அத்தியாயம் 16

ஷிவன்யாவின் தந்தை சிவராம் குடும்பத்தின் மூத்தமகன். இளம் வயதிலையே தாய் தந்தையை இழந்தவர். ஒரு தம்பி, இரண்டு தங்கைகள் என மூவரையும் வளர்க்கும் பொறுப்பு சிறு வயதிலே அவரிடம் வந்து சேர்ந்தது. கடுமையான உழைப்பாளி சிவராம். சிறிதாக தொடங்கிய தொழிலில் தன் முழுநேர உழைப்பைக் கொட்டி, கடுமையாக உழைத்தார். அவரின் உழைப்பிற்கான பலனும் நன்கு கிடைக்க, அதிக சொத்துகளைச் சேர்த்து வைத்தார்.

தம்பி, தங்கைகளை வளர்ந்து படிக்க வைத்து திருமணம் செய்து வைத்து, அவர்களுக்கு என தொழில் அமைத்துக் கொடுத்து, தன் உழைப்பில் உருவான சில சொத்துங்களையும் கொடுத்தார். அவர்களுக்காகவே வாழ்ந்தவர் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை அனைத்தையும் முடித்த பின் தனித்து நின்றார்.

உடன் பிறப்புகள் திருமணம் முடிந்து, பிள்ளைகளையும் பெற்றிருக்க, இவரோ திருமண வயது, ஆசைகளை கடந்திருந்தார். தனிமரமாக நிற்பவருக்கு வாழ்க்கைத் துணையைத் தவிர அனைத்துவித செல்வமும் நிறைந்து இருக்கிறது. அவராக எதுவும் கேட்டதில்லை. தம்பியும் மூத்த தங்ககையுமே அண்ணனுக்கு ஒரு திருமணம் செய்து வைக்க ஆசை கொண்டனர்.

பல நாட்களாக மீண்டும் மீண்டும் பிடிவாதமாக கேட்டு, சிவராமின் சம்மதம் பெற்று பெண் பார்க்கத் துவங்கியிருந்தனர். குணத்திலும் தோற்றத்திலும் நல்ல பெண் வேண்டும் என்பது மட்டுமே அவர்கள் எதிர்பார்பாக இருந்தது. வசதி வாய்ப்புகளோ நகை, சீர் பொருட்களோ எதுவும் இவர்களுக்குத் தேவையாக இல்லை.

வயதும் முன்னந்தலை வழுக்கையும் காரணமாக பெண் அமைவது தள்ளிப் போய் கொண்டே இருந்தது. உடன் பிறப்புகளின் வெகு தீவிரத் தேடலுக்குப் பின் ஹைத்ராபாத்தில் ஒரு பெண்ணைப் பார்த்தனர்.

தந்தை இல்லாத ஏழ்மையான நிலையிலும் ஒழுக்கத்தையும் பாரம்பரியத்தையும் கடைபிடிக்கும் குடும்பத்தில் மூன்று பெண்களில் ஒருவராக பிறந்து வளர்ந்தவர் சுகன்யா.

கல்லூரிப் படிப்பை அப்போது தான் முடித்திருந்த சுகன்யா, இருபத்தியொரு வயது இளமங்கை. அழகுக்கே அகராதியாகக் காட்சியளித்தார். சுகன்யாவின் வீட்டில் பெண் கேட்ட போது, வயதை தாண்டி வேறு எந்தவித வித்தியாசமும் தெரியவில்லை அவள் அன்னைக்கு.

அன்னையின் சொல்லுக்கு மீறி சுகன்யா அணுவும் அசைய மாட்டார். இருவீட்டாரின் ஏற்பாட்டில் இவர்கள் திருமணமும் எளிமையாக சிவராமின் சொந்த ஊரில் நிகழ்ந்தது.

நாற்பது வயதையை நெருங்கிய சிவராமும் இருபது வயது இளஞ்சிட்டு சுகன்யாவும் இணைந்து துவங்கிய குடும்ப வாழ்வில் இரண்டு வருடங்களுக்குப் பின் முத்தென பெண் பிள்ளையைப் பெற்றனர். இருவர் பெயரையும் இணைத்து ஷிவன்யா எனப் பெயர் சூட்டி வளர்த்தார் தந்தை சிவராம்.

