Advertisement

IM 15

“ஆண்டவா, எதுவும் பிரச்சனையாகாம பாத்துக்கோ “, அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த … கல்பலதிகாவின் வேண்டுதல்.. இறையை சென்று சேருவதற்கு முன்.. அங்கே…. SNP யின் தொழிற்சாலையில் ஒரு போர்க்களம் உருவாகி இருந்தது.

+++++++++++++++++++++++++++++++++++++++++++

“அப்பா…. நமக்கு இந்த ஃபாக்டரி வேண்டாம் .. விட்டுடுங்க… “, ஒருவித பயத்துடன்.. வந்தன தியாவின் வார்த்தைகள்..

SNP -க்கு … அந்தப்பெண் யார்? இவளது கோபத்திற்கு காரணம் என்ன? என்ன சொல்லிவிட்டு போகிறாள் ? போன்ற கேள்விகள் மனதுள் ஓடினாலும்… நிறைய கோபம் செக்யுரிட்டிகளின் மேல் தான் வந்தது… ஏனெனில் அவர்கள் ஓடி வந்து கொண்டு இருந்தனர்.. இந்த பெண்ணை பிடிக்கவென.. … “வெளி ஆள் வர்றது கூட தெரியாம என்ன பண்றீங்க ? “, பற்களை நறநறவென கடித்தவாறே, வார்த்தைகளை SNP துப்ப…. அவர்கள் இருவரும் வெலவெலத்தனர்… ஆனால் அவளை கூட்டிக்கொண்டு போவதுற்கு முன் அவளது வசவுகள்.. ??குற்றச்சாட்டுகள்????

“என் புருஷனை கொன்னு… என் குடும்பத்த நடுத்தெருல நிறுத்திட்டு… நீயும் .. உன் புள்ளகுட்டிங்களும் மட்டும் நல்லா இருந்துடுவீங்களா?, இதுல எங்க கேசு போட்டுடுவேனோ-ன்னு பயந்து , எனக்கு வேல வேற போட்டு கொடுத்திருக்க? யாருக்குய்யா வேணும் உம்பிச்சகாசு ? “, SNP கொடுத்த அப்பாயிண்ட்மென்ட் கடிதத்தை கிழித்து முகத்தில் விசிறி அடித்தவாறு .. அப்பெண் பேசியவை இவை…. புயலென வந்தவள்… ஐந்து நிமிடங்களில் , அனைவரின் மனதிலும் ப்ரளயத்தினை ஏற்படுத்தி நின்றிருக்க… செக்யூரிட்டி மூச்சிரைக்க வந்து .. அப்பெண்ணை வெளியேற்ற… அப்போதும் அவள் ” நா…….. போக…. வம்ச……து போக….” [இதை எழுத தேவை இருக்காதுன்னு …. போட்டேன்] , என்று SNPயை வசைமாரி பொழிந்து கொண்டே தான் சென்றாள் ..

இதை பார்த்து.. கேட்டதற்கே .. சரண் மயங்கி விழ…. பின்னால் வந்த பாஸ்கர் ஆதித்யா, அந்த பெண்ணின் மீது கவனம் இருந்தாலும்.. அன்னையையும் பார்த்தே வந்ததில், வேகமாய் சரணை தாங்கி பிடித்திருந்தான்…

இந்த கூச்சலில், அனைத்து தொழிலாளர்களும் , வெளியே குழுமி இருக்க… அப்போதுதான் தியாவின் “ஃபாக்டரி வேண்டாம் “, என்ற குரல்….

“ஷட் அப் …. அன்……… ஜஸ்ட் கெட் அவுட் ஆஃப் மை சைட்…….. “, SNP யின் கர்ஜனையான வார்த்தைகள்…. உக்ர மூர்த்தியாய் நின்ற அவனது தோற்றம் … பார்த்தாலே பயம் கொள்ள வைக்கும் அவனது சிவந்த விழிகள்… தியா விழி விரித்து பார்த்திருந்தாள் .. அவளுக்கு அன்பான அப்பாவாக மட்டுமே தெரிந்த SNP யின் இன்னொரு முகம்… மருண்ட விழிகளுடன் பார்த்தது பார்த்தவாறு அதிர்ச்சியில் இருந்தாள்…

தியாவிற்கு அதிர்ச்சி என்றால் , அங்கே நடந்தவற்றை பார்த்துக்கொண்டிருந்த பரிதிக்கு அவமானம்… அங்கு ஏன் வந்தான்? எது அவனை அங்கே வர தூண்டியது ? அனைத்தும் ஒரு பக்கம் போயிருந்தது.. அது எப்படி ?…. அத்தனை கூட்டத்தின் முன்னால் , தன் மனைவியை ஒருவர் உதாசீனப்படுத்துவதா?

