மிக எளிமையாகத் திருமணம் நடந்து முடிந்தது, அனைவரும் வாழ்த்தி விருந்துண்டு விடை பெற்றனர், நெருங்கிய சொந்தம் மட்டும் அங்குக் குழுமி இருந்தனர்.
இன்பநிலவனின் மாமாவும் அத்தையும் வசந்தனிடம் கேள்வி கேட்டுக் குடைந்தனர், பெண் யார் என்ன செய்கிறாள், இவன் எப்படி சம்மதித்தான் என்று.
வசந்தன் தெளிவாக “இன்பன் விரும்பிப் பெண்கேட்டு மணந்து கொள்கிறான்” என்று கூற அவர்களுக்கு அதிர்ச்சியில் விழிகள் விரிந்து விட்டது.
அதிலும் அவள் நல்ல வேளையில் இருக்கிறாள் என்று வேறு சொல்லப்பட பொறுக்கவில்லை, சரண்யா கணவனுடன் வந்திருந்தாள்.
“பொண்ணு அழகா இருக்காங்க இல்லமா” என்றவளை திரும்பி இவர் முறைக்க அவள் கணவனுடன் சென்று நின்று கொண்டாள்.
காந்தியம்மா முகத்தில் ஆனந்தம் தாண்டவமாடியது, அவரைக் கையில் பிடிக்க முடியவில்லை பத்துவயது குறைந்த போல ஓடிக்கொண்டிருந்தார்.
லட்சுமி கொற்றவையின் அருகிலே நின்று கொண்டாள், அவள் தேவைகளைப் பார்த்துக்கொள்ள, அனைத்தும் சிறப்பாக முடிய இன்பனின் வீட்டிற்கு புறப்பட்டனர் மணமக்கள்.
சிறிய ஓட்டு வீடு இரண்டு அறைகள் மட்டும் கொண்டது, சுற்றிலும் இடம் இருக்க பசுமையாக இருந்தது.
கொற்றவைக்கு மிகவும் பிடித்துவிட்டது ஆரத்தி எடுத்து உள்ளே அழைக்க, அவள் முகத்தைத் தான் பார்த்திருந்தான் தன் வீடு அவளுக்குப் பிடிக்கிறதா என்று.
முகம் கொள்ளா புன்னகையோடு அவனின் கைப்பிடித்து உள்ளே நுழைந்தாள், அனைவரும் ஆங்காங்கே அமர்ந்துகொள்ள அவர்களுக்குத் தேவையானதை அண்ணனும் தம்பியும் முன்னின்று கவனித்தனர்.
லட்சுமி கொற்றவையிடம் துண்டு கொடுத்து “கொஞ்ச நேரத்துல பால் காச்ச போகணும், பின்னாடி பாத்ரூம் இருக்கு போகணுமா” என்க.
“ஹ்ம்ம்” என்றவள் அவளுடன் பின்பக்கம் சென்றாள், காய்கறிகள் பூக்கள் என்று அத்தனை அழகாக இருந்தது, இரண்டு மாடுகள் நின்றது கன்றோடு.
முகம் கழுவி வந்து அங்கேயே நின்று கொண்டாள், சிலு சிலு என்று காற்று அடிக்க இதமாக இருந்தது, அவளைத் தேடி அங்கேயே வந்துவிட்டான் இன்பன். “இங்க இருக்கியா” என்றவன் அவள் கையில் காபி கப் வைக்க ஆசையாக வாங்கி கொண்டாள்.
எட்டிப் பார்த்த லட்சுமி “அதுசரி நடத்துங்க நடத்துங்க கூடவே ஓட்டிட்டு திரியிறேன் எனக்கு ஒரு வாய் காபி கொடுக்கணும்னு தோணுச்சா” என்று இல்லாத கண்ணீரை துடைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.
கொற்றவையின் அருகில் நெருங்கி அவள் விரல்களைக் கோர்த்தவன் “வீடு பிடிச்சிருக்கா…” என்க.
“ம்ம், இந்த வீடே ரொம்ப அழகா இருக்கு அப்புறம் ஏன் புது வீடு, வேணும்னா ரூம் மட்டும் எடுத்துருக்கலாமே” என்க.
“இது ரொம்ப பழைய வீடு என்னோட தாத்தா பாட்டி காலத்துல கட்டினது, நாளைக்கு வசந்தனுக்கும் கல்யாணம் ஆகும் அவனுக்குக் குடும்பம் வரும், வீடு பெருசா இருந்தாதான் எல்லார்க்கும் நல்லது”.
“அதோட இந்த வீட்டை இப்படியே வெச்சுட்டு சுத்திலும் தோட்டத்தை இன்னும் பெரிசு பண்ணப்போறோம், இன்னும் அழகா மாறிடும்” என்றான்.
