திருநெல்வேலியில் மிகப் பெரிய திருமணமண்டபத்தில் வெகு சிறப்பாக நடந்தேறியது தர்ஷன், மலரின் திருமணம். சொந்த பந்தத்தோடு ஊரே கூடி வர மண்டபம் நிறைந்து காணப்பட்டது. தொழில் வகை நண்பர்கள், அரசியல் பிரபலங்கள் நண்பர்கள் கூட்டமென அலைமோதிக் குவிந்து இருந்தது மண்டபம்.
வெகு எளிமையான பச்சை நிறத்தில் சிவப்பு பாடர் கொண்ட பட்டில் தேவதையாக இருந்தாள் ஷிவன்யா. சுருள் முடிகளை இருபுறமும் காதோரமாக எடுத்து கிளிப் மாட்டி, கொஞ்சம் மல்லிகைப் பூவும் நெற்றியில் குட்டியான சிவப்புப் பொட்டும் அதன் மீது சிறு கோடாக சந்தனமும் உடைக்குப் பொருத்தமான உதட்டுச் சாயத்தோடு அழகுமுகம் மேலும் அழகுடன் மிளிர்ந்தது.
அதிலும் இவள் கையில் இவளுது கேமிராவோடு மணமக்களை கேட்டிட் ஷார்ட் எடுத்தபடி சுற்றி வர, அங்கே அனைவரின் கண்களும் இவளைச் சுற்றியது.
அனைவருமே அவள் அழகை பாராட்டினர். உறவினர்கள் எல்லாம் யார் இந்தப் பெண்? எனக் கேட்டுச் சென்றனர். மனோகருக்குத் தான் பெரும் அவஸ்தை, கண்களை அவளிடம் இருந்து மீட்டுக் கொள்ள முடியவில்லை.
முதல்முறையாக புடவையில் பார்த்ததிலே சொக்கி நிற்கிறான். அதிலும் இத்தனை அழகோடு அன்னநடையிடுபவளை அள்ளிக் கொள்ள கைகள் பரபரத்தது.
மணமக்கள் கோயிலுக்குச் சென்று பின் வீட்டிற்கு வருவதாக இருக்க, முன்னரே சென்று ஆரத்தி கரைத்து வைக்குமாறு தனுவோடு மேலும் சில உறவுப் பெண்களை அனுப்பி வைத்திருந்தார் சிவகாமி. தர்ஷனின் அன்னை காயத்திரி சில நகைகளை ஷிவியின் கையில் கொடுத்து பத்திரமாக வீட்டில் வைக்கும்படி அவர்களோடு அனுப்பி வைத்தார்.
அனைத்து பெண்கள் குழந்தைகளோடு இவளுமே அதே காரில் வீடு வந்து சேர்ந்தாள். கொடுத்து அனுப்பிய நகையை பத்திரமாக வைத்து பூட்டிவிட்டு உடை மாற்றினாள்.
அப்போதும் கசகசப்பாக இருக்கவே குளித்து வர நினைத்து மாற்று உடைகளை எடுத்துக் கொண்டு பின்புறம் இருக்கும் குளியல் அறைக்குச் சென்றாள்.
பெரிய வீடாக இருந்த போதும் குளியலறை எல்லாம் வீட்டிற்குள் இல்லை தனியாக பின்புறம் கிணற்றடியில் தான் உண்டு.
தனுவும் ஆரத்தி தயார் செய்ய, உறவுப்பெண்கள் மணமகளுக்கு கொடுக்க பால், பழம் மேலும் சில இனிப்பு வகைகளைச் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் பிள்ளைகள் அனைவரும் கூடி வீட்டிற்குள் கண்ணாமூச்சி ஆடுவதாக ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
ஒரு சிறுமி குளியறையில் ஒளிய அதை கவனித்த சிறுவன் விளையாட்டாக அவளை உள்ளே வைத்தே பூட்டி விட்டு ஓடி விட்டான். அதை கவனித்த மற்றொரு சிறுமி அவளை திறந்து விட என்றும் விளையாடிக் கொண்டிருந்தார்.
இந்த நேரம் ஷிவி குளிப்பதற்கு உள்ளே சென்றதும் வெளியில் இருந்து கதவு மூடப்பட்டது. இவள் உள்ளே செல்வதை கவனிக்காது கதவு மூடுவதை மட்டுமே கவனித்து தங்கள் கூட்டாளியில் ஒருவர் என நினைத்து குழந்தை ஒன்று வெளிப்புறமாக பூட்டிவிட்டது.