சிவராமிற்கு மகளென்றால் உயிரினும் மேல். தம்பி, தங்கைகளை வளர்ந்த அனுபவம் அதிகம் அன்னையை தேடவிடாது அனைத்தும் அவரே செய்து அரவணைத்து வளர்த்தார். மனைவிக்கோ மகளுக்கோ எந்தவித குறையும் இல்லாது குடும்ப வாழ்க்கை நிறைவாக இருந்தது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு. ஷிவன்யாவிற்கும் அப்படித்தான் தோன்றியது.

தன்னை போல தன் அன்னையும் குழந்தையென தாங்குவதை கண் முன்பே கண்டிருக்கிறாள். பட்டும், நகையும் தவிர கேட்டது கேளாதது என அனைத்தையும் வாங்கிக்குவிப்பார். மனைவியின் சுக வாழ்விற்கு எந்தவித குறையும் வைத்ததில்லை. ஆண்டிற்கு ஒருமுறை குடும்பத்தோடு வெளிநாட்டுச் சுற்றுலா இருமுறை உள்ளாட்டுச் சுற்றுலா என அழைத்துச் செல்வார்.

அன்னையும் தந்தையும் போட்டிப்போட்டு அன்பைக் கொட்ட, திகைத்து திக்குமுக்காடிப் போவாள் ஷிவன்யா. இருவரின் இணைந்த கரங்களுக்குள்ளே வளர்ந்து விட்டவளுக்குத் தெரியாது இருவருக்குள் இருக்கும் விரிசல்.

திருமணம் ஆனது முதலே இருவருக்குள்ளும் ஒரு ஒற்றுமை இருந்ததேயில்லை. காலம் சென்றால் சரியாகிவிடும் என பொறுமை காத்திருக்க, குழந்தை பிறந்த பின்பு இன்னுமே அதிகமானது. குழந்தை வளர்ப்பில் இருவரிடமும் இருவேறு கருத்துகள் அதையும் தாண்டி, குழந்தையை உரிமை கொண்டாடும் போட்டி மனநிலையும் அதிகம் இருந்தது.

எப்போதும் சிவராமின் ஆளுமையில் அவரின் முடிவுகளே இறுதியாகி விட, மனதில் இன்னும் நொறுக்கிப் போனார் சுகன்யா. தனது ஏழ்மையால் தான் இந்த நிலை, குழந்தை முதல் தனக்கென எதுவுமில்லை என்ற எண்ணம் அதிகம் அரித்தது.

அவர்களுக்குள் இருக்கும் முட்டல் மோதல் அதனால் உண்டான பிளவுகள் இது எதுவும் ஷிவன்யாவிற்குக் கூடத் தெரியாது. அவளறிய பெற்றோர்கள் அன்யோநியமான தம்பதிகள், அதிலும் தந்தையே அன்னை மீது அதிக காதலை பொழிகிறார்.

ஷிவன்யாவின் பனிரெண்டாவது வயதில் சுகன்யா சிவராமிடம் இருந்து விவாகரத்து வேண்டினார். சிவராமின் அதட்டல், மிரட்டல் எதற்கும் அசையாது சுகன்யா முடிவாக இருந்துவிட, இறுதியில் குழந்தையை தர இயலாது என முடிவாக உரைத்தார். தன்னிடம் எதுவும் இல்லாத ஏழ்மை நிலையில் குழந்தையின் எதிர்கால நலனை சுகன்யா யோசிக்க, நீதிமன்றமே சிவராமின் அதே வாதத்தை ஏற்று குழந்தையின் பொறுப்பை சிவராமிடம் ஒப்படைத்தது.

இவர்கள் விவாகரத்திற்கு இவர்களுக்குள் இருக்கும் வயது வித்தியாசத்தை தான் காரணமாக குறை கூறினர் உறவினர்கள். அதிலும் இவள் அத்தைகள் இருவரும் அண்ணன் புகழ்பாடி சுகன்யாவை கரித்துக் கொட்டினர்.