அதன் பிறகு அவன் பேசவில்லை, சுற்றிலும் பார்வை பதித்தவள் அவனைத் திரும்பிப் பார்க்க அவன் விழிகள் அவளை விழுங்கிக் கொண்டிருந்தது.
கொற்றவை தடுமாறினாள் “என்ன பண்றிங்க” என்றவளின் காது மடலில் இதழ் பதித்தவன் “ஒண்ணுமே பண்ணல, ரொம்ப தேட வெக்குறடி” என்றவன் ஆழ்ந்த குரல் அவளுள் நிறைந்து தளும்பியது.
அவனின் சட்டையை இறுக்கமாகப் பற்றிக் கொள்ள அவளை விட்டு விலகியவன் தலையை அழுந்தக் கோதி தன்னை நிலைப்படுத்தினான்.
“இங்க நின்னா சரியா வராது” என்று விலகி நடக்க, வசந்தனின் குரலில் “நேரம் ஆச்சு வாப்போலாம்” என்று அவளுடன் இனைந்து நடந்தான்.
பெற்றோரின் கட்டாயத்தில் திருமணத்திற்கு வந்து நின்றிருந்த கிஷோர் எப்போதடா வீட்டிற்கு போவோம் என்று நிற்க, அவனின் பொறுமையை மிகவும் சோதித்துக் கொண்டிருந்தாள் அருணா.
கொற்றவையின் புடவை நகை அனைத்தையும் காண்பித்து “இன்பன் எப்படி பார்த்துப் பார்த்து அவளுக்கு வாங்கி இருக்கிறான், நீயும் தான் இருக்கிறாயே, எனக்காக என்ன செய்தாய்” என்று அவனைப் போட்டு வாட்டினாள்.
“இந்தக் கல்யாணம் நடக்கவே எவ்ளோ பேச்சு வாங்குறேன் தெரியுமா” என்றவனை இகழ்ச்சியாகப் பார்த்தவள், “உன்னோட கேவலமான ஐடியாவ கேட்டு யோசிக்காம நான் செஞ்ச விஷயத்தால எல்லார் முன்னாடியும் நா அசிங்க பட்டு நிக்குறேன்”.
“உன் அம்மா என்னனா நாத்தனியா கர்ப்பமான மாதிரி அவ்ளோ பேச்சு பேசுறாங்க, இப்படி பண்ணதும் இல்லாம உன்ன கட்டிக்க நான் நகை நட்டுன்னு வேறு கொண்டு வரனும்” என்று அவனைத் தேளாய் கொட்டினாள்.
பால் காய்ச்சுக்கு இன்பன் முறைப்படி அழைத்திருக்க மறுக்கவும் முடியவில்லை, அனைவரும் ஒரே குடும்பத்தில் பெண் எடுத்தவர்கள் நாளை நல்லது கெட்டது அனைத்திலும் நிற்க வேண்டுமே அதனால் பொறுமையாக அங்கே அமர்ந்திருந்தான்.
பழைய வீடு ரோட்டின் வலப்புறம் இருக்க, இடப்புறம் புதிய வீடு கட்டியிருந்தான், வயல் சூழ்ந்த பகுதியில் தனித்து நின்றது வீடு மிக அழகாக.
பெரிய முற்றம் வைத்து வலப்பக்கம் வண்டி நிறுத்தக் கொட்டகை இடப்பட்டு, இடப்பக்கம் களம் வைத்துப் பெரிய ஹால் பூஜை அறை கிச்சன் மூன்று படுக்கையறை, பின்பக்கம் விறகு அடுப்பிற்கு தனியாக மறை.
மேல்தளத்தில் பெரிய இரண்டு அறைகள் சிறிய இரண்டு அறைகள் என்று கம்பீரமாக நின்றது வீடு.
கண் திறந்து எங்குப் பார்க்கினும் பசுமை, பழைய வீட்டைப் போல இங்கும் வீட்டைச் சுற்றி மரங்கள் பூக்கள் என்று நிறைந்து நின்றது.
இறைவனை வேண்டி மனம் நிறைந்த சந்தோஷத்துடன் பால் காய்ச்சினாள் கொற்றவை சந்தோஷத்தில் விழிகள் நிறைந்தது காட்சிகள் மங்கியது.
அனைவருக்கும் பால் கொடுத்து முடிக்கச் சிறிய அளவில் விருந்தும் நடந்தது, பால் காய்ச்சிற்கு வந்து சென்ற அனைவருக்கும் நல்ல மல்லிகை செடியின் கிளைகள் பரிசாகக் கொடுக்கப்பட்டது.
அனைத்தும் முடிந்து அனைவரும் சென்றுவிட்டனர், வீட்டு ஆட்கள் மட்டுமே அங்கிருந்தனர் அனைவரும் ஓய்வாக அமர்ந்திருக்க.
