அத்தியாயம் 17

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் அழைப்பு மணி விடாது இசைக்க, சோர்வுடன் பதறி வந்த ஷிவன்யா கதவைத் திறந்தாள்.

ஷிவி வந்து கதவைத் திறக்க, வாசலில் மனோகர். இந்த நேரம் அதுவும் இவனை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.

“என்ன விஷயம்?” கோபமுகம் காட்டாது சோர்ந்துபோய் வினவ, இவன் இதழ்களில் இளநகை அரும்பியது. அதே நேரம் மனோகரின் விழிகள் ஷிவன்யாவை ஆராய, வழக்கத்தை விடவும் சிவந்து வாடிக்கிடத்தது. வறண்டு வெளுத்த உதடுகள், கசிந்து நீர் தேங்கி நிற்கும் விழிகள் என்னவோ சரியில்லை என்பதை அவனுக்கு உணர்த்தியது.

“உங்க கிட்ட பேசணும்” உரிமையாக நின்று கொண்டிருந்தான்.

“நமக்குள்ள பேசிக்க என்ன இருக்கு? எதுவா இருந்தாலும் ஸ்டுடியோல வந்து பேசிக்கோ” பாடாரென உரைத்தவள் முகத்திற்கு நேராக கதவையும் அறைந்து சாற்ற முயன்றாள்.

கதவின் மீது இருக்கும் அவள் கரத்தின் மீது தனது கரம் வைத்து கதவை மூட விடாது தடுக்க முயன்றவன், அப்போது தான் அவள் உடல் உஷ்ணத்தை உணர்ந்தான்.

தீயாகச் சுட்ட கரத்தை பட்டென விலகிக் கொண்டு, அவள் நெற்றியில் கரம் வைத்து பரிசோதித்தவன், “எத்தனை நாளா காய்ச்சல்? ஹாஸ்பிட்டல் போனீங்களா இல்லையா?” அன்பும் அக்கறையுமா கடிந்து கொண்டே, அவளையும் தாண்டி உள்ளே வந்திருந்தான்.

பெரும்பாலும் வெறுமையான வீடு, தேவைக்கு சில பொருட்கள் தாண்டி வேறு எதுவுமில்லை. வெறுமையான சுவர்கள் வெளிர் நிறத்தில் சோஃபா வேறு எந்தவித அலங்காகரமும் ஆடம்பரமும் இல்லை.

மனோகர் திரும்பிப்பார்க்க, கைக்கட்டிக்கொண்டு முறைத்தபடி நின்றிருந்தாள் ஷிவன்யா.

“இப்போ எதுக்கு நீ உள்ள வந்த?” என்பவளின் கேள்வியை தவிர்த்து, “உங்களுக்கு தான் அவ்வளவு பெரிய பேமலி இருக்கே பின்ன ஏங்க இப்படித் தனியா கிடந்து கஷ்டப்படுறீங்க?” என அவள் மனநிலையை அறிய முயன்றான்.

கேள்வியோடு அடுப்படிக்குள் நுழைந்தவன் கையோடு வாங்கி வந்திருந்த சிக்கனை கழுவி சமைக்கத் துவங்கி விட்டான் மனோகர்.

மனோவின் கேள்வியில் சட்டென தன் சொந்த பந்தங்களும் இல்லாது போன தந்தை, விட்டுச் சென்ற அன்னை என அனைவரின் கசந்த நினைவும் வந்தது. கண் முன்பே மனோகரும் நிற்க, ஏனோ மனம் இவனின் கள்ளமில்லா அன்போடு அனைவரையும் ஒப்பிட்டுப் பார்த்தது.

வெங்காயமும் தக்காளியும் பக்குவமாக நறுக்கிக்கொண்டிருந்தவன் ஒருபுறம் மசாலா பொருட்களையும் வறுக்கத் தொடங்கியிருந்தான். என்னவோ அவனுக்கு உரிமையான இடம் போலே வளைய வருபவனை கனிந்த கண்களோடு பார்த்திருந்தாள் ஷிவன்யா.

