“நீ கூட இருந்து சொல்லிக்குடுத்தே பாஸ் ஆகல இப்போ எங்கேயிருந்து படிக்க” என்றவர் விழியை முறைத்துக்கொண்டு உள்ளே செல்லத் தோழியை அழைத்துக்கொண்டு அறைக்குள் சென்றாள் மலர்.
“ஏண்டி இப்படி பேசி வாங்கிக்கட்டிக்குற ஒழுங்கா படிச்சு அந்த மூணு பேப்பரையும் முடி” என்றவளை குறுகுறு என்று பார்த்த விழி “சந்தோஷமா இருக்கியா மலர்” என்க கொடிமலரின் கன்னங்கள் துடுத்தது.
“போடி” என்றவளை நெருங்கிய விழி “சொல்லுடி அண்ணா நல்லா பாத்துக்குறாங்களா” என்க வெளியில் கணவனின் சிரிப்பொலி கேட்டது “ஹ்ம்ம் ரொம்ப நல்லா பாத்துக்குறாங்க” என்றவள் முகமும் அதைப் பறைசாற்றியது.
அதிவீரன் கொடிமலரின் திருமணத்திற்கு ஒருவாரம் முன்பு கயல் விழியைக் கடலூரிலிருந்து வந்தவர்கள் பெண் பார்த்துச் சென்றிருந்தனர், முதல்நாள் மாலைபோல அழைத்தவர்கள் திருமணத்திற்கு அவர்கள் விருப்பத்தைக் கூறியிருந்தனர்.
திருமணத்தை ஒரு மூன்று நான்கு மாதத்தில் வைத்துக்கொள்ளலாம் என்றவர்கள் கேட்டிருக்க அதைப் பற்றி அதிவீரனிடம் பேசிக்கொண்டிருந்தார் ராஜப்பன்.
திருமணம் முடிந்த இரண்டாம் நாள் மலரை அழைத்துக்கொண்டு பாண்டிச்சேரி சென்றான், சினிமா கடற்கரை கொஞ்சம் ஷாப்பிங் என்று அந்த நாள் செல்ல மறுநாள் காலையே வந்துவிட்டனர் சுகுமார் செல்வி தம்பதியர் இருவரையும் விருந்துக்கு அழைத்துச்செல்ல.
வீடே ஆட்களால் நிறைந்திருந்தது சுமதி அவளின் கணவன் பரமு, கஸ்தூரி அவளின் கணவன் பிரபு, சித்தப்பா ராஜப்பன் சித்தி பூங்கோதை, கயல்விழி அண்ணன்கள் சுகுமார் முத்து அண்ணிகள் செல்வி வள்ளி என்று ஏதோ விசேஷ வீடுபோல இருந்தது.
சுமதி கஸ்தூரியின் பிள்ளைகள் மட்டும் பள்ளிக்குச் சென்றிருந்தனர் ‘செல்லமாட்டோம்’ என்றவர்களை சீக்கிரம் வந்துவிடலாம் என்று கெஞ்சி அனுப்பியிருந்தனர்.
“கயலுக்கு ஒரு நல்ல சம்மந்தம் வந்திருக்கு மாப்ள பையன் கடலூர்ல வக்கீலா இருக்கார், நமக்கும் திருப்தி அவங்களும் சம்மதம் சொல்லிட்டாங்க, என்ன… கல்யாணம் மட்டும் ஒரு மூணு நாலு மாசத்துல வெக்குற மாதிரி பேசியிருக்காங்க”.
“அதுல பாருங்க மாப்ள நாலு மாசம்ன்னா நீங்கத் துபாய்ல இருப்பீங்க, எங்க வீட்டு பொண்ணு கல்யாணம் முடிஞ்சு கலந்துக்குற முதல் விஷேஷம் அதுல மலர் தனியா நிக்குறது மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கும் அதனால…” என்றவர் அனைவரையும் ஒருமுறை திரும்பிப் பார்த்தார்.
அவர் சொல்லிமுடிக்கட்டும் என்று எண்ணிய அதிவீரன் அவரையே பார்த்திருக்க “நீங்கத் துபாய் போறதுக்குள்ள சின்னதா வீட்டோட ஒரு நிச்சயம் வெச்சுக்கலாம்னு யோசிக்கிறோம் உங்களுக்குச் சவுரியப்படுமா?” என்றவரை உண்மையில் வியந்து பார்த்திருந்தான் அதிவீரன்.
கொடிமலர் அவருடைய சொந்த மகள் கூட இல்லை என்றாலும் திருமணம் முடிந்து அவள் பங்குபெறும் முதல் குடும்ப நிகழ்வில் கணவனுடன் சேர்ந்து நிற்க வேண்டும் என்று விரும்புகிறார்.
மணம் முடித்து வேறு வீட்டிற்கு அனுப்பும் பெண்பிள்ளைகளின் மனதை வாழ்வை பற்றி எவ்வளவு யோசிக்கிறார்கள் என்ற பிரம்மிப்பு வந்தது, இந்தக் குடும்பத்தில் தன்னை இணைத்துக்கொள்ள காரணமான மனைவியின் மீது அவன் விழிகள் படிந்தது.