இளம்பரிதி…. நகர நாகரீக வளர்ப்புதான் .. ஆனால் உள்ளுக்குள்ளே அவன் கிராமத்தான் …மரியாதை அவனுக்கு மிக முக்கியம்.. [அப்போ சிட்டில இருக்கிறவங்களுக்கு மரியாதை முக்கியமில்லையா-ன்னு கட்டைய தூக்கிட்டு வராதீங்க ப்ரெண்ட்ஸ் ] அதனால்தான், தாய் தந்தை இல்லை என்ற போதிலும்.. அவன் சொந்தங்களுக்கு இவன் முக்கியமானவனாய் தெரிந்தான்.. என்ன கொடுக்கிறோமோ அதுவே திரும்பி வரும் என்ற கொள்கையுடையவன் .. முகம் சுருங்க.. புருவம் நெறிபட…, தியா அருகில் சென்றவன் “ஒரு வார்த்த பேசாம ..வீட்டுக்கு போ “…. என்றான் அடிக்குரலில்… “அதில்….லை …ங்க…………”, ஆரம்பித்தவள், பரிதியின் முறைப்பில் …… அவள் குரல் …முடிக்கும்போது உள்ளேயே போயிருந்தது… தியா .. மறுசொல் பேசாது.. வந்தபடி வெளியேறினாள் …

பாஸ்கர் “என்னடா நடக்குது இங்க ?”, என வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தான்.. அவனுக்கு புரியாத விஷயங்கள் இவை.. தியா சென்றபின், பரிதி… பாஸ்கர் ஆதித்யாவை பார்த்து முறைக்க .. “அய்யயோ .. மாமா வேற இவ்…வளவு அன்பா பாக்கறாரே?”, என்று திணறினான்..அவன் கிட்டே வேறு வரவும்… வேறு வழியின்றி.. “அப்பா.. எதோ கோபத்துல…..”.. என்று இழுக்க… “இனி எதுவா இருந்தாலும்.. என் பொண்டாட்டி.. உங்க வீட்டுக்கு வர மாட்டா.. உங்களுக்கு தேவைன்னா அங்க வந்து பேசுங்க…”, பக்கத்தில் இருந்த சரனுக்கும் இது காதில் விழ… அவளுக்கு இன்னும் குழப்பம்…

பாஸ்கருக்கோ.. “யோவ்.. உங்க பொண்டாட்டியா?.. அப்போ எங்களுக்கு அவ யாருய்யா ?.. எங்கிருந்துயா வர்றீங்க.. ? நீங்களும் உங்க மரியாதைகளும்..? ” என்று சுறுசுறு கோபம் வந்தாலும்…. மனைவியை அவள் பிறந்த வீட்டினிடம் கூட விட்டுக்கொடுக்காத பரிதியின் பாங்கு பிடிக்க.. ஒன்றும் சொல்லாது அடங்கினான்..

“என்ன வேடிக்கை இங்க? எல்லாம் அவங்கவங்க வேலைகளை பாருங்க.”, பாஸ்கரின் கமேண்டோ குரலில் வள்-ளென்று [அதான பாத்தேன்… எங்கடா இன்னும் கத்தக்காணோமே -ன்னு நினச்சேன் ] விழ … அவரவர்… விழிப்பாகி… நகரத் துவங்க… ” நல்லா போயிட்டிருந்த கம்பெனி.. அந்த மகராசன் வித்துட்டு போனாரு.. இனி நம்ம கெதியெல்லாம் என்னாகப்போகுதோ ?”, ஒரு சிலர் வெளிப்படையாய் முணுமுணுத்தவாறே கலைந்து சென்றனர்.

இந்த பேச்சுக்கள் இன்னமும் SNP யின் டென்ஷனை அதிகமாக்க… , “அம்மாவை உள்ள கூட்டிட்டு வா “, என்றவாறு வேகநடை போட்டு அவனது அறைக்குள் நுழைந்தான். இவனும் சரணும் பின்னூடே சென்றனர்.. “ஏதாவது குடிக்கிறாயா சரண்?”, கேட்டவாறு.. ஃபிரிட்ஜை திறந்து குளிர்பானத்தை எடுத்து கொடுக்க… பாஸ்கருக்கு அபத்தமாய் பரிதி-தியா நினைவு வந்தது. ம்ம்… அப்பாவுக்கேத்த மருமகன்தான்…

“சரண் ரொம்ப டையர்டா தெரியற…நீ வேணா வீட்டுக்கு போறியா?… இங்க கொஞ்சம் செட்டில் பண்ணிட்டு நா வர்றேன்”…SNP ..

