லேகாவின் விருப்பத்தை கேட்க்க என.. தனியான அறையில் இருந்தனர்.. லேகா இவ்வாறு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். மனதில் அன்று ஷிவா சொல்லிய ‘எனக்கு பிடித்திருக்கு.. அப்பா அம்மா வரும் போது யோசித்து சொல்லு’ என்றிருந்த வார்த்தைகள் மனது முழுவதும் நிறைந்திருந்தது. அது இனிமையாகவே நிறைந்திருந்தது.
தந்தை, ஹாலில் அமர்ந்து தன் மச்சான்களோடு பேசிக் கொண்டிருந்தார்தான், ஆனால், மனம் முழுவதும் தன் பெண்ணிடமும் சென்னையில் இருக்கும் தன் மகன் என்ன சொல்லுவனோ என்றேதான் இருந்தது.
ரமேஷ் “எல்லாம் பிள்ளைகள் விருப்பம்தான் சுந்தரம் மச்சான்.. நான் என்ன சொல்ல.. வரட்டும்.. பேசிக்கலாம்” என ஏதேதோ சமாளிப்புகள் இருந்தது.
ஆனால், வடிவேல் விடவில்லை.. “சரிங்க, தங்கச்சி கேட்டபோது நாங்க, மறுத்துட்டோம். ரமேஷ், ஷிவாவிற்கு அப்போது திருமணத்தில் விருப்பமில்லை.. வேலை வேலைன்னு ஓடிட்டே இருந்தான். உங்களுக்கு தெரியாது.. அப்பாவிற்கு அப்போதே உடல்நலமில்லை.. அதில் எங்கே போய் கல்யாணம் அதுஇதுன்னு.. பேச. அதான்.. கொஞ்சம் தாமதம் ஆகிடுச்சி. உனக்கு புரியுமே மாப்பிள்ள.. நம்ம தொழில் பற்றி எல்லாம். நீயே சொல்லு.. கொஞ்சம் அசந்தால் போதும்.. மார்க்கெட் போகிடும். எங்க போய் கல்யாணம் பற்றி யோசனை வரும். இப்போதான் கொஞ்சம் நிதானிச்சிருக்கான் ஷிவா.. தங்கச்சி ஆசைப்பட்டது நடக்க போகுது. சந்தோஷமா சரின்னு சொல்லுங்க மாப்பிள்ள.. யாருக்கு எங்கேன்னு இருக்கோ.. நம்ம கையில் என்ன இருக்கு.. சொல்லுங்க” என பேசி பேசி.. ஒருமாதிரி ரமேஷினை கட்டி வைத்திருந்தனர்.
இப்போது ரமேஷின் அக்கா “ அதேதான் ரமேஷ்.. யோசிக்காத, எல்லாம் ஹம்சாவின் விருப்படிதானே நடக்குது. சந்தோஷமா சம்மதம்ன்னு சொல்லு.. இவ்வளவுதூரம் கேட்க்கிறாங்கல்ல..” என்றார்.
ரமேஷிற்கு மறுக்க முடியவில்லை. அத்தோடு, முன்பே ஆசைப்பட்டாள் தன் மனையாள்.. அதனால், தேடி வரும்போது மறுக்க முடியவில்லை. “சரிங்க, லேகாவிற்கு சம்மதம் வேலு.. அதனால், நாம இதை பற்றி பேசலாம்.. ஆனால், சந்துரு விஷயம்.. அவனோடு விருப்பம்தான் வேலு.” என்றார்.
ஆனால், வடிவேலு “மாப்பிள்ள.. வா, கொஞ்சம் இப்படி வாயேன்” என்றார், சபையில்.
மோகனசுந்தரம் அண்ணனை அர்த்தமாக பார்த்தார். லதாவும் வசந்தாவும் தங்களுக்குள் பார்த்துக் கொண்டனர்.
ரமேஷின் அக்கா.. அவர்களுக்குள் பேச வேண்டும் என சாதரணமாக எண்ணிக் கொண்டார்.. பாவம் இந்த பணம் படைத்தவர்களின் பல்வகை.. பல்டிகள் தெரியவில்லை அவருக்கு.. “நான் போய்.. ஜூஸ் எடுத்து வரேன்” என சொல்லி நகர்ந்தார்.
