல்லன்னு சொல்லி இருக்கலாம். இல்லை உன்னோட சேர்ந்து சாப்பிட போலாம்ன்னு தேடினேன்னு சொல்லியிருக்கலாம். அதையெல்லாம் விட்டு…” என அவள் கண்ணை உருட்டி முறைக்க,
“என்னம்மா செய்யறது எனக்கு உண்மையைப் பேசி மட்டும் தானே பழக்கம்” என முகத்தைத் தொங்கப் போட்டபடி சோகம் போலச் சொல்லி அவளைச் சீண்டி விட்டார்.
“உங்களை…” என்று போலியாக மிரட்டிக் கொண்டே விரட்டினாள். தாத்தா தன் வயதை மறந்து ஓடினார்.
அறையின் வாயிலைத் தாண்டி ஸ்ரீமதியிடம் அகப்படாமல், அவர் சிரிப்போடே மெதுவாக ஓடுவதற்கும், பிரகதீஸ்வரன் அலுவலகம் கிளம்பி அவ்வழியாக வருவதற்கும் சரியாக இருந்தது.
அவரது ஓட்டத்தையும் துடிப்பையும் பார்த்தவன் அதிசயத்தைக் காண்பது போலப் புரியாமல் குழம்பி நின்றான் என்றால், அவரின் பின்னால் அவரை பிடிக்கப் பின்தொடர்ந்து வந்த அவனின் புது மனையாளின் விளையாட்டு செயலை நம்ப முடியாமல் பார்த்து நின்றான்.
இருவருமே அவன் கணிப்புக்கு அப்பாற்பட்டவர்கள் தான்! அவர்களின் எல்லைக்குள் இதுவரை அவன் சென்றதில்லை என்றும் சொல்லலாமோ?
“லாஃபிங் தெரபி, வாக்கிங், ஜாக்கிங் எல்லாம் வீட்டுக்குள்ளேயே செய்யலாம்ன்னு பார்த்தா… லாட்ஸ் ஆஃப் டிஸ்டர்பண்ஸ்ஸஸ்” என்று பேரன் பிரகதீஸ்வரனை ஓரக்கண்ணால் நோக்கியபடியே புலம்பியவர்,
“நான் அப்படியே தோட்டத்துக்கு போயே கண்டினியூ பண்ணிக்கிறேன் ஸ்ரீ. நீங்க ரெண்டு பேரும் சீக்கிரம் வாங்க…” என்று புதிய உறவான பேத்தியிடம் சொல்லிவிட்டு சென்றிருந்தார்.
அவர் எப்பொழுதும் அப்படித்தான். இந்த வீட்டில் யாரோடும் ஒட்ட மாட்டார். மகன், மருமகள், பேரன், பேத்தி என யாரிடமும்! ஆனால், புதிதாக வந்த இவளிடம் எப்படி இந்தளவு நெருக்கம் என பிரகதீஸுக்கு பயங்கர குழப்பம்.
ஸ்ரீமதி, பிரகதீஸ்வரனின் இல்லத்தரசி ஆகும் முன்பே… இந்த வீட்டிற்கு, வீட்டில் உள்ளவர்களுக்கு குடும்ப உறவு என்னும் வகையில் ஓரளவு பரிச்சயமானவள் என்றாலும், அப்படி ஒன்றும் தாத்தாவோடு ஒட்டி உறவாடியும் அவன் பார்த்ததில்லை.
தாத்தாவை இந்த மாதிரி பரிமாணத்தில் பிரகதீஸ் இதுவரை பார்த்ததாக நினைவில் இல்லை. தாத்தாவை இப்படிப் பார்க்க வியப்பாக இருந்தது. என்னவோ மனதிற்குள் சிறு இதமாகக் கூட உணர்ந்தான்.
இதை எப்படி ஸ்ரீமதி சாதித்தாள் என்ற யோசனையோடே அவளைக் கடந்து பொற்செழியனை காண அறைக்குள் சென்றான். முகம் முழுவதும் இட்லியைப் பூசிக்கொண்டு சின்ன கண்ணன் போல இருப்பவனை கைகளில் அள்ளி, கொஞ்சி, முத்தமிட்டான்.
