“ஒன்னு எப்பவும் போல நீ நா ன்னு பேசு,  இல்லாட்டி நீங்க நாங்க ன்னு பேசு, அது என்ன பாதி நேரம் நீ நா ன்னு சொல்லுறது,  பாதி நேரம் நீங்க நாங்க சொல்லுறது”, என்று கேட்டாள்.

       “அது அப்படி தான் வருது, திடீர்னு நீங்க வருது, திடீர்னு நீ வருது, இப்ப என்ன பண்ணலாம்”, என்று கேட்டான்.,

     “இப்படி பேசினா தான், நீ பேசுற மாதிரி இருக்கு, வேற மாதிரி பேசினா யாரோ ன்னு எனக்கே கொஞ்சம் பதட்டமா இருக்கு இல்லையா”, என்று சொன்னாள்.

    “ஆமா அது என்ன அப்படி ஒரு தூக்கம் நேத்து உனக்கு”, என்றான்.

     “ஆமாண்டா எப்படி தூங்குனதுக்கப்புறம், என்னை நடத்தி கூட்டிட்டு வந்தீங்கன்னு கேட்டேன், பாட்டியும் ஒண்ணுமே சொல்லல”, என்று சொன்னாள்.

   “நடத்தி கூட்டிட்டு வந்தாங்களா, எங்க அண்ணன் தூக்கிட்டு வந்தான், பொதி மூட்ட ஏத்திட்டு வர்ற மாதிரி இருந்துச்சாம், அண்ணன் சொன்னான்”, என்றான்.

    “யாரு உங்க அண்ணன் தூக்கினாரு, இதை நம்ப சொல்ற பாரு, போடா”,என்று சொல்லிவிட்டு அவனிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாள்.

    அவன் மறுபடியும் அவன் வேலையை பார்க்க சென்றான்.

    இவள் தான் யோசனையோடு மெட்டீரியல் வகைகளை கூகுளில் தேடிக் கொண்டிருந்தாள்.

    அதன் பிறகான நாட்களில் அவர்களுக்கு தேவையானவற்றை எப்படி வாங்குவது என்று கண்டுபிடித்து கடைகளையும் தேர்ந்தெடுத்திருந்தாள்.

   காட்டன் வகையறாக்களுக்கு, திண்டுக்கல் மதுரை பகுதிகளிலும்., டிசைனருக்கு சென்னை பகுதிகளிலும், பட்டுக்கு காஞ்சிபுரம் பகுதியும், ஹேண்ட்லுமுக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் அதை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள கடைகளை பிடித்திருந்தாள்.

    ஒரு முறை இங்கிருந்து வாங்கி அனுப்பி, அவர்களுக்கு மிகுந்த சந்தோஷம் என்று சூழ்நிலையில் தான்  இங்கிருந்து வாங்கி அனுப்புவது சக்சஸ் ஆகும் என்ற நம்பிக்கையும் அவளுக்கு வந்தது.

      கிட்டத்தட்ட அவள் வந்து ஒன்றரை மாதங்கள் கழிந்திருக்க., பாட்டி வீட்டில் தான் இருந்தாள், அவ்வப்போது கடைக்கு செல்லும் போது வந்து நவீன் கூட்டி செல்வது வழக்கம்., சென்னை காஞ்சிபுரம் பகுதிகளுக்கு செல்லும் போது மட்டும் கலையை துணைக்கு அழைத்துக் கொள்வாள்.

    கிருஷ்ணா எங்கும் இவளோடு அவ்வளவாக வெளியே சென்றது கிடையாது,  இவளும் அவனை எதிர்பார்த்ததும் கிடையாது,

    வீட்டில் உள்ள பெரியவர்கள் தான் திருமணத்திற்கு நாள் குறிக்க தொடங்கியிருந்தனர்.

    அது போலவே சொந்த பந்தங்களுக்கு சொல்லி ஏற்பாடு எல்லாம் முடிந்திருந்தது.

     திருமணத்திற்கு முந்திய நாள், இவள் திருச்சியில் உள்ள பெரிய மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.

