அத்தியாயம் 12

அன்றைய இரவு மனோகரை இழுத்துப் பிடித்து வைத்துக் கொண்ட தர்ஷன் மீண்டும் விசாரித்தான்.

ஷிவன்யாவிடம் தன்னைப் புரிய வைக்க முடியாத இயலாமையில் வந்திருந்த மனோகரை தர்ஷனின் கேள்விகள் உலுக்கி எடுக்க, அப்படியே சோர்ந்து போய் அவன் தோளில் சாய்ந்து கொண்டான்.

இதற்கு முன் இருவருக்கும் இடையிலிருந்த ஒட்டல், உரசல் எதையும் தெரிவிக்காது, கொச்சியில் நடந்த நிகழ்வை மட்டும் தெரிவித்தான்.

தலையில் கை வைத்துவிட்ட தர்ஷன், நொந்து கொண்டான். “மனோ உனக்கு முன்னவே சொன்னேன் அவளை பார்த்துக்க அவளுக்குத் தெரியும்னு, உனக்கு சொன்னாப் புரியாதாடா?” முகத்திற்கு நேராகத் திட்டித்தீர்க்க, மனோவுக்கும் மூக்கு விடைத்தது.

“ஷிவி பத்தி உனக்கு எதுவும் தெரியாதுடா தர்ஷன்”

“உனக்கு எல்லாம் தெரியுமா? சரி, அங்க என்ன பிரச்சனை செய்த?”

“ஒன்னுமே இல்லை, இரண்டு கேள்விதான் கேட்டேன். அந்த ஆதித்யா தேவோட வெளியே போனாள். அதான் எங்க போறீங்க? அவனை லவ் பண்றீங்களான்னு கேட்டேன்”

“ஓ காட்” நெற்றியில் கை வைத்து விட்டான் தர்ஷன்.

“ஏன்டா கொஞ்சமும் உனக்கு அறிவில்லையா? அவளை எப்படிடா நீ கேள்வி கேட்கலாம்?” அதட்டினான்.

“நான் ஒன்னும் தப்பா கேட்கலையே? தப்பாவும் நினைக்கலையேடா? அவ மேல உள்ள அக்கறையில தான் அப்படிப் பேசிட்டேன். அதை சொல்லி புரிய வைக்க தான் ட்ரை பண்றேன், ஆனால் என்னை பேசவே விட மாட்டேங்கிறா” சடைத்துக் கொண்டான்.

“டேய் ஷிவா அவ்வளவு ஈஸியா யாரையும் நம்ப மாட்டாள், அப்புடியும் நம்புறான்னா அவங்க நல்லவங்களா தான் இருக்கணும்”

மனோகரின் முகமே கடுகடுத்துப் போனது.

‘உண்மையில் அந்த ஆதித்யா நல்லவனாகவே இருக்கட்டுமே? ஆனால் தன்னை விட அவன் எப்படி ஷிவிக்கு முக்கியமானவனாக இருக்கலாம்?’ இந்த விஷியத்தில் மனோகரின் மனம் இன்னமும் சமாதானம் அடையவில்லை.

“ஷிவா எப்பவும் எல்லா பிரச்சனைகளையும் தனியாவே சமாளிச்சிடுவாள். அவளே உன்னை வேலைக்கு வேண்டாம்னு சொல்றான்னா நீ அவளுக்கு எவ்வளவு பெரிய இம்சையா இருக்கணும்? நான் தான் உன்னை அங்க வேலைக்கு ரிக்கமென்ட் செய்தேன், அதுக்குன்னு நீ அவளை தொந்தரவு செய்றதை எல்லாம் என்னால வேடிக்கை பார்க்க முடியாது. அவ சொன்ன மாதிரி நாளையில இருந்து நீ ஸ்டுடியோவுக்கு போகக்கூடாது” உறுதியாக சொல்லிவிட்டான் தர்ஷன்.

தர்ஷன் பேசுவது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அறைக்குள் நுழைந்து கொண்டான் மனோகர்.

தவறாக நினைக்கத் தோன்றவில்லை என்றாலும் மனோகரின் போக்கு தர்ஷனுக்கு நெருடலாகத் தோன்றியது.

படுக்கையில் புரண்டுகொண்டிருந்த மனோகருக்கு உறக்கமே வரவில்லை. என்னவோ மனம் அலைகழித்துக் கொண்டே இருக்க, அலைபேசியில் சிறிது நேரம் கவனம் பதித்தான்.

சற்றே முன்பு தான் ஆதித்தா அவனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்திருந்த புகைப்படங்கள் கண்ணில் பட்டது.