“அவளை மகாராணி மாதிரி வைச்சிகிட்டான் உங்கப்பா ஆனால் அவ வயசானவன்னு உங்கப்பாவை விட்டுட்டுப் போயிட்டா” மூத்த அத்தை முகத்திற்கு நேராக கூறினார்.

“இதுநாள் வரைக்கும் காசு பணம் தேவையிருந்தது இப்போ அதான் வயசை பெருசா நினைக்காம இருத்தா இப்போ அவ வயசுக்கு ஜோடி தேடிட்டாளோ என்னவோ?” இளைய அத்தை இடித்துக்கொண்டாள்.

சுகன்யா விரட்டப்பட்டாரோ இல்லை விட்டுச் சென்றாரோ ஆனால் இறுதியில் தன் முகம் கூட பார்க்காது சென்றுவிட்டதை ஷிவியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எப்படி பெற்றவள் தன்னை விட்டுச் செல்லலாம்? அதிலும் பருவ வயதில் இருக்கும் தன்னை? அன்னை விட்டுச் சென்றதை அவளால் எள்ளளவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அனாலும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு அன்னை இல்லாத வெற்றிடத்தை முழுவதுமாக நிரப்பி வளர்த்தார் சிவராம்.

மனைவி விட்டுச் சென்றது வாழ்வில் தோற்றுவிட்ட எண்ணத்தைக் கொடுத்தது சிவராமிற்கு. வயதோ இல்லை விரக்தியோ மன அழுத்தம் தாங்காது மாரடைப்பு ஏற்பட்டது.

சிவராம் இறப்பு ஷிவன்யாவிற்கு தாங்க முடியாத இழப்பு. தனக்கென இருந்த ஒரே உறவையும் இழந்து தவித்தாள். சிறு பெண்ணாக இருந்த போதும் நன்கு விவரம் அறிந்தவள் தானே? தானே தன்னைப் பார்த்துக்கொள்ளத் தொடங்கினாள். எப்போதும் தன்னை பிஸியாகவே வைத்துக்கொள்ள நினைத்தவள், பள்ளிப்படிப்பு போக சில பயிற்சி வகுப்பிற்கும் சென்று கொண்டிருந்தாள்.

ஆனால் அப்பா இல்லாத வீட்டில் அத்தைகளின் அராஜகம் கெடுபிடிகளும் அதிகமாகியது. இதுநாள் வரையிலும் ஊமையென இருந்த சித்தி கூட சீண்டிப் பார்த்தாள். ஷிவன்யாவிற்கு அத்தனை உறவுகளும் கசந்து போனது. வெறுத்து ஒதுக்கியவள், தாங்க முடியாது விலகிப் போனாள்.

இவள் படிப்பிற்கு தடை போட நினைக்க, சித்தப்பாவின் உதவியோடு விடுதிக்குச் சென்றுவிட்டாள். விடுமுறை நாட்களில் கூட கையில் ஒரு புகைப்படக் கருவியோடு சுற்றுலா கிளம்பிவிடுபவள் வீட்டிற்கு வருவது அரிதிலும் அரிது.

சிவராம் இறுதி மூச்சை விடும் நேரம் தன் தம்பியிடம் தான் மகளை பார்த்துக் கொள்ளும்படி வேண்டியிருந்தார். அவரும் அண்ணன் மேல் உள்ள அன்பு மற்றும் நன்றிவுணர்விற்காக இப்போது வரையிலும் ஷிவன்யாவிற்கு துணையாக இருக்கிறார்.

சிவராம் ஷிவன்யாவிற்காக விட்டுச் சென்ற சொத்துகள் தொழில்கள் அனைத்தையும் அவளின் சித்தப்பா அவளுக்கே பாதுகாத்து பராமரித்தும் கொண்டிருந்தார்.

அவற்றை அனுபவிக்க கூட நெருங்க முடியாத இயலாமை அத்தைகள் இருவரையும் ஆத்திரப்படுத்தியது.