அதே நேரம் பெண் ஒருவர் இனிப்பு கொடுக்கவே குழந்தைகள் அனைவரும் சமையலைறை நோக்கி ஓடிவிட்டனர்.
அடுத்த பதினைந்து நிமிடத்தில் மணமக்கள் வந்து இறங்கியிருக்க, அவ்விடம் விழாக்கோலமானது. ஷிவியை தேடிய காயத்திரி தனுவிடம் விசாரிக்க, அங்கே அவளில்லை.
அங்கே யாரோ வேலையாக அவரை அழைக்க, எதிரே வந்த மனோவிடன், “ஷிவன்யாவை பார்த்து கொஞ்சம் நான் கூப்பிட்டேன்னு கூட்டிட்டு வாடா” என்றவர் சென்றுவிட்டார்.
மனோவிற்கு எதுவும் தெரியாது நேராக மலரின் அறைக்குச் சென்றான். மலரின் அறையில் அவளோடு தான் தங்கியுள்ளாள்.
அறைக்குள் வந்த மனோ அங்கே அவளில்லாதது கண்டு அவள் எண்ணிற்கு அழைத்தான். அலைபேசி அறைக்குள்ளே ஒலிர, வீட்டிற்குள் தான் இருக்க வேண்டும் வேறு எங்கும் சென்றிருக்க மாட்டாள் என முடிவு செய்தவன் அவளைத் தேடத் துவங்கினான்.
இப்போது வரையிலும் கொஞ்சம் அசட்டையாக இருந்தவன் இப்போது அவளைக் காணவில்லை என்றதும் பரபரப்பானான். தனுவிடம் கேட்க அவளுக்குத் தெரியவில்லை.
“என்ன தனு இப்படிப் பொறுப்பில்லாமல் பதில் சொல்ற? நம்மளை நம்பி நம்ம வீட்டுக்குத் தானே வந்துருக்கா ஷிவி?” என்றவன் காய தனுஜாவிற்கு சட்டென கண்கள் கலங்கிவிட்டது.
கர்ப்பிணியான மனைவி காலையில் இருந்து இவ்வளவு வேலை செய்துவிட்டும் மனோகர் சத்தமிடுகிறானே? கண்ணில் கண்ணீரோடு நிற்பதைப் பார்க்கத் தாங்க முடியவில்லை மாதவனால்.
“இவளை ஏன்டா சத்தமிடுற? ஷிவன்யா என்ன சின்னப்பிள்ளையா தொலைச்சு போக? எங்கையாவது போயிருப்பாளா இருக்கும்” மாதவன் அதட்ட, “போடா உனக்கு என்ன தெரியும் அவள் ஹெல்த் கண்டிஷன் பத்தி” உளறியவன் பதைபதைப்போடு சென்றான். தனுவும் மாதவனும் விழித்து நின்றனர்.
நடுக்கூடத்துக்கு வந்தவன் ஷிவியுடன் வீட்டிற்கு வந்த அத்தனை உறவுப் பெண்களையும் விசாரித்தான். இவன் விசாரிக்கும் தொனிக்கே அவ்விடம் பரபரப்பானது.
அதில் ஒரு பெண்மணி கடைசியாக ஷிவியை அவள் குளிக்கச் செல்லும் போது பார்த்ததாக கூறினார்.
மறுநொடியே பின்கட்டு நோக்கிப் பாய்ந்து ஓடினான் மனோகர்.
பாய்ந்து சென்று கதவை திறக்க, குளியலறையின் தரையில் மயக்கநிலையில் கிடந்தாள் ஷிவன்யா.
மனோகருக்கு ஒருநொடி உயிரே நின்று போனது. இவள் நிலைமை தெரிந்தும் இப்படி தனித்து விட்ட தனது முட்டாள் தனத்தை நொந்து கொண்டான்.
எவ்வளவு நேரம் அடைப்பட்டுக் கொண்டாளோ? பயந்திருப்பாளே? மூச்சுக்கு திணறியிருப்பாளே? எவ்வளவு தூரம் தவித்தாளோ? என்ற தத்தளிப்புடன் அவளை அள்ளி எடுத்து தூக்கிக் கொண்டு வெளியே வந்தான்.