ஒரு தீவை போல அனைத்து பக்கமும் தன்னைச் சுற்றி வளைத்து சூழ்ந்து இருப்பவனை என்ன செய்வதென்றே தெரியவில்லை.எந்தப் பக்கம் திரும்பினாலும் நினைவும் நிஜமுமாக இவனே இருக்கிறான்.

“என்ன செய்ற மனோ?” நிதானமாக, “நாட்டுக்கோழி பிரியாணி, நீங்க சும்மா உக்காத்து வேடிக்கை மட்டும் பாருங்க மேம்” பதிலுரைத்தான்.

அலைபேசியில் காதல் பாடல் ஒன்றை ஒலிக்க விட்டு, ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டு வேலையை கவனிக்க, உணவு மேசையில் அமர்ந்தபடி அவனையே பார்த்திருந்தாள் ஷிவி.

தன் வீட்டிற்குள் நுழைந்தது மட்டுமின்றி, தனது சமையலறையிலும் இவன் வாசம்? அப்படி என்ன இவனுக்கு உரிமை? எத்தனை முறை விரட்டுகிறேன் ஏன் விட்டுச் செல்ல மறுக்கிறான்? அத்தனை சொந்தங்களும் தன்னை தனித்துவிட்ட போதும் மனோகர் மட்டும் விட்டுச்செல்லவில்லை. அதுவும் அவன் சுயமரியாதையையும் சுயத்தையும் தொலைத்து தன் பின் வரும் அளவிற்கு தான் என்ன அவனுக்கு அத்தனை முக்கியமா? இது என்ன மாதிரியான அன்பு? இப்படியே காலம் முழுக்க மாறாமல் இருக்க இயலுமா?

தன் கட்டுப்பாட்டையும் மீறி தன் மனம் அவனுக்கு இடம் கொடுப்பத்தை உணர்த்தே இருந்தாள்.

தன்னை துளைக்கும் ஷிவியின் பார்வையை உணர்ந்தே இருந்தான். சட்டென திரும்பிப் பார்க்க, அப்போதும் எந்தவித தடுமாற்றமும் சங்கடமும் இன்றி, நிமிர்வாகப் பார்த்திருந்தாள். சிறிதும் பார்வையை தாழ்த்தி மறைக்கவோ, திரும்பிக்கொள்ளவோ இல்லை.

சட்டென சமையல் வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு அவள் முன் வந்து மண்டியிட்டவன், “ஏங்க என்னைக் கல்யாணம் பண்ணிகிறீங்களா? காலம் முழுக்க உங்களுக்கு இதே மாதிரி சமைச்சிப் போட்டு நல்லா பார்த்துக்கிறேன்” கேலி கிண்டல் எதுவுமில்லாது உண்மையாகக் கேட்டு நின்றான்.

அதுவரை இருந்த இலகுநிலை மயமாக மறைய சட்டென விரல் நீட்டி எச்சரித்தபடி, “மனோ” அதட்டினாள்.

இன்னமும் மண்டியிட்டபடியே, “இரண்டு நாள் முன்ன நான் உங்ககிட்ட நடந்துகிட்டது தப்பு தான் ஆனால் நான் சொன்னது உண்மை தான், அதுல எந்த மாற்றமும் இல்லை, இப்போ உங்க பதில் தான் வேணும்” காதலோடு அவள் பதில் வேண்டி விழி பார்த்து நின்றவன் முன் உடைந்து போனாள்.

நேரடியான பதிலை தவிர்த்தவள், “விளையாடாத மனோ, இது தப்பு. நான் உன்னை விட வயசுல பெரிய பொண்ணு, இனி இந்த மாதிரி லூசுத்தனமா உளறாத” என்றும் மிரட்டினாள்.