இப்போது ரமேஷும் வடிவேலும் நகர்ந்தனர்.. வாசலுக்கு. சிட்டவுட்டில் சேர்கள் அடுக்கி இருக்க.. வடிவேலு.. தானாகவே எடுத்து இருவருக்கும் போட்டார். வடிவேலுவின் சுபாவம் எப்போதும்.. இருக்கும் இடத்தில் எல்லோரோடும் கலப்பதாக இருக்கும்.. நான் பெரியவன்.. என்ற உடல்மொழியே இருக்காது. தட்டி கொடுக்க வேண்டிய இடத்தில், தட்டி கொடுத்து.. இடித்துக் கூற வேண்டிய இடத்தில்.. சட்டென ஒரு வார்த்தை இடித்து பேசி.. என காரியம் சாதிக்க தெரிந்த காரியவாதி அவர். இப்போதும் அப்படியே.. ரமேஷினை பேசியே கரைக்கிறார்.
ரமேஷ் “மச்சான்.. நீங்க சொன்ன அதே விஷயம்தான். பையன் விருப்பமில்லாமல் எப்படி” என்றார்.
“ம்.. திஷின்றதால் யோசிக்கிறீங்களா.. அவளுக்கும் எல்லா சொத்தும் பங்..கு.. உண்டு” என்றார்..
ரமேஷ் கைகாட்டி நிறுத்தினார் “நீங்க இன்னமும் என்னை தப்பாகத்தான் நினைச்சிட்டு இருக்கீங்க” என்றார்.
“அஹ.. இல்ல.. இல்ல.. அது கொஞ்சம் தடுமாறிட்டேன். இந்த இருபத்தேழு வருடத்தினை நான் எப்படி மறப்பேன். நீ தங்கம்.. எங்கள் தங்கையை.. எதற்கும் ஏங்க வைக்காமல்.. எங்களிடம் வராமல் பார்த்துக்கிட்டியே. கிரேட். நாங்கதான் உன்னை கவனிக்கலை. எனக்கு தெரியும்” என்றார் அமைதியாக.. எல்லாவற்றையும் ஒப்புக் கொள்பவர் போல பேசினார்.
ரமேஷ் “அப்படியெல்லாம் இல்ல. பழசெல்லாம் எதுக்கு இப்போ..” என்றார்.
இருவருக்கும் நொடிநேரம் அமைதி..
பின் வடிவேலு “ரமேஷ்.. இப்படி சொல்லலாமா.. சந்துருவிடம் நாம பேசுவோம். சின்ன பெண்.. ஜாதகத்தில் இந்த மூணு மாசத்தில் கல்யாணம் நடக்கணும்ன்னு.. இருக்கு. அத்தோட ஒரு சிக்கல்..” என தங்கை கணவரின் முகம் பார்த்தார்.
ரமேஷ் குழப்பாமாக ஏறிட்டார் “உண்மைய மட்டும் சொல்லுங்க வேலு.. ஏன்.. என்னாச்சு” என்றார்.
வடிவேலு ஆழமாக ரமேஷினை பார்த்தவர் “உன்கிட்ட சொல்றதுதான் சரி.. ம்.. பினான்ஸ் கம்பெனி இருக்குல்ல.. அது அப்பா ஆரம்பித்தது சின்ன அளவில். அதன்பிறகு, நாங்கள் வளர்ந்து வரும்போது.. ப்ரைவேட் லிமிட்டா மாற்றினார் அப்பா. அப்போது, அவருடைய பங்கு.. 60% மற்றபடி, தன் தங்கையை ஒரு பகுதாரர்.. தன் சம்பந்தி.. அதான் என் மனையாளின் பிறந்த வீட்டினை ஒரு பங்குதாரர்.. மற்றும் நாங்கள் இருவர் பங்குதாரர்கள் என கொண்டு பெரிய அளவில் தொடங்கினார்.
அதில், அப்பாவிற்கு உடல்நலமில்லை எனவும்.. ஷிவாவை.. டிரைக்க்டராக அப்பா நியமித்து.. பவர் கொடுத்தார். பங்குதாரர்கள்.. என் மாமனார்.. அத்தை எல்லோரும் சரி என்றுவிட்டனர். வேலவன் சிட்பண்ட்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட்.. இப்போது ஷிவா நிர்வகிக்கிறான்.
அங்கேதான் சிக்கல்.. அப்பா, இறந்தபிறகு.. உயில் என பார்க்க.. அந்த பங்குகளை.. திக்ஷிக்கு வரபோகிற கணவருக்கும் பாதி பங்குண்டு.. என எழுதிவிட்டார். அதாவது தன் பங்களில்.. திக்ஷியின் கணவருக்கு பங்குண்டு என எழுதிவிட்டார்.
