அத்தியாயம் 14

மனோகரின் கோபம் ஆத்திரம் எல்லாம் கையில் இருக்கும் ஸ்டேரிங்கில் காட்டினான்.

அத்தனை வேகம், அலுங்கி குலுங்கிய போதும், அசராது அழுத்தமுடன் அமர்ந்திருந்தாள் ஷிவி.

‘கொஞ்சமும் பயமில்லை’ மனத்தில் நினைத்தவன் உஷ்ணப் பெருமூச்சு விட்டான்.

இவன் பக்கம் அவள் பார்வை கூடத் திரும்பவில்லை. அவள் அலட்சியம் மனோவை மேலும் மேலும் சீண்டிப் பார்த்தது.

அவன் கோபம் அனைத்தையும் அவன் கரங்களில் இருக்கும் வாகனத்தில் காட்ட, தறிக்கெட்டு ஓடி வந்த கார், கடற்கரை ஓரமாக நின்றது.

நள்ளிரவைத் தாண்டிவிட்ட நேரம். இருள் சூழ்ந்த இரவு வானில் முழு மதி பூரண ஆட்சி செய்து கொண்டிருக்க, விளக்குகள் இல்லாத இடத்திலும் கொஞ்சம் வெளிச்சம் இருந்தது.

கடல் அலைகளின் ஆக்ரோஷமும் அதிகமாக இருக்க, மேனி தீண்டிய உப்புக் காற்றாலும் உஷ்ணத்தைக் குளிர்விக்க முடியவில்லை.

ஷிவியின் பக்க கதவை திறந்து விட்டவன், “வெளியே வாங்க,கொஞ்சம் பேசணும்” ஒருவித முடிவோடு அழைத்தது அவன் குரல்.

ஷிவியோ இன்னும் வாகாக அழுத்தமுடன் சாய்ந்து அமர்ந்து கொள்ள, பற்களைக் கடித்தவன், “இப்போ நீங்க வெளியே வரலையோ கார்லாக் செய்திடுவேன்” எனக் கையில் இருக்கும் கார் சாவியை முன்னாள் நீட்டியபடி மிரட்டினான்.

தன் இயலாமையை வைத்து மிரட்டுகிறான் என்ற போதும் ஷிவி கொஞ்சமும் அசரவில்லை.

‘இவ்வளவு தானா நீ’ அற்பமாக ஒரு பார்வை பார்த்தவள் அழுத்தமுடன் அசையாது அமர்ந்திருந்தாள்.

ருத்திர தாண்டவத்தில் இருப்பவனுக்கு இவள் செயல் உடுக்கை அடிப்பதை போன்று மேலும் ஸ்ருதி சேர்த்தது. பொறுமை மொத்தத்தையும் உடைத்து எரிந்தவன், அவள் கரம் பற்றி வெளியே இழுத்து, தன் முன்னே நிற்க வைத்தான்.

இவள் அசைய மறுத்த போதும், அவன் கை வலிமை, பிடியின் இறுக்கம் எளிதாக இவளை இழுத்தது.

பலமுடன் தன் கையையே அவனிடம் இருந்து உருவியவள், “வாட் டூயூ வாட்?” வார்த்தைகளைக் கடித்து துப்பினாள்.

“யாருக்கு அவன் ஆதித்யா வர்மா ஷவர்மா குருமான்னு? நீங்க அவனோட பேசுறதே பிடிக்கலை. நீங்க அவனோட பேசவோ, பழகவோ கூடாது. இனி அவனைப் பார்க்க கூட கூடாது” அதிகாரமாக தன் தேவையையும் மனநிலையையும் உரைத்தான்.

ஷிவன்யாவிற்கு கழுத்து நரம்பில் இருந்து நெற்றி நரம்பு வரைக்கும் புடைத்து எழ, இரத்தம் சூடேறியது.

மனோ முற்றிலும் நிதான நிலையிலே இல்லை. ஷிவியின் நிதானம் மெல்ல கரைத்து கொண்டிருந்தது.

கரங்களை மார்புக்கு குறுக்காக கட்டி இருந்தவள், எதிரே இருப்பவனின் முகம் பார்த்து முறைத்தபடி, “நீ யார்டா அதைச் சொல்ல?” மென் குரலில் அழுத்தமுடன் கேட்டாள்.