“சரி கொஞ்ச நேரத்துக்கு பேசலை, என் மேல கோபமா தானே இருக்கீங்க? அப்படியே என் மேல கோபம் இருந்தாலும் என் மேல காட்டுங்க, ஏன் இப்படி உங்களை நீங்களே வருத்திக்கிறீங்க? உங்க மேல எந்த தப்புமில்லைங்க, உங்க மேல உங்களுக்கு எந்தவித கில்ட்டும் வேண்டாம் ப்ளீஸ். இப்படியே ஸ்டுடியோவுக்குப் போகாம, யாரையும் பார்க்காம வீட்டுக்குள்ளே அடைஞ்சி சாப்பிடாம உடம்பைக் கெடுத்து உங்களை கஷ்டப்படுத்திகிறீங்களே?” கேட்டவன் குரலே அத்தனை வலிகளையும் அவனே அனுபவித்தது போல் நைந்து வந்தது.

“உன் மேல எந்த தப்பும் இல்லை மனோ” என்றவளின் விழியோரம் கலங்கியது. அவள் முகத்தையே இமைக்காது பார்த்திருந்தவனுக்கு இந்த சின்ன மாற்றமும் தெரியாமல் இல்லை.

“அப்போ உங்க மேல தான் தப்புன்னு நினைக்கிறீங்களா?” என்றதுமே கண்ணீர் ஊற்றெடுக்க, தலையாட்டினாள்.

அவன் சலனம் கொள்ளும் படியாக நடந்து கொண்டதாக எண்ணம். நேற்று அத்தை கூறிய வார்த்தை, அதே இரத்தமென அன்னையோடு ஒப்பிட்டுப் பேசியது என எல்லாம் சேர்ந்ததே இவளின் குற்றவுணர்வு.

“சரி இப்போ சாப்பிட வாங்க” என்றழைத்தபடியே பேச்சுவார்த்தை செல்லும் திசையை மாற்றியவன், சூடான பிரியாணியை தட்டில் நிறைத்து அவள் முன் வைத்தான்.

“சமைச்சுப் போடுறது எல்லாம் உங்க மேல உள்ள அக்கறை மட்டுமில்லை உங்களை இம்ப்ரஸ் செய்ய ட்ரை பண்றேனாக்கும்” என்றபடியே முகம் சிலுப்பியவன் வசீகரமாகச் சிரித்தான்.

உண்மையில் வசீகரிக்கிறான் தான், இன்றில்லை இவனின் பிரத்தேக அன்பைத் உணரத் தொடங்கிய போதில் இருந்தே. அதையும் வெளிக்காட்டாது மனதை கல்லென இறுக்கி வைத்திருக்கிறாள்.

ஷிவியோ தட்டையும் அவனையும் மாறி மாறிப் பார்க்க, “என்னங்க?” அக்கறையாக வினவியவன், “சும்மா சாப்பிடுங்க காய்ச்சல்ன்னா பிரியாணி சாப்பிடக் கூடாதுன்னு எல்லாம் இல்லைங்க, நல்லா வளைச்சு கட்டுங்க காய்ச்சல் எல்லாம் காணாம போயிடும்” என்றான்.

அப்போதும் அவள் அவனையே பார்த்து நிற்க, ஒரு கைப்பிடி அள்ளி ஊட்ட முயன்றான். மறுப்பேதும் இல்லாது வாங்கிக் கொண்டவளுக்கு கண்ணிரண்டும் கலங்கி குளமென கண்ணீர் தேங்கி நின்றது.

மெல்ல மென்றவளுக்கு தொண்டை தாண்டி உணவு இறங்க சிரமப்பட்டது. விவரம் அறிந்து தந்தைத்தவிர யாரும் ஊட்டியது எல்லாம் இல்லை. யாருக்கும் அந்த அளவிற்கு உரிமையும் இடமும் கொடுத்ததில்லை.

கலங்கிய விழிகளை கண்டுகொண்டவன், “ஏங்க நல்லாயில்லையா? காரமா இருக்கா? இல்லை ரசம் சோறு தான் வேணுமா?” கேட்டபடி இருக்கையில் இருந்து எழ, விம்மி வெடித்து தேம்பி அழுதாள் ஷிவன்யா.

அப்படியே அமர்ந்தவன், மென்மையாய் ஆறுதலாய் முதுகு தடவிக் கொடுக்கத் தொடங்கினான்.

