Malar Soodum Penmai 26 2 12493 “செல்ல மகன் பாசமா?” என்று பெரிய மகன் சீண்டினான். “தேசிகா“ “ம்மா. நீங்க ஏன் அவன் சரின்னு சொல்றீங்கன்னு எனக்கு நல்லா தெரியும். அந்தாள் என் கண்ணை விட்டு மறைஞ்சுட்டா, நான் அமைதியா இருப்பேன்னு தானே?” “அதான் தெரியுது இல்லைடா” என்று சாவித்திரி கேட்க, “சென்னையில இப்போ கூட ஒருத்தனை வம்பிழுத்து வைச்சிருக்கேனே? அவனை நாட்டை விட்டே அனுப்பிடலாமா?” “தேசிகா இதுக்கு தாண்டா நான் முதல்லே சொன்னேன். வழி தப்புன்னு சேருற இடமும் தப்பா தான் இருக்கும்ன்னு“ “அந்த வழிதான் எனக்கு கிடைச்சுது. என்ன கோவப்படுறீங்களா? சரி உங்க காலை தைரியமா வெளியே காட்டுங்க, நான் எல்லாத்தையும் விட்டுடறேன்” என்றான் மகன் ஆவேசமாக. “ண்ணா” என்று முரளி அவனை அடக்க, வீட்டினர் அங்கு வந்துவிட்டனர். “எதுக்குடா இப்போ சாவித்திரிகிட்ட கோவமா பேசுற? என் மககிட்ட எல்லாம் போன பார்த்துக்கோ உன்னை” என்று பெரியவர் பேச, “தாத்தா. உங்க பொண்ணுக்கு நான் போற வழி தப்பாம். சரி நான் வழி மாறிக்கிறேன், அவங்களை காலை வெளியே காட்ட சொல்லுங்க” என்றான் தேசிகனும் விடாமல். “என்னடா இது?” என்று அவனின் மாமா முகம் கசங்கி போனார். “என்னை ஓயாம பேசினா நான் என்ன பண்ணட்டும் மாமா? வெளியே இல்லை, சொந்த குடும்பத்துக்குள்ளே உங்க தங்கச்சி மூடி மறைச்சுட்டு தான் இருக்காங்க. அவங்க தைரியமா அந்தாளை எதிர்த்திருந்தா நான் ஏன் இன்னைக்கு முளைச்சிருக்க போறேன்“ “தேசிகா. தைரியம் இருக்க போய் தான் அந்த வீட்ல அத்தனை வருஷம் வாழ்ந்தேன். வீட்டுக்குள்ள மூடி மறைச்சேன்னா எனக்காக இல்லை, என் குடும்பத்துக்காக, உங்களுக்காகடா! நீயே இவ்வளவு பேசினத்துக்கு அப்புறம், இனி நான் மறைக்கலை” என்று சேலையை தூக்கி இடையில் சொருகிக்கொள்ள, “அம்மா” என்று தன்வி நடுங்கிவிட்டாள். இரண்டு காலிலும் அவ்வளவு காயமும், தீக்காயங்களும் அதன் வடுவை மிக மோசமாக வெளிச்சமாக்கியது. ஓரிடத்தில் குழி போன்றே தெரிய, சதாசிவத்தின் தொண்டை ஏறி இறங்கியதுடன், மனிதர் சட்டென திரும்பிவிட்டார். “சாவித்திரி என்னடாம்மா. அவன் தான் பேசுறான்னா” என்று அத்தை வந்து அவரின் சேலைய இறக்கிவிட்டு அவரை தோளோடு அணைத்து கொண்டார். “அவன் பேசினா நான் கேட்டுக்கணுமா? ஏன் முகத்தை அங்க வைச்சிருக்க, கேட்ட இல்லை பாரு” என்று மகனின் கன்னத்தை திருப்பினார். தேசிகனின் கண்கள் சிவந்து போய் இருக்க, “இனி என் தைரியத்தை நீ கேட்காத. உனக்கு எப்போ என் காலை நேரடியா பார்க்க தைரியம் வருதோ, அன்னைக்கு பேசு என்னை” என்றார் அழுத்தமாக. “எனக்கு அந்த தைரியம் வராது. வரவும் வேண்டாம். நான் இப்படித்தான். நீங்களும் என்னை, என் வழியை பேசாதீங்க” என்றான் மகன் மூரக்த்தனமாக. “தேசிகா” என்று அன்னை கண்டிக்க, “அதை எல்லாம் உங்க செல்ல மகன்கிட்ட காட்டுங்க, எனக்கு என் பொண்டாட்டி வந்துட்டா” என்றான் அப்போதும். “டேய் உன்னோட” என்று