காதலும் அவளை காணும் ஆசையும் புதுவெள்ளமாகப் பொங்கி வழிய, உற்சாகமாக ஸ்டுடியோவிற்குள் நுழைந்தான் மனோகர். அனைவரும் இருக்க, அவ்விடம் முழுவதும் சுற்றி வந்துவிட்ட, மனோவின் கழுகுக் கண்களுக்கு காதலி காட்சியாகவில்லை.
மெல்லச் சென்று மாதவியிடம் விசாரித்துப் பார்க்க, ஷிவி அன்று விடுமுறை என்ற சேதியை தவிர, வேறு எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. அன்றைய நாள் முழுவதும் அவளைக் காணாது அவன் வாங்கி வந்த பூக்களைப் போல் அவன் உள்ளமும் வாடிப் போனான்.
தொடர்ந்த சில நாட்களுக்கு இதுவே தொடர்கதையாக அவள் தன்னைத் தவிர்க்கிறாள் என்பது முகத்தில் அறைந்தது போன்று புத்தியில் சுளீரென உரைத்தது.
ஸ்டுயோவிற்கு வராமல் இருந்தாலும் அனைத்தையும் ஷிவன்யா அவள் கைப்பிடிக்குள் தான் வைத்திருந்தாள். மனோவிற்கான வேலைப்பளு சிறிதும் குறையவில்லை.
இப்படி கண்ணில் படாமல் முற்றிலும் தன்னை தவிர்ப்பதை மனோவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இரண்டே நாளில் இளைத்துப் போனான். என்னவோ வாழ்க்கையையே இழந்தவனைப் போல் வாடிப்போய் கிடந்தான். அவ்வப்போது வீட்டில் கூட சிடுசிடுப்பு முகம் காட்ட, அனைத்தும் கவனித்திருந்தான் தர்ஷனுக்கு மனம் தாங்கவில்லை.
ஷிவன்யாவின் மீது மனோகர் காட்டும் ஆர்வம் தர்ஷன் அறிந்தது தான். ஆனால் மலருக்கும் தனுவுக்கும் இப்போது தான் சந்தேகம் உதித்திருக்க, தர்ஷனை நச்சரித்துக் கொண்டிருந்தனர்.
இரவு இருள் வானில் இல்லாத நிலவை தேடியபடி வெறுமையான உணர்வில் உலாவிக் கொண்டிருந்தான் மனோகர்.
எப்போதும் குழந்தையை போலே எதை பற்றிய கவலையும் இன்றி உற்சாகத் துள்ளலோடு வலம் வருபவன் தனிமையில் மௌனமாக இருப்பதே புதிதாக இருந்தது.
அருகே வந்தமரந்த தர்ஷன், “ஏன்டா இப்படியிருக்க? என்ன தான் வேணும் உனக்கு?” அன்புடன் விசாரித்தான். ஒரு நொடி மௌனமாக இறுகி நின்ற மனோகர் பின் மெல்லிய குரலில், “ஷிவியைப் பார்க்கணும் அவ வீட்டுக்குப் போயிட்டு வருவோம் வா” என்றழைத்தான்.
அர்த்தராத்திரியில் அழைக்க தர்ஷனுக்கு மூக்கு விடைத்துக்கொண்டு சுளீரென கோபம் வந்தது.
“நிஜமாவே அவளை லவ் பண்றியா மனோ? ஏன்டா நீ என்ன லூசா? உங்களுக்குள்ள எப்படி செட் ஆகும்? அவ உன்னை விட பெரிய பொண்ணுடா!”
“அதனால என்ன இப்போ? ஏன் நம்ம தாத்தாவே வயசுல பெரியவளான சிவகாமியை ஆச்சியை கல்யாணம் பண்ணிக்கலையா? பிள்ளை, பேரப்பிள்ளைகள் வரைக்கும் பார்த்து கடைசி வரைக்கும் அன்னியோன்யமா வாழலலையா?”
“மனோ அது நம்ம வீட்டுல வேறடா. தாத்தாவும் ஆச்சியும் சொந்தம். உறவு வேணும் சொத்து வேணும்னு அந்தக்காலத்துல பெருசுங்க செஞ்சி வைச்சிட்டாங்க. ஆனால் உன் விஷயத்துல இது சரியா வருமா? ஷிவி வேற இல்லையா?”
