Malar Soodum Penmai 22 1 11040 மலர் சூடும் பெண்மை 22 முரளி கிளம்பி நிற்கவும், சதாசிவத்திற்கு எக்கச்சக்க கடுப்பு. “நீ என்னோட வர கூடாது” என்று அலுவலகத்திற்கு கிளம்பியவர், அப்படியே நின்றுவிட்டார். “சரி. நான் வரலை. நீங்க வீட்ல இருந்தே வேலை பாருங்க” என்று முரளி சாதாரணமாக சொல்ல, “நீ என்னடா சொல்றது நான் எங்க இருந்து வேலை செய்யணும்ன்னு” என்று அவனிடம் ஏறிக்கொண்டு சென்றார். “ப்பா. ப்ளீஸ். கொஞ்சம் பொறுமையா இருங்க. நாம பேசலாம்” என்று தன்வி இருவருக்கும் இடையில் வர, “தன்வி. இதுல பேசுறதுக்கு ஒன்னுமில்லை. இவன் என்னோட வரக்கூடாது. டாட்” என்றார் தந்தை முடிவாக. “நான் வராம, நீங்க வாசல்பாடியை தாண்ட முடியாது சார். மேலிடத்து ஆர்டர் இது” என்றான் முரளியும் உறுதியாக. “எனக்கு ஆர்டர் போட்டா மேலிடம் யாரது? இந்த சதாசிவத்தை கண்ட்ரோல் பண்ண பார்க்கிறீங்களா? என்னை என்னன்னு நினைச்சீங்க எல்லாம்?” என்று மனிதர் குதிக்க, முரளி போன் எடுத்து யாருக்கோ அழைத்தவன், “சார். அவருக்கு யாரும் ஆர்டர் போட முடியாதாம். அவருக்கு அவரே ராஜாவாம். எவண்டா அது என்னை கண்ட்ரோல் பண்றதுன்னு குதிக்கிறார் சார்” என்று சொல்ல, “சொல்லு, யாருக்கு சொல்றியா சொல்லு, யார் வராங்க நானும் பார்க்கிறேன்” என்றார் சதாசிவம். “என்ன சதாசிவம் என்னையே இப்படி பேசற அளவு நீ வளர்ந்துட்டியா?” என்று ராஜேந்திரன் போனில் கத்தினார். “ண்ணா” என்று தம்பி திகைக்க, “வரேன் இரு, சென்னைக்கு வந்து உன்னை கவனிச்சுக்கிறேன். ராஜாக்கு பட்டாபிஷேகம் பண்ணிடுறேன்“ “ண்ணா. எனக்கு நீங்கன்னு தெரியாது” என்று சதாசிவம் பதற, “முதல்ல என் தொழில்ல தான் தலையிட்ட. இப்போ என்னையே மரியாதை இல்லாம பேசுற அளவுக்கு வந்துட்ட இல்லை” “ண்ணா. நான் உங்களை பேசலை” “அப்போ என் அண்ணனை தான் அப்படி பேசுனீங்களா?” என்று முரளி கோவமாக கேட்க. “வீட்டு மாப்பிள்ளையை இப்படி தான் பேசுவியா சதாசிவம். என் தம்பியை பத்தி நான் ரொம்ப பெருமையா நினைச்சுட்டு இருந்தேன். ஆனா நீ அப்படி இல்லை. என் தம்பி சரி இல்லை“ “ண்ணா. இப்போ எதுக்கு என்னென்னவோ பேசுறீங்க? கோவத்துல பேசி, அதை விடுங்க நான் இவனையே என்னோட கூட்டிட்டு போறேன்” என்றார் சதாசிவம் உடனடியாக. “கூட்டிட்டு போய்தான் ஆகணும். அந்தாள் உனக்கு தான் கட்டம் கட்டிட்டு இருக்கான். பார்த்துக்கோ” என்று வைக்க, “கிளம்பலாமா சார்” என்று கேட்டான் முரளி. “என்ன நீ பெரிய பவுன்சரா? இப்படி நெஞ்சை நிமிர்த்திட்டு நின்னா நான் பயந்திடுவேனா? ஷோல்டரை இறக்கு முதல்ல” என்றார் சதாசிவம் கடுப்பாக. முரளி நான் இப்படித்தான் என்பதாய் நிற்க, “ப்பா. ப்ளீஸ். நாம கிளம்பலாம். மீட்டிங்குக்கு