Advertisement

9
சினமிகா சோர்ந்து போய் அமர்ந்திருந்தாள் அங்கிருந்த ஓர் பாறையில். கால்களிரண்டும் அப்படியொரு வலி கொடுத்தது நடந்து நடந்து.
மெதுவாய் அவள் அதை நீவிக்கொண்டு அந்த இருளில் அமர்ந்திருக்க வாலை ஆட்டிக்கொண்டு பைரவர் அவர் அருகில் வந்திருந்தார்.
எட்டி அவள் மடி மேல் இரு கால்களையும் வைத்தார் அவர். “என்னாச்சு??” என்று இவள் கேட்கவும் காலை கீழே இறக்கி சற்று முன்னே சென்று அவளை திரும்பி பார்க்க “என்னால முடியலை கால் வலிக்குது” என்றாள் இவள்.
அதுவோ இன்னமும் இவளையே பார்க்க “சரி வர்றேன்” என்று எழுந்தவளின் கால் வலி எங்கே சென்றது என்று அவள் அறியவில்லை. சுத்தமாய் இப்போது வலியில்லை.
ஆச்சரியத்தோடே இவள் பைரவரை பின் தொடர்ந்தாள். அவர் நீண்ட தூரம் நடந்தே பயணம் செய்து ஓரிடத்தில் வந்து நின்று அங்கிருந்த கதவை தன் கால்களால் தட்ட அக்கதவு மெதுவாய் திறந்தது.
இவளை திரும்பி பார்க்க இவள் உள்ளே சென்றாள். நீண்ட பெரிய அறை அது. கட்டிலும் மெத்தையும் நடுவே வீற்றிருந்தது. அவ்வளவு பெரிய கட்டில் அது. கட்டிலிலும் அவ்வளவு வேலைபாடுகள் செய்திருந்தது. கட்டிலின் கீழே குமிழ் போல இருக்க இவள் அதை திறக்கும் நொடி இவள் கரம் பற்றிய ராஜகுமாரன் வந்திருந்தான்.
“என்ன சிமி தேடுறே??” என்று கேட்க இவள் வேகமாய் எழுந்தவள் அவன் மீதே இடித்துக்கொள்ள அவன் கைக்கொடுத்து இவளை அணைத்துக் கொண்டான்.
இவள் சுற்றி முற்றி பைரவரை தேட இவள் உள்ளே நுழைந்த கதவுக்கு வெளியே நின்றிருந்த பைரவர் இவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு கதவை தள்ளி சாற்றியிருந்தார்.
சட்டென்று கனவு கலைந்து எழுந்தமர்ந்தவள் சுற்று முற்றும் பார்க்க அறை முழுதும் இருளில் முழ்கியிருந்தது. கரண்ட் போயிருந்தது போல, உடனேயே மின்சாரமும் வந்திருந்தது.
கல்யாண வீடு என்பதால் ஜெனேரட்டர் தேவைப்படும் என்று வாடைகைக்கு எடுத்து வந்திருந்தனர்.
சினமிகா எழுந்து அமர்ந்திருப்பதை பார்த்ததும் உறவினர் பெண்ணொருவர் “என்னம்மா கல்யாணப்பொண்ணு தூக்கம் புடிக்கலையோ” என்றார்.
“ஆமாத்தை கரண்ட் போகவும் எழுந்திட்டேன்”
“மணி எம்புட்டாகுது” என்றார் அவர் தொடர்ந்து.
இவள் தன் கைபேசியை தேடி எடுத்து நேரம் பார்க்க மணி நாலு என்றது. அதை அவரிடம் சொல்லிவிட்டு இவள் படுக்கப் போக “இனி படுத்து என்னாகப் போகுது. ஆறு ஏழரை முகூர்த்தமாச்சே. நீ எந்திச்சு குளிச்சிடுத்தா” என்று அவர் சொல்ல சினமிகா எழுந்து குளியலறை நோக்கிச் சென்றாள்.
இதோ அவள் தயாராகி நிற்க உதிரனிடமிருந்து அழைப்பு வந்துக் கொண்டேயிருந்தது. அவனுக்கு இவளை பார்க்க வேண்டும் என்ற ஆசை. ஆனால் சினமிகாவால் போனை எடுக்க முடியாத சூழல், அவளை சுற்றி அத்தனை பேர் அமர்ந்திருந்தனர்.
அவள் தவிப்பாக அமர்ந்திருந்தாள். “போன் பண்ணா எடுக்க மாட்டேங்குறா” என்றவன் போனை கட்டிலில் வீசினான்.