ஷிவன்யாவிற்கு பதினெட்டு வயது பூர்த்தியான மாதத்திலே சிவராமிற்கு சாமி கூப்பிட வேண்டுமென ஷிவன்யாவை வீட்டிற்கு அழைத்தனர் அத்தையும் சித்தியும். அவளின் விடுமுறை தினமென ஊருக்கு வர, வீடோ விழாக்கோலமாக இருந்தது.

உள்ளே வந்த பின்பு தான் விஷயம் புரிந்தது. இளைய அத்தையின் மூத்த மகனுக்கு தன்னை திருமணம் செய்து வைக்கவே இந்த ஏற்பாடுகள். ஷிவன்யாவிற்கு இரத்தம் சூடேறிப்போனது, தன் தந்தையின் மீதான பாசத்தைக் காட்டி தன்னை ஏமாற்றியதாக நினைத்தவள் கொதித்து கொந்தளித்தாள்.

வீட்டுப் பெண்கள் அவளைத் திருமணத்திற்கு கட்டாயப்படுத்த, இவள் பிடிவாதமாக மறுத்தாள்.

“ஏன்மா வேண்டாம்கிற? சொந்தத்துக்குள்ள முடிச்சிக்கிட்டா உனக்கு நல்லது தானே? அசோக் நம்ம பையன், நல்லா தெரிஞ்சவன் தானே? உன்னை நல்லா பார்த்துப்பான்” சித்தப்பா இவள் நலனுக்காகவே உரைத்தார்.

“அதானே எங்களை விட்டா உனக்கு வேற யார் இருக்கா?” சித்தி கேட்க, “எனக்கு யாரும் வேண்டாம், என் நலனை நினைக்காத யாரும் எனக்கு வேண்டாம்” வீரிட்டாள்.

“உன் நல்லதுக்குத் தானே சொல்றோம்? உங்கம்மா செய்த காரியத்திற்கு உனக்கு எல்லாம் எந்த மாப்பிள்ளை கிடைப்பான்?” மூத்த அத்தனை இடித்துரைக்க, “எது நல்லது? என்னை விட பதினாலு வயசு மூத்த அசோக்கை கல்யாணம் பண்றதா? யாருக்கு நல்லது? எனக்கா இல்லை உங்களுக்கா?” வார்த்தைக்கு வார்த்தை வாதிட்டாள்.

“பார்த்தீங்களா அக்கா? நம்ம அத்தை பையன் நம்மளை நல்லா பார்த்துப்பாங்கிற நினைப்பு இல்லாம வயசுல மூத்தவன்னு சொல்றா? இப்பவே இவளுக்குப் புத்தி போறதைப் பாருங்க, சரிதான் என்ன இருந்தாலும் இவளும் இவள் அம்மாவை மாதிரி தானே இருப்பா” வார்த்தைகளை சாட்டையாக வீசினாள் அசோக்கின் அன்னையான ஷிவியின் சின்ன அத்தை.

இந்த வார்த்தை அப்படியே ஷிவியின் நெஞ்சில் கூர் கத்தியாகப் பாய்ந்து கீறியது. கரையாத கல்வெட்டாக நிலைத்துப் போனது. மீண்டும் அன்னையின் செயலை காட்டியே தன்னைப் பேசுவதை தாங்க முடியவில்லை. உறவுகள் அனைவரையும் முழு மொத்தமாக வெறுத்து வேரோடு பிடுங்கி எறிந்து விட்டாள். சொந்தமே வேண்டாமென மொத்தமாக தலை முழுகிவிட்டுக் கிளம்பினாள்.

ஷிவி அப்படியே கிளம்பிவிட, “விட்டுட்டுப் போறததைப் பார், அம்மா புத்தி அப்படியே இருக்கு. என் மகனை வேண்டாம்ன்னு சொல்லிட்டுப் போறீயா? எவனோட எப்படி வாழ்றன்னு நானும் பார்க்கிறேன்” நினைத்தது நிறைவேறாத நெஞ்செரிச்சலில் சபித்துக் கொண்டிருந்தாள் சின்ன அத்தை.