உனக்கு எங்களோட சிக்கல் புரியுதா ரமேஷ். சின்ன பெண்.. யாருக்கு கட்டி வைக்க.. இப்போதுதான் காலேஜ் முதல் வருஷம் போறா.. அப்பா கொடுத்த பவர்.. செல்லாது. இதுவே அவர் இறந்து ஒருவருடம் வருடம் வரை.. நமது உறவினர்கள் பங்குதார்கள் என்பதால் அமைதியாக இருக்கின்றனர். இல்லையென்றால்.. அப்போதே, அப்பாவின் உயில் பங்கு பற்றி கேட்டிருப்பார்.
இதுவரை, இந்த நிலவரம் யாருக்கும் தெரியாது. புதிதாக யார் வருவாங்களோ.. என்ன நடக்குமோ. காலம்காலமாக கட்டி காத்த சொத்தைய்யா.. கோடிகணக்கில்.. ஹம்.. குடும்பம் தொழில் இரண்டும் நம்ம பொறுப்பில் இருந்தால்தானே சரியாக இருக்கும். இப்போது என் மாமனார் சொந்தத்தில் வரன் இருக்கு.. சுந்தரம் மனைவியின் சொந்தத்தில் ரெடியாக இருக்காங்க, திக்ஷிக்கு. ஆனால், உரிமைபட்டவன் இங்கேதானே இருக்கான். ம்ஹ்ம்..” என்றார்.
ரமேஷின் முகம் இன்னமும் தெளியவில்லை. பழைய பேச்சுகள் செய்கைகள் எல்லாம் ஞாபகம் வந்தது அவருக்கு. என் மனையாளின் உடல்நலமில்லாத போது உதவவில்லையே என எண்ணாமல் இருக்க முடியவில்லை அவருக்கு. எல்லோரும் மனிதர்கள்தானே.. அவ்வளவு எளிதாக எல்லாம் மறக்குமா.. வேலுவின் பேச்சு அவரை மீட்டது.
வேலு “எப்போதும் போல யாருக்கும் விஷயம் தெரியாது. நானு சுந்தரம்.. ஷிவா.. இப்போது நீ. சிக்கல்கள் எங்களுக்கு புதித்தல்லவே. நீயும் எங்கள் குடும்பத்தில் ஒருவன்தான் ரமேஷ். அப்போது, எதோ கோவம்.. நம்ம பையன்னு நம்பி.. வேளையில் சேர்த்தோமே.. இப்படி, பண்ணிட்டானேன்னு கோவம். உன் மேல்.. தங்கையின் மேல். என்னமோ அவளை நாங்கள் கவனிக்கலை. அதற்காக, எங்களை நீ விட்டுடுவியா.
ஹம்சா இருந்திருந்தால்.. இந்நேரம்.. நாங்க இப்படி நிற்க வேண்டி இருக்காதுதானே. சரிதான், அவளை நாங்க கிட்டவே சேர்க்கலையே.. அதான் இப்படியெல்லாம் நடக்குது போல” என்றார், நல்லவராக முகத்தினை வைத்துக் கொண்டு. பாவம், இப்போதும் அவர்கள் உண்மையை மறைக்கிறார்கள் என்று ரமேஷிற்கு தெரியவேயில்லை.
என்ன செய்வதென தெரியவில்லை.. இப்போது. தொழில் கைவிட்டு போகிட கூடாதென.. இவர்கள் முயல்வது சரியா தெரியவில்லை. இத்தனை காலம் எங்களை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு.. இப்போது வந்து உதவி என கேட்பவர்களை கண்டுக் கொள்ளாமல் போனால்.. நானும் அவர்களும் ஒன்றாகிடுவோமோ என பல யோசனை, ரமேஷிற்கு.
ரமேஷ் “இப்போது, லேகா ஷிவா திருமணம் பற்றி பேசுவோமே.. இந்த விஷயத்தை அப்புறம் பேசலாமே.” என்றார்.
வேலுவின் முகம் அப்பட்டமாக மறுப்பினை காட்டியது.. “ஹம்சாவின் விருப்பத்தினை.. நாங்கள் செய்திட்டோம். இது எங்களின் கோரிக்கை மாப்பிள்ளை. முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க” என்றார்.
