ஆத்திரத்துடன் அவளை இழுத்தவன் அவளது உடல் மென்மையில் அவளுக்குள் தன்னை தொலைக்க ஆரம்பித்து விட்டான். பயத்தில் நடுங்கிய அவளது உடலின் மென்மையும், அவளுக்கே உரித்தான ப்ரத்யேகமான நறுமணமும் அவனால் மறைத்து வைக்கப்பட்ட காதலை வெளிக்கொணர்ந்தது.
அவளை தன்னுடன் அணைத்தவன் அவளை உச்சி முதல் பாதம் வரை அணு அணுவாய் ரசித்துக் கொண்டிருந்தான். வெள்ளை நிற லாங் மிடியில் சிகப்பு நிற பூக்கள் பூத்திற்க அதற்கு பொருத்தமாக சிகப்பு நிற டாப்ஸ்… வெள்ளை நிறத்தில் சிகப்பு பூக்கள் போட்ட துப்பட்டாவை அவள் போட்டிருந்த அழகு அவனை பித்தம் கொள்ள வைத்தது.
தோள்பட்டையைத் தாண்டி வழியும் குட்டையான அடர்த்தியான தலைமுடி… நெற்றியில் சிறியதாய் ஒற்றை வெள்ளைக் கல்லால் ஆன பொட்டு…எப்பொழுதும் படபடக்கும் கண்கள்…எடுப்பான நாசி… அழகான துடிக்கும் இதழ்கள்… மேலும் முன்னேறிய அவனது பார்வையின் தாக்கத்தை தாங்க முடியாமல் அவளது கண்கள் தானாக மூடிக்கொண்டது.
சூடான அவனது மூச்சுக்காற்று மூடிய அவளது இமைகளை திறக்க செய்ய அவளது கண்களோடு தன் கண்களை கலக்க விட்டவன் மேலும் அவளை தனக்குள் புதைத்துக் கொள்ளுபவன் போல இறுக அணைத்து
“பயந்து தாண்டி ஓடுறேன். நட்புக்கு துரோகம் பண்ணிடக் கூடாதுனு பயந்து ஓடுறேன். உன் அண்ணன் என் மேல நம்பிக்கை வைச்சு உங்க வீட்டுக்குள்ள என்னை பழக விட்டுருக்கான். இப்போ நான் அந்த நம்பிக்கைக்கு துரோகம் பண்ணிட்டேன். எது நடக்கக் கூடாதுனு நினைச்சேனோ அது இப்போ நடக்க ஆரம்பிடுச்சு. இதுக்கு தாண்டி உன்னை விட்டு ஓடினேன். இப்ப உனக்கு நிம்மதியா? போடி போ!” என்று எந்த வேகத்தில் அணைத்தானோ அதே வேகத்தில் அவளை தன்னிடமிருந்து பிய்த்து எறிபவன் போல தள்ளியவன் வேகமாய் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
அவன் தள்ளிய வேகத்தில் கீழே விழப் போனவள் சுதாரித்து சுவற்றினை பிடித்து நின்று கொண்டாள். அவளது கண்களில் இருந்து கண்ணீர் அவளது அனுமதியின்றி மகிழ்ச்சியோடு வெளியேறிக்கொண்டிருந்தது.
இந்த ஒரு வார்த்தைக்காக தானே இத்தனை நாள் காத்திருப்பு. ஆனாலும் அவன் சொன்ன காரணம் ரேணுகாவை கதிகலங்க தான் வைத்திருந்தது. இருந்தாலும் தன் அண்ணன் தங்களை புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கையில் கண்களை துடைத்துக்கொண்டு தனாவை தேடி ஹாலுக்கு வந்தாள்.
அங்கே அவள் வருவதற்கும் ரிஷி மாடிப்படிகளில் இருந்து இறங்கி வருவதற்கும் சரியாய் இருந்தது. ரேணுகாவின் கண்கள் ஆசையாய் தனாவை தேட ….அவனோ மாடிப்படிகளில் இருந்து இறங்கி கொண்டிருக்கும் ரிஷியை ஏதோ அதிசயத்தை பார்ப்பதைப் போல பார்த்துக்கொண்டிருந்தாண்.
ரிஷி எப்போதும் பார்மல் ட்ரெஸ் தான் அணிவான். ஆனால் இன்றோ அவனது ஜிம் பாடியை இறுக தழுவியவாறு கருப்புக்கலரில் ரவுண்டு நெக் டீசர்ட்டும் , ஆஷ் கலரில் ஜீன்ஸும் அணிந்திருந்தான். கண்களில் கூலர் , கைகளில் தங்க காப்பு ,கழுத்தினில் அவன் உயிர் போல பாதுகாக்கும் எப்போதும் அணியும் செயின் என அவன் இன்று ஒரு கல்லூரி மாணவனை போல கிளம்பி வந்திருந்தான்.