பாட்டில் பானத்தை ஒரே மூச்சில் குடித்த சரண் கேட்ட முதல் கேள்வி “யாரு அந்த பொண்ணு?”, என்பது தான்…

இவர்களுக்கே பதில் தெரியாத கேள்வி .. உடனே … SNP , இன்டெர்காமில் ஜெனரல் மேனேஜரை அறைக்கு வருமாறு பணித்தான் …

“யார் அது ? என்ன விஷயம் ?”, கேள்வியும் ஜெட் வேகத்தில் வந்தது…

“அது சார்… ப்ரொடக்ஷன் யூனிட்-ல செத்து போனானே ஒருத்தன்… அவனோட வொய்ப் இந்த பொண்ணு.. அவ புருஷன நாமதான் கொலை பண்ணிட்டோம்-னு …. யார் சொன்னாங்கன்னு தெரில… அவங்க காஸ்ட்-ல.. புருஷன் செத்து . கொஞ்ச நாளு வெளில வர கூடாது.. இப்போதான் வரலாம் போல.. அதான் நேரா… இங்க வந்து கத்திட்டு போறாங்க… இதெல்லாம் பெரிசா எடுக்காதீங்க சார்..”

“அப்படி ஒரு டவுட் ஏன் வந்தது ?”

“அது…. அது.. தெரில சார்…”, என்று மென்று முழுங்க…..

“சீக்கிரமா தெரிஞ்சுக்கோங்க…., நீங்க போலாம்”…

“பாஸ்கரா…. அந்த பொண்ணு டீடெயில்ஸ்….இப்படி ரியுமர் கிளம்ப என்ன காரணம் ?, யாரு இதுக்கு பின்னாடி இருக்கா ? எல்லாமும் நமக்கு தெரியணும்.. ரொம்ப சீக்கிரம் தெரியணும்… காட் இட் ?”, என்றான் கட்டளையாய் SNP .

“எஸ் டாட்…”.இது பாஸ்கரின் பதில்…. அலைபேசியில், விவரங்கள்…. இவர்கள் எப்போதும் அணுகும் துப்பறியும் நிறுவனத்திற்கு , அனுப்ப ஆரம்பித்து இருந்தான்…

“சரண்.. ஆர் யூ ஆல் ரைட்?”, அடுத்து மனைவியிடம் விசாரணை..

“யா… சம்வாட் ஓகே… சொல்லுங்க நரேன்…”, என்றாள் சற்றே மனதை சமன் செய்து….

“இந்த கம்பெனி ப்ரோடக்ட் பத்தி உனக்கு எப்படி தெரியும்?, கேஸ் யாரு கொடுத்தது?”

“குறிப்பிட்டு யாரும் கொடுக்கல.. இந்த கம்பெனி பத்தி ஒரு அனாமதேய போன் கால்… பொது நல வழக்கா ….நாங்க தான் போட்டோம்…”

“நாங்க-ன்னா ?”, 

“நானும் கல்பா-வும் “

“ஒரு போன் கால் வச்சு கேஸ் போடுவீங்களா… என்ன? கொஞ்சம் பிஷ்ஷியா இல்ல ? “, கொக்கி போட்டான்…

கேலியா என நிமிர்ந்து பார்த்தவள்… அவன் சீரியஸ் என்பது தெரிய…, “இல்ல நிச்சயமா இல்ல…, நாங்க தூண்டி துருவி .. ஆதாரம் இருந்தா மட்டும்தான் … அடுத்த ஸ்டேஜ் போவோம்.. ரேண்டமா… ஏழு எட்டு எடத்துல .. இந்த ப்ரோடக்ட் வாங்கி.. ரெண்டு மூணு லேப் -ல டெஸ்டிங் கொடுத்து .. கடைசியா… ஷண்மதி கிட்டயும் ஒரு ஒப்பீனியன் கேட்டுட்டுதான் .. இதை ப்ராசஸ் பண்ணினோம்..”

“சரி.. இப்போ என்ன பண்ண போற..?”, சிந்தனையாய் SNP கேட்க….

“நீங்க.., நான் என்ன செய்யணும்-ன்னு எதிர் பாக்கறீங்க ?”, சரண் வக்கீல் என்பதை நிரூபித்தாள் ..

“உன்னிஷ்டம்.. ஒரே ஃபேமிலி-ல இப்படி எதிரும் புதிருமா … இருக்க சட்டம் சம்மதிக்குமா ? [NOC] நோ அப்ஜெக்சன் கொடுக்கணும்-ன்னாலும் சரி… கொடுக்கறேன்.. பட் .. என் சைட்-ல சென்ட்ரல்-லேர்ந்து … லீடிங் லாயரா பாத்துதான் உனக்கு எதிரா வாதாட வைப்பேன்…… “, இப்போதும் அவன் முகம் சீரியஸ்தான் ..

