Malar Soodum Penmai 26 1 11276 மலர் சூடும் பெண்மை 26 தன்வியின் தந்தையை காணவும், தேசிகனின் மாமா வீட்டிற்கு வந்தவர் எதுவும் சொல்லவில்லை. “மாமா. என்னாச்சு?” என்று தேசிகன் கேட்க, “அப்புறம் பேசலாம் தேசிகா” என்றார் அவர். “சொல்லுங்க மாமா” “வாங்கின நிலங்களையும், தொழில் ஆரம்பிக்க நீ ரெஜிஸ்டர் பண்ணியிருந்ததையும் அவர்கிட்ட கொடுக்கத்தான்” என்று நிறுத்த, “அப்போ தன்வியை வைச்சு திட்டம் தான் இல்லை” என்று தேசிகன் முகம் இறுக, “என்ன? என்ன தன்வி வைச்சு திட்டம்? யார், என்ன நடக்குது இங்க?” என்று சதாசிவம் உணவில் இருந்தவர் உடனே எழுந்து வந்துவிட்டார். “சாப்பிட்டுட்டு இருக்கும் போது எழுந்திருக்காதீங்க. முதல்ல சாப்பிட்டு முடிங்க. அப்புறம் சொல்றோம்” என்று பெரியவர் அவரை உண்ண வைத்தவர், அதன் பின்னே இன்று நடந்ததை பகிர்ந்து கொண்டார். “இதென்ன? என் பொண்ணை எதுக்கு அவர் இதுக்குள்ள இழுக்கிறார்?” என்று சதாசிவம் கோவம் கொள்ள, “ப்பா. அவர் நினைச்சது, நினைக்கிறது எதுவும் நடக்காது. நீங்க ரிலாக்ஸ் ஆகுங்கப்பா” என்றாள் மகள். “நீ என்ன சாதாரணமா சொல்லிட்டு இருக்க? சப்போஸ் அவங்க உன்னை“ “நடந்திருக்காது” என்றான் தேசிகன். “நடந்திருந்தா? என்று மாமனார் நிற்க, “ப்பா. அவர்தான் நடந்திருக்காது சொல்றார் இல்லை. அப்புறமென்ன உங்களுக்கு சந்தேகம்?” என்று மகள் ஆணித்தரமாக நின்றாள். தேசிகன் மேல் மகளுக்கு இவ்வளவு நம்பிக்கையா? “சம்மந்தி. நாங்க இத்தனை பேர் இருக்கும் போது, ஏன் கவலை படுறீங்க? மருமகளை நெருங்க நினைச்சதுக்கே, அந்தாள் இனி பட போறதை பாருங்க” என்றார்கள். விஷயம் கேள்விப்பட்டு ஊர்காரர்களும் வந்துவிட்டிருக்க, தேசிகன் சென்று அவர்களிடம் பேசினான். “தம்பி நீ தொழில் பண்ணத்தான் எங்க பரம்பரை சொத்தை கொடுத்தோம். அந்தாள் அதுல கை வைக்க நினைச்சா, அப்புறம் நடக்கிறதுக்கு நாங்க பொறுப்பில்லை பார்த்துக்கோங்க” என்றார்கள் கோபமாக. “அதென்ன எப்போ பார்த்தாலும் மனுஷங்களை குறி வைக்கிறது? இன்னைக்கு மருமககிட்ட வந்தவன், நாளைக்கு வேறெது செய்யவும் தயங்க மாட்டான் தம்பி, நாம இதை அப்படியே விடக்கூடாது” என்றார் பங்காளி ஒருவர். “தேசிகா நீ இதுல இறங்காத. நாங்களே அந்தாளை கவனிச்சுக்கிறோம்” என்றும் சொல்ல, “இல்லை சித்தப்பா. நானே தான் அந்தாள் கணக்கை முடிக்கணும்” என்று தேசிகன் முடிவாக சொன்னான். “ஏதோ நம்ம வூட்டு புள்ளைய கட்டி கொடுத்த குடும்பமாச்சேன்னு பொறுத்துகிட்டு போனா, இவன் தலை மேல இல்லை ஏற பார்க்கிறான். அதான் தம்பி சொல்லிடுச்சு இல்லை. பார்த்துக்கலாம் விடுங்க” என்று கலைந்து சென்றார்கள். “என்ன பண்ண போற தேசிகா?” என்று