ரமேஷ் “அதில்லை வேலு மச்சான்.. இந்த மாதிரி.. தொழில் கணக்கு.. லாபநட்டம் இதெல்லாம் தெரியாதுப்பா.. நான் எதோ தவறாக சொல்லுவதாக நினைக்காதீங்க. சொத்து அவ்வளவு எங்களுக்கு இல்லை.. அதெல்லாம் தெரியாது எங்களுக்கு.. சந்துரு இதெற்கெல்லாம் ஒத்து வரமாட்டான்.” என ஓய்ந்து சாய்ந்து அமர்ந்தார் சேரில்.
இந்த வார்த்தைகள் வேலுவினை சரியாக தாக்கியது.. ஆனாலும், காரியம் பெரிதாகிற்றே.. பணம்காசின்மேல் பற்றில்லாதவர்கள்.. என் தங்கையின் மக்கள.. நம்பிக்கையாக சொன்ன இடத்தில் கையொப்பமிட்டு சென்றிடுவார்.. நாமாக பார்த்து ஏதாவது செய்தால் போதும்.. எப்படி விடமுடியும்.. என எண்ணி.. வேலு எழுந்து நின்றார்.. “இப்படி சொன்னால் எப்படி, நான் உங்க நிலையை பயன்படுத்திக்க நினைக்கலை மாப்பிள்ள.. அதேநேரம், யாருக்கோ.. எங்கோ போக வேண்டியதை நம்ம பிள்ளைகள் சேர்ந்து அனுபவைக்கட்டுமேன்னு சொல்றேன். நீ மனசு வைத்தால் எல்லாம் நடக்கும். என்ன வேண்டும் கேளு நான் செய்கிறேன்” என சொல்ல சொல்ல..
ரமேஷ் கைகாட்டி நிறுத்தினார்.. தானும் எழுந்து நின்றார் “அப்புறம் பேசலாமா” என சொல்லி உள்ளே ஹாலுக்கு சென்றார்.
உள்ளே பெண்கள் யாரும் அங்கே இல்லை.. சமையலறையில் சத்தம் கேட்டது.
சுந்தரம் போனில் எதோ பேசிக் கொண்டிருந்தார்.. மாடியில் நின்று.
ரமேஷ் சோபாவில் அமர்ந்தார்.
வடிவேலு “மருமகளே..” என்றார் சத்தமாக.
முதலில் ரமேஷூக்கு ஒன்றும் புரியவில்லை. மீண்டும் வடிவேலு “மருமகளே” என லேகாவை அழைத்தார்.
இப்போது பெண்கள் “லேகா உன்னைத்தான் மாமா கூப்பிடுறார்.. போ” என்றனர்.
லேகா வெட்கமும் பெருமிதமுமாக அவசர அவசரமாக கிட்செனிலிருந்து வந்து “என்ன மாமா” என்றாள்.
வடிவேலு.. அர்த்தமாக தங்கள் வீட்டு மாப்பிள்ளையை பார்த்தார்..
ரமேஷின் முகம் வெளிறி போனது.. பெண்ணின் வெட்க புன்னகையும்.. இந்த அவசரமும் ஒருமாதிரி ஆகியது, தந்தைக்கு.
வடிவேலு “ம்மா.. ஜூஸ் கொடும்மா உன் கையால்..” என்றார்.
லேகா உள்ளே சென்றாள்..
வடிவேலு.. ரமேஷின் பக்கத்து இருக்கையில் அமர்ந்தார்.
லேகா, ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாள்.. இருவருக்கும்.
மதிய உணவு தயாராகிக் கொண்டிருந்தது.
சுந்தரம் போன் பேசி முடித்து வந்து அமர்ந்தார்.. ரமேஷின் அருகே. அண்ணன் எதோ கண்காட்ட.. சுந்தரம் “ரமேஷ் மாப்பிள்ள.. என்ன பிரச்சனை உனக்கு. பழைய கோவமா” என பேச ஆரம்பித்தார்.
ரமேஷ் “என் பையன் சொத்திற்காக ஏதும் செய்யமாட்டான். அதுவும் கல்யாணம் எல்லாம் முடியவே முடியாது. அவனோட வாழ்க்கையை நான் யோசிக்க வேண்டாமா” என்றார்.
“சரி.. என் பெண்ணிற்காக கல்யாணம் செய்துக்கோ..” என்றார், இலகுவாக.