இப்பொழுது திரையில், “ஸீ எஸ் எ பேன்டஸி… ஷனான னான ஓ ஹோ…” என்ற பாடல் ஒளிபரப்பாகச் செழியன் பிரகதீஸின் அணைப்பையும் மீறித் துள்ளிக் குதித்தான். மழலையில், “ம்மா… ம்மா…” என ஆர்ப்பரித்தான்.
செழியன் இத்தனை ஆர்ப்பரித்து பிரகதீஸ் பார்த்ததே இல்லை. செழியனின் பார்வை கண்டுகளிக்கும் டீவி திரையையே, இப்பொழுது அவன் பார்வையும் மொய்த்தது. கருப்பில் ஆரஞ்சு பார்டர் கொண்ட காட்டன் புடவையில் ஜோதிகா சிரித்த முகமாக வலம் வந்தார்.
செழியனின் ம்மா அழைப்புக்குச் சொந்தக்காரி இப்படியா இருக்கிறாள். அவன் பார்வை இப்பொழுது ஆராய்ச்சியாக அறையின் வாயில் அருகே நின்றிருந்த ஸ்ரீமதி மீது படிந்தது.
லெமன் எல்லோவ் டாப்பும், வெளிர் பர்ப்பில் பேலஸாவும் அணிந்து இவன்புறம் திரும்பும் எண்ணம் கூட இல்லாமல் அலட்சியமாக நின்றிருந்தாள். அலட்சியம் என்று சொல்லுமளவும் அவளின் செய்கைகள் இருப்பதில்லை தான் என்றாலும் ஒருமாதிரி ஒதுக்கம், புறக்கணிப்பு கண்டிப்பாக இருந்தது. இவன் ஒருவன் இருக்கிறான் என்றே கண்டுகொள்ள மாட்டாள்.
ஆனால் அதுவும் தான் ஏன்? அவனுக்குப் புரியவும் இல்லை. அவனே அவளை விட்டு ஒதுங்கி இருக்கத்தான் நினைத்திருந்தான். அதற்கு வாய்ப்பளிக்காமல் அவளே ஒதுங்கியிருப்பது உண்மையில் அவனுக்கு நல்லது தான்! ஆனால், அவனது மனம் முரண்டியது. ஏன் ஏன் எனக் கேட்டு குடைந்து கொண்டேயிருந்தது.
மீண்டும் செழியனின் ஒப்பீடு நினைவிற்கு வர, இந்த குள்ள, குண்டு கத்திரிக்காய் ஜோதிகாவாக்கும். இவனும் இவன் கண்ணும். அவன் தலையில் வலிக்காமல் முட்டிவிட்டு மீண்டும் அவனை வாக்கரிலேயே விட்டான். மீண்டும் மனைவியை நோக்கி பாயத் துடித்த பார்வையை முயன்று இழுத்துப்பிடித்து, தலையை அலட்சியமாக உலுக்கிவிட்டு விறுவிறுவென அறையை விட்டு வெளியேறி இருந்தான்.
உண்மையில் ஸ்ரீமதி சராசரி உயரம். இந்த வளர்ந்து கெட்டவன் அருகில் குள்ளமாக அவனுக்கு தோன்றுகிறது போல! உடலும் சற்று பூசினாற்போல தேகம்! ஒல்லி பெல்லி என பார்த்துப் பழகிய இவன் கண்களுக்கு அவள் குண்டு கத்திரிக்காயாகி விட்டாள்.
இவனின் அபிமானம் ஸ்ரீமதியும் அறிந்ததே! ஆனாலும் அவனையே கண்டுகொள்ள விருப்பமில்லாத போது இந்த அனுமானத்தை மட்டும் கண்டுகொள்ளவா போகிறாள். ‘போடா போடா’ என்ற அலட்சியபாவம் மட்டுமே கணவனுக்கானது.
அதன்பிறகு அவளின் மாமனார் சக்திவேல், மாமியார் லலிதா, கணவன் பிரகதீஸ்வரன் என எல்லாருமே காலை உணவை முடித்ததோடு, அவரவர் வேலைக்கென வெளியே கிளம்பிவிட, பிள்ளையோடும் தாத்தாவோடும் அவளின் நேரம் கடந்தது.