“இனி நான் தான் தாங்க உங்களுக்கு எல்லாம். நான் சொல்லுவேன்” என்றான் உரிமையாக.

இவள் ஒரு வார்த்தை உளியாகப் பாய்ந்து வந்து உள்ளத்தை உடைத்து விட, இது வரையிலும் அணைகட்டி அடைத்து வைத்திருந்த அவன் காதல் விடுதலை பெற்று வெளி வந்தது.

இந்த வார்த்தையில் உள்ளுக்குள் சற்றே ஆடிப் போனாள். ஆனாலும் சிறிதும் வெளிக்காட்டிக் கொள்ளாது மறைத்தாள்.

“மனோகர்..” அழுத்தமும் அதிகாரமுமாக இவள் கண்டிக்க, “யெஸ் ஐ லவ் யூ, மிச்சமிருக்கிற உங்க வாழ்க்கை மொத்தமும் நான் மட்டுமே நிறைச்சி இருக்கணும்னு நினைக்கிறேன்” பட்டென போட்டு உடைத்தான்.

அடி வயிற்றில் இருந்து ஆத்திரம் பொங்கி வந்தது, “மனோ, யூ ஆர் க்ராஸிங் யுவர் லிமிட்” விரல் நீட்டி எச்சரித்தாள்.

அலட்சியமாக விரல்களை தட்டிவிட்டவன், சட்டென இடை பற்றி இழுத்து அணைத்து, இதழோடு இதழ் பதித்து அழுத்தினான்.

அவள் பலமோடு இதழ்களைச் சுருட்டிக்கொள்ள, வன்மையாக முற்றுகையிட்டு முத்தாடினான். திடீர் செயலில் ஷிவி ஒரு நொடி தடுமாறிப் போக, நெஞ்சு படபடவென அடித்து மூச்சு காற்றுக் திண்டாடினாள்.

நிதானமாக நின்றிருந்த மனோகர், நெருக்கத்தில் நின்றபடியே, “உங்ககிட்ட எனக்கு எல்லையே இல்லைங்க” உரிமையாக உரைத்தான்.

அவனிட்ட இதழ் அணைப்பின் ஈரத்தில் எந்த வித மாற்றமும் இல்லாதவள், பழையபடி விறைத்து நின்றாள்.

மனோவின் நெஞ்சில் கை வைத்து, தன்னில் இருந்து தள்ளியவள், பளாரென இடது கன்னத்தில் அறைந்தாள். ஐந்து விரல்களும் நிச்சியம் அச்சாக பதிந்து போயிருக்கும்.

இவன் அடாவடியும் அத்துமீறலும் ஷிவன்யாவை குமுறும் எரிமலை ஆக்கியிருந்தது.

மணல் பரப்பில் நிலையில்லாது தள்ளாடி, தடுமாறியவன், அவள் காரைப் பற்றிக் கொண்டு நிலையாக நின்றான்.

“கொன்னுடுவேன்” விரல் நீட்டி எச்சரித்தவள், விறுவிறுவென சுற்றி வந்து ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து காரை இயக்கினாள்.

வேண்டாதப் பொருளை வீசியதைப் போல மனோவை விட்டுவிட்டு, மின்னல் வேகத்தில் சென்றிருந்தாள்.

மனோவிற்கு தவறு செய்த உணர்வே இல்லை. அதை விடவும் அடைத்து வைத்திருந்த பாரம் இறங்கியதைப் போல் இலகுவானது இதயம்.

என்றாவது ஒருநாள் சொல்லியிருப்பான் தான், ஆனால் அதை இன்று இப்படியொரு சூழலில் சொன்னது இவனை மீறி நிகழ்ந்து விட்டது.

அவள் மறுப்பெல்லாம் ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. அவள் மீதான காதல் ஆசை, வேட்கை, வெறி மேலும் மேலும் அவனுள் தீவிரமடைந்தது.

மணல் பரப்பில் பொத்தென அமர்ந்தவன், அலையோடு உறவாடும் பூரண சந்திரனை புன்னகையோடு நோக்கினான்.

அவள் பால்முகமே பளிச்சென்று கண் முன் வர, அடித்ததை எல்லாம் மறந்தே போனான். அவள் அதரங்களின் தித்திப்புமும் மென்மையையும் நினைத்து நினைத்து ரசித்து சுவைத்தான்.