பாஸ்கர்தான் “ஞே ” என்று விழித்து பார்த்தான்… இவரு என்ன சொல்ல வர்றாரு? அம்மாவை வாதாட சொல்றாரா? வேணாம்னு சொல்றாரா? ஒன்றும் புரியவில்லை…

“ஊர் உலகத்துக்கெல்லாம் .. நமக்குள்ள சண்டைன்னு …. காட்சி பொருளா நிக்கறது எனக்கு இஷ்டமில்லை…, ஆனா நீங்க சொல்ற பெரிய்….. ய்ய.. வக்கீலுக்கெல்லாம் பயந்து …. வாதாடாம பின்வாங்கலை…”, என்றாள் சரண் கடினமாய் ..

“ஓகே… எனக்கும் நாம முட்டிகிறதுல இஷ்டமில்லை…., “, SNP -யும் முறைப்பாய் சொல்லி முடிக்கும் முன்…., “அப்போ கேஸ் வாபஸ் வாங்கிடுங்கம்மா …”, பாஸ்கர் அவசரக்குடுக்கையாய் கருத்து கூற.., அம்மா அப்பா இருவரும் சேர்ந்து அவனை முறைத்தனர்….

“ஆனா கேஸை நான் வாபஸ் வாங்க சொல்ல மாட்டேன்.. வழக்கமா நான் அட்டென்ட் பண்ணாத கேஸ் -களை கல்பாதான் பாப்பா….” , மீண்டும் … அதிபுத்திசாலியாய்…. “நான் சொல்றேன்மா.. லத்திகா கிட்ட… நான் சொன்னா நிச்சயம் கேப்பா…”

இப்போதும் பாஸ்கர் ஆதித்யாவை , இருவரும் முறைத்தனர்… கோபமாய் அல்லாது “எப்போதிருந்து இது ??”, என்பதுபோல ஆராய்ச்சியாய்… 

SNP சரணை “எனக்கு ஏன் சொல்லல? “, என்பது போல …. கண்டனமாய் பார்க்க… அவளோ வேகமாய் தலையை இடவலமாய் ஆட்டி “எனக்கும் தெரியாது “, என்று சைகையாய் சொன்னாள் ..

“டேய்… உன்னை … என்ன பண்றதுன்னே தெரில…..”, வழக்கம்போல மனசாட்சி பாஸ்கரை கிழி கிழியென கிழிக்க…”அது வந்தும்மா… இப்போதான்… தியா மேரேஜ்-க்கு அப்பறம்தான்…. ” உளறி கொட்டி கிளறி மூட…

“போதும் வழியாத.. ரொம்ப முக்கியம் உன் காவிய காதல் இப்போ ?”

“ம்மா….”

“இதுல , அவளைப்பத்தி ரொம்ப தெரிஞ்சா மாதிரி.. வாபஸ் வாங்கிடுவான்னு வேற சொல்ற.. கேட்டு பாரு… மொகரைய பேத்திடுவா …. “, என பொரிந்து … 

“இதிலேர்ந்து ஈஸியா வெளில வரனும்-னா “….. சற்றே ஸ்திரப்படுத்தி கொண்டவள் .. SNP இடம் திரும்பி “இது நமக்கு வேண்டாம்… வித்துடுங்க..” என்பதுதான்….

சரண்… 

“ஒரு வார்த்தை வெல்லும்.. ஒரு வார்த்தை கொல்லும் ” , என்ற கொள்கையில் மிகுந்த பிடிப்புடையவள்.. எதிர்மறை சொற்களே அவளிடமிருந்து வராது…அப்படிப்பட்ட சரணுக்கு … அப்பெண்ணின் வசைகள், இவளையோ , SNP குறித்தோ எதை கூறியிருந்தாலும் தாங்கி இருப்பாளோ என்னவோ ?.. வாரிசுகள் இல்லாமல் போவார்கள் என்ற அப்பெண்ணின் சாபம் … இவள் உயிர்வரை சென்று தாக்கி , அவளை அசைத்து இருந்தது….. காரணம் அப்பெண்ணின் முகத்தில் இருந்த ஆவேசம்… 

அடுத்து , இங்கு தயாரிக்கப்படும் பொருட்களின் தரம் குறித்த இவள் கைவசம் இருந்த ஆதாரங்கள்..

“இத்தனைக்கும் காரணம் இந்த தொழிற்சாலைதானே? விட்டு விட்டால் தான் என்ன?”, என்று தோன்றியது…. அவளுக்கு..

அவரவர் கோணங்கள்.. அவரவர் பார்வைகள்…

Advertisement