“என்ன வேற? நாங்களும் எல்லா தம்பதிங்களை மாதிரி நார்மலா இருப்போம்டா. வயசு எல்லாம் வெறும் நம்பர் மட்டும் தான்டா, மனசுக்கு அதெல்லாம் தெரியாது. அது மட்டுமில்லாம எனக்கே இது பெரிய விஷயமா தெரியாத போது ஊர் பேசுறதைப் பத்தி நான் ஏன் யோசிக்கணும்?”
“உனக்கு இது பெரிய விஷயமா இல்லாம இருக்கலாம். ஆனால் ஷிவிக்கு இது ரொம்ப பெரிய விஷயம்! அவ இதை ஒத்துக்கவே மாட்டா”
“மனோ இது ரொம்ப தப்புடா.. ஒரு பெண்ணை ஹராஸ் பண்ற, பிடிக்கலைன்னா விட்டுடணும் கம்பெல் பண்ணைக்கூடாது“
“அவதான் பிடிக்கலைன்னு சொல்லையே?”
“பிடிக்கும்னுசொல்லையே?”
“சொல்லுவா சொல்ல வைக்கிறேன்”
“இங்க பார், உன்னால அவ ஏதாவது கஷ்டப்படுறான்னு தெரிய வந்தது மச்சான்னு கூட பார்க்க மாட்டேன், மாமவுக்கட்டு போட்டு விட்டுடுவேன் ஜாக்கிரதை” தர்ஷன் நேரடியாக மிரட்டினான் தோழிக்கு நல்ல நண்பனாக.
கொலை வெறியில் மனோ முறைக்க, “நிஜமா தான் லவ் பண்றீயா? இது எதுவும் விளையாட்டு இல்லையே?” நம்ம இயலாது மீண்டும் மீண்டும் தர்ஷன் கேட்டு வைத்தான்.
விளையாட்டுப் போலே பேசிச் சென்றாலும் மனோகரின் உறுதி தர்ஷனுக்கு நன்கு புரிய, உள்ளுக்குள்ளே சொல்ல முடியாத கலக்கம்.
ஷிவி தன்னை தவிர்க்கவே ஸ்டுடியோ வருவதில்லை என்னும் தன் கணிப்பு சரிதான என்பதைச் சோதிக்க, மனோகரும் ஸ்டுடியோ செல்லாமல் இருந்தான்.
அவன் எண்ணம் போல சரியாக இரண்டாம் நாள் ஷிவன்யா அங்கே வந்திருக்கும் தகவல் அறிய, புயலென கிளம்பினான்.
மனோகர் ஸ்டுடியோவிற்குள் நுழையும் போதே ஒரே இரைச்சலும் கூச்சலுமாக தான் இருந்தது. என்னவோ ஏதோ என பதறிய நிலையில் உள்ளே விரைத்தான். ஷிவி நடுக்கூடத்தில் நின்று கொண்டிருக்கு அவளுக்கு எதிரே ஒரு பெண்மணியும் உடன் ஒரு இளைஞனும் நின்று கத்திக்கொண்டிருந்தனர்.
இருவருக்கும் இடையில் இருக்கும் மேசையில் பிரபலமான வார இதழ் ஒன்று விரிந்து கிடக்க, அதில் ஆதித்யாவின் புதிய காதலி என்ற தலைப்பிற்கு கீழ் ஷிவியும் ஆதித்யாவும் இருக்கும் புகைப்படமும் உடன் செய்தியும் அச்சிடப்பட்டிருந்தது.
“என்னவோ என் மகனை கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு சொன்னீயே இதுக்குத்தானா? இப்படி ஒழுக்கம் கெட்டு பெயர் கெட்டு வாழ்றதுக்குத்தான் தனியா வந்தியா? இது என்னடி கல்யாணம் பண்ணிக்காம இப்படி அப்படின்னு எவன் கூடியோ வாழ்ற? அதுவும் சினிமால நடிக்கிறவன் கூட எல்லாம் பழக்கம் வைச்சிக்கிட்டா ஏமாத்திட்டு தான் போவான் பார்த்துக்கோ”
அடிவயிற்றில் இருந்து பெருங்குரல் எடுத்து ஷிவியை தரக்குறைவாக கத்திக் கொண்டிருந்தார்.