நேரம் ஆச்சு” என்றாள் தன்வி. தேசிகனுக்கு சற்றும் சளைத்தவன் இல்லை முரளி என்பதை தன்வி நன்றாகவே கண்டுகொண்டாள். “வாங்க அண்ணி” என்று அவளுக்கு கார்கதவை திறந்துவிட, “எனக்கு யார் திறப்பா?” என்று கேட்டார் சதாசிவம். முரளியின் பார்வையில் ஓட்டுநர் வந்து கதவை திறக்க, மனிதருக்கு ஒன்றும் முடியவில்லை. ராஜேந்திரன் இல்லாததால், சதாசிவம் மகளின் உதவிக்கு அலுவலகம் வந்திருக்க, புது ப்ரொஜெக்ட்டுக்கான வேலைகள் நல்லபடியே சென்றது. காலத்துக்கு ஏற்ற வகையில் அவர்களின் மசாலாவிலும் மாற்றத்தை கொண்டு வந்தனர். புதுப்புது வகையில் தயாரித்து, அதிகளவில் வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டம். வெளிநாட்டு கம்பெனி ஒன்று இவர்களுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்திருக்க, சில மாதங்களாகவே அதற்கான ஆலோசனைகள் நடந்து, அதிகார பூர்வமாக கையெழுத்தாக உள்ளது. ராஜேந்திரன் முழு பவரையும் தன்விக்கு கொடுத்திருக்க, பெண் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய கட்டாயம். என்னதான் குடும்பத்தினர் உடன் இருந்தாலும், ராஜேந்திரன் மகளை தான் எல்லாவற்றிலும் கேள்வி கேட்டார். “சிறு தவறும் இருக்க கூடாது. நான் அரசியல்ல இருக்கிறதால நம்ம ஒப்பந்தம் நிச்சயம் வெளியே வரும். யாரும் என்னை ஒருவார்த்தை கூட கேட்காத மாதிரி, நம்ம கவர்மெண்ட் ரூல்ஸை நீ பாலோ பண்ணியிருக்கணும் தன்வி” என்று மிகவும் அழுத்தமாக ஆணையிட்டு இருந்தார். தன்விக்கு அதிலே பதட்டம் கூடிப்போயிருந்தது. “நாம ரூல்ஸ் மீறி எப்போவும் பண்ணதில்லை தன்வி. நீ டென்க்ஷன் எடுத்துக்காத” என்று சதாசிவம் மகளுக்கு உறுதுணையாக நின்றார். தன்விக்கு தந்தை சொல்வது புரியாமல் இல்லை. ஆனாலும் அவள் தலைமையில் முதல் பெரிய ஒப்பந்தம் ஆயிற்றே. அதற்கான பதட்டம் இல்லாமல் போகுமா? ராஜேந்திரன் கேட்கும் கேள்விகள் எல்லாம் தன்வியிடம் மட்டுமே எனும் போது, அதிகளவில் மெனக்கெட்டாள் பெண். ஒப்பந்தத்தில் போடும் ஒவ்வொரு வார்த்தையும் பலகட்ட ஆலோசனைக்கு பிறகே இடம்பெற்றது. இரண்டு வாரம் என்பது மூன்று வாரமாக நீண்டது. அதன்பின்னே ராஜேந்திரன் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. “உன் கையில இந்த தொழிலை கொடுத்துட்டேன் தன்வி. இனி நீ தான் இங்க எல்லாம். ம்ம். சைன் போடு” என்று அவளையே எல்லாவற்றுக்கும் முன்னிறுத்தினார் பெரிய தந்தை. தன்வி கையெழுத்திட்ட ‘பென்‘ அவளின் கணவன் தேசிகன் அவளுக்கு பரிசாக அனுப்பி வைத்தது. ஒருவித மகிழ்ச்சியுடனே அதில் தன் அடையாளத்தை பதித்தாள். “குட் ஒர்க் தன்வி” என்று ராஜேந்திரன் மகளை பாராட்ட, குடும்பத்தினரும் அவளுடன் அன்பை பகிர்ந்து கொண்டனர். “அண்ணா