அவனுடைய இந்தக் குணம்தானே அந்த வீட்டு பெண்ணை அவனுடன் இணைத்து வைக்கக் காரணமானது.
“சந்தோஷமா இருக்கத்தானே பாப்பா” என்ற அக்காவை நிமிர்ந்து பார்க்கவே முடியாமல் வெட்கத்தில் சிவந்தாள் கொடிமலர், அவளைப் பார்த்திருந்த வீட்டு பெண்களின் மனது நிம்மதியடைந்தது.
ஆண்கள் அனைவரும் தோட்டத்திற்கு சென்றிருக்க அடுக்களையில் ஆளுக்கு ஒரு வேலை பார்த்துக்கொண்டே பேச்சும் நடந்தது.
“இந்த விருந்தே உனக்குதான் நீ எதுக்கு வேலை செய்ற எல்லாம் நாங்க பாத்துக்குறோம்” என்ற செல்வி அவள் கையில் கொஞ்சம் பலகாரத்தைக் கொடுத்து அமரவைத்துவிட்டாள்.
மனைவியின் வீட்டில் வந்து தங்கும் கணவர்களுக்கு ஒரு வித அசௌகரியம் இருக்கும், அப்படியொரு நிலை அதிவீரனுக்கு வரவில்லை மனைவியின் வீட்டில் இருந்த மூன்று நாளின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ்ந்தான்.
பரமு மற்றும் பிரபு உடன் பிறந்தவனை போல உரிமையோடு பழகச் சுகுமாரும் முத்துவும் மாப்பிளை மாப்பிள்ளை என்று ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தனர்.
விவசாயம் பற்றிய சந்தேகங்களை அவர்களிடம் இவன் தெரிந்துகொள்ள, துபாய் பற்றிய செய்திகளை இவர்கள் தெரிந்துகொண்டனர், பகலில் அவர்கள் வயலில் வேலை நடப்பதை சென்று பார்த்திருப்பான்.
ஒருநாள் மொத்த குடும்பமும் ஒன்றாகக் கோவில் சினிமா என்று சென்று வந்தனர், இவர்கள் தங்கியிருந்த மூன்று நாளும் உறவுகள் ஆள் மாற்றி ஆள் வீட்டிற்கு வந்து விசாரித்துச் சென்றனர், அனைவருமே திருமணத்திற்கு வந்திருந்தவர்களே என்றாலும் பெண்ணும் மாப்பிள்ளையும் வந்திருப்பதை அறிந்து அவர்களுக்கு நேரம் இருக்கும்போது “நல்லா இருக்கீங்களா” என்று வந்து நலம் விசாரித்துச் சென்றனர்.
இதெல்லாம் அவனுக்குப் புதியதாக இருந்தது வெகுகாலம் வெளிநாட்டில் இருப்பதால் பெரிதாக உறவுகளுடன் ஓட்டுதல் இல்லை, அதோடு ராஜவேலுவு மற்றும் ஆதவன் குணத்தால் பலரும் அதிகம் உறவாடுவதில்லை, உறவுகளை அரவணைத்துச்செல்லும் இவர்களைப் பார்க்க நெழிச்சியாய் இருந்தது.
அவன் மிகவும் கஷ்டப்பட்ட ஒரே விஷயம் விருந்து சாப்பாடுதான், அவர்களின் மொத்த அன்பையும் அவன் இலையை நிறைப்பதில் காட்டினர் மலரின் வீட்டினர்.
அன்று மதியம் உணவருந்த அமர்ந்தவன் கீழே வாழையிலை இருக்கிறதா என்று சந்தேகம் கொண்டு சாதத்தை நகர்த்தி பார்த்தான், அத்தனை பதார்த்தங்களை வைத்து இலையை மறைத்திருந்தனர்.
“மச்சான் நான் ஒன்னு சொன்ன தப்பா எடுத்துக்க மாட்டீங்களே” என்றவனை அவர்கள் கலவரமாகப் பார்த்தனர் “சொல்லுங்க மாப்ள” என்றான் சுகுமார்.
“பிளைட்ல இவ்ளோ வெயிட் தான் கொண்டுபோகணும்னு இருக்கு”.
“சரிங்க மாப்ள”.
“இப்படியே இன்னும் ரெண்டு நாள் சாப்டா வெயிட் அதிகம்னு என்னையே பிளைட்ல ஏத்தமாட்டாங்க” என்று பாவமாக அவன் கூற கொடிமலர் சிரித்துவிட்டாள், மற்றவர்களும் சேர்ந்து சிரிக்க தொடங்க மச்சான்கள் அசடு வழிந்தனர்.