அதை கண்ட தனா தான் தன்னை மறந்து எழுந்துவிட்டான்.
‘முதலில் மதுரைக்கே வர மறுத்தவன் இப்போது இவ்வளவு ஆர்வமாய் கிளம்பி வருகினானென்றால் அசலை மட்டுமில்ல வட்டியையும் சேர்த்தே கொடுக்க போறான் போல’ என தனக்குள் எண்ணிக் கொண்டான்.
‘பக்கி…. என்னைய சைட் அடினு சொன்னா என் அண்ணனை போய் சைட் அடிக்குது பாரு…. சரியான லூசு. இதை கட்டிட்டு நான் எப்படி தான் குடும்பம் நடத்த போறேனோ?’ என்று மனசுக்குள் தனாவை திட்டிக் கொண்டிருந்தாள் ரேணு.
“என்னடா சாப்பிட்டியா? கிளம்பலாமா?” என்று கேட்டுக் கொண்டே வாசல் நோக்கி சென்றவன் அங்கேயிருந்த ட்ரைவரிடம் தனது அறையின் வாசலில் இருக்கும் சூட்கேஷை கீழே எடுத்து வருமாறு பணித்துவிட்டு… வாட்ச்மேனுக்கும் சில உத்தரவுகளை பிறப்பித்துவிட்டு உள்ளே வந்தான்.
“அண்ணா நீயும் சாப்பிட வா” என்று ரேணு அழைக்க
“வேணாம்டா குட்டிமா. நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் சாப்பிட்டேன். ஜூஸ் மட்டும் கொடு.” என்று சொல்லி விட்டு தனா வின் முகத்தை பார்க்க
அப்போதும் அவனயே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தவனை நோக்கி “ஏண்டா இப்படி பார்க்குற ?” என ரிஷி கேட்கவும்
“என் கூட பிளைட்ல வருவியா? இல்ல சிட்டாய் பறந்து மதுரைக்கு போவியானு யோசிச்சுட்டு இருந்தேன்.”என்றான் தனா.
சிட்டு என்ற வார்த்தையை கேட்டதும் ரிஷியின் கண்களில் ஒரு மின்னல் அவசரமாய் வந்து சென்றது.
ரிஷிக்கு ஜூஸ் கொண்டு வந்த ரேணுவின் காதுகளில் சிட்டு என்ற வார்த்தையை கேட்டதும் ஆயிரம் வாட்ஸ் பல்ப்பாய் அவளது முகம் ஒளிரத் தொடங்கியது.
அதைக் கண்ட தனாவின் மனம் ‘அண்ணனும் தங்கச்சியும் இதுலயும் ஒத்துப் போகுதுங்க ‘ என்று ரசித்துக் கொண்டிருந்தது.
ஜூஸ் குடித்துக் கொண்டே தன் தங்கையை அருகில் அமர்த்தி அவளது தலயை பாசத்துடன் தடவிக்கொண்டே “குட்டிமா எனக்கு எந்த நேரம் வேணும்னாலும் நீ போன் போடலாம். பத்திரமாய் காலேஜுக்கு போய்ட்டு திரும்பி வரணும்” என்று மேற்கொண்டு பேச போனவனை
“டேய்!……போதும்டா……..இதுக்கு மேல என்னால எதையும் பார்க்கவோ கேட்கவோ முடியாது. உன் தங்கச்சி ஒண்ணும் L.K.G. பாப்பா இல்ல. அவளை விட்டா இந்த சென்னைக்கு செம ரேட்டு போட்டு ஒரு சேட்டு கிட்ட வித்துட்டு வந்துருவா. ரெண்டு பேரும் ஓவரா சீன் போடாதீங்க. பார்க்க ரொம்பவே கொடூரமா இருக்கு. கிளம்பு நேரமாச்சு” என்று சொன்ன தனாவை எறித்து விடுவது போல முறைத்தனர் ரிஷியும் ரேணுவும்.
அப்போது ரிஷிக்கு போன் வரவே பேசிக் கொண்டே வாசல் பக்கம் சென்றான்.
“நீ நிஜமா தான் சொல்லுறியா? அண்ணன் சிட்டை பார்க்கத்தான் கிளம்பிட்டாரா? உன்கிட்ட சொன்னாரா? “ என்று தனாவிடம் கேட்டாள் ரேணு.