அவள் கோபமுகம் மட்டுமே கண்டவன், அவளை சிரிக்க வைத்து பார்க்கும் ஆசை கொண்டவனால் புதிதான இந்த கண்ணீர் முகம் காண தாங்க முடியவில்லை.

என்ன நினைத்தாளோ பட்டென இவன் கரங்களை தட்டிவிட்டவள் எழுந்து அவளறை நோக்கி ஓடி விட, பின்னாலே மனோவும் ஓடினான்.

“வேண்டாம் மனோ நீ போயிடு, என்னை விட்டு மொத்தமா போயிடு” கத்தியவள் கதவடைக்க முயன்றாள்.

மனோவோ அவள் முயற்சியை முழு மொத்தமாக தடுக்க, கதவிடுக்கில் அவன் விரல் ஒன்று மாட்டிக்கொண்டது. ஷிவி கவனிக்கவில்லை, மனோ பொருட்படுத்தவில்லை, முயற்சியை தடுப்பது மட்டுமே இவனின் செயலாக இருந்தது.

“இவ்வளவு நேரம் நல்லாதான இருந்தீங்க இப்போ என்ன திடீர்னு?” மனோ கேட்டு நிற்க, “போயிடு, என்னை விட்டு போயிடு மனோ என் மூச்சுலையே முழிக்காத” விடாது இதையே அனற்றினாள்.

கதவிடுக்கில் மாட்டிய விரலில் இருந்து இரத்தம் கொட்டத் தொடங்கியிருந்தது.

“அப்படியெல்லாம் உன்னை விட்டுட்டு போக மாட்டேன். எப்பவும் போக மாட்டேன்” மனோவும் உறுதியாக உரைக்க, ஷிவியின் அழுகை மேலும் வெடித்துக் கொண்டு வெளியே வந்தது.

விழி மூடியபடியே கதவில் சரிந்து விம்மி அழுது கொண்டே அவனிடம் விவாதம் செய்து கொண்டிருந்தாள்.

“இல்லை இல்லை நான் நம்ப மாட்டேன், நான் உன்னைவிட வயசுல பெரியவா நீ என்னை விட்டுப் போயிடுவ” அவளையும் மீறி மனதிலிருப்பதை உளறியவள் தன் இயலாமை தாங்காது விம்மி வெடித்தபடி, “ஏன் மனோ எனக்கு முன்னாடியே இந்த உலகத்துல பொறக்காம போன?” ஏங்கி அழுதாள்.

மனோவால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை, வலி ஒருபுறம் ஷிவியின் அழுகை மறுபுறம் கதவை தள்ளிக்கொண்டு உள்ளே வந்தான்.

இவன் உள்ளே வர ஷிவி தரையில் மடிந்து அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.

அவள் அருகே தரையில் அமர்ந்தவன் அவளை அள்ளியெடுத்து நெஞ்சோடு சரித்து, தலை கோதினான்.

“என்னை ஏத்துக்கிறதுல உங்களுக்கு என்னங்க தடை? இந்த ஊர் உலகத்துக்காக யோசிக்கிறீங்களா? தேவையே இல்லைங்க. இதுநாள் வரையிலும் எப்படி உங்க விருப்பம் போல வாழ்ந்தீங்களோ அதே போலவே இருங்க, நம்மளை பேசுற இந்த சமூகம் நமக்கு ஒரு பிரச்சனைன்னா வந்து நிக்கிறப் போறது இல்லை, பின் ஏன் நீங்க இதைப் பத்தி எல்லாம் யோசிக்கணும்? பெரிய பொண்ணை கல்யாணம் செய்துக்க கூடாதுன்னு எந்தவித சட்டமும் இல்லை. இவ்வளவு ஏன் எங்க ஆச்சியே தாத்தாவை விட வயசுல பெரியவங்க தான். சொத்து, சொந்தம்னு கட்டி வைச்சிட்டாங்க, அதுக்குன்னு அவங்க நல்லா வாழாமலா போயிட்டாங்க? உண்மையை சொல்றதுன்னு அவங்களுக்குள்ள தான் அன்பும் அன்யோன்னியமும் காதலும் அவ்வளவு நிறைச்சு இருக்கு. இப்போ இதுக்கு இந்த அழுகை? என்னை நம்புங்க நாம நல்லா இருப்போம். வேற என்னங்க உங்க பிரச்சனை” கனிவாய் ஆறுதலுடன் வினவினான்.