“அதனால தான் அவனைப் பிடிச்சு தொங்கிட்டு இருக்காம்மா. கொஞ்ச நாள் பழக்கம் போதும்னு தான் அவனோட ரிலேஷன்ஷிப்ல இருக்கா, அப்படியில்லைன்னா ஊரறிய முறையா கல்யாணம் பண்ணில வாழ்ந்திருப்பாங்க? இவளுக்கு எல்லாம் இப்படிப்பட்டவன் தான் வேணும் போல இருக்கு. ஒருத்தனோட காலம் முழுக்க வாழ முடியாதே? இவளைச் சொல்லித் தப்பில்லை, என்னயிருந்தாலும் இவ உடம்புல ஓடுற இரத்தம் அப்படி” அந்த பெண்மணியின் இளைய மகனும் ஷிவியை இளக்காரமாக இகழ்ந்து கொண்டிருந்தான்.
எதுவும் பேசாது இறுகிய கல்லைப் போலே சிலையாக நின்றிருந்தவள் தலை கவிழ, பார்வை தரை நோக்கியிருந்தது.
பார்த்திருந்த மனோகருக்கு நரம்புகள் அனைத்தும் முறுக்கிக்கொண்டு புடைத்தது. யாரை யாருடன் சேர்த்துப் பேசுவது? என்ன தைரியம் இவர்களுக்கு? உள்ளம் கொதிக்க நேரடியாக ஷிவியை பார்த்து முறைத்தான்.
இவள் ஏன் மறுத்து எதுவும் பேசாது ஜடமாக நிற்கிறாள். இவளை இவர்களுக்கு என்ன உரிமை? இவள் ஏன் இவ்வளவு இடம் கொடுக்கிறாள்? ஷிவியின் மீதும் கட்டுப்பாடு இல்லாத ஆத்திரம் பெருகி வர, விறுவிறுவென முன்னே விரைத்தவனின் கரம் பற்றித் தடுத்தார் மாதவி.
“அது அவங்க குடும்ப விஷயம் நீ உள்ளப் போகதா மனோ” மெல்லிய குரலில் அறிவுரை கூற, ஒரு நொடி நிதானித்தான் மனோகர்.
மனோகரின் விழிகள் வந்தவர்களை எடை போட்டுக்கொண்டிருக்க, அவர்களோ சுற்றியிருக்கும் யாரையும் கண்டுகொள்வதாக இல்லை. அதைவிடவும் அனைவரும் வேலையாட்கள் என்ற ஏளனம் தான் அவர்களின் உடல்மொழியிலும் உச்சரிக்கும் தொனியிலும் வெளிப்பட்டது.
“அடுத்த மூகூர்த்தம் பார்த்து என் மூத்த மகன் அசோக்குக்கும் உனக்கும் கல்யாண ஏற்பாடு செய்து வைக்கிறேன். கூட்டிட்டிப் போக கிஷோர் வருவான் ஒழுங்கு மரியாதையா வீட்டுக்கு வந்து சேர். அப்படியில்லாம இப்படி ஒழுங்ககெட்டு வாழ்ந்து உங்கப்பன் பெயரைக் கெடுக்காத” இறுதியாக எச்சரித்துவிட்டு இருவரும் கிளம்பிவிட்டனர்.
அவர்கள் சென்ற மறுநொடியே தனது கைப்பையை எடுத்துக்கொண்டு ஷிவியும் கிளம்பிவிட்டாள். மனோகரின் இருப்பு தெரிந்த போதும் அவனை ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளவில்லை.
“யார் இவங்க?” மனம் தாங்காது மாதவியிடம் விசாரித்தான் மனோகர்.
“ஷிவியோட ரெலேடிவ், அந்த பையன் இரண்டு மூனு முறை வந்திருக்கான். இந்தம்மாவை இன்னைக்குத்தான் பார்க்குறேன்” என்றார் மாதவி. இதற்கு மேல் அங்கிருக்கும் யாருக்கும் எதுவும் தெரிந்திருக்கவில்லை.
