கருவிழிகள் சிவக்க, கண்கள் இடுக்க மனோவை பார்த்தாள். தன்னை சுற்றியிருக்கும் யாருக்கும் தன் பெற்றவர்களைப் பற்றிய உண்மைத் தெரியாது. தர்ஷன், தனு கூட ஷிவிக்கு அன்னை, தந்தை இருவரும் இல்லை என்று தான் நினைத்திருந்தனர்.
“என்ன சொன்ன நீ? சொல்லு” அதட்டிக் கேட்டாள். மனோ சிறிதும் அசரவில்லை. அவளைப் பற்றிய அனைத்தும் அறிந்தவனாக தான் நின்றிருந்தான்.
“உன்னோட சித்தப்பா” மெல்லிய குரலில் உரைத்தவன் அவளை அலைபாயும் விழியோடு பார்த்திருந்தான். இவள் இதை எந்த மாதிரி எடுத்துக் கொள்வாள் எனத் தெரியாதே?
அவளோ ஒருநொடி ஆழ்ந்த சிந்தனைக்குச் சென்று, “நீ ஊருக்குப் போனீயா? அங்க ஏன் போன? சொல்லு மனோ” அழுத்தமுடன் உக்கிரமாகக் கேட்டாள்.
ஊருக்குச் சென்ற மனோகர் அசோக், கிஷோருடன் அவர்கள் அன்னையும் மிரட்டிவிட்டு நேராக ஷிவியின் சித்தப்பாவை பார்க்கச் சென்றான்.
அவரோ இவனை இன்முகமாக வரவேற்று நன்முறையில் உபசரித்தார். என்னவோ வெகுநாள் பழக்கம் போல நெருங்கிய சொந்தம் போல நடத்தினார்.
அதிலே தன்னைப் பற்றி இவர் அறிந்திருக்கிறார் என புத்தியில் உறைக்க, மனோ வந்த விஷியத்தைக் கூறினார்.
அவரோ இவன் ஷிவியை விரும்புவதை அறிந்திருப்பது மட்டுமின்றி மனமார இவர்கள் திருமணத்திற்கும் சம்மதம் தெரிவித்தார். அப்போது தான் இவர் மொத்தமாக ஷிவியை விட்டுவிட விடவில்லை, அவளை கண்காணித்துக் கொண்டிருப்பதும் தன்னைப் பற்றி விசாரிப்பதும் புரிந்து கொண்டான்.
இவர் ஒருவர் தான் ஷிவியின் மீது உண்மையான அக்கறையும் பாசமும் வைத்திருக்கிறார் என்பதை அறிந்தவன் மாரியாதையுடன் விடைபெற்று வந்திருக்கிறான்.
ஷிவி கேட்க அனைத்தையும் மறைக்காது உரைத்தான் மனோகர்.
மனோவின் அதிகபிரசங்கித்தனங்கள் அனைத்தையும் கேட்டவள், மொத்தென மெத்தையில் அமர்ந்தவள் தலையில் கை வைத்தாள்.
இத்தனை நாள் வரையிலும் கஷ்டப்பட்டு இழுத்துப் பிடித்து கட்டிக் காப்பாற்றிய பெயரை சுக்குநூறாக நொறுக்கி வைத்திருக்கிறானே? நொந்துகொண்டாள்.
“ஷிவி..” மென்மையான அழைப்போடு அருகே வந்தவன் தோள்பட்டையில் கை வைக்க, பட்டெனத் தட்டிவிட்டவள், எழுந்து அகங்காரமாக மனோவின் சட்டையைப் பிடித்தாள்.
“யார்டா நீ? மாமானா மச்சானா? ஏன்டா என் மேல இவ்வளவு அக்கறையும் பாசமும்? உனக்கும் எனக்கும் என்ன இருக்கு?” உலுக்கிக் கேட்டவள், அவனை அறையில் இருந்தும் தள்ளினாள்.
“பின்ன அந்த மங்கம்மா வந்து மானாவரியா உங்களைப் பேசும் போது நான் என்ன வேடிக்கைப் பார்த்திட்டுப் சும்மா இருக்க முடியுமா?” மனோவும் கேட்க, “அதுக்குன்னு இப்படியா செய்வ? இத்தனை நாள் எந்த பெயர் எனக்கு வரக் கூடாதுன்னு அவங்களை எல்லாம் விட்டு தள்ளித் தள்ளிப் போனேனோ அந்தப் பெயரை தான் நீ எனக்கு வாங்கிக்கொடுத்திருக்க. இப்போ சந்தோஷமா?” நெஞ்சம் விம்மிப் புடைக்க, வீரிட்டாள்.
