ஷிவியின் நிலையறிந்த ஜெனி மனோகரைப் பேசவிடாது தடுத்துவிட, மனோகர் வாயடைத்து நின்றான்.

“என்னோடு இத்தனை வருஷ ஒர்க்ல இது போல ஒரு தவறு நடந்ததே இல்லை தெரியுமா? இப்போ நான் அவங்களுக்கு என்ன பதில் சொல்வேன்? இத்தனை வருஷம் நான் கஷ்டப்பட்டு உருவாக்கி, காப்பாத்தி வைத்திருந்த என் ஸ்டுடியோ பெயரை கெடுத்துட்ட நீ” முகத்துக்கு நேராக குற்றம் சாட்டினாள்.

“இப்போ ஈவ்னிங் ஆல்பம் அண்ட் வீடியோஸ் கேட்டு வருவாங்க நான் என்ன பதில் சொல்லட்டும்? நீயே சொல்லு”

“என்னோட ஒருவார உழைப்பை ஒரே நிமிஷத்துல ஒன்னுமில்லாம ஆக்கிட்ட?”

ஷிவன்யாவின்வருத்தம் தாங்காது,“இல்லை அந்த பைல்ல நான் ரெக்கவர் பண்ணிடுவேன் கிவ் மீ ஒன் சான்ஸ் ப்ளீஸ்” வேண்டி நின்றான்.

“கேட் அவுட்”அடித்தொண்டையிலிருந்துகத்தியவள் அங்கே இருக்கையில் சோர்ந்து போய் பொத்தென விழுந்தாள்.

இறுகிப் போய் தலை கவிழ, குற்றவுணர்வோடுநின்றிருந்தனர் மனோவும் ஜெனியும்.

அதிதியும் பிரேமும் கேட்டால் என்னவென்று பதிலுரைப்பது? ஆதித்யா ஆசையுடன் எதிர்பார்த்திருக்கிறானே? வெளியுலகமே பார்க்காத குழந்தையை என் புகைப்படங்கள் தானே அறிமுகப்படுத்த உள்ளது. அத்தனையும் வீணாக்கி விட்டானே? உள்ளுக்குள்ளே கனன்று கொண்டிருந்தவளின் புத்தி விழித்துக் கொண்டது.

“என்னோட கேமரால இருக்கிற மெமரிகார்ட் எடுத்துட்டு வா ஜெனி ஒரிஜினல் பைல் அதுலஇருக்கு”

ஜெனிக்கு விழி திரண்டு வெள்ளமெனக் கண்ணீர் பெருக்கெடுத்தது.

சுறுசுறுப்புடன் பரபரப்பான ஷிவி, “பிரின்ட்ங் லேப் வேற நைன் ஓ கிளாக் க்ளோஸ் பண்ணிடுவாங்க, குவிக் ஜெனி” அவசரப்படுத்தினாள்.

ஜெனி வந்து கார்ட் கொடுக்க, வாங்கிக்கொண்டுதேவையான மற்றும் வாடிக்கையாளர் தேர்வு செய்த புகைப்படங்களை கணினிக்கு பதிவிறக்கம் செய்தவள் எடிட்டிங் வேலையைத் தொடங்கினாள்.

ஒருமணி நேரம் ஓடியதே தெரியவில்லை மேசையில் வைத்த காஃபி ஆவியற்றுப் போய் ஆடை படித்து அநாதையாக வீற்றிருந்தது.

ஷிவியின் இருக்கைக்கு இரண்டு புறமும் மனோவும் ஜெனியும் கால் நோக குற்றவுணர்வில் நின்றிருந்தனர். இப்படி நிற்கும்படி ஷிவி ஒன்றும் தண்டனை அளிக்கவில்லை, ஆனாலும் அவர்கள் நிற்பதை கண்டுகொள்ளாது வேலையில் கவனமாக இருந்தாள்.

ஜெனிக்கு அதற்கு மேல் இருப்புக்குக் கொள்ள முடியவில்லை. நேரம் ஐந்தைக் கடந்து இருந்தது. நிற்கும் நேரத்திற்கு எல்லாம் கணவரிடம் இருந்து வரிசையாக குறுஞ்செய்திகள் வந்து விழுந்து கொண்டே இருந்தது.

மகளை பரிசோதனைக்கு கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நேரம், ஒரு வாரத்திற்கு முன்பே திட்டமிட்டது. இப்போது இவள் போகாவிட்டால், கணவனும் மாமியாரும் பிழிந்து எடுத்து விடுவர்.

மெல்லிய குரலில், “மேடம்” என்றழைத்தாள்ஜெனி.