இவனின் இந்த அன்பை ஏற்க முடியாது போன துர்பாக்கியசாலியான தன்னையே நோக நெஞ்சு வேந்தாள் ஷிவி.

“ஒருவேளை நான் சம்பாதிக்காதது தான் உன் பிரச்சனையா? கவலையே வேண்டாம், கலெக்டர் ஆகணுமா? கவர்மென்ட் வேலைக்குப் போகணுமா? பிஸ்னஸ் பண்ணனுமா? இல்லை ஊர்ல விவசாயம் பார்க்கணுமா? என்ன வேணும் சொல்லு, எல்லாம் என்னால முடியும்” என்றான் தைரியம் மிளிர. அசட்டையாக எல்லாம் கேட்டுவிடவில்லை. விளையாட்டுத்தனமாக சுற்றினாலும் அதற்கான தகுதியும் திறமையும் அவனிடம் உண்டு தான், அதை ஷிவியும் அறிவாள்.

பதிலின்றி மேலும் மேலும் அழுபவளை என்ன செய்து சாமதானம் செய்வதென்று தெரியாது வேதனையோடு தாங்கி அமர்ந்திருந்தான்.

“வேறு என்ன தான் உன் பிரச்சனை எதனாலும் சொல்லு ஷிவி” ஆற்றாமையுடன் கேட்க, “உன் வயசு தான்” என்றாள் மேலும் விம்மிய குரலில்.

மீண்டும் முதல் கோட்டில் இருந்தா? மனம் அலுப்புற, அவளை தன்னில் இருந்து விலக்கியவன், “நல்லா பாரு என்னை, நான் என்ன உனக்குத் தம்பி மாதிரியா இருக்கேன்? ஏஜ் எல்லாம் ஜெஸ்ட் நம்பர் மட்டும் தான்” புத்தியில் உறையும் படி உரைத்தான்.

அவனிடமிருந்து விலகிய நொடியே இத்தனை நேரமாக முகமூடி இல்லாத தன் மனத்தை தன் கட்டுப்பாடுகளை மீறியும் அவனிடம் காட்டிவிட்டது புத்தியில் நினைவில் வந்தது.

கண்ணீர் எல்லாம் கார்பரேஷன் தண்ணீர் போல் சட்டென நின்று போக, பழைய ஷிவன்யாவாக கல்லென விறைத்து நின்றாள்.

அதற்குள்ளாக அவன் கட்டளைக்கு இசைந்த இவள் காந்த விழிகள் அவனை முழுவதுமாக தழுவிப் படித்தது.

உரமேறிய தேகமும் தினவெடுத்த தோள்களும் விரிந்த மார்பும் நிச்சியம் இவன் சிறுவனும் இல்லை பழைய மனோகரும் இல்லை என சொல்லிக்காட்டியது.

பார்வை கீழிறங்க, அவன் இடது கை விரலில் கொட்டும் குருதியை கண்டு கொண்டாள்.

பதறியவள் வெளிக்காட்டிக் கொள்ளாது நிதானமாக பஞ்சும் மருந்தும் எடுத்து வந்தாள். அவன் கரங்களைப் பிடித்துக் கொண்டு, “உனக்கு இது தேவை தானா? என் பின்ன வந்தா இப்படிதான் வேதனைப்பட வேண்டியிருக்கும். அப்படியொரு ராசி எனக்கு ஒழுங்கா என்னை விட்டுப் போயிடு” பழைய கம்பீரக் குரலில் மிரட்டலாக உரைத்தாள்.

வார்த்தைகளில் இருக்கும் கனல் அவள் ஸ்பரிசத்தில் இல்லை என்பதை மனோவால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

அவள் சொல்லில் காட்டாத பாசத்தை செயலில் நன்கு உணர்ந்தான். அவளை இமைக்கா விழிகளோடு பார்த்திருக்க, நெருங்கி நிற்கும் அவள் விழிகளோ அவன் கரத்தில்.