கொடுக்க சொன்னார் அண்ணி” என்று ஒரு பெரிய பூங்கொத்தை கொடுத்தான் முரளி. தன்விக்கு முகமெல்லாம் புன்னகை. தன் கை வளைவிலே அந்த பூங்கொத்தை அணைத்து பிடித்திருக்க, “கீழே வைச்சிடுடா” என்று வாங்க போனார் சதாசிவம். “இல்லைப்பா. இருக்கட்டும்” என்று பெண் அதனுடனே செல்ல, முரளி அவரை உர்ரென பார்த்து நின்றான். “என்னடா?” என்று சதாசிவம் கேட்க, “எங்க அண்ணா கொடுத்தார்ன்னு தானே அண்ணிகிட்ட இருந்து பிரிக்க பார்த்தீங்க?” என்றான் முரளி. “உன் அண்ணா கொடுத்ததா, சரி அதுக்காக என் பொண்ணை அந்த வெயிட்டை சுமந்துட்டே இருக்கணுமா?” முரளிக்கு கடுப்பு. “என்னடா. நெஞ்சை நிமிர்த்திட்டு நின்னா நான் பயந்திடுவேனா?” “முரளி” என்று தன்வி இவனை அழைக்க, “அண்ணி” என்ற முரளி சதாசிவத்தை உரசிவிட்டு சென்றான். “ஐயோ அம்மா” என்று சதாசிவம் அலறி கீழே விழப்போக, “இவர் வேற” என்று வேகத்துடன் வந்து தாங்கி பிடித்தான் முரளி. அவன் கையில் தொங்கி கொண்டிருந்த மனிதரிடம், “ப்பா. என்னாச்சு?” என்று கேட்டு வந்தாள் தன்வி. “என்னை இடிச்சிட்டு போறான் தன்வி” என்று கோவப்பட, “ப்பா. அவர் உரசிட்டு வந்த மாதிரி தான் இருந்தது” என்றாள் தன்வி குழப்பத்துடன். “உரசிட்டு போனா நான் கீழே விழுவேனா?” “நீ விழுவடா. வெறும் எலும்பை வைச்சுக்கிட்டு இருக்க” என்று வந்தார் ராஜேந்திரன். “நான் ஸ்ட்ராங்கா தான் இருக்கேன்ண்ணா. என்னோட போன்ஸ் எல்லாம் நல்ல ஸ்ட்ரென்த்” என்று சதாசிவம் வேகமாக சொல்ல, “உடம்பு முழுக்க விஷமா இருந்தா எலும்பு கூட தேய்ஞ்சு போயிடும்” என்று முரளி முனகினான். “என்ன சொன்ன, என்ன சொன்ன நீ?” என்று சதாசிவம் அவனிடம் ஏறிக்கொண்டு சென்றார். “தள்ளி வாடா. அப்புறம் அவன் மூச்சு விட்டான், நான் பறந்துட்டேன்னு பஞ்சாயத்தை தூக்கிட்டு வருவ” என்று தம்பியை அடக்கியவர், “தன்வி மாப்பிள்ளைகிட்ட பேசுனியா? எங்க இருக்காராம்?” என்று தேசிகனை விசாரித்தார். “இனி தான் பேசணும் பெரியப்பா” என்றாள் தன்வி. “சீக்கிரம் பேசு. உனக்காக ஏற்பாடு பண்ண பார்ட்டில, மாப்பிள்ளை இல்லைன்னா எப்படி? சென்னைக்கு கிளம்பிட்டார்ன்னு சொன்னாங்க. நேரா வீட்டுக்கே வர சொல்லிடு. நாங்களும் பேசிடுறோம்” என்று தம்பியுடன் சென்றார் ராஜேந்திரன். தன்வி தலையசைக்க, “அண்ணி. வீட்டுக்கு போலாமா?” என்று கேட்டான் முரளி. சோர்வாகத்தான் இருந்தாள். இத்தனை நாள் ஓட்டம், ஓய்வை கேட்டது. ஆனால் தேசிகன்! அவளின் கணவன், அவன் எப்படி?” வீட்டுக்கு வாங்கன்னு நான் கூப்பிட முடியுமா? தன்விக்கே அவனை அழைக்க ஏதோ தடுத்தது. அன்று தேசிகன் சென்னை வீட்டில் இருந்து, முரளி தான் தன்வியை அவள் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தான்.