மனோகர் கையில் ஷிவன்யா, அதுவும் மயக்கநிலையில் காண அனைவருமே என்னவோ ஏதோ என நினைத்தபடி விரைந்து வந்தனர்.
நடுக்கூடத்தில் ஒரு கூட்டமே கூடியிருந்தது. மாலையும் கழுத்துமாக மணமக்கள் தர்ஷன் மலரும் எழுந்து வந்துவிட்டனர்.
கண்கள் கலங்கி விழி நிறைந்த நீரோடு நின்றிந்த மனோவை நோக்கி, “என்னடா ஆச்சு?” மலர் விசாரிக்க, “ஷிவா.. ஷிவா” தர்ஷன் பதறித் துடித்தான்.
“ஷிவிக்கு க்ளோஸ்ட்ரோபோஃபியா இருக்கு” தொண்டை அடைக்க உரைத்தவன், அவளை தாங்கியபடியே அறை நோக்கிச் சென்றான். செல்லும் போதே மாதவனிடம் மருத்துவருக்கு தொலைபேசியில் அழைக்கும்படியும் சொல்லியபடியே சென்றான்.
அதற்குள் உறவுப்பெண்களில் மருத்துவர் ஒருவர் உள்ளே வந்தார்.
மயக்கநிலையில் இருக்கும் ஷிவியைப் பரிசோதித்தவர் முதலுதவி அளித்தார்.
சில நிமிடங்களிலே கண் விழித்த ஷிவி சுற்றிலும் பார்க்க, தனு, தர்ஷன், மலர் மட்டுமின்றி கண்கலங்கிய நிலையில் தெய்வானை, பரிதவிப்புடன் சிவகாமி, கதிரேசன், மாதவன் என மனோவும் குடும்பம் மொத்தமும் கவலையுடன் குழுமி நின்றனர்.
“எனக்கு ஒன்னுமில்லை நல்லாயிருக்கேன்” பிறரின் கேள்விக்கு மனோவை பார்த்தபடி பதில் கூறிய ஷிவி வறண்ட தொடையையும் உதடுகளையும் ஈரப்படுத்த முயன்றாள்.
மனோகர் சட்டென எழுந்து சென்றுவிட, “எங்களை நல்லாவே பயமுறுத்திட்டேடி” தனு கோபித்துக்கொள்ள, “எல்லாரையும் விட மனோ தான் பயந்து போயிட்டான்” என மலரும் வெம்மின்னாள்.
சொருகும் விழியோடு ஷிவி அமைதியாக பார்த்திருக்க, “எல்லாரும் வெளியே வாங்க, அவங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்” என்ற மாதவன் அனைவரையும் வெளியே அழைத்து வந்திருந்தான்.
அனைவரும் சென்றிருக்க தர்ஷன் மட்டும் ஒருநொடி தேங்கி நின்றான். ஷிவன்யா கேள்வியாக அவனை பார்க்க, “நீ பார்க்கிற தானே? மனோவோட பாசமும் பரிதவிப்பும் எதுவும் பொய்யில்லை ஷிவி! என்னைக்கும் மாறவும் மாட்டான். உடைஞ்சி ஒன்னுமில்லாம போன கேமிரா குப்பைக்கு போக வேண்டியது, ஆனாலும் அவனுக்கு பிடிச்ச பொருளுங்கிறதாள அவ்வளவு பொக்கிஷமா வைச்சிருக்கான். அவன் காதலும் அப்படித்தான். என்னைக்கும் உன்னை காய் விட மாட்டான் என் வார்த்தையை நம்பு” என்ற தர்ஷன் தன்னவளோடு கிளம்பிச் சென்றான்.
தர்ஷன் சொல்லாவிட்டாலும் ஷிவிக்கு அனைத்தும் புரியும். மனோகரின் அன்பின் தூய்மையும் ஆழமும் நன்கு உணர்ந்தவள் தான்.
இந்த அன்பை தொலைக்க இருந்த நொடியில் தான் அவன் மீதான தன் காதலையும் ஷிவி நன்கு உணர்ந்திருந்தாள்.
உயிர் போக இருக்கும் நொடியில் தான் மனோவிற்காக உள்ளம் தவியாய் தவித்தது. ஊர் உலகம் என்ன பேசும் என்று நினைத்தே தன் ஆசை மட்டுமில்லாது தன் மீது உயிரையே கொண்டுள்ள மனோவையும் பெரிதும் நோகடித்து, தவிக்க விட்டுச் செல்கிறோமே தவியாகத் தவித்தாள்.