வேதாச்சலம், வள்ளி தம்பதியின் மூத்த மகள் தான் ஸ்ரீமதி. வள்ளி இவள் பிறந்த சில மாதங்களிலேயே தவறிவிட, வேதாச்சலம் இரண்டாவதாக மாலதியை மணந்து கொண்டார்.
மாலதியை மணக்கும்போதே மூத்த தாரத்தின் மகளது பொறுப்பை ஏற்க முடியாது என்ற நிபந்தனையோடுதான் வேதாச்சலத்தை மணந்து கொண்டார்.
வேதாச்சலமும் அவருக்காகத் தான் திருமணம் செய்து கொண்டாரே தவிர, மகளுக்காக… அவளை வளர்க்க துணை வேண்டும் என்ற எண்ணத்தில் எல்லாம் இல்லை. ஆக, மாலதியின் நிபந்தனையில் அவருக்கொன்றும் ஆட்சேபனை இல்லை.
வள்ளி இறந்ததும் மகளை மாமியார் வீட்டில் விட்டுதான் வேதாச்சலம் வளர்த்து வந்தார். செலவுக்கென்று ஒரு குறிப்பிட்ட தொகையை மாதாமாதம் தந்து கொண்டிருந்தார். மாமியாரின் காலத்திற்குப் பிறகு, மகளை ஹாஸ்டலில் சேர்த்து விடுவது என்றுதான் யோசித்திருந்தார்.
வேதாச்சலத்தின் இந்த செய்கை எதிலுமே உடன்பாடில்லாதிருந்தவர் அவரது தந்தை தர்மராஜன். நல்ல உழைப்பாளி! மிகவும் கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறியவர்.
மகன் கல்லூரி படிப்பில் இருக்கும்போதே அவரின் மனைவி இறந்திருக்க, மகனைப் படிக்க வைத்து ஆளாக்கி, தன் நண்பன் மணிவண்ணனோடு சேர்ந்து தொடங்கிய தொழிலையும் கற்று தந்து, அலுவலகத்தில் பொறுப்பும் கொடுத்து, திருமணமும் முடித்து வைத்தார்.
பேத்தி ஸ்ரீமதி பிறந்த சில மாதங்களிலேயே ஒரு விபத்தில் மருமகள் இறந்தது வருத்தம் என்றால், மகன் தன் சொந்த மகளை மாமியார் வீட்டில் விட்டு வளர்க்க சொன்னது இன்னமும் வருத்தம். சரி இது பெண்கள் இல்லாத வீடு. இங்கு வேலையாட்கள் மூலம் தான் வளர்க்க முடியும். ஆனால், அங்கென்றால் சம்பந்தியம்மா நன்றாகப் பார்த்து கொள்வார்கள் என்று மனதைத் தேற்றிக் கொண்டார்.
ஆனால், மகன் அடுத்த திருமணம் வேண்டும் என புது மாப்பிள்ளை அவதாரம் எடுக்கத் தயாரானபோது அவருக்குத் தன்னை தேற்றிக்கொள்ளவே முடியவில்லை.
மகனை ஒற்றையில் விடும் எண்ணம் அவருக்கும் இல்லைதான் என்றாலும், அதற்காக இத்தனை சீக்கிரம் அவர் எதிர்பார்க்கவேயில்லை. மகனிடம் அதைக் கேட்கவும் செய்தார்.
அதற்கு அவனோ, “அப்பா எனக்கு இப்பவே முப்பது வயசாயிடுச்சு. இனி எப்ப கல்யாணம் செய்யறது எனக்கு வயசான பின்னாடியா?” என்று திருப்பி கேட்டான்.