“அண்ணா நீ இன்னுமா கிளம்பிட்டு இருக்கே??” என்று வந்து நின்றாள் அவன் சின்ன சித்தப்பாவின் மகள் வினயா, உடன் பெரியவள் அனுசுயாவும் வந்திருந்தாள்.
“வாம்மா” என்று பெரியவளை பார்த்து சொன்னவன் “வாலு உனக்கு இங்க வர இவ்வளவு நேரமா” என்றான் வினயாவின் காதை லேசாய் திருகி.
“விடுண்ணே எல்லாம் உன் சித்தப்பா வேலை. உனக்கு தெரியாததா” என்றாள் அவள்.
“சரி விடு” என்றவன் அனுசுயாவை பார்த்து “என்ன அனு மாப்பிள்ளை வந்திருக்காரா கூட”
“இல்லைண்ணா நான் மட்டும் தான் அப்பாம்மா கூட வந்தேன்”
“சரிம்மா” என்று முடித்துவிட்டான்.
“அகிலாக்காவும், நீலாவும் வந்தாச்சா”
“பெரியப்பாவே இன்னும் வரலையாம், இதுல அக்காங்க எங்க இருந்து வந்திருப்பாங்க” என்றாள் வினயா வினயமாக.
“எப்போ வர்றதா சொன்னாங்க??”
“வருவாங்க வருவாங்க சரியா நேரத்துக்கு வந்து நிப்பாங்க. இவங்கல்லாம் போகும் போது என்னத்தை கொண்டு போகப் போறாங்களோ” என்றாள் பெரிய மனுஷியாய்.
“வினய் அப்படியெல்லாம் நீ பேசக் கூடாது. அவங்களுக்கு என்னையும் எங்கம்மாவையும் கண்டா தான் ஆகாது. உங்களுக்கு என்ன நல்லபடியா பேசு” என்று தங்கையை அடக்கினான் அவன்.
“சரிண்ணா. நான் போய் அண்ணியை பார்த்திட்டு வர்றேன்” என்று அவள் நகர “ஒரு ஹெல்ப் வினய்”
“அதே ஹெல்ப்பா” என்றாள் அவள்.
அவர்கள் இருவரும் பேசுவதை அனுசுயா ஒரு ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருந்தாள். அண்ணன் ஒருவன் இருக்கிறான் தான் ஆனால் அவனுடன் அவளின் பெற்றோர்கள் ஒட்டவிட்டதேயில்லை என்பதால் அவளும் இங்கு எப்போதாவது தான் வருவாள்.
வினயா மட்டும் எப்படி இப்படி பழகினாள் என்று தான் பார்த்தாள். அவளுக்கும் ஆசையாகத் தான் இருந்தது அண்ணனுடன் இப்படி பேச. முன்பு அதிகம் பேசியிராததால் தள்ளியே நின்று அவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அதே தான் வீடியோ கால் போட்டு விடு. அங்க எப்படி இருக்குன்னு தெரியலை, போனே எடுக்க மாட்டேங்குறா, அப்படியே அன்னைக்கு மாதிரி ஒரு போட்டோ அனுப்பிடு” என்று சொல்லி அனுப்ப அவளும் அங்கு சென்றாள்.
அக்காவும் தங்கையுமாக தங்களின் வருங்கால அண்ணியை பார்க்கச் சென்றார்கள். அவளின் அறைக்கதவை தட்ட உள்ளிருந்து எட்டிப்பார்த்தாள் மேகா.
வினயாவை முன்பே அறிந்திருந்ததால் “வாங்க” என்று சொல்லி கதவை விரிய திறந்தாள்.
“அண்ணி ரெடி ஆகிட்டாங்களா??”
“ஹ்ம்ம் ரெடி தான்”
“இவங்க என்னோட அக்கா அனுசுயா, இன்னைக்கு தான் வர்றாங்க. அண்ணியை பார்க்கணும்ன்னு சொன்னாங்க அதான் கூட்டிட்டு வந்தேன்” என்று மேகாவிற்கு சொன்னவள் “இவங்க அண்ணியோட தங்கை மேகா” என்று இருவருக்கும் அறிமுகம் செய்தாள்.
“உள்ளே போகலாம்ல”
“போங்க போங்க அதான் சொன்னேன்ல ரெடி தான்” என்று மேகா சொல்ல அவளைத் தாண்டிக் கொண்டு சென்றனர் அக்கா தங்கை இருவரும்.