    தன் வீட்டு பக்கம் என்று ஆட்கள் வந்திருந்தாலும், அவள் அம்மா அப்பாவை தவிர அத்தனை சொந்தங்களும் அங்கு கூடி தான் இருந்தது.

   இவள் அதைப்பற்றி எதுவும் யோசிக்கவில்லை., ஆனால் யோசிப்பாளோ என்ற எண்ணம் அனைவருக்குமே இருக்கத்தான் செய்தது.

    ஆனால் எதுவுமே கண்டுகொள்ளாமல் முகத்தில் எதுவும் காட்டிக் கொள்ளாமல் தான் இருந்தாள்.

மண்டபத்திற்கு வந்ததிலிருந்து சற்று படபடப்பாகவே உணர்ந்தாள்.

ஏனெனில் பாட்டி தாத்தா தான் முறைப்படி அவளுக்காக செய்து கொண்டிருந்தனர்.

     கிருஷ்ணாவை இவள் பார்த்து கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேல் இருக்கும்.,

    சாதாரணமாக பேசினாலும் அவனிடம் முன்பு போல பேசுவதில்லை., அதை கிருஷ்ணனுமே உணர்ந்தான்.

     ஏனென்று யோசித்தவன்., ‘நாம தான் அவளை விட்டு விலகி செல்கிறோமோ’, என்று முதலில் தோன்றியது.

    பின்பு சரி அவளை போய் அறையில் பார்த்து விட்டு வரலாம் என்று அறைக்கு வந்தான்.

    இவளோ உடைமாற்றி சாதாரணமாக வீட்டில் இருப்பது போல் இருந்தாள்.

     அவன் வந்தவுடன் அகிலா தான், “என்ன அண்ணா” என்று கேட்டாள்.

      “அவ கிட்ட கொஞ்சம் பேசணும்”, என்று சொன்னான்.

     அகிலா வெளியே சென்றாள்,  இப்போது கதவை சாத்தி அதில் சாய்ந்து நின்றவன்.

      அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    தலையசைத்து அருகில் வருமாறு அவன் அழைத்தான்.  மெதுவாக வந்தவள் சற்று தள்ளியே நின்றாள்., அப்படியே பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் கை பிடித்து தன்னருகே அழைத்தவன், தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

    “என்ன ஆச்சு ஏன் ஒரு மாதிரி இருக்க”, என்றான்.

   அவன் அணைப்பிலிருந்து தலையை மட்டும் நிமிர்த்தியவள்., அந்த அளவுக்கா தெரியுது, நான் ஒரு மாதிரி எல்லாம்  ஒன்னும் இல்ல, அப்படியே ஒரு மாதிரி இருக்கேனாலும், நீங்க ஏன் பத்து நாளா வரவேயில்லை  பாட்டி வீட்டுக்கு”, என்றாள்.

    “அப்படியெல்லாம் இல்ல, புரியாம பேசாதே, கல்யாணம் பேசியாச்சு,அது தான் “, என்றான்.

     “ஹலோ இது ஊர் உலகத்துக்காக நடக்கிற கல்யாணம், உங்களுக்கும் எனக்கும் எப்ப கல்யாணம் ஆச்சு”, என்றாள்.

    அவனும் சிரித்துக் கொண்டே, “அது ஆச்சி அப்பவே ரிஜிஸ்டர் மேரேஜ்” என்று சொன்னான்.

    “பின்னென்ன கல்யாணம் சொல்றீங்க, கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி பார்க்க கூடாதுன்னு ஏதாவது இருக்கா என்ன., இப்பவுமே இது ஊர் உலகத்திற்கான கல்யாணம், அதை ஞாபகம் வச்சுக்கோங்க, உங்களுக்கும் எனக்கும் எப்ப கல்யாணம் ஆச்சு”, என்றாள்.

   “எப்ப ஆச்சு” என்று சொல்லி அந்த ரெஜிஸ்டர் மேரேஜ் தேதியை சொன்னான்.