அன்றே அனைத்தையும் உதறி வந்தவள் தான் அதன் பின் அவர்களை தொடர்பு கொள்ளவே இல்லை. அவர்களும் இவள் இருக்கிறாளா? இல்லையா? என கொஞ்சமும் அக்கறை இன்றி இவள் சொத்துகளை மட்டும் சுக போகமாக அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

சில மாதங்களுக்குப் பின் இவள் சித்தாப்பா தான் தேடி வந்தார். அந்த திருமணம் இவளுக்கு நல்லதென நினைத்து தான் அவர்களின் ஏற்பாட்டிற்கு சம்மதித்ததாக மன்னிப்பு வேண்டினார். அவர் மட்டுமே இன்னமும் தொடர்பில் இருக்கிறார்.

இவள் சொத்துகளே என்ற போதும் தேவைக்கோ தொழில் தொடங்கவோ எதற்கும் அவர்களிடம் ஷிவி எதையும் எதிர்பார்த்ததில்லை. அப்படியிருக்க தனக்கு திருமண வயது வந்துவிட்டது நல்ல மாப்பிள்ளை பாருங்கள் என எவ்வாறு கேட்பாள்?

உடை, வீடு, வாகனம் என எல்லாமும் அவளுக்கு அவளே பார்த்து வாங்கிக்கொண்ட போதும் ஏனோ திருமணம் என்னும் விஷியத்தில் தனக்கு அனைத்தும் தானே பார்த்துக்கொள்ள மனம் வரவில்லை. அப்படியே விரக்தியில் சுருண்ட மனத்தில் ஆசைகள் துளிர் விடாமலே காலங்கள் கடந்திருந்தது.

படிப்பு, வேலை, தொழில் என்றே இருந்து விட்டவளுக்கு வேறு எந்தவித எண்ணங்களும் வந்ததில்லை. அவளும் வரவிட்டதில்லை.

இந்நிலையில் அவளின் தேவை எதற்கும் ஊர் பக்கமே அவள் வராமல் இருக்க, இங்க அனைவரும் அவளின் சொத்துகளை அனுபவித்து சுகபோகமாக வாழ்ந்தனர்.

கடந்த ஆறுமாதத்திற்கு முன் அசோக்கின் மனைவி இறந்து விட, இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு தவித்து நின்றான்.

அப்போது தான் சின்ன அத்தைக்கு மீண்டும் இந்த ஆசை துளிர்விட ஆரம்பித்தது.

ஷிவன்யா முப்பது வயதைத் தாண்டியும் திருமணமாகாமல் இருக்கிறாள் இனிமேலும் யார் அவளைத் திருமணம் செய்து கொள்வார்? எப்படியாவது பேசி தன் மகனுக்குத் திருமணம் செய்து வைக்க நினைத்திருந்தார்.

இதற்கு இரண்டு மூன்று முறை அசோக்கிடம் சொல்லி அனுப்பியும் அலைபேசியில் அன்பாக பேசியும் முயன்று பார்த்தார், ஷிவன்யா சிறிதும் அசையவில்லை.

இதற்கிடையில் நடிகர் ஆதித்யாவுடன் காதல் என்ற செய்தி ஆங்கில இதழில் வந்ததைப் பார்த்து அதிர்ந்தே போயினர். தன் ஆசையில் மொத்தமாக ஆதித்யா மண் அள்ளிப் போட்டதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இதற்காகவே சென்னை வந்து அந்த செய்தியின் உண்மைத் தன்மையை விசாரித்து அப்படியில்லை என அறிந்து கொண்ட போதும் ஷிவியின் ஸ்டூடியோ சென்று அவளை தரக்குறைவாக பேசி மிரட்டியும் வந்துள்ளனர்.

ஆனால் அவர்களே சற்றும் எதிர்பாராதது மனோகர் என்ற புதியவனின் வருகை. அவனின் சரவெடியான அதிரடியில் அரண்டு தான் போயினர்.