அன்னை அவனை தள்ள, “இப்படியே என்னை தள்ளி விட்டுட்டு, வேலையை பாருங்க போங்க” என்றான் மகன். “இப்போ நான் கேட்டதை செய்வீர்களா, மாட்டிங்களா?” என்று அரவிந்த் கேட்டான். “உன்னால தாண்டா இதெல்லாம்? நீ பேசாத. எனக்கு என்ன செய்யணும்ன்னு தெரியும். நான்தான் முதல்ல பிறந்தேன். நீ இதுல தலையிடாத” என்று அண்ணனாக அதிகாரம் செய்தவன், “டேய் இவன் மேல ஒரு கண்ணு வைச்சுக்கோ. பையன் ரொம்ப துள்ளுறான்” என்று முரளிக்கும் சொன்னான். “என்னங்க இப்படி?” என்று சதாசிவம் மனதே ஆறாமல் பெரியவரிடம் கேட்டார். “என் பொண்ணுக்கு அவ புருஷன்கிட்ட இருந்தும், கட்டிக்கிட்ட வீட்ல இருந்தும் கிடைச்ச பரிசு” என்றார் பெரியவர் தளர்ந்து போய். “தயவு செஞ்சு அந்த மனுஷனை புருஷன்னு சொல்லாதீங்க, முதல்ல அவனை மனுஷன்னே சொல்ல கூடாது” என்றார் வெறுப்புடன். “இன்னமும் அந்தாளை எதுக்கு விட்டு வைச்சிருக்கீங்க?” என்றும் கேட்க, “என் பேரன்கிட்ட மிச்சம் இருக்கிற பொறுமையை சோதிக்கத்தான். இனி அதுக்கும் வாய்ப்பில்லை” என்றார். தன்வி அரண்டு போயிருந்தவள், முழு பாட்டில் தண்ணீரையும் குடித்துவிட்டாள். “நான் கிளம்புறேன் தன்வி” என்றார் சதாசிவம். “ரெஸ்ட் எடுத்துட்டு போங்கப்பா” என்று மகள் சொல்ல, “இருக்கட்டும்டா” என்றவருக்கு முகம் தெளியவில்லை. சாவித்திரியின் மென் புன்னகைக்கு பின் இப்படி ஒரு வலியா? தேசிகன் வெளியே கிளம்பியிருக்க, மாமனாரும் வீட்டினருக்கு சொல்லி கொண்டு கிளம்பினார். சாவித்திரியிடம் சொல்லி கொள்ளும் நேரம் மனிதர், “நம்ம வீட்டுக்கு வாம்மா. சுதாவோட இரண்டு நாள் இருந்திட்டு வாங்க. இதே ஊர்ல இருக்கணும் இல்லை. அங்க வாங்க” என்றார். “வரேன்ண்ணா” என்ற சாவித்திரியின் புன்னகையில் சிறிது நெகிழ்வும்! ராஜேந்திரனிடம் பேச வேண்டும் என்று எண்ணி கொண்டே கிளம்பினார் சதாசிவம். “நீ ஏன் இப்படி இருக்க? அப்பா ஊருக்கு கிளம்பின சோகமா?” என்று தேசிகனின் அத்தை தன்வியிடம் கேட்க, “ம்ஹூம்” என்றாள் தன்வி. “உன் மாமியாரை பத்தி யோசிக்கிறியா? அவளா இருக்க போய் எல்லாம் சமாளிச்சா, இப்போவும் சமாளிக்கிறா. அவகிட்ட இருக்க வலுவான மனசு நமக்கு இருந்தா போதும்” என்றார் பெருமையாக. “காயம் வாங்கிக்கிறது தான், அந்த வலுவான மனசு தேவைன்னா எனக்கு அது வேணாம்” என்றுவிட்டாள் தன்வி. “கோவம். ம்ம். அப்படியே உன் புருஷன் மாதிரி தான் இருக்க” என்றவர், “இப்போ நீ பார்க்கிறது நம்ம குடும்பம் இல்லை. பாரம்பரியம் பேசிகிட்டு, எல்லாத்தையும் பொறுத்துகிட்டு, கௌரவத்தை கட்டி காப்பாத்திக்கிட்டுன்னு கோழையா இருந்தோம்” என்றார். “சித்தி“ “அவ சொல்றது உண்மை தன்வி” என்றார் பாட்டி. “பொண்ணு கஷ்டபடுறான்னு தெரிஞ்சும் அத்தனை வருஷம் அவளை அங்க இருக்க விட்டது நாங்க தான். கட்டுப்பட்டித்தனம். பிரிஞ்சு வாழ கூடாது, கௌரவம் போயிடும், புருஷனை இழுத்து பிடிக்க பாரு, பசங்களுக்கு