“எத்தனை கேள்விடி கேட்ப? உன் அண்ணன் அவ்வளவு சுலபமா வாயை மட்டுமல்ல மனசையும் திறக்க மாட்டான். ஆனால் இன்னைக்கு அவன் கிளம்பி வருவதை பார்த்தால் ஒரு முடிவு எடுத்துட்டானு தான் தோணுது. அவன் முடிவெடுத்துட்டா அதை முடிக்காம விடமாட்டானு நம்ம எல்லாருக்கும் தெரியும். பார்ப்போம் என்ன நடக்கப் போகுதுனு.” என்றான் தனா.
போன் பேசி விட்டு ரிஷி உள்ளே வருவதற்கும் கோவிலுக்கு சென்றிருந்த அவரகளது பெற்றோர் வருவதற்கும் சரியாக இருந்தது.
“வாப்பா… தனா. எப்போ வந்த ? உன்னை பார்த்து ரொம்ப நாள் ஆயிடுச்சு.” என்று கேட்டுக் கொண்டே வந்தார் ரிஷி ரேணுவின் அப்பா உலகநாதன்.
“அம்மா எப்படி இருக்காங்க தனா? போன மாசம் கோவில்ல வைச்சு அம்மாவை பார்த்தேன்.உடம்புக்கு முடியலைனு சொன்னாங்க. இப்போ எப்படி இருக்காங்க?” என்று கேட்டார் ரிஷி ரேணுவின் அம்மாவும் உலகநாதனின் மனைவியுமான பத்மாவதி.
“நான் வந்து ஒன் ஹவர் ஆகப்போகுது அங்கிள். அம்மா நல்லா இருக்காங்க ஆன்ட்டி.” என்று இருவருக்குமாக பதில் சொன்னான் தனா.
“குட்டிமா… நான் கிளம்புறேன். பார்த்து இருடா.” என்று சொன்னவன் சமையலறையை நோக்கி “ராணி… கனகாம்மா” என்று குரல் கொடுத்தான் ரிஷி.
கனகாம்மாவும் ராணியும் வந்துவிட அவர்களிடம் “நான் ஊருக்கு போறேன். திரும்பி வரும் வரை ரேணுவை பார்த்துக்கோங்க.” என்று சொல்ல
கனகாம்மாவின் கண்கள் கலங்கிய பத்மாவதியின் கண்களிடம் அனுமதியை வேண்ட … பத்மாவதி தன் கலங்கிய விழிகளின் இமைகளை மூடித் திறந்து அனுமதி வழங்கிட
“சரிங்க தம்பி நாங்க எல்லோரும் பார்த்துக்கிறோம். நீங்க கவலைப்படாம பத்திரமா போய்ட்டு வாங்க.” என்றாள் கனகாம்மா.
தனாவும் அனைவரிடம் சொல்லிகொண்டு புறப்பட பத்மாவதியின் கலங்கிய கண்கள் அவனை வருத்தமடைய செய்தன.
‘இன்னும் எத்தனை வருடத்திற்கு தான் இவன் பெற்றோரை ஒதுக்கி வைப்பான். இதைப் பற்றி இவனிடம் பேசியே ஆகனும்.’ என்று மனதுக்குள் தீர்மானம் பண்ணிக் கொண்டான்.
ரிஷியும் தனாவும் கிளம்பி சென்ற பின் பத்மாவதி தன் அறைக்குள் சென்று அழுகவே
“இப்போ ஏன் பத்மா அழுகுற? ரிஷியை பற்றி நமக்கு தெரிஞ்சது தானே இது.” என்றார் உலகநாதன்.
“எப்படிங்க நான் அழுகாம இருக்க முடியும் ? என் பையன் என்னை அம்மான்னு கூப்பிட்டு பன்னிரெண்டு வருஷமாச்சு. என் பையனுக்கு என்னால ஒரு வாய் சாதம் ஊட்ட முடியலை. கை தொடும் தூரம் தான் இருந்தாலும் என்னால அவனை தொட்டு பார்க்க கூட முடியலை. ஒரு தாய்க்கு இதை விட பெரிய தண்டனை இந்த உலகத்துல இருக்க முடியாதுங்க.” என்று சொல்லி கதறினார் பத்மா.
“அழாதே பத்மா… நீ அழுதழுது உன் உடம்பை கெடுத்துக்குற.
அவன் நம்ம பையன். நம்மை விட்டு எங்கும் போக மாட்டான். அவனது மௌனத்திலும் ஓர் காரணமிருக்கும். அதை நினைவில் வை. நம்ம மேலயும் தப்பு இருக்கு. அப்போ நாம பொறுமையா இல்லாததுனால இப்போ நாம் பொறுமையா இருந்தே ஆக வேண்டிய கட்டாயத்துல இருக்கோம். எல்லாத்துக்கும் முடிவுனு ஒன்னு இருக்கும்.” என்று தன் மனைவியை தேற்றினார் உலகநாதன்.