சிவந்த முகம், கூர் நாசி, அதை விடவும் அடங்காத திமிர் கொட்டிக்கிடக்கும் அலட்சியத்தை வெளிக்காட்டும் கருவிழிகள். அதற்குள் கள்ளமாக ஒளிந்து ஏங்கிக் கிடக்கும் காதல் அனைத்தையும் கண்டவன் கட்டுபாட்டை உடைத்தான்.

சட்டென ஷிவியே எதிர்பாராத நேரம் இடை வளைத்தவன், கட்டியணைத்து கன்னம், மூக்கு, நுதல், இதழென முகம் மொத்தமும் ஈரம் படர இதழ் பதித்து முத்தமிட்டான்.

அள்ளவோ தள்ளவோ இன்றி கல்லென நின்றிருந்தவள் இதழோடு இதழ் பதித்த நொடி இனிப்பாக இளகிப் போனாள். நொடி நேரத்தில் அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளியவள், முகத்திற்கு நேராக விரல் நீட்டி எச்சரித்தாள்.

“என்ன நினைச்ச நீ? ஒருதடவை விட்டுட்டேன்னு அட்வான்டேஜ் எடுத்துக்க நினைக்காத கொன்னுடுவேன். தனியா இருக்கா, இவ்வளவு நேரம் உன்னோட இருந்தவ தானேன்னு எதுவும் ஈஸியா நினைச்ச தொலைச்சிடுவேன்” சீறினாள்.

மனோகரோ பொங்கிய சிரிப்போடு குலுங்கி குலுங்கிச் சிரித்தான். சிரித்தபடியே, “அப்படி நினைச்சிருந்தா எத்தனையோ முறை எனக்கு வாய்ப்பு கிடைச்சும் செய்திருக்க மாட்டேனா?” அவளிடமே வினவினான்.

மனோ அப்படியில்லை என இவளும் அறிவாள் தான், ஆனாலும் ஒரு பழி சொல்லியாவது இவனை தன்னிடம் இருந்து விரட்டிவிட வேண்டும் என்ற எண்ணம்.

முன் நெற்றி முடிகளை காதோரம் விலக்கிவிட்டவன் பட்டுக்கன்னத்தில் மென்மையாக வருடியபடியே, “அப்புறம் நான் இப்படி நடந்துக்கிட்டதுக்கு நீங்க தான் காரணம்னு உனக்கு எந்தவித குற்றவுணர்ச்சியும் வேண்டாம். நீங்க என்னை சலனப்படுத்தலை இம்ரேஸ் தான் செய்தீங்க, பிரமிச்சு பார்க்க வைச்சீங்க” என்றான் ஆழ்ந்த மென்குரலில்.

நெருக்கத்தில் நிற்பவனின் கரத்தினை விலக்கிவிட்டவள், “இன்னும் நெருக்கத்துல வர வர இந்த பிரமிப்பு போயிடும் மனோ” என்றாள் ஏளனச் சிரிப்புடன்.

“இல்லைங்க நிச்சியம் இல்லை. நாளும் எனக்கு நீங்க புதுசா தான் தெரியுறீங்க, அதை விட நெருக்கம் கூடி வர அன்பும் காதலும் இன்னும் கூடும் நீங்க அதை அனுபவிக்கும் போது தெரிஞ்சிப்பிங்க” என்றான் காந்த குரலில் கரையும் கற்கண்டாக.

கை கட்டிக்கொண்டு கண்ணோடு கண் பார்த்தவள், “ம்கூம், எத்தனை நாளைக்கு. நான் இளமையா இருக்கிற வரைக்கும் தானே? எனக்கு வயசாகும் போது நீ என்னை விட்டுட்டுப் போயிடுவ” என்றாள் குத்தலாக.

சுளீரென கசையடி கொண்டதைப் போல் முகம் வாடியவன், “உங்கம்மா உங்கப்பாவை விட்டுட்டுப் போன மாதிரி நான் இருக்க மாட்டேன்” பட்டென வார்த்தையை விட்டான்.