ரமேஷ் நேருக்கு நேராக.. சுந்தரத்தினை பார்த்தார் இந்த வார்த்தையில்.
சுந்தரம் தடுமாறி “என்ன இப்போ.. என் பெண்ணுதானே..” என்றார்.
“நாளைக்கு லதா தங்கச்சி, ஏதாவது பிரச்சனை செய்தால்.. லேகாவிடம் எல்லாவற்றையும் சொல்லி.. அவள் மனதில் எதாவது எண்ணிக் கொண்டாள்.” என்றார்.
சுந்தரம், இப்போது ரமேஷினை பார்க்காமல் நேராக திரும்பி அமர்ந்துக் கொண்டார் “எதுவாக இருந்தாலும் நமக்குள் முடிந்திடும். அதனால்தானே இப்படி. லதாவிற்கு அப்பாவின் உயில் தெரியாது.. தெரிந்தது.. அவ்வளவுதான். மாப்பிள்ள.. புரியுதா எங்க கஷ்ட்டம்” என்றார்.
ரமேஷ் “அஹ.. நல்லா புரியுது.. உங்க தவறுகளை எல்லாம் சரிகட்ட.. என் பிள்ளைகளின் வாழ்க்கை..” என்றார் அதே ரகசிய குரலில்.
வடிவேல் “அப்படியெல்லாம் இல்லை ரமேஷ். உன் பையனுக்கு என்ன பொறுப்பு கொடுக்கணும் சொல்லு.. செய்யறோம். என்ன வேணும்ன்னு சொல்லு இப்போவே சொல்லு.. “ என்றார்
“நான்தான் வேண்டாம் எதும்ன்னு சொல்றேனே.. விட்டுட்டேன்” என்றார் மீண்டும் ஆரம்ப இடத்திற்கே வந்து.
சுந்தரம் “என்ன மாப்பிள்ள, எல்லாம் சொல்லி உன்னிடம் தஞ்சம் புகுந்திட்டோம்.. இப்போது முதலிலிருந்து ஆரம்பித்தால் எப்படி..” என்றார்.. கரைக்கும் குரலில்.
ரமேஷ் “என்ன செய்ய.. பசங்களுக்கு அவ்வளவு வியாக்கானம் இல்லையப்பா.. உங்க கூட சேர்ந்து அவங்க நிம்மதி போகிடுச்சின்னா” என்றார் ஆற்றாமையாக.
“என்ன இப்போ.. கல்யாணம் ஆகினால், ஷேர்ஸ் எல்லாம் சந்துரு பேருக்கு வந்திட போகுது. அப்புறம், நாலு கையெழுத்து.. போட்டுட்டா போதும். எல்லா பிரச்சனையும் ஓய்திடும். அதன்பின் அவன் தீக்ஷிதாவோடு சந்தோஷமா வாழலாம். என்ன பிரச்சனை. ஷிவா எல்லாவற்றையும் மேனேஜ் செய்துப்பான். லேகா என் தங்கை வாழ்க்கையையும் சேர்ந்து வாழுவாள். நிம்மதி எங்கே போகுது. நம்ம எல்லோருக்கும் நிம்மதி. நீயும் எங்கையோ போய் பிள்ளை கஷ்ட்டப்படுமேன்னு இருக்க வேண்டாம்.. நாங்களும் அப்படிதானே” என்றார் ஆனந்தமாக.
ரமேஷிக்கு, இப்போது கொஞ்சம் நிம்மதியானது. நாம சொத்திற்காக ஏதும் செய்யவில்லையே, ஏதும் பெரிதாக கெட்டபெயர் வராது.. என கொஞ்சம் தழைந்தார்.
சற்று நேரத்தில் ரமேஷ் “சரி ப்பா.. நான் என் பையன்கிட்ட பேசுகிறேன்.. ஆனால், இந்த சொத்து தொழில் பற்றி ஏதும் சொல்லமாட்டேன். பெண்ணை பிடித்திருந்தால் கண்டிப்பா கல்யாணம் செய்துப்பான். அவனுக்கு நிம்மதியான வாழ்கையை நான் தரணும்ன்னு ஆசைபடுறேன். இதில் லேகா வாழ்க்கை இல்லாமல் போனாலும் சரிதான்” என்றார் முடிவாக.
சந்தோஷம் அண்ணன்தம்பி இருவருக்கும்.