அவனோடு ஒரு இனிய இல்லறம் மயக்கத்தோடு கண்மூடும் வேளையில் இறுதியாகத் தோன்றியது. இப்போது நினைக்கையில் நெஞ்சில் ஊறியது.
மாதுளப்பழச்சாறுடன் மனோகர் உள்ளே வர, ஷிவி அவனை நோக்கி உரிமை கொண்ட புதுப்பார்வை பார்த்தாள்.
சில நொடி பொறுமை கூட இவனிற்கு இல்லை, வாங்கிக்கொள்ள மறுக்கிறாளோ? என்ற நினைப்பில் ஷிவியின் தோள்பட்டையைப் பற்றியவன் கிளாஸை வாயில் வைத்து அவனும் வலுக்கட்டாயமாக திணித்தும் விட்டான்.
மனோகருக்கு தன் செவியில் விழுந்த செய்தி உண்மை தானா என நம்ப முடியாத இன்ப அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.
ஆனால் படுக்கையில் அமர்ந்தவாக்கில் தன் இடையை அணைத்து வயிற்றில் முகம் புதைத்திருத்த ஷிவியின் அணைப்பு உண்மை என்று உணர்த்தியது.
“சொன்னது நீ தானா? சொல் சொல்?” மனோ கேலியாகப் பாடியபடியே, தலை கோதியவன், தன்னிடமிருந்து அவளை பிரித்து நிமிர்த்தினான். மேலும் முகம் நிமிர்ந்தி அவள் விழிகளை பார்த்தான்.
எப்போதும் திரையிட்டு உள்ளம் மறைக்கும் அந்த விழிகள் உண்மையை ஒப்புக்கொண்டு உரைப்பது அவனுக்கு ஆச்சரியத்தை ஊட்டியது.
“நான் உன்னை நம்பாததனாலே நான் சொல்றதை நீ இப்போ நம்ப மாட்டேங்கிறியா?” மூக்கு விடைக்க பெரும் கோபமும் ரோஷமுடனும் கேட்டாள்.
கோபம் அல்லாது கொஞ்சல் வெளிப்படும் அச்சுகக் குரல் அவனைக் கவர்ந்தது.
தாமரை மொட்டாய் குவிந்து சிவந்திருக்கும் மூக்கை பற்றி நிமிட்டி செல்லம் கொஞ்சியபடியே, “அப்போ கல்யாணம் பண்ணிக்கலாமா?” ஆசையாகக் கேட்டான்.
“ஏன் கல்யாணம் ஒன்னு தான் என்னை உன்னோட இறுதி வரைக்கும் பிணைச்சி வைச்சிக்கும்னு நினைக்கிறீயா? என் காதல் மேல இன்னும் உனக்கு நம்பிக்கையில்லை?” ஆதங்கமுடன் கேட்டாள்.
“அடி லூசு எந்த உறவையும் எந்த கயிறும் கட்டி வைக்க முடியாது. அன்பு மட்டும் தான் அடித்தளம், பரஸ்பர அன்பிருந்தால் போதும் எந்த உறவும் நீடிச்சு இருக்கும் நமக்குள்ள அது நிறையவே இருக்கு” என்றான் உளமார.
பின் ஏன் அவசரத் திருமணம் கேள்வியாய் அவள் பார்வை அவனை நோக்கிப் பாய்ந்தது.
“இவ்வளவு அழகை இதுக்கு மேலையும் கைக்கட்டி வேடிக்கை பார்க்க முடியலை” என்றவனின் விழிகள் அவள் அழகை மொத்தமாக மொய்த்தது. அவன் குரலின் போதை அவள் மேனியேங்கும் சிவக்கச் செய்தது.
சிவந்த கன்னங்கள் இவன் ரகசிய ரசாயனங்களை தட்டியெழுப்ப குனிந்து அவள் பட்டுக் கன்னங்களின் முத்தமிட்டான்.
அங்கு தொடங்கிய முத்த ஊர்வலம் முகம் மொத்தமும் மொய்த்து வர, அழகாய் அனுமதித்து சுகமாய் வாங்கிக் கொண்டாள்.
ஷிவியின் இந்த மாற்றமே மனோகருக்கு இறக்கை இல்லாது வானத்தில் பறக்கும் உணர்வைத் தர, சந்தோஷத்தில் மிதந்தான்.