“அண்ணி சூப்பரா இருக்கீங்க இந்த புடவையில. எங்க பெரியம்மா நல்லா தான் செலக்ட் பண்றாங்க, நேத்து புடவை கூட சூப்பர்…”
“பாருங்க நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன். வந்த வேலையை முதல்ல பார்த்திடறேன்” என்றவள் “இது என்னோட அக்கா அனுசுயா உங்களை பார்க்க கூட்டிட்டு வந்தேன்” என்றாள்.
“ஹலோ”
“எப்படியிருக்கீங்க அண்ணி??” என்றாள் அனுசுயா.
“நல்லாயிருக்கேன், நீங்க??”
“நல்லாயிருக்கேன்”
அதற்குப்பின் என்ன பேச என்று இருவரும் அமைதியாக இருந்தனர். “அப்புறம் அண்ணி கொஞ்சம் பின்னாடி தள்ளி அந்த சுவத்தை ஒட்டி கொஞ்சம் நில்லுங்க ஒரு போட்டோ சுடச்சுட எடுத்துக்கறேன்” என்ற வினயாவை செல்லமாய் முறைத்தாள் மற்றவள்.
“எல்லாம் எங்க அண்ணன் வேலை தான் ப்ளீஸ் ப்ளீஸ்…” என்று கொஞ்சி சினமிகாவை வித விதமாய் ஒரு நாலைந்து போஸில் போட்டோ எடுத்து அண்ணனுக்கு அனுப்பி வைத்தாள்.
“சினா நேரமாச்சுடா” என்று வந்தார் பூந்தமிழ்.
“ரெடி தான்மா”
“இரு அவங்க தான் வந்து கூட்டிட்டு போவாங்க, கூப்பிடவும் வாம்மா. நான் வெளிய இருக்கேன், மேகா உன்கூட இருப்பா இங்க” என்றுவிட்டு அவர் வெளியே சென்றார்.
“அண்ணி” என்று ரகசியமாய் அழைத்தாள் வினயா.
“என்ன வினயா??”
“அண்ணன் லைன்ல” என்று போனை தூக்கி இவள் முன் காட்டினாள்.
“அச்சோ நேரமாச்சு” என்று இவள் வாய்க்குள் முணுமுணுக்க அதை பார்த்துவிட்டான் அவன்.
“என்ன நேரமாச்சு?? நான் வந்த பிறகு தானே வரப்போறே நீ”
“இல்லை வந்து அம்மா இப்போ தான் சொல்லிட்டு போனாங்க. ஆளுங்க வேற இருக்காங்க, ப்ளீஸ்” என்று இவள் தவிக்க “சரி சரி சும்மா தான் பண்ணேன், பார்க்கலாம்ன்னு…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே யாரோ அவனை அழைக்க “ஹான் இதோ வர்றேன்…” என்றவன் “சீக்கிரம் வந்திடு” என்றுவிட்டு போனை வைத்துவிட்டான்.
“அனு இங்க தான் இருக்கியாம்மா. உன்னைய அண்ணியை கூட்டிட்டு வரச்சொன்னாங்க உங்க பெரியம்மா அழைச்சுட்டு வந்திடும்மா” என்று உறவினர் பெண் ஒருத்தி வந்து சொல்லிவிட்டு சென்றார்.
மாலை கொண்டு வரப்பட அவள் கழுத்தில் அதை அணிவித்தாள் அனுசுயா. பின் அவள் கரம் பற்றி அழைத்துச் செல்ல படபடப்பாய் இருந்தது சினமிகாவிற்கு.
தலையை தாழ்த்தி தான் வந்தாள். சுற்றுப்புறம் அதிகம் கவனத்தில் இல்லை அவளுக்கு. அந்த பெரிய ஹாலுக்குள் நுழையும் போது தான் மெதுவாய் நிமிர்ந்தாள் சினமிகா.
அந்த ஹாலின் நடுவில் அவள் கனவில் கண்டது போன்ற அதே மணமேடை ராஜாவை போன்று உடைத்தரித்து கம்பீரமாய் வீற்றிருந்தான் உதிரன்.
சினமிகாவிற்கு மயக்கம் வரும் போல இருந்தது. அனுசுயாவின் கையை இறுகப் பற்றிக்கொண்டாள். கனவில் கண்ட ஒவ்வொன்றும் பலிக்கிறது என்ற தோன்றியது அவளுக்கு.

Advertisement