     இவளோ அவனை பார்த்துக்கொண்டே, இல்லை என்னும் விதமாக தலையாட்டினாள்.

     “இல்லையா அப்போ எப்ப”, என்றான்.

      “எப்போ நான் உங்களுக்கு ன்னு  சொன்னாங்களோ., அப்பவே எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு.,  நீங்க எத்தனை வருஷமா என்னை யோசிச்சிட்டு இருந்தீங்க., எனக்கு வேணும்னா தெரியாம இருக்கலாம்.,

     ஆனா தெரிஞ்சதுக்கு அப்புறம் நான் பீல் பண்ணது., அப்படித்தான், எனக்கு கல்யாணம் ஆயிருச்சு”, என்று சொன்னாள்.

   அவளை தன்னோடு இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டவன்.,  “அப்ப நான் தான் சாரி கேக்கணுமா”, என்றான்.

    “கேளுங்க” என்றாள்.

    “கேட்கலை னா”, என்றான்.

     “கேட்கலை னா, அப்புறம் அதுக்கு பனிஷ்மென்ட் இருக்கு”, என்று சொன்னாள்.

   “தா வாங்கிக்கிறேன்”, என்றவன். இப்ப நீ ஓகே வா,
ரிலாக்ஸ் ஆகுதா”, என்றான்.

     “நீ ஒரு மாதிரி இருந்தீயா, அது தான் ஏன் ன்னு கேட்கலாம் ன்னு வந்தேன்”, என்றான்.

   இவளோ அவனை பார்த்துக் கொண்டே, “நீங்க தான் என்னவோ போல இருக்கீங்களோ ன்னு நான் யோசிச்சிட்டு இருந்தேன் தெரியுமா”, என்றாள்.

   தன் அருகே இழுத்துக் கொண்டவன், அவள் தலையை தடவி விட்டு, “நான் நார்மலா தான் இருக்கேன், ஓகேவா”, என்று சொன்னான்,

    அவனை பார்த்துக் கொண்டிருந்தவள், “நமக்கு இது எத்தனாவது கல்யாணம்”, என்றாள்.

அவனும் சிரித்து விட்டு, “ஏய் என்னது இப்படி சொல்ற”, என்றான்.

    “ஊர் உலகத்த பொறுத்தவரை இது தான் நமக்கு கல்யாணம் ஓகே.,  எப்போ நான் மட்டும் தான் உங்களுக்கு அப்படி ன்னு நீங்க நினைச்சு இருந்திங்களோ, அப்பவே நமக்கு ஃபர்ஸ்ட் முடிஞ்சிடுச்சு சரியா, அதுக்கு அப்புறம் எப்ப ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணுனமோ அப்போ இன்னொரு தடவை முடிச்சுகிட்டோம் சரியா., இப்போ மூணாவது தடவை முடிக்க போறோம்”, என்றாள் மெதுவாக அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாக.,

      சிரித்துக்கொண்டவன், மூணாவது தடவை கல்யாணம் பண்ண போறோம் ன்னு சொல்ற., ஆனா இதுவரைக்கும்,  ஒரு தடவை கூட அந்த ஃபர்ஸ்ட் நைட் ஒன்னு நடக்குமே., அது நடக்கவே இல்லையே”, என்று சொன்னான்.

    அவன் தோளிலே அடித்தவள், “உங்களுக்கு நடத்திக்க தெரியலன்னு சொல்லுங்க, அத விட்டுட்டு நடக்கலன்னு சொல்லாதீங்க.,

    “நல்ல பிள்ளையா உங்க ரூமுக்கு தானே ஊரில் இருந்து வந்த அன்னைக்கு வந்தேன்., சரி நான் தான் தூங்கிட்டேன், என்னை எழுப்பி இருக்கணும் தானே, என்ன அப்படியே தூக்கி கொண்டு போய் கீழே போட்டா என்ன அர்த்தம்,

    அப்ப உங்களுக்கு நான் வேண்டான்னு தானே அர்த்தம்”என்றவள்,  அவன் சிரித்துக் கொண்டே இருக்க.,

    “எனக்கு ஒரு சந்தேகம் கேட்கட்டுமா”, என்றாள், அவன் நெஞ்சில் நாடியை பதித்து அண்ணாந்து அவனை பார்த்தபடி.,

“என்ன கேளு”, என்றான்.