மகனின் பிடிவாதத்தில், “சரி பெண் பார்க்கிறேன்” என்றவரிடம்,
இவர்களுக்கு நிகராக நல்ல வசதி வாய்ப்புள்ள பெண் ஒருத்தியைக் கூட்டி வந்து பிடித்திருக்கிறது என்று நின்றான். அவருக்கு எதையும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இரண்டு வருடங்கள் என்றாலும் மருமகள் வள்ளியோடு மனம் ஒத்து வாழ்ந்திருக்கிறான் தானே! அதற்குள் அந்த பெண்ணை மறந்து வேறு பெண்ணை தேட சொல்கிறான் என்று பார்த்தால், இப்பொழுது அவனே ஒரு பெண்ணை அழைத்தும் வந்திருக்கிறான். இவ்வளவு சீக்கிரம் மனம் மாறி விடுமா என்ன?
மகன் ஒப்புதல் கேட்கும் எண்ணத்திலேயே இல்லை. தகவல் சொல்கிறான். தலையாட்டும் நிலையில் தான் அவர் இருந்தார். திருமணத்திற்குச் சம்மதித்தவருக்கு இருக்கும் ஒரே ஆறுதல், பேத்தி இனியாவது தங்களுடன் இருப்பாள் என்பதுதான்.
ஆனால், மருமகள் மாலதி பேத்தி ஸ்ரீமதியின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என்று தெரிந்து மனதளவில் தளர்ந்து போனார். இப்படி ஒரு மகனையா நாம் பெற்று வளர்த்தோம் என மனம் விட்டுப் போனது மனிதருக்கு.
இத்தனை வசதி இருந்தும் பேத்தியை அனாதை போல வளர்க்க முடிவெடுத்து விட்டானே… இவனுக்குப் பாசமே இருக்காதா என நொந்து போனார். அவர் காலம் வரைக்கும், பேத்தியை அவ்வப்பொழுது சென்று பார்த்து வருவார். தன் மனைவியின் நகைகளையும், அவருக்குச் சொந்தமாக இருந்த ஒரு வீட்டையும் பேத்திக்கு என்று சொத்தெழுதி வைத்தார்.
மாலதிக்குப் புகைச்சல் தான். “அது பரம்பரை பரம்பரையா வந்த நகை இல்லைம்மா. என் பொண்டாட்டிக்கு நான் சம்பாரிச்சு வாங்கி போட்ட நகை. தாயில்லா பொண்ணுக்கு தர நினைக்கிறேன்” என்று நேரடியாகச் சொல்லி விட்டார்.
நீ தாய் ஸ்தானத்தில் இருந்து அவளுக்கென்று எதையும் சேர்த்து வைக்கப் போவதில்லை. அவளுக்கான பொறுப்பையும் எடுத்துக்கொள்ள மாட்டாய்! அதுதான் நானே செய்கிறேன் என்று மறைமுகமாகச் சொல்ல, அவளுக்குப் பயங்கர கோபம். முகத்தைத் திருப்பிக்கொண்டு போய்விட்டாள்.
ஆனால், பேத்தி ஸ்ரீமதி குறித்த கவலையினாலோ என்னவோ அவர் அடுத்த ஓரிரு ஆண்டுகளிலேயே இறந்து போனார். ஸ்ரீமதிக்கு அப்பொழுது மூன்றரை வயது தான்.
வேதாச்சலம், மாலதி தம்பதிகளுக்கு அனுஷா, சரண் என இரு பிள்ளைகள். அவர்கள் இருவரும் இவர்களோடு வளர, ஸ்ரீமதி தாய் தந்தை அரவணைப்பின்றி பாட்டியிடம் வளர்ந்து வந்தாள்.
அவள் ஆறாம் வகுப்பு படிக்கும்போது பாட்டியும் தவறிவிட… சின்னப்பிள்ளை என்ன செய்யும்? மாமா வீட்டிற்கும், பெரியம்மா வீட்டிற்கும் காலை நேரத்தில் அழுதுகொண்டே ஓடி, “பாட்டி தூங்கிட்டே இருக்காங்க. எழுந்திரிக்கவே இல்லை” என சொல்லி அழைத்து வந்தாள்.
அப்பொழுது அவளுக்குத் தெரியாது, இனி அவளை வளர்க்கவோ, பார்த்துக்கொள்ளவோ, பாதுகாக்கவோ ஆள் இல்லை என்று!