ஷிவன்யா திரும்ப, தன் பார்வையைச் சட்டென கைக்கடிகாரத்தின் மீது பதித்துக் காட்டினாள் ஜெனி.

அவள் அவசரம் புரியாவிட்டாலும் அவள் குடும்பச் சூழ்நிலை புரிந்தவள் ஷிவன்யா.

“நீ வீட்டுக்குக் கிளம்பு” என்று விட்டு மீண்டும் கணினியில் பார்வையைத் திரும்பிக் கொண்டாள்.

அவள் குரலில் கோபம் தொலைந்து போய் ஒருவித அமைதி வந்திருக்க நிம்மதியாக உணர்ந்தாள் ஜெனி. விட்டால் போதும் என்பதை போல் அவசர அவசரமாக கைப்பையை எடுத்ததுக் கொண்டு, கிளம்பினாள்.

மனோகரும் அவள் பின்னே வர, “மனோ எப்படியும் ஷிவி ஒர்க் முடிக்க ஆறு ஏழு மணி நேரம் ஆகிடும். நீ கலர்ஸ் லேப்பை கான்டெக்ட் பண்ணி ஒருமுறை பேசி வை” என்றவள் முகவரி அட்டையைக் கொடுத்துவிட்டு பரபரப்போடு வெளியேறிப் போனாள்.

இரவு எட்டுமணி ஷிவியின் மேசையில் இவன் கையால் கலக்கிய காஃபியை ஆவி பறக்க வைத்தான்.

ஓர விழியால் நோட்டமிட்டவள் ஒருநொடி யோசித்து பின் தயங்காமல் எடுத்துக் கொண்டாள். பார்வையும் கணினியை நோக்கித் திரும்பிவிட, ஒருமாதிரி ஏமாற்றமாக உணர்ந்தான்.

அதிக நேரம் இமை சிமிட்டா விழிகள் உறுத்தியது. உடலே அழுத்தி அசதியை காட்ட, விட்டால் மயங்கி விழும்படி மூளையும் மங்கியிருந்தது.

இந்த இளம் சூடான ஒரு காஃபி துளி துளியாக உள் இறங்கியதும் மூளை மட்டுமின்றி உடலில் ஒவ்வொரு அணுவும் புத்துணர்ச்சியைப் பெற்றது போன்று இதமாக இருந்தது.

ஆனாலும் அவள் இவன் காஃபியை ஏற்றுக் கொண்டே பெரிது என நினைத்தவன் மௌனமாக வெளியே வந்துவிட்டான்.

மனோகர் பசி என்பதே எப்படியிருக்கும் என்பதை அறியாதவன். ஆனால் ஷிவி அப்படியில்லை மயங்கி விழும் வரைக்கும் மாடாக உழைப்பாள்.

மனோ ருசிக்காவே ரசித்து உண்பவன் ஆனால் ஷிவி உயிர் வாழ பசிக்காக உண்பவள்.

ஸ்டுடியோவில் இருந்த அனைவரும் கிளம்பி விட்டனர். மனோகரை இருக்கும்படியோ செல்லும்படியோ சொல்லவில்லை ஷிவி. ஆனால் மனோவிற்குதான் விட்டுச்செல்ல மனமில்லை.

அதுவும் இவள் போஃபியாவை பற்றி அறிந்தும் தனித்து விட்டுச் செல்ல இவனால் இயலாது.

தர்ஷனுக்கு அழைத்து தான் வர தாமதமாகும் என்ற சேதியை கூறியவன், அதற்கு மேல் அவனை கேள்வி கேட்க விடவில்லை மனோ.

நேராககீழே இயக்கும் உணவகத்திற்கு வந்தவன், நாண் சிக்கன் கிரேவி, லாலிபாப் என வயிறார வளைத்து கட்டிவிட்டு, ஷிவிக்கு ஒரு கப் நூடுல்ஸூம் வெஜ் பீட்ஸாவும் வாங்கிக் கொண்டு கிளம்பினான்.

‘இவ்வளவு அக்கறை சக்கரையா வாங்கிட்டுப் போறீயே அவ அக்செப்ட் பண்ணுவாளாடா?’ மனசாட்சி கொஞ்சம் இடித்துக் கேட்டது.

‘வேண்டாம்னா போறா, இதையும் நானே முழுங்கிக்கிடுறேன்’ வயிறு வாதாடியது.

உண்ட உற்சாகத்தில் ஸ்டூடியோவிற்குள் வந்தவன்,அவள் முன் உணவு பார்சலை வைத்தான்.