ஸ்டுடியோவை விட்டு வெளியே வந்தவன் தர்ஷனின் எண்ணிற்கு அழைத்தான். வேலை நேரத்தில் தொந்தரவு செய்யவே சற்று கடுகடுப்போடு, “டேய் நீ லீவ் போட்டு வீட்டுல வெட்டியா இருக்கே நான் என் வேலையைப் பார்க்க வேண்டாமா?” கத்தினான்.
“எனக்கு கோவைல இருக்கிற ஷிவியோடு அப்பா வீட்டு அட்ரெஸ் மட்டும் சொல்லிட்டு நீ உன் வேலையைப் பார், நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணலை” இலகுவாக மனோகர் கேட்க, “என்ன?” ஒரு நொடி அதிர்ந்து கேட்டான் தர்ஷன்.
“இப்போது எதுக்கு அவங்க அட்ரெஸ் எல்லாம் உனக்கு?” தர்ஷன் எகிற வர,
ஆடிப் போன தர்ஷன், “டேய் விளையாடாத ஒழுங்கா உண்மையைச் சொல்லு” அதட்டினான்.
“ஒன்னுமில்லை ஒரு கொரியர் அனுப்பச் சொல்லிட்டு மேடம் கிளம்பி போயிட்டாங்க, அட்ரெஸ் சொல்லலை அதான் கேட்டேன்” வெகு இலகுவாக நம்பும்படியாக பேசிய போதும்தர்ஷன் உஷாராகவே இருந்தான்.
“பட் நீ தான் இன்னைக்கு லீவுல இருக்கியே அப்புறம் ஏன் ஸ்டுடியோவுக்குப் போன?” குறுக்கு விசாரணையில் இருக்க, “நான் வேலைக்கு வந்துட்டேன், என்னை விசாரிக்கிறது தான் உன் வேலையா? உனக்கு வேற வேலை இல்லையா?” மனோ கேட்க, அப்போதே தன் அலுவலக வேலை நினைவில் வந்தது தர்ஷனுக்கு.
அழைப்பைத் துண்டித்தவன், ஷிவியின் வீட்டு முகவரியை அனுப்பிவிட்டு, வேலையைக் கவனிக்கச் சென்றான்.
பத்து மணி நேரப் பயணத்தில் கோவையில் அடியெடுத்து வைத்திருந்தான் மனோகர். தர்ஷன் அனுப்பிய முகவரியை கொண்டு நேராக அவள் வீட்டிற்கே சென்று நின்றான்.
அப்போது தான் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்குள் நுழையும் அசோக், தன் பின்னோடு வந்து நிற்கும் புதியவனை கவனித்துவிட்டு, “யார் நீங்க என்ன வேணும்?” என விசாரித்து நின்றான்.
“அப்பா” என்ற குரலோடு வீட்டிற்குள் இருந்து இரு சிறுமிகள் ஓடி வர, அவர்களுக்கு வாங்கி வந்த பொருளை கொடுத்து அனுப்பி விட்டு, மனோகரைப் பார்த்து திரும்பி நின்றான் அசோக்.
“இது உங்க குழந்தையா?” என்க, தலையசைத்த அசோக், மீண்டும் மனோகரை விசாரித்தான்.
ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையையாக இருப்பவனை தான் ஷிவியை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி மிரட்டுகிறார்களா? நினைக்க நினைக்க அதிர்ச்சியுடன் ஆத்திரம் பொங்கியது.
“சொல்றேன், எங்க உங்கம்மா?” கத்திக்கொண்டே அசோக்கையும் தாண்டி நடுவீட்டிற்குள் வந்திருந்தான் மனோகர்.
அவன் குரலுக்கு வீட்டில் இருந்த அனைவரும் கூடியிருந்தனர்.
“யாரப்பா நீ?” ஷிவியின் சித்தி கேட்க, கிஷோர் சரியாக மனோவை கண்டுகொண்டான்.