மனோகருக்கும் பொறுமை கரைந்து காணாமல் போயிருந்தது. மூக்கு விடைக்க சுள்ளென கோபம் தீப்பொறியாக கனன்று வந்தது. என்ன செய்தலும் அதிலிருக்கும் தன் காதலைப் புரிந்து கொள்ளாது தன்னையே குறை கூற சோர்ந்து போனான்.
“இந்த நேரத்துக்கு உன் பத்தியும் உன் பேக்ரவுட் பத்தியும் தெரிஞ்சிருக்கும். என்னை மகனை வேண்டாம்னு சொன்னவா வயசுல சின்ன பையனை காதலிக்கிறாளாம். சொன்ன மாதிரியே அவ அம்மா மாதிரி சின்னப் பையன் தான் வேணும்னு நிரூபிச்சிட்டான்னு சொல்லுவாங்க. ஐயோ ஐயோ” தலையில் அடித்துக்கொண்டாள். இதற்காக தனித்தனியா செல்வசெழிப்பில் அயல்நாட்டு களிப்பில் இருந்த போதும் ஒழுக்கத்தை அத்தனை உயர்வாக கட்டிக்காப்பாற்றினேன்.
அவள் தலையில் அடித்துக் கொள்வது மனோவை மேலும் சீண்டிவிட விறைத்து நின்றான். ஷிவியோ, “நீ எனக்கு வாங்கிக் கொடுத்த பட்டம் ரொம்ப நல்லாயிருக்கு. இப்போ சந்தோஷமா? இதுக்கு தானே என்னை விட்டுப் போ போன்னு சொன்னேன். நான் சொன்னேனா உன்னை காதலிக்கிறேன், கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேனா? பின்ன எப்படி என் சொந்தத்துகிட்ட நான் சம்பந்தப்பட்ட விஷயத்துல நீ பொய் சொல்லிட்டு வரலாம்?” கோபம் கொண்டு கத்தியாள்.
மனோகரும் பொறுமை இல்லாது, “நான் ஒன்னும் பொய் சொல்லலை என்னைக்கா இருந்தாலும் நடக்கப் போறது தான். என்ன நடந்தாலும் நான் உங்களை விடுறதா இல்லை” முடிவுடன் உறுதியாகவும் உரைத்தார்.
நொந்து நூலானவள், “மனோ உனக்குப் புரியுதா இல்லையா? என்னைக்கும் என்னால உன்னை ஏத்துக்க முடியாது. எங்க அப்பா அம்மா எப்படி வேணாலும் இருந்திருக்கலாம் ஆனால் அவங்க மரியாதைக்குறையிற மாதிரி தரக் குறைவா என்னைக்கும் நான் நடக்க மாட்டேன். இனி என் அப்பா வீட்டுக்கு நீ போகக் கூடாது” அதட்டிக் கூறினாள்.
“இல்லைன்னா மட்டும் அவங்க உங்களை மதிப்பும் மரியாதையுமா தான் நடத்துறாங்களா? உங்க மேல பாசமே இல்லாத உங்களை மதிக்காத அவங்க வார்த்தையை நீங்க ஏன் பெருசா நினைக்கிறீங்க? அவங்களுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குறீங்க?” மனோ சீற, “போதும் மனோ ஆயிரம் இருந்தாலும் அவங்க என் சொந்தம் நீ யார் எனக்கு” ஷிவியும் சீறிக் கொண்டு வார்த்தையை விட்டாள்.
“ஹோ.. அப்படியா?” எனக் கேட்டவனின் குரலே தேய்ந்து வலியோடு கரைந்து போனது. இவள் ஒரு வார்த்தை இதயத்தைக் குத்திக் கீறி, வேரோடு பிடுங்கியதைப் போன்று வலித்தது.
மறுவார்த்தை பேசவில்லை, மறுநொடியே அவள் நிழல் தீண்டாது விலகியவன் எதுவும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டை விட்டுச் சென்றான்.
ஷிவன்யா பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் என்னவோ தன்னை விட்டு கை நழுவிப் போனதைப் போன்ற உணர்வு உள்ளுக்குள் அரித்துப் பிழிவதை அறிந்தும் கடினப்பட்டு கல்லாக இருந்தாள்.
மாலையில் கிச்சன் பக்கம் செல்லும் போதுதான் கவனித்தாள். அவன் செய்து வைத்த பிரியாணி அப்படியே தான் இருந்தது. ஆசையாக சமைத்தவன் ஒருவாய் கூட உண்ணாமல் சென்று விட்டானே? மனதோரம் கொஞ்சம் கவலையாக இருந்தது.