அப்பா வேணும்ன்னு ஆயிரம் காரணம்“ “ஆனா அவளுக்கு ஒரே காரணம் நாங்களும், அவ பசங்களும் தான். சாவித்திரிக்கு அந்த வாழ்க்கை வேணாம்ன்னு முடிவெடுத்தா, நாங்க தான் பாதிக்கபடுவோம். எங்களை என்ன செய்யவும் அவன் தயங்க மாட்டான். பிறந்த வீட்டு ஆளுங்க, அவனாட்டம் ரௌடியோ, அயோக்கியனோ இல்லையே. அதனால தான் எங்க பொண்ணு எல்லாத்தையும் தாங்கினா“ “அப்புறம் தான் என் பேரன் நிமிர்ந்தான். நீ அடிச்சா நானும் அடிக்கிறேன், நீ தூக்கினா நானும் தூக்குறேன்னு அவனுக்கு சரிக்கு சமமா, இல்லை. அவன் தலைக்கு மேலே என் பேரன் நின்னான்” என்றார் பாட்டி பெருமையாக. “இது உங்களுக்கு பெருமையா? அவனை பத்தி கொஞ்சம் யோசிச்சு பேசுங்க” என்று சாவித்திரி அறையில் இருந்து வந்தார். “யோசிக்க எல்லாம் ஒன்னுமில்லை. என் பேரன் தலை நிமிர்ந்து நிக்கிறது எங்களுக்கு பெருமை தான்” என்றார் பாட்டி நிச்சயமாக. “அவன் வாழ்க்கை?” என்று அன்னை கலங்க, “நல்லா இருப்போம் அத்தை” என்றாள் மருமகள் பட்டென. “தன்வி“ “உண்மை அத்தை. நீங்க அவரை நினைச்சு கவலைப்படாதீங்க. உங்க வளர்ப்பு அவர். நிச்சயம் அளவுக்கு மிஞ்சி போக மாட்டார்” என்று கணவனுக்கு உறுதி கொடுத்தாள் தேசிகனின் மனைவி. சாவித்திரிக்கு ஏதோ ஓர் ஆறுதல் மருமகளின் வார்த்தையில் கிட்ட, அன்னை தெளிந்தார். இரவு உணவு நேரத்திற்கே தேசிகன் வீட்டுக்கு வர, எல்லாம் பொதுவாக பேசியடியே உண்டனர். தன்னை கண்டுகொள்ளாத கணவனை தன்வி புருவம் உயர்த்தி பார்த்தவள், அறைக்கு வரவும், “என்ன கோவம்?” என்று கேட்டாள். “மிஸ்டர் மாமனார் அருமையா வளர்த்த பொண்ணுகிட்ட போய் நான் கோவப்பட முடியுமா?” என்று வார்த்தையால் கடித்தான் கணவன். “ஹாஹா. அதுவா” என்று தன்வி சிரித்துவிட, “என்னை வெறுப்பேத்தாத சொல்லிட்டேன்” என்று மிரட்டினான். “அவர் எவ்வளவு ஜம்பமா, பாரு என் வளர்ப்பு உன் தாலியை உண்டியல்ல போட வைச்சிருச்சுன்னு நெஞ்சை நிமிர்த்துறார்” என்று கடுகடுக்க, “நானேதான் திரும்ப உங்க தாலியை கேட்டு வந்தேன்னு அவர்கிட்ட சொல்ல வேண்டியது தானே?” என்றாள் தன்வி. “நீ சொல்ல வேண்டியது தானேடி“ “ஆஹ். நானா?” “நீயே தான். ஏன் எனக்காக சொல்ல மாட்டியா?” “சொல்வேன். சொல்வேன்” என்றாள் உடனே. “என்ன திடீர்ன்னு பம்முற?” “காலையில இருந்து, எல்லோரோடவும் ஏதோ ஓர் வம்பு உங்களுக்கு. பைனல் டச்சா நான் இருக்க கூடாதுன்னு தான்” என்று உஷாராக, “விவரம் தாண்டி. ஆனாலும் நீ உண்டியல்ல போடலைன்னா, உன் அப்பா நெஞ்சை நிமிர்த்தி இருப்பாரா?” “ஆஹா. என்னமோ நான் மட்டுமே பண்ணது போல பேசுறீங்க, என் அப்பா சும்மா கேட்டிருந்தாலே, உங்களுக்கும், எனக்கும் சம்மந்தம் இல்லைன்னு கையெழுத்து போட்டு கொடுத்திருப்பேன்னு சொன்னது?” என்று இடையில் கை வைத்து நின்றாள் தன்வி. “சொன்னேன் தான். போட்டுட்டேனா? நீ போட்டியே?” “போட்டேன். அப்போ நீங்க வேணாம். இப்போ நீங்க வேணும்” என்று