ராதா காந்தியம்மாவிடம் “ரொம்ப சந்தோஷம்மா, என் பொண்ணுக்கு இப்படியொரு வாழக்கை அமையும்னு நான் நினைக்கவே இல்லை இந்த மனுஷனை நம்பி இவங்கள எப்படி கரை சேர்க்கனு தவிச்சுப்போய் இருந்தேன், நீங்க நல்லா இருக்குனும்” என்று அவர் கையைப் பிடித்துக்கொள்ள.
“அடடா என்னமா நீ இதெல்லாம் ஒரு விஷயமா, இந்த மாதிரி தங்கமான பொண்ண எங்கவீட்டுக்கு மருமகளா குடுத்ததுக்கு நாங்கதான் நன்றி சொல்லணும்” என்றவர் அவரிடம் ஆறுதலாகப் பேசினார்.
கொற்றவையிடம் வந்த ராதா “உங்கிட்ட சொல்றதுக்கு எனக்கு ஒன்னும் இல்லை, வாழ்கையை பத்தி உனக்கு இருக்குற தெளிவு கூட எனக்கு இல்ல”.
“இந்தக் கல்யாணம் உன் மனசுக்கு பிடிச்சுதான் நடந்திருக்குனு நான் நம்புறேன், நல்லபடியா சந்தோஷமா இருமா” என்று வாழ்த்தி விடை பெற்றனர்.
அருண் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தான், மாமனை ஆரத்தழுவி தன் மகிழ்சியை வெளிப்படுத்தினான்.
அருணாவிற்கு மொத்தமாக ஒரு புகைச்சல், அனைத்தும் அவளுக்குச் சிறப்பாக அமைந்துவிட்டதே என்று, மூன்று நாட்களாகக் கர்ப்பகால பிரச்சனைகளும் படுத்தி எடுக்கிறது.
காலை வேளை அதிகமான வாந்தி மயக்கம் இருக்கிறது, மாமியார் சொன்ன போல மணமேடையில் வாந்தி வந்துவிட்டால் என்ன செய்ய என்ற பயம் வேறு ஆட்டிப் படைக்கிறது, எல்லாம் சேர்ந்து ஒரு வித எரிச்சல் மனநிலையில் இருந்தாள்.
அடுத்த வாரம் அருணா கிஷோர் திருமணம் “ஏன் உடனே உடனே திருமணம்” என்று கேள்வி கேட்ட உறவுகளிடம் மாப்பிளை வேலை விஷயமாக வெளிநாடு செல்கிறார்.
வருவதற்கு இரண்டு வருடம் ஆகும் ஜாதகத்தில் தடங்கல் இருப்பதால் மூன்று மாதத்தில் திருமணம் செய்ய வேண்டும் என்று எப்படி எல்லாமோ சமாளித்தனர்.
உறவுகளுக்கிடையில் இதைப் பற்றி விவாதங்கள் நடந்தாலும் இவர்கள் அதைக் கவனியாத போலக் கடந்துவிட்டார்கள்.
அனைவரும் சென்றபிறகு லட்சுமியும் விடைபெற்றுச் சென்றுவிட்டாள், இரவு உணவு எளிமையாகச் செய்து கொண்டனர், இருவரும் குளித்து உடைமாற்றி நிற்க, இரவு உணவை இருவருக்கும் கொடுத்துப் புது வீட்டிற்கு அவர்களை அனுப்பி வைத்தார் காந்தியம்மா.
தயங்கி நின்றவள் “நீங்க வரலையா பாட்டி” என்று அவரிடம் கேட்க, புது வீட்ல இன்னும் எந்தப் பொருளும் செட் பன்னலடா நாளான்னைக்கு தான் வரும், வந்த அப்பறம் எடுத்துவெச்சுட்டு அடுத்த வாரம் அங்க வந்துடுவோம், அதுவரைக்கும் என் பேரனைப் பத்திரமா பாத்துக்கோ” என்று அவளை அனுப்பிவைத்தார்.
கொஞ்சம் பதட்டம் வந்து சூழ்ந்து கொண்டது பெண்ணை, புதிய வீட்டிற்கு செல்ல அவன் அணைத்து கதவுகளையும் சரி பார்த்து அவளுடன் மாடி ஏறினான்.
அவர்கள் அறையில் கட்டில் மட்டும் போடப்பட்டிருந்தது, சிறிதாக அலங்காரம் செய்யப்பட்டு.
மர அலமாரி இரண்டு புதிதாகப் பளபளத்தது, வேறு பொருட்கள் ஒன்றும் இல்லை பால் சொம்பை கட்டிலின் அருகில் இருந்த மேசையில் வைத்தாள்.