மெல்ல விலகியவன் அவளை அணைத்தபடி அருகே மெத்தையில் அமர, “உங்க வீட்டுல ஏத்துப்பாங்களா?” தயக்கத்துடன் மெல்லிய குரலில் கேட்டவள் தடை எதுவும் சொல்லவில்லை.
“இன்னும் இவங்களை நீ புரிஞ்சிக்கலையா? எனக்கு உன்னை பிடிக்கும்ங்கிறதுக்காக மட்டும் இவங்க உன் மேல பாசம் காட்டலை. நீ என்னை ஏத்துக்கலைன்னாலும் இவங்க உன் மேல காட்டுற பாசத்துல மாற்றம் இருக்காது. நீ இப்படி சும்மா சும்மா எல்லார் அன்பையும் சந்தேகப்படுறதை விட்டுட்டு அனுபவிக்கப்பார் அம்முக்குட்டி” கன்னம் பற்றி செல்லம் கொஞ்சினான்.
“இல்லையில்லை சந்தேகம் எல்லாம் இல்லை, நம்ம வயசு..” இவள் சொல்லும் முன்பாக முந்திக்கொண்டவன், “அதை எங்க வீட்டுல யாரும் ஒரு பொருட்டாவே நினைக்கலை. இங்க யாருக்கும் நம்ம வயசு பிரச்சனையில்லை. அதுமட்டுமில்லை நான் தான் ஆல்ரெடி சொன்னேனே எங்க ஆச்சி, தாத்தாவை விட வயசுல பெரியவங்க தான். அவங்க கடைசி வரைக்கும் எப்படி அன்யோன்யமா இருந்தாங்கன்னு இங்க எல்லாரும் பார்த்திருக்காங்க, அந்த நம்பிக்கை நம்ம மேலையும் இருக்கு. நாமும் அப்படித்தான் இருப்போம். இன்னும் ஒரு விஷயம் தெரியுமா? எங்க அப்பாவும் ஆச்சியும் உங்க சித்தாப்பாக்கிட்ட பேசி உன்னை பெண்ணும் கேட்டிருக்காங்க, உங்க சித்தப்பா உன் பதிலுக்கு தான் காத்திருக்காங்க. அடுத்த வாரம் கூட முகூர்த்த நாள் இருக்கு எங்க வீட்டுல பார்த்து வைச்சுட்டாங்க”
நம்ப முடியாத அதிர்ச்சியில் விழி விரித்தவள் பின் நினைவு வந்தவளாக, “அப்போ அன்னைக்கு உங்க அப்பா சொன்னாங்களே உங்க சொந்தத்துல உன்னை மாப்பிள்ளை கேட்டாங்கன்னு?” என்றாள்.
கள்ளமாகச் சிரித்து கண் சிமிட்டியவன், “அதெல்லாம் நான் சொல்லித்தான்” என்றதுமே அவன் தோளில் இரண்டு அடிகள் வைக்க, அவள் கைகளைத் தடுத்துப் பிடித்தவன் நெஞ்சோடு இறுக்கி அணைத்தான்.
“ஏன் இவ்வளவு அவசரம்? என் ஸ்டுடியோ? என் கமிட்மெண்ட்ஸ் எல்லாம்?” சற்றே கறாராகக் கேட்டவளை கட்டி அணைத்தவன், “அதை எப்பவும் போல நீ பார்த்துக்கலாம். உன் பிரோபஸ்சன்னுக்கு இங்க எந்த தடையும் இல்லை. இந்த வெக்கேஷன் முடிச்சி சென்னை போகும் போது தம்பதியாப் போகப்போறோம் அவ்வளவு தான்” என்ற போது அவள் கைகளும் மனோவை அணைத்துக் கொண்டது.
பூந்தளிர் ஸ்பரிசம் உணர்ந்து குனிந்து ஷிவியின் முகம் பார்க்க, அவளின் ஒட்டு மொத்த அன்பு, நேசம் அனைத்தும் தன்னிடம் குவியமிடுவதை உளமார உணர்ந்தான்.
அதற்கு குறைவில்லாத நேசத்தோடு குனிந்து அவள் நெற்றியில் இதழ் பதிக்க, இவனோடு இணைந்த பயணம் இனி என்றும் இனிமையானது என்ற உறுதியோடு மனோகரின் நெஞ்சோடு சேர்ந்தாள் ஷிவன்யா.