எவ்வளவு விரட்டினாலும் அவளை விட்டுச் செல்ல ஏனோ முடியவில்லை. அவளிடம் தன்மானம் தொலைப்பது, கர்வமிழந்து கவிழ்ந்து கிடப்பது கூட ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. அவளைச் சுற்றியே வரும் எண்ணத்திற்கும் செயலுக்கும் காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் அவளை தான் வாழ்நாள் முழுவதும் தன்னோடு பிணைத்து வைத்துக் கொள்ள வேண்டுமென்று தோன்றும் உணர்விற்கு காதலென இப்போது பெயர் வைத்தான்.

மறுநாள் காலையில் நேரத்திற்கு எழுந்து விட்டான் மனோ. வேலைக்குச் செல்லும் எண்ணம் இல்லை, ஷிவியை பார்க்கும் எண்ணமே முந்திக்கொண்டு உதிக்க, உற்சாகமாக கிளம்பினான்.

உடை அலமாரியை மொத்தமாக தலைகீழாக புரட்டிப் போட்டு,

இருப்பதிலே நல்ல உடையை பார்த்துப் பார்த்து தேடி எடுத்தவன், இஸ்திரி செய்து கொண்டிருந்தான்.

“நடை உடைகள் பாவனை மாற்றி வைத்தாள், நான் பேசிட வார்த்தைகள் நீ கொடுத்தாய்”

ஸ்பாட்டிபை வழியாக காதலில் உருகி வழிந்து கொண்டிருந்த யுவனின் இசையோடு இவனும் உல்லாசமாக விசில் அடித்து, பாடிக்கொண்டே வேலையைப் பார்த்தான்.

அப்போது தான் எழுந்திருந்தான் தர்ஷன். குளியறையில் இருந்து வெளியே வந்தவன், “என்னதிது இன்னைக்கு எதுவும் புயல், மழை வரப் போகுதோ?” என கேலி செய்தபடியே தன் அலைபேசியை தேடி எடுத்தான்.

ஏற்கனவே மலரிடமிருந்து இரண்டு தவறிய அழைப்புகள் வந்திருந்தது.

“டேய் மனோ, நேத்து நைட் எப்போ வந்த?” என்ற கேள்வியோடு மலருக்கு அழைத்தான் தர்ஷன்.

“அது கிடக்குது, ஷிவிக்கு என்ன பிடிக்கும் சொல்லு?” என்ற எதிர்கேள்வியில் அதிர்ந்தவன், மனோகரின் முன் வந்து நின்றான்.

“என்ன மச்சான் முகமே ஒரு பக்கம் வீங்குன மாதிரி இருக்கு?” மனோவை ஆராய்ந்தவன், திகலோடு கேட்க, அந்தப் புறம் அழைப்பை ஏற்றிருந்த மலர், “யாருக்கு என்னாச்சு?” என்றாள் அவசரமாக.

பட்டென அலைபேசியைப் பறித்து அழைப்பைத் தூண்டித்தவன், தர்ஷனை நோக்கி முறைத்தான்.

“நான் கேட்ட கேள்விக்கு முதல்ல பதில் சொல்லு?” மனோ பிடிவாதமாக நிற்க, “நான் கேட்டதுக்கு நீ முதல்ல பதில் சொல்லு, எப்படி அடி பட்டுச்சு?” அக்கறையாக கேட்டான் தர்ஷன்.

“அடிச்சுட்டாள் ஷிவி” இளகிய புன்னகை பூத்து, முகமே ஒளிவீசி விகசித்தது.

“வாட்..?” மேலும் நம்ப இயலாது அதிர்ந்தவன், பின் சுதாரித்து, “நீ என்னடா சொல்லி வைச்ச?” படபடத்தான் தர்ஷன்.

“ஐ லவ் யூன்னு சொன்னேன்” இலகுவாக தோள் குலுக்க, நெஞ்சில் கை வைத்து அதிர்ந்து போய், அமர்ந்து விட்டான் தர்ஷன்.

தர்ஷனின் அலைபேசி மலரால் இடைவிடாது ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது.தர்ஷனால் நம்ப இயலவில்லை. இப்படி ஒன்றை அவன் கீச்சித்தும் எதிர்பார்க்கவில்லை.

“இது என்ன விளையாட்டு?” கண்டிக்க, “ஐம் சீரியஸ்டா” உறுதியாக உல்லாசமாக உரைத்தான் மனோ.

“அவ உன்னை விட வயசுல பெரியவா”

“சோ வாட்?”

“எப்படி மனோ?” உடைத்து கேட்க இயலாது, புரிய வைக்க முயன்று தவித்தான் தர்ஷன்.

“டேய் அவ பொண்ணு நான் பையன், காதலிக்கவும் கல்யாணம் பண்ணிக்கவும் இது போதாதா?”

“நீயா கனவுல மிதக்காதே, அதான் அவ கன்னத்துல ஒன்னு கொடுத்து அனுப்பி இருக்காளே”

“ஆமாம் அடி வாங்குனேன் தான். அடிக்கிற கை தான் அணைக்கும்..” கண் சிமிட்டு கனவுகள் மின்ன உரைத்தான்.

“அட அரைகிறுக்கே..!” நெற்றியில் அடித்துக் கொண்டான் தர்ஷன்.

தர்ஷனை எழுப்பி அறையில் இருந்து வெளியே தள்ளி, “காஃபி சாப்பிடு போ” எனக் கதவை அடைத்தான்.

சிணுங்கும் அலைபேசியைக் கையில் எடுத்தவன், “ஹே மலர்,தனுகிட்ட ஃபோனை கொடு” கட்டளையாக கூறினான்.

“தர்ஷன் எங்க?” அவள் படபடக்க, இவன் பிடிவாதமுடன் நிற்க, அவள் மறுத்தாள்.

“இப்போ நீ தனுவை கூப்பிடலை, கையில தர்ஷனோட ஃபேவ்ரட் ஷர்ட் இருக்கு பொசிக்கிடுவேன் பார்த்துக்கோ” மிரட்டினான். அது கொஞ்சம் வேலை செய்ய, பற்களை கடித்துக் கொண்டு, தனுஜாவைத் தேடி அவளிடம் அலைபேசியைக் கொடுத்தாள்.

அவளிடமும் அதே கேள்வியைக் கேட்க, “இன்னைக்கு ஷிவா பர்த் டே கூட இல்லையே?” எனத் தொடங்கி ஏன் என்னவென்று ஆயிரம் எதிர்க்கேள்விகளை கேட்டாளே இன்றி இறுதி வரை பதில் வரவில்லை.

எரிச்சலுற்றவன், “உன்னால சொல்ல முடியுமா முடியாதா?” கறாராகக் கேட்டான்.

கேள்விகள் மட்டுமே கேட்கத் தெரிந்த தனுவிற்கு பதில் தெரியவில்லை.

ஷிவாவைத் தெரியும் என்றாலும் அவளின் விருப்பு வெறுப்பு பற்றியெல்லாம் நெருங்கிய நண்பர்களுக்கு கூடத் தெரியவில்லை.

“இது கூட தெரிஞ்சிக்காம நீங்க எல்லாம் என்ன ஃப்ரண்ட்ஸ்?” தனு, தர்ஷன் இருவரையும் மட்டம் தட்டிவிட்டு வேலைக்கு கிளம்பினான் மனோ.

செல்லும் வழியிலே, ரோஜா பூங்கோத்தும் சாக்லேட் ஒன்றும் வாங்கிக் கொண்டான்.

நேற்று வாங்கிய அடிக்கு இந்த ஆர்ப்பாட்டம் தேவையா மனோ? மனசாட்சியே கேட்க, அதை உதைத்துத் தள்ளினான்.

மற்ற பெண்களைப் போல் இல்லையே இவள்? இவளுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ? என்ற சந்தேகத்திலே வாங்கினான்.

‘அவளுக்குப் பிடிக்கலைன்னா கிடக்கு, சாக்லேட் நமக்கு லாபம்’ என்ற நினைப்போடும் உல்லாச துள்ளலோடும் ஸ்டுடியோவிற்குள் நுழைந்தான்.

உள்ளே வந்த நொடியே விழிகள் ஷிவியின் அறை நோக்கியே பாய, வெறுமையான அறை இவனுள் ஏமாற்றத்தை ஏற்றி வைத்தது.