அறை கதவை அடைந்தவன் மெல்ல அவளை நெருங்க, அனிச்சையாக அவள்பின் நோக்கி நகர்ந்தாள், சுவற்றில் அவளைச் சாய்த்து நிறுத்தியவன் “பயமா இருக்கா” என்க.
“ஆம் இல்லை” என்று அணைத்து பக்கமும் ஆடியது அவள் தலை, அவள் முகத்தைக் கைகளில் தாங்கி “என்ன பண்ணுவேன்னு உனக்குப் பயம்” என்க, இப்பொழுது பதட்டம் போய் வெட்கம் சூழ்ந்தது மொத்தமாக.
சிவந்துவிட்ட கன்னத்தில் கன்னம் வைத்து உரச, அவள் உடல் நடுங்கியது, மெல்ல அவள் இதழ்களைத் தீண்டியவன் அழுத்தமாகத் தன் முத்திரையைப் பதித்தான்.
மீள முடியா சுழலில் சிக்கிய போல அவன் மீள விரும்பவில்லை, மூச்சு முட்டியவள் அவன் மார்பில் அழுத்தமாக முகம் புதைக்க, அவளை அப்படியே அள்ளிக்கொண்டான்.
கட்டிலில் அமர்த்தியவன் “ஒரு சர்ப்ரைஸ் இருக்கு சொன்னேன்ல” என்க, அவள் அவனை விழி உயர்த்தி பார்த்தாள்.
அவளை விட்டு விலகி நடந்தவன் அலமாரியிலிருந்து அந்தப் புடைவையை எடுத்து வந்தான், முதலில் புரியாமல் பார்த்தவள் தெரிந்து கொண்டாள், அது தன்னுடைய காணாமல் போன புடவை என்று.
“இது எப்படி உங்ககிட்ட” என்றவள் கேள்விக்கு.
“அன்னைக்கு நீ கவர் மறந்துட்டு போனப்போ புடவைய மட்டும் நான் எடுத்து வெச்சுக்கிட்டேன்” என்றவனை நிமிர்ந்து பார்த்தவள் முகத்தில் அத்தனை கோபம்.
“பிடித்தம் இருந்தும் தன்னிடம் இத்தனை வருடங்களாகச் சொல்லவில்லை” என்று கோபமாக வந்தது.
அவன் எதிர்பார்த்தான் நிச்சயம் அவளுக்குக் கோபம் வரும் என்று அருகில் சென்று அமர்ந்தவன் “உன்மேல எனக்குக் காதல் இருக்குனு முதல்ல உணரவைச்ச பொக்கிஷம் இது” என்றான் புடவையைக் கையில் வாங்கி.
அவனை அவள் நீர் நிறைந்த விழிகளுடன் பார்க்க அவளைத் தன்னோடு இறுக்கமாக அணைத்து வாசம் பிடித்து “ஏன்னு கேக்காத கொற்றவை, எனக்குத் தெரில நிறைய தயக்கம் இருந்தது சொல்றதுக்கு, எனக்குச் சட்டுனு சொல்ல வரல, மத்தபடி உன்கிட்ட சொல்லாம இருக்கணும்னு இல்லடி”.
“உன்ன ரொம்ப பிடிக்கும் எனக்கு” என்றவனை இப்பொழுது அவள் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
“உன் வாசத்தை இதுல தேடிக்கிட்டே இருப்பேன் தினமும்” என்றவனை வயிற்றில் அவள் கிள்ள “ஏய்” என்று துள்ளியவன் “என்னடி பண்ற” என்றான் சரசமாக.
“இனிமே அத நீங்க எடுக்கக் கூடாது” என்றவளை அள்ளித் தன் மேல் போட்டுக்கொண்டவன் “நிஜம் என்கூடவே இருக்கும்போது எதுக்கு எடுக்கப் போறேன்” என்று கழுத்து வளைவில் முத்தம் வைத்தான்.
“ஆனா இந்த நிழல் எனக்கு ரொம்ப ஸ்பெஷல், உன்கிட்ட சொல்லணும்னு ஆசைப்பட்ட எல்லாத்தையும் இவங்ககிட்ட சொல்லியிருக்கேன்” என்றான் அதை மீண்டும் கையில் எடுத்து.
அந்தப் புடவையை வாங்கி மேசையில் வைத்தவள் , அவன் முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பி அவன் கன்னத்தில் இதழ் பதித்து “என்கிட்டே சொல்லுங்க எல்லாத்தையும் , எனக்கானது எனக்கு மட்டும் தான் வேணும்” என்க அவன் இதழ்கள் ரசனையில் விரிந்தது.
முத்தத்தின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்ல , அங்கு இளமை தீப்பற்றிக்கொண்டது , யாரிடம் யார் தோற்றார் யாரை யார் வென்றார் என்று தெரியாமல் யுத்தம் மட்டும் நீண்டு கொண்டிருந்தது.