Advertisement
‘என்னடா இது எல்லாம் அதிசயமா இருக்கு. என்னை விட்டுட்டு ஓடுறதுலே குறியா இருக்கான். என்னை அவன் கூட தங்க வைப்பான்னு நினைச்சா, தனியா ஹோட்டலில் ரூம் எடுத்துக் குடுத்துருக்கான். சம்திங் ராங் வித் ஹிம்’ என ரிஷி தனக்குள்ளே எண்ணிக் கொண்டான்.
ரூம் சர்வீஸுக்கு கால் பண்ணி, தனக்கு தேவையான உணவுகளை ஆர்டர் செய்தவன் ஒரு சிறு குளியல் போட்டுவிட்டு வந்தான். தன் திங்க்ஸ் எல்லாம் வைத்தவன் தான் கொண்டு வந்திருந்த அந்த போட்டாவை எடுத்து டிரெஸ்ஸிங் டேபிள் மீது வைப்பதற்கும் ரூம் சர்வீசில் இருந்து டின்னர் வருவதற்கும் சரியாக இருந்தது.
சாப்பிட்டுப் படுத்தவனின் மனதில் நிறைய எதிர்பார்ப்புகள். அவனது கையில் அந்த போட்டா. அவனது மனம் முழுவதும் அவனது சிட்டு மட்டுமே நிறைந்திருந்தாள். “வருகின்றேனடி கண்ணம்மா விரைவில்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டு, அந்த போட்டாவை தன் நெஞ்சோடு அணைத்து தூங்க ஆரம்பித்தான்.
ரிஷியை ஹோட்டலில் விட்டு வந்த தனா, அவனது வீட்டிற்கு வர மேலும் அரை மணி நேரம் ஆகியது. காரிலேயே ரேணுகாவுக்கு ரிப்ளை பண்ணியிருக்கலாம். ஆனால் அவன் தனிமையில் ரேணுவிடம் பேச விரும்பினான். அதனாலேயே வீட்டிற்கு வரும் வரை பொறுமை காத்தான். ஆனால் ரேணுவிடமிருந்தோ மெசேஜ் வந்து கொண்டே இருக்க… வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவளுக்கு ரிப்ளை தான் பண்ணினான் முதலில்.
‘ரேணு’… இதை மட்டும் தான் அனுப்பினான்.
அடுத்த நொடியே அவளிடமிருந்து , ‘தனு’…
‘தனு வந்துட்டீங்களா? நான் கால் பண்ணவா’
‘ம்ம்…சரி’ என்றான் தனா.
அடுத்த நொடி அவளிடமிருந்து “ஹலோ… தனு… ஏன் இவ்ளோ நேரம் ரிப்ளை பண்ணலை?” என்றாள்.
“உன் அண்ணன் கூடவே இருந்தான். அவனை வைச்சுட்டு நான் உனக்கு ரிப்ளை பண்ண முடியுமா? அவன் இப்போவே என்னை சந்தேகமா பார்க்க ஆரம்பிச்சுட்டான். எப்போ என்னை நிக்க வைச்சு கேள்வி கேட்க போறான்னு தெரியலை. எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு ரேணு. என் நண்பனுக்கு நான் துரோகம் பண்ணுறேன்னு தோணுது”
“தனு எனக்கும் அதே குற்றவுணர்வு இருக்கு. ஆனாலும் அண்ணா நம்மை புரிஞ்சுப்பாருங்குற நம்பிக்கையும் இருக்கு. அதனால நீங்க வருத்தப்படாதீங்க.”
“ம்ம்ம்… எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு. ஆனாலும் மனசுல ஒரு ஓரமா ஒரு பயம் . நம்ம விஷயம் தெரிஞ்ச பின்னாடி ரிஷி என்னை, ‘நம்பி வீட்டுக்குள்ள பழக விட்டேனடா. இப்படி ஒரு துரோகம் பண்ணிட்டியே’ னு ஒரு பார்வை பார்த்தா கூட நான் அந்த இடத்துலேயே புதைஞ்சு போய்டுவேண்டி. இப்போவும் சொல்லுறேன் ரேணு, எனக்கு நம்ம காதலை விட எங்க நட்பு தான் முக்கியம். ரிஷியின் சம்மதம் இல்லாம நம்ம கல்யாணம் எப்போவும் நடக்காது ரேணு. அதை புரிஞ்சுக்கோ”. தனாவின் இந்த நீளமான பேச்சுக்கு அந்த பக்கம் மவுனமே பதிலாய் இருக்க
“ரேணு… ஹலோ… ஹலோ லைன்ல இருக்கியா இல்லையாடி?”