ஒரு கைக்கடிகார நிறுவனத்திற்கு விளம்பர மாடலாக ஆதித்யா நின்றிருக்க அந்த ஃபோட்டோ சூட் தான் தற்போது கண்ணில் பட்டது.

அசட்டையாக கடந்து சென்ற மனோவிற்கு ஒரு நொடி நினைவு வர, மீண்டும் அந்த புகைப்படங்களை உற்று நோக்கினான்.

அப்போது தான் ஆதித்யா அணிந்திருக்கும் உடை நேற்று கண்ட போது அணிந்திருந்த அதே உடை என நினைவில் வந்தது.

நன்றாக அந்தப் பதிவை மேலும் உற்றுப் பார்த்தான். இடம் கொச்சி என்றும் புகைப்படக் கலைஞர் என்னும் இடங்களில் ஓ பேபி மற்றும் ஷிவன்யாவையும் டேக் செய்திருப்பதையும் கண்டு கொண்டான் மனோகர்.

அன்று ஆதித்யாவிற்கு ஆட் ஷூட் நள்ளிரவிலே முடித்துவிட்டு அதிகாலை விமானத்தில் சினிமா ஷூட்டிற்கு வெளிநாடு கிளம்ப வேண்டிய கட்டாயம் இருந்தது.

கடைசி நிமிடத்தில் புகைப்படக்கலைஞர் வர இயலவில்லை என ஷூட் நிறுத்தப்படும் நிலையில் இருந்தது. அந்த பரபரப்பில் இருந்தவனின் விழிகளில் வழியாக வந்து விழுந்தாள் ஷிவன்யா.

ஷிவின்யாவை கேட்க, மாடலிங் ஷீட் எடுக்க மாட்டேன் என தவிர்த்தவளை அன்பு வேண்டுகோள் வைத்துக் காட்டாயப்படுத்தி ஆதித்யா அழைத்துச் சென்றுவிட்டான். தொழில் என்று வந்துவிட ஷிவிக்கும் நேரம் காலமும் மனோகரின் மறுப்பும் பெரிதாக தெரியவில்லை.

சில நொடிகளில் உற்றுப் பார்த்திருந்த மனோகருக்கு பொறுக்க முடியவில்லை. சட்டென அந்த பக்கத்தில் இருந்து வெளியே வந்து விட்டான்.

‘ஷிவன்யா அலுவலாகத் தானே சென்றுள்ளாள்? பின் தன்னை ஏன் தவிர்க்க வேண்டும்? அதைவிடவும் ன் கேட்கும் போது ஒரு வார்த்தை உண்மையைச் சொல்வதற்கு என்ன? தன்னைத் தூண்டிவிட்டு வார்த்தையை கொட்ட வைத்து, இருவருக்குமிடையில் இவ்வளவு பெரிய மனஸ்தாபத்தையும் உருவாக்கி வைத்துள்ளாளே ஏன்?’ அத்தனைக்கும் அவளே காரணமென கொதித்தான்.

நியாயம் கேட்கும் எண்ணத்தில் அந்த நேரம் அலைபேசியில் அவளுக்கு அழைத்து விட்டு, சட்டென அணைத்தும் விட்டான்.

இருக்கும் மனவேதனைக்கு அவளிடம் எதையாவது பேசி மேலும் மனஸ்தாபங்களை வளர்த்துக்கொள்ள வேண்டாமென்ற எச்சரிக்கை உணர்வு சட்டென உதித்தது.

ஒருவேளை இதுதான் அவள் திட்டமோ? என்று கூட சந்தேகம் தோன்றியது.

தன்னை சீண்டிவிட்டு குற்றம் செய்ய வைத்து குற்றவுணர்வைத் தூண்டிவிட்டு, ஸ்டுடியோவை விட்டும் விரட்டுகிறாளா?’ பற்களைக் கடித்தான்.

இத்தனையும் அவளே செய்துவிட்டு தான் கூறும் விளக்கங்களை கேட்காமல் விரட்டி அடிப்பதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அவள் என்ன என்னை வேண்டாமென நான் அப்படித்தான் வளையாது நிற்பேன் என்ற பிடிவாதம்.

காலையில் சற்று தாமதமாக தர்ஷன் கண் விழிக்க, மனோகர் அருகில் இல்லை. யார் சொல்லையும் கேட்காது ஸ்டுடியோவிற்குச் சென்றிருந்தான்.

“ஓ பேபி பேபி என் காதல் தேவி தேவி” வாரிசு விஜய் ஸ்டைலில் ஆடிக்கொண்டே ஸ்டுடியோவிற்குள் நுழைந்தான் மனோ.