  “கிணத்துக்குள்ள வச்சி நீங்க  என்னை கிஸ் பண்ணுனீங்க தானே”,என்று கேட்டாள்.

    சத்தம் இன்றி அழுத்தமாக சிரித்தவன், “அதையே இப்பதான் கண்டுபிடிச்சியா”, என்றான்.

     துளசி ஏதோ சொல்ல வர அவள் ஏடாகூடமாக ஏதோ கேட்கப் போகிறாள் என்று, அவள் வாயை பொத்தியவன் “தாயே தெரியாம கிஸ் பண்ணிட்டேன் விட்டுரு”, என்று சொன்னான்.

   “பொய் சொல்லாதீங்க நான் தான் கிஸ் பண்ண ட்ரை பண்ணினேன்., ஆனா அதுக்கு அப்புறம் அழுத்தமா கிஸ் பண்ணது யாரு? நீங்க தானே”, என்று சொன்னாள்.

     “இப்ப ஏன் அதை சொல்ற, அன்னைக்கு கிணத்துக்குள்ள நடந்ததுக்கு”, என்று சொல்ல வந்தவனிடம்,

     “வெயிட்  பண்ணுங்க, அன்னைக்கு நல்ல புள்ள மாதிரி, என்னை வெளியே போனு விரட்டி விட்டீங்க”, என்றாள்.

    “தாயே நீ பண்ண அட்டூழியத்துல நான் மட்டும்., அப்ப கொஞ்சம் என்னோட மனசு வேற மாதிரி தடுமாற தொடங்குச்சி, அது தான் உன்னை வெளியே அனுப்பி விட்டேன், அப்ப மட்டும் ஏதாவது பண்ணி இருந்தா.,  இந்நேரம் உனக்கு 5 வது மாசம் பங்ஷன் தான் நடத்தி இருக்கணும்”, என்றான்.

     சிரித்தபடி அவன் நெஞ்சில் முகம் பதித்து கொண்டவள், “நான் வளைகாப்பு க்கு பிளான் பண்ணா, நீங்க தான் கல்யாணத்துக்கு பிளான் பண்ணீங்க”, என்று சொன்னாள்.

    சிரித்தபடி அவள் நெற்றியில் முட்டியவன், “ஆனாலும் உனக்கு கொழுப்பு ஜாஸ்தி தெரியுமா”, என்றான்.

“இருந்துட்டு போகட்டும், நல்லது தான்”, என்று சொன்னாள்.

   “சரி அகிலா வேற ரொம்ப நேரமா வெளியே நிற்குறா,   உள்ள வந்து உன் ட்ட என்னன்னு கேட்ப்பா.,  காலையில பார்ப்போம்”, என்று சொன்னான்.

அவளோ அவன் முகத்தை தன்னை நோக்கி இழுத்தவள், நாடியில் முத்தம் வைக்க.,  அதன் பிறகு முத்தமிடுவது அவனது முறையாக போயிற்று.,

       கிணற்றில் யாருக்கும் தெரியாமல் அழுத்தமாக வைத்த முத்தம், இப்போது இருவரும் அறிந்தே கொடுக்கும் படி ஆயிற்று.,

     சற்று நேரம் சென்ற பிறகு வெளியே சென்றவன், “நாளைக்கு பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு சென்றான்.