அப்போதே, லேகாவை அழைத்து வடிவேலு.. திக்ஷிதாவின் எண்ணினை.. லேகாவிடம் கொடுத்தார். ‘சந்துருவை பேச சொல்லு.. சாதரணமாக பேசட்டும்மா’ என்றனர்.
மதிய உணவு முடித்து.. சற்று நேரம் ஓய்வெடுத்து மாலையில்தான் கிளம்பினர். எந்த பந்தாவும் இல்லாமல் ஹாலில் வடிவேலு.. சோபாவிலேயே படுத்துக் கொண்டார், மதியம் சற்று நேரம். சுந்தரம்தான் போன் பேசிக் கொண்டே இருந்தார்.
லதாவும் வசந்தாவும்.. லேகாவின் அறையில் சற்றுநேரம் இருந்தனர். இருவரும் சின்ன குரலில் ரகசியம் பேசிக் கொண்டே இருந்தனர் மொன மொனவென. அண்ணன்தம்பி இருவருக்கும் இது புரிந்து.. கண்டுக் கொள்ளாமல் இருந்தனர்.
ரமேஷிற்கு, இதெல்லாம் சற்று உறுத்தலாகவே இருந்தது.. தன் பெண் அங்கே சென்று எப்படி வாழுவாளோ.. ஆயிரம் ரகசியங்கள் கொண்ட இடம் அது.. என தந்தையாக பயம் வந்தது இப்போது.
அவர்கள் கிளம்பியதும் ரமேஷ் அமைதியாக தன் அறைக்கு சென்றுவிட்டார்.
லேகா, தன் தம்பிக்கு செய்தி அனுப்பினாள்.. “வேலை முடிந்து கால் பண்ணு.. உன்கிட்ட பேசணும்..” என அனுப்பி வைத்தாள்.
லேகாவிற்கு இப்போது ஷிவாவின் நினைவு வந்தது.. ‘நான் ஒகே சொன்னதை அவர்கள் வீட்டில் சொல்லியிருப்பார்களா.. எனக்கு எப்போது கூப்பிடுவார்’ என எண்ணம் எழுந்தது. கனவுகளோடு.. அமர்ந்திருந்தாள்.
கடையிலிருந்து தாமரை அழைத்து “என்ன லேகாம்மா.. கூப்பிடவேயில்ல.. விருந்தாளிகள் கிளம்பியாச்சா..” என்றார்.
அதில் தன் மனதை மாற்றிக் கொண்டு.. பேசிக் கொண்டிருந்தாள்.
நேரமாக கடையை அடைக்க சொல்லிவிட்டாள் லேகா. மதிய உணவுகள் நிறைய இருந்ததால்.. அத்தைக்கு கொஞ்சம் கொடுத்துவிட்டு, தங்கள் இருவரும் அதையே உண்ணலாம் என எண்ணிக் கொண்டாள்.
அத்தையோடு சற்று நேரம் செலவிட்டாள்.
இரவு உண்ணும் வரை தம்பி.. ஷிவா.. என யாரும் அழைக்கவில்லை லேகாவிற்கு. கொஞ்சம் வருத்தம்தான்.
ஷிவாவின் எண்ணிற்கு இப்போது செய்தி அனுப்பினாள் பெண்.. “ஹாய் ஷிவா.. எப்படி இருக்கீங்க” என.
ஷிவா.. அதை கவனித்துவிட்டான். ஆனால், பதில் அனுப்பவில்லை. ஷிவா, மும்பை.. சென்றிருக்கிறான் ஹம்சா டெக்ஸ்ட்டைல்ஸ் விஷயமாக. தெரியும், இன்று அன்னை தந்தை லேகாவின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள் என தெரியும். எப்படியும் அவள் சம்மதம்தான் சொல்லியிருப்பாள்.. அதான் இந்த செய்தி என எல்லாம் தெரியும். அதனால்தான் அமைதியாகினான் ஷிவா.
பதில் அனுப்பவில்லை ஷிவா. ஒரு நைட் பார்ட்டி.. தொழில்முறை நண்பர்களோடு. அதில் கையில் மது கோப்பையோடு அமர்ந்துக் கொண்டே.. அவளின் செய்தியை பார்த்து சிரித்துக் கொண்டான் தனக்குள். அவனுக்கு இந்த டீல் முடிந்ததில் நிம்மதி. ஹம்சா டெஸ்ட்டைல்ஸ்சம் என்னுடையதே.. என எண்ணிக் கொண்டான்.