மாதவியின் முன் வந்து நின்றவன், “ஹேய் சேச்சி வந்தாச்சா மை பேபி” சிரிப்புடனே கேட்க, “வாட்? உன் பேபியா?” சீண்டினார்.

அப்போதே தன்னை மீறி உளறியிருப்பது புரிய, “ஷ்ஷ்…” நெற்றியில் தட்டி கொண்டவன் பார்வையை தாழ்த்தியபடியே, “சாரி, ஓ பேபி” போலியாக திருத்தம் செய்தான்.

இவன் கள்ளம் கண்டுகொண்டு மாதவியும் நிறைந்த கேலிச் சிரிப்புடன், “வந்தாச்சு வந்தாச்சு” ராகமிழுத்து தலையாட்டினார்.

மறுநொடி நிற்காது விறுவிறுவென உள்ளே நுழைய, சரியாக உள்ளிருந்து வெளியே வந்தாள் ஷிவன்யா.

இத்தனைக்குப் பிறகும் கொஞ்சமும் மனம் தளராத விக்கிரமாதித்யனைப் போல் வந்து நிற்பவனை உணர்வற்று வெறித்தாள் ஷிவன்யா.

முன் வந்து நின்றவன், “என் வேலையில தப்பு இருந்தா தான் நீங்க என்னை குறை சொல்ல முடியும், வெளியே அனுப்ப முடியும்” முந்திக்கொண்டு, “இனிமே நானும் உங்க பெர்சனல்ல பத்தி கேள்வி கேட்க மாட்டேன்” என்றுவிட்டு, அவள் பதில் பேசும் முன் உள்ளே சென்று விட்டான்.

எத்தனை முறை தூக்கி எறிந்தாலும் சுவரில் பட்டுத் திரும்பும் பந்தாக மீண்டும் அவளிடமே வந்து நிற்கிறான் மனோகர். ஏனோ அத்தனை எளிதாக அவளை உதறிவிட்டு செல்ல அவனால் இயலவில்லை.

‘எத்தனை நாள் பார்க்கிறேன், வெளியே அனுப்ப காரணம் கிடைக்காமலா போய் விடும்?’ மனதில் சவாலாக நினைத்துக் கொண்டாள்.

ஷிவி அன்றிலிருந்து இவன் வேலைகளை அதிகம் உன்னிப்பாக கவனித்திருந்தாள். எதில் குறை கூறலாம் என்ற தேடல்தான். ஆனால் இவளை அறிந்த மனோகரோ வேலையில் முன்பை விட அதிக பொறுப்புடன் இருந்தான்.

இப்பொதெல்லாம் மனோகரின் வேலை ஜெனியுடன் கற்றுக்கொள்வதிலே இருக்க, ஷிவி வேலைகள் அனைத்தையும் அதிகம் கொடுத்து விரட்டிக்கொண்டே இருந்தாள்.

அவள் எண்ணம் உணர்ந்த மனோவும் பொறுமையை இழுத்து பிடித்து சொல்லும் வேலைகள் அனைத்தையும் செய்து கொண்டுதான் இருக்கிறான். இப்பொதெல்லாம் அதிகம் ஸ்டுடியோவிற்குள் இருப்பதே இல்லை.

சில நேரங்களில் எல்லாம் வேலையே இல்லாத நேரங்களில் கூட ஏதோ காரணம் கூறி அலைகளித்தாள்.

இந்த அழுத்தமெல்லாம் தாள முடியாது, பொறுமை தாள் உடைந்தது.

தகதகவென தகிக்கும் கத்திரி வெயிலில் வெளி வேலைகளை முடித்து விட்டு காய்ந்து போய் உள்ளே வந்தான்.

வெயிலில் காய்ந்து, வியர்த்து வழிய ஸ்டுடியோவிற்குள் வந்த மனோகர் நேராக ஷிவியின் அறையில் வந்து நின்றான்.

“ஏங்க ஏன் இப்படிப் பண்றீங்க?” பெரும் மூச்சோடு மே மாத சூரிய கதிர்கள் இவன் மீது இறக்கி வைத்த உஷ்ணத்தை எல்லாம் கொட்டினான்.

கணினியிலே கண்ணாக இருந்தவள், நிமிர்ந்தும் பாராது, “என்ன செய்தேன்?” நிதானமாக கேட்டாள்.

“பிரிண்டிங் லேப்ல இது லன்ச் டைமாம். ஈவினிங் நாலு மணிக்குத்தான் ஓபன் செய்வாங்களாம். அப்புறம் ஏங்க என்னை அனுப்பி வைச்சீங்க?”காய்ந்தான்.