   இவளோ மனதிற்குள் ‘கேடி பண்றதெல்லாம் பண்ணிட்டு, ஒண்ணுமே தெரியாத பிள்ளை மாதிரியே வெளியே காட்டிக்க வேண்டியது, கிஸ் பண்ணிடுச்சு, கல்யாணமும்  தெரிஞ்சு தான் சைன் பண்ணுச்சு, இப்ப ஹக் பண்ண மாதிரியே தான் டைட்ஆ  கிணத்துக்குள்ளயும் பண்ணாங்க, ஆனா வெளியே என்னை திட்டுற மாதிரியே ஆக்ட் விட்டு நல்ல பிள்ளை மாதிரியே சுத்துறது’, என்று நினைத்து சிரித்தவள் அதே சிரித்த முகத்துடன் தூங்கியதாலோ, என்னவோ காலை திருமணத்தின் போது முகம் மலர்ந்து இருந்தது.

    அவள் கழுத்தில் தாலி கட்டிய உடனே, வீட்டினர் முன்னிலையில் அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

    அவனுக்கு மட்டும் இத்தனை நாள்,  அவள் தான் சரி பாதி என்று தெரிந்திருந்தாலும்,

   இன்று ஊர் அறிய, ‘இவள் என் சரி பாதி’ என்று அறிவித்திருந்தான்.

     திருமணம் அதற்குப் பிறகான சடங்குகள் எல்லாம் வேகமாக நடந்தது.

     இருவரின் மலர்ந்த முகங்களே அவர்களின் சந்தோஷத்தை எடுத்துக் காட்டியது.

    நவீன் தான் அம்மாவிற்கும் பெரியம்மாவிற்கும் நடுவில் அமர்ந்திருந்தவன்.,

     “ஆனா அண்ணன் இத்தனை நாள் முகத்தில் இந்த சந்தோஷத்துல ஒரு துளி கூட காட்டல பார்த்திங்களா.,  இன்னைக்கு பாருங்களேன் கல்யாணம் முடிஞ்ச உடனே, நெத்தில கிஸ் வேற பார்த்துக்கோங்க”, என்று சொன்னான்.

    கலை தான் “வாய மூடிட்டு சும்மா இருடா”, என்று சொன்னார்.

    அவன் பெரியம்மாவோ,
“நானும் இதே தாண்டா நவீனு யோசிச்சேன்., இந்த பையன் இத்தனை நாளா, இந்த சந்தோஷத்துல ஒரு சின்ன அளவாவது நம்மகிட்ட காமிச்சிருப்பானா, இன்னைக்கு பாரேன்”, என்று சொன்னார்.

    அதே தான் பெரியம்மா, “எனக்கும் தான், இன்னைக்கு அண்ணன் வீட்டுக்கு வரட்டும், கொஸ்டின் கேக்கணும்”, என்றான்.

     “ரெண்டு பேரும் பேசாம இருக்கணும், இல்லாட்டி இன்னைக்கு சாயந்திரம் ரெண்டு பேரையும் நான் பாட்டி வீட்டுக்கு அனுப்பி வச்சிடுவேன்”, என்று சொல்லி கலை சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.

   பின்பக்கமாக அமர்ந்திருந்த, ராகவனும் கேசவனும் அதை நினைத்து தான் சிரித்துக் கொண்டிருந்தனர்.

     ‘பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேர்ந்தது’ என்று மற்றவர்கள் நினைத்திருந்தனர்.

‘ஒருத்தி யாரும் தேவையில்லை, எனக்கு இவன் மட்டும் போதும்’, என்று வந்திருந்தது இங்கு பாதி பேருக்கு தெரிந்திருந்தது.

   நிம்மதியான வாழ்க்கைக்கு ஒருவர் மேல் ஒருவர் கொண்ட காதலும், அன்புமே போதும்.,  மற்றவர்கள் எல்லாம் சிறிது தூரம் தான்.

   அனைத்து விசேஷங்களும் முடிந்து, இருவரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றனர்.

முதன் முதலாக கிருஷ்ணாவின் வீட்டிற்குள் அவனின் சரிபாதியாக காலடி எடுத்து வைத்தாள் துளசி.

கிருஷ்ணாவிற்காக வளர்ந்த துளசி கிருஷ்ணாவின் கையில் சேர்ந்தாள்.

துளசி எப்போதும் கிருஷ்ணா விற்க்கே சொந்தம்.,