வலிகளை எல்லாம் தாங்கிக் கொள்ள நன்கு பழகியவளுக்கு தனிமையில் வலியோடும் அவள் நாட்களை கடக்க முடிந்தது.
ஆயிற்று இரண்டு மாதம், மனோகர் மொத்தமாக ஷிவியை விட்டும் ஓ பேபியில் இருந்து ஓடியும்.
மனோகர் இல்லாது ஷிவியிடம் எந்தவித மாற்றமும் யாருக்கும் தெரியவில்லை. உண்மையைச் சொல்வதென்றால் முன்பை விடவும் மேலும் இறுகிப் போயிருந்தாள். குழந்தைகளிடம் மட்டுமே காட்டும் அவள் புன்னகையைத் தொலைத்திருந்தாள்.
இதற்கு முன்பும் தனிமையில் இருந்தவள் தான் ஆனால் இது போல் தனிமையை உணர்ந்ததே இல்லை. மனோகர் அவளைச் சூழ்ந்து இல்லாது போனதில் பெரும் நிசப்தத்தை உணர்ந்தாள். ஏனோ இந்த நிசப்தம் துளியும் பிடிக்கவில்லை.
அனைவரும் போல ஒரு சாதாரண குடும்ப வாழ்க்கை வாழ மனதோரம் ஆசை அரும்பி ரகசியமாக உள்ளது தான். அதற்கும் மனோகர் தான் வேண்டும் என்று ஏங்க தான் செய்கிறது ஆனால் அவனைத் தேடாது, தன்னைத் தானே வதைத்துக் கொண்டிருக்கிறாள். ஏதோ இன்றைய நாள் உயிரோடு இருக்கிறேன் வாழத்தான் வேண்டும் என்பதைப் போல் பூமியின் மீது ஒவ்வொரு நாளையும் கடத்திக் கொண்டிருக்கிறாள்.
மனோகர் எங்கே இருக்கிறான் என்று தெரியாது ஆனால் தர்ஷனின் வீட்டில் இல்லை என்பது மட்டும் தர்ஷனின் மூலம் தெரியும். சொந்தவீட்டிலும் இல்லை என்பதை தனு மூலமாக அறிந்து கொண்டாள்.
அவனின் சமூகவலையதள பக்கங்களை பின் தொடர்வதன் மூலம் தெரிந்தது அவன் ஏதோ அடர் காடுகளில் வனவிலங்கு புகைப்பட கலைஞராக சுற்றிக் கொண்டிருக்கிறான் என்பதை யூகமாக அறிந்து கொண்டாள்.
இந்தியாவை சேர்ந்த பிரபலமான வனவிலங்கு புகைப்பட கலைஞர் சரண்தேவ்வுடன் உதவியாளராக சேர்ந்து கொண்டு இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களின் உள்ள அடர் காடுகளில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறான்.
அவளால் கொஞ்சம் முயற்சி எடுத்து தேடினால் அறிந்து கொள்ள முடியும் ஆனால் ஏனோ தேடத் தோன்றாது அப்படியே விட்டுவிட்டாள்.
உள்ளத்தின் உள்ளுக்குள்ளே ஒரு ஓரத்தில் அவன் மீது கோபம். எப்போதும் என்னை விட்டுச் செல்ல மாட்டேன் என்றவன் இப்போது மட்டும் எப்படி விட்டுச் செல்லலாம்.
ஆனால் அவள் மனமோ அவனுக்காக பேசியது, போ போ என்று விரட்டி விட்டு இப்போது வேண்டும் என்றால் வருவானா? வாழ்வில் கிடைப்பதற்கு அரிய பொக்கிஷம், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய அன்பு அதை தொலைத்து விட்ட துர்பாக்கியசாலி நீ என அவள் மனமே இடித்துரைத்தது.
சில மாதங்களுக்கு பின் கொச்சியில் நடந்த புகைப்பட கண்காட்சியில் இவளின் புகைப்படம் நல்ல வரவேற்பையும் பாராட்டியும் பெற்ற போதும் பரிசினைப் பெறவில்லை. ஓ பேபியில் வேலை செய்து கொண்டிருந்த போதே அந்தப் புகைப்படங்களை மும்பையில் புகைப்பட பத்திரிக்கை நிறுவனம் ஒன்றிற்கு அனுப்பி வைத்திருந்தான் மனோகர்.
இப்போது அந்த புகைப்பட பத்திரிகை நிறுவனம் அந்த ஆண்டின் உலகின் சிறந்த பத்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்க, அதில் ஒன்றாக ஷிவி எடுத்த புகைப்படமும் இருந்தது.