சாவித்திரி மகனிடம் கேட்க. “உங்க மருமக வரைக்கும் வந்துட்டாரு. என்ன பண்ணலாம்ன்னு நீங்களே சொல்லுங்கம்மா?” என்று அவரையே கேட்டான் மகன். “தேசிகா. கைவசம் பணம் கொஞ்சம் இருக்கும் போல. உன்கிட்ட எல்லா ரைட்ஸையும் எழுதி வாங்கிட்டு, அவரே தொழில் பண்ணலாம்ன்னு“ “பண்ணிட முடியுமா மாமா?” “அவரோட திட்டம் அப்படி“ “அதுக்கு நாம பதில் கொடுக்க வேணும் தானே மாமா. பாருங்க, பரம்பரை சொத்தை உனக்காக கொடுத்தேன்னு சொல்றாங்க. இப்போ வரைக்கும் அமைதியா இருந்தவங்க, இன்னைக்கு நாங்களே பார்த்துகிறோம் சொல்றாங்க. அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா மாமா?” “நீ நினைக்கிறது போல இருக்காது தேசிகா?” “என்மேல அவங்களுக்கு நம்பிக்கை போயிடுச்சு. அப்பனை ஆடவிட்டு வேடிக்கை பார்க்கிறான்னு“ “இருக்காது தேசிகா“ “நீங்க தொடந்து தொழில் பண்ணியிருந்தா, இப்படி நடந்திருக்காது இல்லை” என்று இடையில் குறுக்கிட்டார் சதாசிவம். “ப்பா” என்று மகள் பதறி போனாள். மொத்த குடும்பத்தினரும், ‘நீ மனுஷனே இல்லை தெரியுமா!’ என்ற பார்வை பார்த்தனர். “இவர் அமைதியா இருக்கவும் தானே இதெல்லாம் நடக்குது?” என்று சதாசிவம் கேட்க, “எப்படி சார் இப்படி?” என்றான் முரளி கடுப்பாக. “ஏண்டா. நான் என்ன தப்பா கேட்டுட்டேன். நம்ம கட்டுப்பாட்டுல இல்லாம நிறைய விஷயங்கள் நடக்கத்தான் செய்யும். அதுக்காக அப்படியே, அங்கேயே தேங்கிட முடியுமா?” ‘பேசு. என்ன பேசுறியோ பேசு‘ என்று தேசிகன் அவரை பார்த்திருக்க, “நான் இதை பேசவும், உங்களுக்கு என்மேல கோவம் வரலாம். அன்னைக்கும் என் மகளுக்காக தான் செஞ்சேன். இன்னைக்கும் என் மகளுக்காக தான் இதை பேசவும் செய்றேன்” என்றார் மனிதர். சுற்றி இருப்பவர்கள் யார் கோபத்தையும் அவர் கண்டுகொள்வதாக இல்லை. “என் பொண்ணு வருத்தப்படுறா. அவளுக்கு எங்கோ ஒரு இடத்துல நம்மால தான் இப்படிங்கிற குற்ற உணர்ச்சி இருக்கலாம்“ “உங்களுக்கு அந்த குற்ற உணர்ச்சி இல்லையா?” தேசிகன் தான் கேட்டான். “ஏன் இருக்கணும்? நீங்க ஏதோ கொஞ்சம் ஏத்துக்க கூடியவரா இருக்க போய், எல்லாம் சரியாகிடுச்சு. அதே ஒரு கேடுகெட்டவன் என் பொண்ணுக்கு அப்படி செஞ்சிருந்தா அவளோட வாழ்க்கை?” “எனக்கு உங்களை பத்தி அப்போ என்ன தெரியும்? எதுவும் தெரியாது, இந்த செகண்ட் வரை தெரிஞ்சுக்கவும் நான் நினைக்கலை. என் பொண்ணு உங்களை கேட்டா, அவளை நான் நம்புறேன்.” “ப்பா“ “இருடா தன்வி. பேசிடலாம். நான் செஞ்சது தான் அவர் தொழில் நிக்க காரணம்ன்னு சொன்னா நான் ஏத்துக்க மாட்டேன் தன்வி. உங்களுக்கு எல்லாம் அந்த எண்ணம் இருக்கு தானே? அதெப்படி நான் காரணமாவேன்?” “உங்களோட எதிர்பார்ப்பு