“ஹோ… அப்படியா? அப்போ நாலு மணிக்கு போயிட்டு வா” ஷிவி போலியாக ராகம் வாசிக்க, மனோவிற்கு தகதகவென எரிந்தது.

“என்ன அப்படியாவா? இத்தனை வருஷமா அந்த பிரிண்ட்ங் லேப் கூட தானே வொர்க் பண்றீங்க? உங்களுக்கு இது தெரியாத என்ன? தெரியாதுன்னு பொய் சொல்லாதீங்க குழந்தை கூட நம்பாது” படபட பட்டாசாகப் வெடித்தான்.

நிதானமாக நிமிர்ந்து பார்த்தவள், “ஆமாம் தெரிந்தே தான் அனுப்புனேன்” என்றாள்.

“ஏங்க என்னை டார்கெட் பண்ணி கட்டம் கட்டுறீங்களா? ஏன்?” கண்கள் இடுக்க வினவினான். மூக்கு நுனி விடைக்க, காது மடல்கள் சிவக்க சினத்தில் தகித்தான்.

‘செய்த தவறுக்கும் மன்னிப்பு வேண்டி விட்டேன், பின் என்ன இவளுக்கு தன்னோடு பகை?’ உள்ளே குமுறினான்.

“முடியலைன்னா நீயாவே இந்த ஸ்டுடியோவை விட்டுக் கிளம்பிடு மனோ”கடுகு அளவு கூட கரிசனம் காட்டவில்லை அவள்.

தன் வேலையில் தவறு இல்லாத போதும் தன்னை வெளியே அனுப்பவே செய்கிறாள் எனத் தெளிவாகப் புரிந்து போனது மனோகருக்கு.

“நான் ஏன் போகணும்? ஏன் நான் உங்களை டிஸ்டப் பண்ணுறேனா?”உள்ளக்கொதிப்பை மறைத்து சீண்டினான்.

“ஏன்னா தனு கேட்டுதான் உனக்கு இங்க வேலை கொடுத்து இருக்கேன். ஆனால் இந்த வேலைக்கு நீ தகுதி இல்லாதவன், உன்னை வேலையை விட்டு நானா அனுப்புறது, அவள் எனக்குச் செய்த நல்லத்துக்கு எல்லாம் நான் செய்ற கைம்மாறாஇருக்க வேண்டாம்னு நினைக்கிறேன்.

எப்படி நீயா என் ஸ்டுடியோக்குள்ள வந்தியோ அப்படி நீயாவே போயிடு மனோ”எப்போதும் போலே இவனை ஒரு பொருட்டாகவே நினைக்காது தூக்கிஎறிந்தாள்.

அன்று நினைத்தது போல தர்ஷனுடன் பேசியதை கேட்டுவிட்டாள் எனப் புரிந்தது மனோகருக்கு. அதை இப்போது ஏதோ காரணமாக கூறினாலும் உண்மையில்லை என்றும் உறுத்தியது.

இவள் என்ன சொல்வது? நான் இங்கு தான் இருப்பேன். இவனால் என்ன செய்ய இயலும் அலட்சியமுடன் பிடிவாதமாக சவாலாக நினைத்தவன் விறுவிறுவென அறையில் இருந்து வெளியேறிப் போனான்.

அன்றைய இரவு மனோ வீட்டிற்குள் வர, காயத்திரி, செந்தில்நாதன் இருவரும் ஹாலில் அமர்ந்திருந்தனர்.

அலைபேசி இணைப்பில் தொடர்பில் இருந்தனர் ஆச்சி சிவகாமியம்மையும் கதிரேசனும்.

தர்ஷன் மலரின் திருமணத்திற்கு தேதி குறித்து, ஊரில் ஏற்பாடுகளும் தொடங்கியிருந்தது.சோர்வோடு அத்தையின் அருகேஅமர்ந்த மனோ, அனைத்தையும் செவியுற்றான்.

தந்தையின்குரல் கேட்க, பதறி எழுந்தவன் தன்னை அறைக்குள் ஓடிவிட்டான். அவரிடம் பேசினால் திருமண வேலைகளை காரணம்காட்டி ஊருக்கு அழைப்பார் எனத் தோன்றியது.

வீட்டை விட்டு விரட்டினாலும் இரண்டு மாதத்திற்கு மேல் இவனில்லாது அவர்களால் இருக்க முடியாது.

அதிலும் அன்னை தெய்வானை,மகனை அனுப்பி வைத்ததற்கு கணவரைஇடித்து பொடியாக்கி விடுவார் எனத் தெரியும். ஏனோ இப்போது அழைத்தால் கிளம்ப மனோவிற்கு மனம் வரவில்லை.