ஷிவி ஸ்டூடியோவிற்குள் நுழையும் போதே சாஹர், ஜெனி முதல் அனைவரும் பலூன், பூங்கொத்து, கேக்கோடு ஷிவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து கொண்டாடி மகிழ்ந்தனர். இதழ் மலர மெல்லிய சிரிப்போடு அனைத்தையும் ஏற்றுக் கொண்ட ஏதோ மனத்தால் முழுமையான சந்தோஷத்தை உணர முடியவில்லை. இத்தனைக்கும் காரணமானவன் இங்கில்லாதது இவளுக்கு மேலும் நெருடியது.
நாளை மறுநாள் தர்ஷன், மலரின் திருமணம் அவர்கள் சொந்த ஊரில் நடக்க இருக்கிறது.
இவளுக்கும் அழைப்பு வந்திருக்கிறது, அதுவும் தர்ஷனின் பெற்றோர்கள் நேரில் வந்து அழைப்பிதல் வைத்து அன்புடன் அழைத்திருக்கிறார்கள். தர்ஷன் தனக்கு இருக்கும் ஒரே ஒரு நண்பன், அவனின் பெற்றோர்களும் முக்கியமானவர்கள். அவர்கள் அழைப்பிற்கு மரியாதை கொடுக்க வேண்டும். நிச்சயம் நண்பனின் திருமணத்திற்கு செல்ல வேண்டுமே?
இரவு வானில் நிலவு தூங்கும் நேரம் தூக்கமின்றி பால்கனியில் நடந்து கொண்டிருந்தாள் ஷிவன்யா. நாளை மறுநாள் திருமணம் ஆகையால் நாளை கிளம்ப வேண்டும், செல்வதா? வேண்டாமா? என்றயோசனையிலே உழன்று கொண்டிருந்தாள்.
அங்கே சென்றால் கண்டிப்பாக மனோவை அவன் குடும்பத்தாரையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இவளுக்கு அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை, மனோ இது தான் சமயம் என அதிகப்பிரசங்கித்தனமாக எதுவும் செய்து விடுவானோ? என்று ஒரு பயம்.
ஏற்கனவே தன் வீட்டில் போய் இல்லாத பொய்களைச் கலாட்டா செய்தவன் தானே? ஒரு மனம் யோசிக்க, அவன் அவ்வாறு செய்யப்போய் தான், இப்போது வரையிலும் தன் அத்தையின் நிழல் கூட தான் இருக்கும் பக்கம் வராமல் இருக்கிறது என்றும் மற்றொரு மனம் கூறியது.
இது என்னவோ உண்மை தான். இப்போது தான் அவர்களின் நெருக்கடி இல்லாது நிம்மதியாக இருக்கிறாள்.
இவளின் அலைபாயும் மனம் ஒரு முடிவினை எடுக்க முடியாது தடுமாறிக்கொண்டே இருக்க, சரியாக அலைபேசி அழைத்தது.
தர்ஷனிடம் இருந்து தான் அழைப்பு, தவிர்க்க முடியாது ஷிவி ஏற்க, “ஹேய் ஷிவா, கிளம்பிட்டியா? எப்போ வருவ?” உரிமையுடன் கோபித்துக் கொண்டு கேட்டான் நண்பன்.
மிகவும் சங்கடத்துடன், “காலையில கிளம்புறேன் தர்ஷன், எவனிங்ல அங்க வந்துடுவேன்” என்றாள் ஷிவி.
“குட், அப்புறம் ஒரு சின்ன ஹெல்ப்” தர்ஷன் வேண்டி நிற்கும் போதே, “என்னன்னு சொல்லு தர்ஷன் என்னால முடிஞ்சது எதுனாலும் நான் செய்றேன்” என்றாள் இலகுவாக.
“பெருசா ஒன்னுமில்லை. மலருக்கு ஒரு கிஃப்ட் வாங்குனேன் பட் அதை மறந்து என் ரூம்லையே வைச்சிட்டு வந்துட்டேன். நீ வரும் போது அதை எடுத்துட்டு வந்திட முடியுமா? ப்ளீஸ்” கேள்வியோடு வேண்டுதலும் வைத்தான்.
இது ஒன்று மலையைப் புரட்டும் காரியம் இல்லை என்பதால் ஷிவன்யாவும் எளிதாக ஒப்புக்கொண்டு அழைப்பைத் துண்டித்திருந்தாள்.
காலையில் கிளம்பும் அவசரத்தில் அங்கு சென்று பரிசை தேடி எடுக்க எல்லாம் நேரம் இருக்காது என்பதால் இப்போதே எடுத்து வர முடிவு செய்தாள்.
தர்ஷனின் வீட்டுச் சாவியை எடுத்துக்கொண்டு தனது வீட்டைப் பூட்டிவிட்டு கிளம்பினாள்.