பாதி வேலை முடிந்திருக்க, எப்படியும் முடித்துவிடலாம் என்ற நம்பிக்கை உதித்திருந்தது. சோர்ந்து போனவள், பாதி வேலை முடிந்திருக்க, கழுத்தையும் தோள்பட்டைகளையும் பிடித்து விட்டுக் கொண்டு எதிரே பார்த்தாள்.

உணவு பார்சலைப் பார்த்தபடியே, “என்னது?” என்றாள்.

“கப் நூடுல்ஸ்”

“நீ என்ன சாப்பிட்ட?”

அவனோ பட்டியல் வாசித்து முடிக்க, ஷிவியோமுறைத்தாள்.

“உங்களுக்கு என்ன பிடிக்கும்னு எனக்கு என்ன தெரியும்? இது இரண்டும் நீங்க சாப்பிட்டு நான் பார்த்து இருக்கேன் அதான் அதையே வாங்கிட்டு வந்தேன்”

மௌனமாக சில நிமிடங்கள் பிரித்து உண்டு முடித்தவள், இடையில் ஒருமுறை லேப்பிற்கு அழைத்து பேசிக் கொண்டாள்.

இவள் மேசைக்கு எதிரே இருக்கையில் அமர்ந்திருந்தவன், இவள் முகம் பார்ப்பதும் பின் அலைபேசிக்கு பார்வையை திருப்பிக் கொள்வதுமாக இருந்தான்.

இவன் பழக்கத்தை மீறி பல மணி நேரமாக ஒரே இடத்தில் ஒன்றுமே செய்யாமல் இவள் முகம் பார்த்தே அமர்ந்திருக்கிறான். மனத்திற்குள் ஏதேதோ எண்ணங்கள் வண்ணங்களாக சூழன்றது.

மெல்ல கண் சொக்கிப் போனவன் மேசையிலே கவிழ்ந்து இருந்தான்.

பதினொன்று முப்பது மணி போல வேலையை முடித்து மின்னஞ்சலில் அனுப்பி வைத்தாள்ஷிவன்யா.

எழுந்து தன்னறை கழிவறைக்குள் சென்று வந்தவள் கொஞ்சம் ஓய்வாக சோஃபால் கால் நீட்டி அமர்ந்து கொண்டாள்.

ஒரு மணி நேரம் முடிந்திருக்க, மீண்டும் எடிட்டிங் அறைக்குள்வந்தாள்.

அவன் இருக்கைக்கு பக்கவாட்டில் நின்றவள்,

“மனோகர்… மனோ” அழுத்தி குரல் உயர அழைத்தாள். அவனிடன் அசைவே இல்லை,ஆழ்ந்த நித்திரை.

தொட்டு எழுப்ப மனமில்லை. “சரியான கும்பகர்ணன்” முனங்கியவள் பற்களைக் கடித்தாள்.

மேசையில் இருந்த பேப்பர் வெயிட்டைத் தூக்கி தரையில் எறிய, அந்த அதிர்வுக்கும் ஓசைக்கும் திடுக்கிட்டு எழுந்தான் மனோ.

அதிலும் நாற்காலியைப் பின் நோக்கி நகர்த்திவிட்டு பதறி எழ, தளர்ந்து போய் பிடிமானம் எதுவுமில்லாது அலட்சியமாக நாற்காலியில் சாய்ந்து நின்றிருந்த ஷிவி தடுமாறி விழ, தாங்கிப் பிடிக்க முயன்றான் மனோ.

ஆனால் திடீர் நிகழ்விலும் பாதி உறக்க நிலையிலும் அவன் நிலையாக நிற்க முடியாத நிலையில் அவள் இடையோடு எடையைத் தாங்க முடியவில்லை. ஷிவியின் விழும் வேகத்தில் பயந்து அவன் சட்டையை பற்றியிருக்க, மனோவும் சேர்த்து அவனோடு விழுந்தான்.

“ஓ பேபி” மனோ பதறி இருக்க, அதே நேரம், “டேய் கேடி” இவளும் கதறியிருந்தாள்.

“அம்மா…” வலியோடு மெல்லிய குரலில் முனங்கிய மனோவின் குரலில் சட்டென விலகி எழுந்து கொண்டாள் ஷிவன்யா.

சில நொடி கண்மூடிய நிலையில் இருந்த மனோகரும் எழுந்து கொண்டு, விழியை சுழற்ற, எதிரே இருக்கையில் அலைபேசியுடன் அமர்ந்திருந்தாள் ஷிவன்யா.

அகத்திலும் முகத்திலும் எந்தவித மாற்றமுமின்றி இருப்பவளைக் கண்டவன், காணாதது போல் வெளியேறிப் போனான்.