ஆதிலக்ஷ்மியின் வீட்டில் இவர்களை அழைத்து விருந்து வைக்கவில்லை, அதற்காக அவள் எவ்வளவோ போராடியும் கணவனிடம் அடியும் மீதியும் கிடைத்ததே ஒழிய அவனோ அவன் தாயோ சம்மதிக்கவில்லை, விஷயம் கேள்விப்பட்ட அதிவீரன் அக்காவிடம் கோபம்கொண்டான்.
“மரியாதை இல்லாத எடத்துல ஒரு வாய் சோறு எறங்குமா எனக்கு அவ்ளோ கேவலமாவா போய்ட்டேன்” என்றபோது அவள் பதறிவிட்டாள் “நம்ம வீட்டுக்கு வரும்போது உன்கையாலே சமைச்சுப்போடு நானும் என் பொண்டாட்டியும் வயிறார சாப்பிடுறோம்” என்றுவிட்டான்.
முறைப்படி அதிவீரன் மற்றும் பார்த்திபன் வீட்டிற்கு சென்று மகளின் நிச்சயத்திற்கு அழைப்பு விடுத்து வந்தனர் ராஜகோபால் பூங்கோதை தம்பதியர்.
கயல்விழியின் நிச்சயம் நல்ல முறையில் நடந்து முடிந்தது, மணமான பெண்ணாகக் கணவனுடன் நின்று குடும்ப விழாவில் பங்கெடுப்பது புது அனுபவமாக இருந்தது கொடிமலருக்கு, ஆலிவ் மஞ்சள் நிற சில்க் சாரியில் மிளிர்ந்தவள் இங்கும் அங்கும் நடந்து அவன் பொறுமையை சோதித்தாள்.
இப்பொழுதெல்லாம் புடவை மட்டுமே உடுத்துவது கணவனுக்கு அதுவே பிடித்தம் என்பதால் “சுடி போட்டுக்கோ கொடி உனக்குப் பிடிச்சமாதிரி இரு, இங்க எந்தக் கட்டாயமும் இல்லை” என்று அவன் கூறியபோதும் அவளுக்கே இப்பொழுது புடவை மட்டுமே பிடிக்கிறது, ராஜவேலுவும் பார்வதியும் சாப்பிட்டு புறப்பட்டுவிட பின்னாலே பார்த்திபனும் சிவகாமியும் சென்றுவிட்டனர்.
மாலை வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க அவனிடம் எதையோ கேட்கத் தயங்கி தடுமாறி நின்றான் கஸ்தூரியின் கணவன் பிரபு “என்னண்ணா என்கிட்டே ஏதாவது கேட்கணுமா” என்ற அதிவீரனை பார்த்தவன் அவன் அருகில் வந்து அமர்ந்தான்.
“அது ஒண்ணுமில்ல தம்பி நீங்கத் தப்பா எடுத்துக்கக் கூடாது, என் அக்கா மகன் ராகேஷ் படிச்சுப்புட்டு வேலை இல்லாம சின்ன சின்ன வேலை செஞ்சுகிட்டு இங்கேயே இருக்கான், அவனுக்குத்தான் எங்க மூத்த பொண்ண குடுக்குறதா பேசியிருக்கோம், துபாய்ல எதுவும் வேலை கிடைக்க வழி இருக்குங்களா”.
“அவங்க அப்பா… அதான் என் மாமா ஆக்சிடென்ட் ஆனதுல ஏழு வர்ஷம் படுக்கைல கிடந்தது இறந்துட்டாரு, நெறய கடன் ஆகிப்போச்சு நிலம் வீடு எல்லாம் வித்தாச்சு அவனும் பாவம் எப்படிலாமோ ஓடி ஓடி உழைக்கிறான், எப்படியாவது கரை ஏத்தி விட்டா போதும்” என்றவர் குரலில் ஒரு வித சங்கடம் நிறைந்து இருந்தது.
நாம் நினைத்தவுடன் அங்கு வேலை எல்லாம் வாங்கிவிட முடியாது என்றாலும் ஏழு வருடங்கள் அங்கேயே இருந்ததால் சில பெரிய மனிதர்களைத் தெரியும், சில பிள்ளைகளுக்கு வழியும் காட்டியிருக்கிறான்.
“ராகேஷ்கிட்ட நாளைக்கு கடைக்கு வந்து பாக்க சொல்லுங்கண்ணா என்னால முடிஞ்சத முயற்சி பண்றேன்” என்றவனை அப்படியே தழுவிக்கொண்டான் பிரபு, அவன் வார்த்தையே அவர்களுக்குப் புது தெம்பை அளித்தது.
இரவுணவை முடித்துவிட்டு இருவரும் புறப்படட்டனர், இன்று கணவனை நன்றாக நெருங்கி அமர்ந்து இடையோடு கைச்சேர்த்து அணைத்துக்கொண்டாள் கொடிமலர், தானாகவே ஒரு மென்னகை வந்து ஒட்டிக்கொண்டது அவன் இதழ்களில், அவள் கரங்களை இறுக்கமாகப் பற்றிக்கொண்டான்.