“ம்ம்ம்… இருக்கேன்… இருக்கேன்…”
“என்னடி நக்கலா? நான் இவ்ளோ சீரியசா பேசிட்டு இருக்கேன் . நீ கூலா ‘இருக்கேன் இருக்கேன்’னு சொல்லிட்டு இருக்க?” என்று கோவமாய் கேட்டான் தனா.
“உங்களை யார் இவ்ளோ சீரியஸா பேச சொன்னா? மைக் கிடைச்ச அரசியல்வாதி உளறுவது மாதிரி… உங்க கையில இந்த போன் கிடைச்சதும் உளற ஆரம்பிச்சுட்டீங்க?” என்றாள் ரேணு கிண்டலாக.
“என்னது உளருறேனா? என்னடி எகத்தாளமாய் பேசிட்டு இருக்க?”
“அப்புறம் என்ன?… ரெண்டு வருஷத்துக்கு மேல போராடி இன்னைக்கு தான் உங்க கிட்ட இருந்து க்ரீன் சிக்னல் வாங்கியிருக்கேன். அதுவும் இன்னும் நீங்க என்கிட்ட ஒரு ஐ லவ் யூ கூட சொல்லலை. அதுக்குள்ள எனக்கு காதலை விட நட்பு தான் முக்கியம்னு சொன்னா … என் மனசு எவ்ளோ கஷ்டப்படும்னு உங்களுக்கு தோணுதா?”
ரேணு அவ்வாறு வருத்தப்பட்டு கூறிய பின் தான் அவளது மனதை காயப்படுத்திவிட்டோமென அறிந்து கொண்டவன் அவளது மனதை மாற்றும் முயற்சியாய்,
“ஸாரிடி… இனி இப்படி பேசலை. ஆனா உண்மை அதுதான். ஆமா இன்னைக்கு உன் பேச்சுல ஒரு வித்தியாசம் தெரியுதே” என கேட்டான் தனா.
“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல. நீங்களா ஏதாவது கற்பனை பண்ணிட்டு இருக்காதீங்க” என்றாள் ரேணு.
“இதான்… இந்த வித்தியாசம் தான் அது. என்னை எப்பவும் ரொம்ப மரியாதையாய் வாடா போடா னு தான் சொல்லுவ. இப்போ மட்டும் ஏன் வாங்க போங்க னு மரியாதையில்லாம பேசுற?” என்றான் சிரிப்புடன் தனா.
“ம்ம்…அது வந்து…” என்று இழுத்தாள் ரேணு.
“ம்…வந்து… அப்புறம் .. சொல்லுடி.. நீ வெட்கப்படுறீயா? அச்சோ எவ்ளோ அழகான அற்புதமான அரிய வகை காட்சி. ரேணு ப்ளீஸ்டி வீடியோ கால் கனெக்ட் பண்ணுடி” என்று கொஞ்சினான் தனா.
“இப்படியெல்லாம் பேசுனீங்கனா கால் கட் பண்ணிடுவேன்.” என்றாள் ரேணு.
“சரி…சரி.. நான் பேசலை. ஏன் இப்படி பேசுறேனு சொல்லிட்டு போ”
“அது வந்து … முன்னாடியெல்லாம் உங்க மேல கோவமா இருந்தேன். அதான் அப்படி மரியாதையில்லாம பேசினேன்.” என்றாள் ரேணு.
“நீ இப்படி பேசுறது எனக்கு பிடிக்கவே இல்லைடி. எப்பவும் போல என்னை வாடா போடா னு பேசு. எனக்கு அதான் ரொம்ப பிடிச்சிருக்கு. அதுவும் ஒரு நாள் ‘என்னடா கருவாயா’னு கேட்ட பாரு அன்னைக்கு விழுந்தவன் தான்டி நான்” தனாவோ காதலாய் பேசிக்கொண்டே போக எதிர் பக்கம் அமைதியாய் இருக்க..
“ஹலோ… ரேணு… ஏன் அமைதியாகிட்ட? பேசுடி” என்றான் தனா.
“எனக்கு என்ன பேசனும்னு தெரியலை” என்றாள் தன் மனதை மறைக்காது.
அப்போது தான் உண்ர்ந்தான் தனா.. தான் படிக்குற பெண்ணின் மனதை சலனப்படுத்துகின்றோம் என்று.
“ம்ம்… சரி. இன்னைக்கு பேசுனது போதும். ரொம்ப நேரமாச்சு. நாளைக்கு காலேஜ் தான. போய் படு. இன்னைக்கு sms அனுப்புனது மாதிரி நாளைக்கும் அனுப்பக் கூடாது. ரிஷி என்கூடவே இருப்பான். நாங்க பிஸியா இருப்போம். நானே உனக்கு கால் பண்ணுவேன்” என்றான் தனா.
“மறக்காம எனக்கு கால் பண்ணனும். நான் தூங்காமல் வெயிட் பண்ணிட்டு இருப்பேன்” என்றாள் ரேணு.