சற்று முன் தான் பார்த்து வந்திருக்க, தங்கள் பின்னே இவன் வந்து நிற்கும் வேகம் கொஞ்சம் மிரளச் செய்தது.
“ஏய் நீ ஷிவி ஸ்டூடியோல வேலை பார்க்குறவன் தானே?” விரல் நீட்டி சொடுக்கிட்டு கேட்க, “வேலைக்காரன் இல்லை வீட்டுக்காரன்” என்றபடியே கிஷோரின் கைகளை முறுக்கினான் மனோ.
ஷிவியின் சித்தி, அத்தைகள், கிஷோரின் மனைவி என அனைவரும் வியந்து வாய் பிளந்தனர்.
அசோக்கின் அன்னை முந்திக்கொண்டு முன்னே வர, “நீ யாரு புதுசா? அவளுக்கு அந்த ஆதி மட்டும் போதாதாமா?” என்று வார்த்தையை விட, அருகே இருந்த பூ ஜாடியை தூக்கி தரையில் எறிந்தான் மனோகர்.
இவ்வளவு ஆத்திரம் வேகம் சற்றும் எதிர்பார்க்காதவர் அரண்டு விழித்தபடி, கிஷோரின் பின் சென்று மறைந்து கொண்டார்.
“ஷிவியை நான் தான் கல்யாணம் செய்துக்க போறேன். இரண்டாம் தாரமா உங்க மகனுக்கு கட்டி வைக்க நினைக்கிற உங்களுக்கு எல்லாம் அவ ஒழுக்கத்தைப் பத்தி பேச எந்த உரிமையுமில்லை. இனிமே ஷிவியை பத்தி ஒரு வார்த்தை தப்பா பேசுனீங்க தொலைச்சிடுவேன்” விரல் நீட்டி எச்சரித்தான்.
“நீ யார்டா எங்க வீட்டுல வந்து எங்களையே மிரட்ட?” முறுக்கிக்கொண்டு குரல் கொடுத்த கிஷோர் முன்னே வர பயத்தில் பாய விடாது தடுத்துப் பிடித்துக் கொண்டான் அசோக்.
“எது உங்க வீடா? என்ன மறந்துடுச்சா இது ஷிவியோட வீடு. இரண்டு நாள் தான் உங்களுக்கு டைம் ஒழுங்கா எல்லாரும் வீட்டை விட்டு வெளியே போங்க, அது மட்டுமில்லை இது நாள் வரைக்கும் ஷிவியோடு சொத்துல நீங்க செலவு செய்தது எல்லாம் வட்டியும் முதலுமா கொடுத்துட்டுப் போங்க, இல்லை இனி நான் வர மாட்டேன் போலீஸ் தான் வருவாங்க” என்றும் மிரட்டினான்.
சொன்னதை செய்திடுவான் என்பதை அவன் மிரட்டலின் தொனியே சொல்லிச் செல்ல, அடங்கிப் போயினர் அனைவரும்.
“போதுமா இப்போ சந்தோஷமா உங்களுக்கு? சும்மா இருந்தாலும் இந்த சொத்து சுகத்தை அனுபவித்துட்டு இருந்திருக்கலாம். நீங்க போய் சீண்டாமா இருந்திருந்தால் அவளும் இந்த பக்கமே வராம இருந்திருப்பாள். இப்போ பாருங்க நம்மளை நடுத் தெருவுல நிக்க வைச்சிட்டுடா, மொத்தமா போச்சு” புலம்பினார் சித்தி.
“என்ன காரியம்மா செய்திருக்கீங்க? நான் கேட்டேனா கல்யாணம் வேணும்னு? காலம் போன காலத்துல எனக்கு இதுக்கு மேல எனக்கு கல்யாணம் தேவையா? என் பிள்ளைகளே போதும்” அசோக்கும் அவன் அன்னையை கரித்தான்.
“ஆமாம்டி உன் பேராசை தான் இப்போ மொத்தமா குடியே கெட்டுப்போச்சு” பெரிய அத்தையும் சித்திக்கு இசைவாகப் பேசிக்கொண்டு தனது தங்கையை திட்டினார். அசோக்கின் அன்னையால் எதுவுமே பேச முடியவில்லை, வாயடைத்துப் போனார்.