அவனை தானே அணைக்க, “பத்திக்கிறது முன்னாடியே அணைச்சா நான் என்ன பண்றது?” என்று கேட்டான் நல்லவன். “இவ்வளவு நேரம் சூப்பர் கூலா இருந்தீங்க இல்லை” என்று கேலியாக கேட்க, “பின்ன? என் கோவம் எப்படி இருக்கும்ன்னா” என்றவன் மின்னலாக, அவள் இதழ்களை அடைத்திருந்தான். “இதுதான் உங்க கோவமா?” என்று தன்வி மூச்சு வாங்க, “புது பொண்டாட்டிகிட்ட வேறெப்படி கோவத்தை காட்டுறது?” என்று குறும்பாக கண்ணடித்தான். “தேசிகன்“ “ஹேய் பேரை சொல்லாதடி“ “யாரோ என்னை பிடிச்சா மட்டும் பேர் சொல்ல சொன்ன மாதிரி இருந்துச்சு” என்று இமை சுருக்கி புன்னகைக்க, “தன்வி” என்று அவளை ஆசையாக அணைத்து கொண்டான். “எப்போ பிடிச்சுதாம்?” என்று அவள் நெற்றி முட்டி கேட்க, “நாள், நேரத்தை எல்லாம் நான் குறிச்சு வைக்கலை” என்றாள் மனைவி அவனை போலவே. “ஹாஹா. எனக்கேவாடி” என்று அவளின் இதழை திரும்ப அடைய, தன்வி கணவனின் இதழ்களை அடைந்தாள். “என்னடி பண்ற?” என்று அவளின் ஒத்துழைப்பில், தேசிகன் மயங்க ஆரம்பித்தான். உடன் அவன் கைகளும் மனைவியின் இடையில் சரணடைய, தன்வி அவன் தலை முடியை இறுக்கமாக பற்றினாள். இருவருக்கும் மற்றவர் கொடுக்கும் இதமான வலி இன்னும் வேண்டியதாக இருக்க, அணைப்பை அதிகப்படுத்தினர். “ம்ஹூம். இன்னும் வேணும்டி” என்று மனைவியை முழுதும் தனக்குள் புதைக்க முயன்றான். “தேசிகன்” என்று தன்வி முனக, கணவனின் முத்தமோ கூடிப்போனது. “கால்ஷீட் கொடுத்திட்டியாடி” என்று தன்வியின் காதில் முத்தமிட்டு கேட்க, “கொடுக்காம தான் இப்படியா?” என்று தன் சேலை நழுவியதை காட்டினாள். “மொத்தமும் நழுவணும்டி. அப்போ தான் வெற்றி விழா கொண்டாட முடியும்” என்று கண்ணடிக்க, “அச்சோ. உங்களோட” என்று தன்வி சிவந்து போனாள். தேசிகன் அவளை இன்னும் சிவக்க வைக்க, உடைகளில்லா அணைப்பு தம்பதிக்குள் வேறு கதைகள் பேசியது. “தேசிகன்” என்று தன்வி அவனை கட்டுப்படுத்த பார்க்க, அவனோ அப்போது தான் இன்னும் வேகமானான். “உன் இடுப்பு தான் காரணம். என்னை அதுல கட்டி போடுற இல்லை. இந்த வளைவு ஏண்டி என்னை வான்னு கூப்பிடுது” என்று மெலிதாக கடித்து வைக்க, “ஏங்க” என்று பெண் திணறினாள். “தேசிகன் கூப்பிடுடி” என்று அவளை இன்னும் தவிக்க வைத்து, தன்வி கொடுத்த காயங்களை கேட்டு வாங்கி கொண்டான். ஓர் கட்டத்தில் தன்வி தொண்டை வறண்டு போக, தேசிகன் வேர்வையால் அவளை நனைத்திருந்தான். தம்பதிகள் அதில் இருந்து இயல்பிற்கு திரும்பவே, நெடு நேரம் ஆனது. மூச்சு காற்று இயல்பாக, தன்வியின் மாங்கல்யம் தேசிகனின் உதட்டை உரசியது. தேசிகன் மாங்கல்யத்தை எடுத்து தன் உள்ளங்கைக்குள் வைத்து கொள்ள, “நானும் உங்க கைக்குள்ள வந்துட்டேன்” என்றாள் தன்வி. திருமண நாள் அன்று தேசிகன் கேட்டதிற்கு மனைவி இன்று பதில் கொடுக்க, தேசிகன் நிமிர்ந்து மனைவியை பார்த்தபடியே, அழுத்தமாக, ஆழமாக மனைவியின் நெஞ்சத்தில் இதழ் பதித்தான்.