எல்லாம், மகளுக்கு இப்படி நடந்தா, அப்பா அடங்கிறணும் இல்லை, நான் அடங்க மாட்டேன். அதுக்கான பதிலடி கொடுப்பேன்“ “நீங்க அடங்க மாட்டீங்கன்னு எங்களுக்கு நல்லா தெரியும்” என்றான் தேசிகன். “ஏங்க“ “பொண்ணுக்காக, அந்த கேஸ் கொடுக்க சொல்லுதா? இப்போ நான் கேட்கிறேன், கேடுகெட்டவனா இருந்திருந்தா என் பொண்ணு வாழ்க்கைன்னு கேட்டார் இல்லை. நான் கேடுகெட்டவன் இல்லை. அப்போ என் வாழ்க்கைக்கு என்ன பதில் கொடுப்பார்?” “அதுக்கு தான் என் மகளை கொடுத்திருக்கேனே? போதாதா உங்களுக்கு?” மாமனார் கேட்க, “நீங்க கொடுத்தீங்க?” “நான் கொடுக்காம என் பொண்ணு கழுத்துல உங்க தாலி ஏறியிருக்காது?” “முதல் தாலி அப்படி தான் ஏறிச்சு“ “அதனால தான் அது உண்டியலுக்கு போச்சு” என்றார் தந்தை நெஞ்சம் நிமிர்த்தி. “என் பொண்ணை நான் எப்படி வளர்த்தேன்னு எனக்கு நல்லா தெரியும்” என்றும் சொல்ல, தேசிகன் மனைவியை அப்படி பார்த்தான். “சம்மந்தி. எங்க என்ன நடந்தாலும் அங்க ஹீரோ நான்தான்னா எப்படி?” என்றார் பெரியவர். அவரின் குசும்பில் சதாசிவம், “உங்களுக்கு நான் சம்மந்தியா?” என்று கடுப்படித்தார். “ஆமா. வயசு எல்லாம் பார்க்க கூடாது. உறவு முறைதான். இப்போ தொழிலுக்கு வருவோம். தேசிகா உன் மாமனார் சொன்னதில அர்த்தம் இருக்கு. நீ ஏன் திரும்ப தொழில் நடத்த கூடாது?” என்று பேரனிடம் கேட்க, “எப்போடான்னா இருந்திருக்கீங்க இல்லை” என்று கேட்டான் பேரன். “நாங்களும் எத்தனை நாளா கேட்டுட்டு இருக்கோம். சண்டை கூட போட்டு பார்த்தாச்சு. அசைய மாட்டேங்கிற. இப்போ பொண்ணை கொடுத்தவர் கேட்கிறார். நீ பதில் சொல்லித்தான் ஆகணும்” “சொல்லலைன்னா, பொண்ணை கூட்டிட்டு போயிடுவாரா?” என்று மாமனாரை கேட்டான் மருமகன். “டேய் உடனே நீ ஏறாத. அவ்வளவு எல்லாம் இல்லை. நீ உன் முடிவை மாத்திகிட்டா போதும்“ “அவரோட முடிவை மாத்திப்பார் தாத்தா” என்றாள் தன்வி. தேசிகன் மனைவியை முறைக்க, “அப்போ சரி பேத்தியே சொல்லிட்டா, இனி என்ன? டேய் நீ திரும்ப அந்த அப்ரூவலை வாங்கிற வழியை பாரு” என்று பெரியவர் மகனுக்கு சொல்ல, “வாங்குங்க தாத்தா. ஆனா தன்வி பேர்ல” என்றான் தேசிகன். தன்வி இப்போது கணவனை உர்ரென பார்க்க, “என்னடி. எனக்காக என் தொழிலை நீ எடுத்து நடத்த மாட்டியா என்ன?” என்றும் கேட்க, “டேய். எதாவது ஒரு வழியில வாடா. ஏண்டா இப்படி?” என்று தேசிகனின் மாமா சொல்ல, “எல்லா வழியும் நம்மது தான் மாமா. நீங்க என் பொண்டாட்டி பேர்ல அப்ரூவ் வாங்குங்க” என்றான் முடிவாக. “எப்படி இவரை நீ காலத்துக்கும் சமாளிக்க போற தன்வி?” என்று சதாசிவம் மகளிடம் கேட்க. “என் மாமியார்கிட்ட ட்ரைனிங் போவா” என்றான் மருமகன். சதாசிவம் முகம் சுருக்க, “இப்போ கூட வீட்ல யார்கிட்டேயும் சொல்லாம தான் வந்திருக்கீங்க போல. நான் ஆள் விட்டு சொல்லிட்டேன். உங்க அண்ணன் உங்களுக்காக காத்திருக்கார்” என்றான். “என் அண்ணனை நான் சமாளிச்சிப்பேன்” என்றவர், ஆனா உன்னை வாய்ப்பில்லை என்பதாய் மாப்பிள்ளையை பார்த்தார். “என்னை என் பொண்டாட்டி அருமையா, அழகா சமாளிச்சுக்குவா. என்ன தன்வி?” என்று மனைவியிடம் கேட்க, பல்லை கடித்து கொண்டே தலையசைத்தாள் தன்வி. “அண்ணா. உங்ககிட்ட பேசணும்” என்றான் அரவிந்த். தம்பியை தனியே அழைத்து கொண்டு செல்ல, “சார் உங்களை என்னமோ நினைச்சேன். ஆனா நீங்க ம்ம்ம்” என்று மெச்சினான் முரளி. “என்ன நினைச்ச நீ?” என்று சதாசிவம் சந்தேகமாக கேட்க, “நரம்பு மாதிரி இருந்துகிட்டு, கிண்ணுன்னு எங்க அண்ணா முன்னாடி நிக்கிற பாருங்க. செம” என்றான். இவனின் பாராட்டை நம்புவதா? வேண்டாமா? என்ற குழப்பம் மனிதருக்கு. “அட நான் உண்மையா தான் சொல்றேன் சார். எல்லா கோவமா பார்க்கிறது தெரிஞ்சும், அசராம பேசுனீங்க பாரு. பின்ன சும்மாவா இத்தனை தொழில் நடத்துறீங்க” என்றும் சொன்னவனை, “முரளி” என்றழைத்தான் தேசிகன். “அதானே என்னை யார் பாரட்டிட்டாலும் உன் புருஷனுக்கு தாங்காது” என்று மகளிடம் சொல்ல, “ப்பா” என்றாள் மகள். “என்னடா அப்பா பேசினதுல உனக்கு கோவமா?” “இல்லைப்பா. உங்களை எதுவும் பேசிட கூடாதுன்னு“ “உன் வீட்டுக்காரரை தவிர யாரும் பேச மாட்டாங்க. அவர் பேசுறதும் எங்களுக்கு புதுசு இல்லை“ “ப்பா” என்று அவரின் தோள் சாய்ந்தாள் மகள். “நீ வருத்தப்பட்டதுக்காக தான் பேசினேன்டா. முடிஞ்சா முயற்சி பண்ணி பார்க்கணும். இல்லை ஒதுக்கிவிட்டு போயிட்டே இருக்கணும். என் மகள் அப்படி எதுக்காகவும், யாருக்காகவும் உடைஞ்சு போயிட கூடாது” என்று சொல்ல, அவர் அதுல விதிவிலக்கா இருக்காரே! கணவன் அவளுக்கு சொன்னது, அவனுக்கும் இவள் விஷயத்தில் பொருந்தி வந்ததை எண்ணி பெருமூச்சு விட்டாள் தன்வி. தேசிகன் அங்கு தம்பியுடன் ஏதோ சீரியசாக பேசி கொண்டிருக்க, சாவித்திரி மகன்களை நெருங்கி என்னவென்று கேட்டார். “உங்க செல்ல மகன் என்னை அதிகாரம் பண்றான்” என்றான் தேசிகன் கோவமாக. “அண்ணா. அதிகாரம்ன்னு எல்லாம் சொல்லாதீங்க. எனக்கு உரிமை இல்லையா? சுகத்தை மட்டும் தான் நான் அனுபவிக்கணுமா? இதை எல்லாம் நான் செய்ய கூடாதா?” என்று அரவிந்த் பேச, “இரண்டு பேரும் முதல்ல விஷயத்துக்கு வாங்க” என்று அதட்டினார் அன்னை. மகன்கள் மௌனம் காக்க, “அதும்மா. இனி அவர் நம்ம வழிக்கே வராதபடி அவரை ஊரைவிட்டே அனுப்பணும்ன்னு தம்பி சொல்றான்” என்று முரளி சொன்னான். “அவன் சொல்றது ஒருவிதத்தில் சரி” என்றார் சாவித்திரி.