“ம்ம்…சரிடி . பண்ணுறேன். குட்நைட்”
“குட்நைட் தனு”
ரேணுவிடம் பேசிவிட்டு படுத்தவனுக்கு ,அப்போது தான் நினைவு வந்தது தான் சாப்பிடவில்லை என்று. ஆயினும் உள்ளம் நிறைந்து இருந்ததால், வயிற்றின் பசியை உணரவில்லை அவன். இனிய நினைவுகளோடு இமைகளும் இம்சிக்க தூங்கிப் போனான்.
“இமை மூடி
இரவினில் உன்னை வரவேற்கின்றேன்..
என் கனவாக !”
அதிகாலையிலே எழும் பழக்கம் உள்ளவன் ரிஷி. அந்த ஹோட்டலிலேயே உள்ள ஜிம்மில் தனது உடற்பயிற்சியை முடித்து குளித்துக் கிளம்பியவனை எதிர் கொண்டான் தனா.
“பர்ஸ்ட் மீனாட்ஷி அம்மன் கோவிலுக்கு போயிட்டு அப்புறம் நம்ம ஷோரூம்க்கு போவோம்” என்றான் ரிஷி.
“ம்ம்… சரிடா. நீ சாப்பிட்டியா?” என கேட்டான் தனா.
“இல்ல. உனக்கும் சேர்த்து ரூம் சர்வீஸ்ல ஆர்டர் பண்ணு”
“நான் சாப்பிட்டேன். உனக்கு என்னென்ன வேணும்னு சொல்லு. ஆர்டர் பண்ணுறேன்.” என்று சொன்னவனின் கையில் இருந்த டெலிபோன் ரிசீவரை அவனை முறைத்தவாறு பிடுங்கி தனக்கு தேவையானதை ஆர்டர் செய்து கொண்டான் ரிஷி.
“இப்போ எதுக்கு இந்த தேவை இல்லாத கோவம்?” என கேட்டான் தனா.
“இப்போயெல்லாம் என்னை விட்டு தள்ளி தள்ளி போற… ஏன்னு தெரியலை?”
‘ஆண்டவா… ஆரம்பிச்சுட்டான் கேள்வி கேட்க. அண்ணன் தங்கச்சி உங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு நான் எங்கடா போக போறேன்?” என்று மனசுக்குள் சலித்துக் கொண்ட பார்வையை சுழற்றியவனின் கண்களில் தென்பட்டு விட்ட்து சிட்டு வின் போட்டோ.
“டேய்!” என்று சிறு கூவலுடன் ஓடி போய் ரிஷியை கட்டி தழுவிக் கொண்டான்.
“அடடா… என்னடா இது . ஏன்டா இப்படி பிஹேவ் பண்ணுற. யாராவது பார்த்தா தப்பா நினைக்க போறாங்கடா.” என்றான் ரிஷி புரியாமல்.
அவனை விட்டு விலகிய தனா, “சிட்டுவோட போட்டாவா இது?” என்றான்.
“ம்ம்… என் சிட்டு தான். அழகா இருக்காள்ள” என்றான் பெருமிதம் பொங்க.
“அப்போ நான் நினைச்சது கரெக்ட் தான். நீ இப்போ சிட்டுக்காக தான் இங்கே வந்துருக்க. அப்படி தான?” என கேட்டான் தனா.
“ம்… சிட்டுக்காகவும் வந்துருக்கேன்” என்றான் அழுத்தமாய்.
“இந்த போட்டோ இப்போ எடுத்தது. நீ இங்கே வந்தே பன்னிரெண்டு வருஷமாச்சே… எப்படிடா?”
தனாவின் கேள்விக்கு சிரித்தான் ரிஷி.
“என் கால் இந்த மண்ணில் பட்டு பன்னிரெண்டு வருஷம் இருக்கலாம். ஆனால் என் உயிர் மூச்சு எப்போதும் என் சிட்டுவை சுற்றி தான் இருக்கும். அவளின் ஒவ்வொரு அசைவும் நானறிவேன். இப்போ நான் இங்க வந்துருக்குறதுக்கும் ஒரு ரீசன் இருக்கு. வட்டியும் முதலுமாய் சேர்த்து குடுக்க வேண்டிய கடன் ஒருத்தர் கிட்ட இருக்கு. அதை குடுத்துட்டு தான் என் சிட்டுவை கூட்டிட்டு வருவேன்” இதை சொல்லும் போது ரிஷியின் கண்கள் இரண்டும் சிவப்பு சூரியனாய் நெருப்பை கக்கி கொண்டிருந்தது.
“உன் காலடி தடங்களெல்லாம்
மண்ணில் பதியவில்லை!.
அழியாத சுவடுகளாய் ஆழ பதித்து செல்கின்றது
என் மனதில்!”
Advertisement