“மதி மா. இந்த 10 வருஷத்தில அவன் முழுமனசா சந்தோஷமா சிரிச்சு நான் பார்த்ததே இல்லை. நாங்க வெளிய தங்கி இருக்கும்போது நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருந்தாங்க. அப்ப எல்லாம் அவன் முகத்தில சிரிப்பு இருக்கும்.
ஆனால் அதில உண்மை தன்மை இருக்காது. உண்மையாவே சந்தோஷமா அவன் சிரிச்சதுனா, அது உன்ன கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் தான். முன்னாடி அப்பா தன்னால தான் இறந்துட்டாரு. அம்மா என்கிட்ட பேசல, இப்படி ஏக்கமும் கோபமும் குற்ற உணர்ச்சியும் நிறைஞ்சிருக்கும் அவன்கிட்ட.
முன்ன மாதிரி குற்ற உணர்ச்சில, முன்னாடி நடந்ததை பத்தி ரொம்ப யோசிக்கிறதே இல்லை அவன். அதுவும் அம்மா இல்லை என்கிற வருத்தம் ஒரு பக்கம் இருந்தா கூட, ஏக்கம் இப்ப மொத்தமா போயிடுச்சு. இதுக்கெல்லாம் காரணம் நீ மட்டும் தான்.
நீ அவன் லைஃப்ல வந்ததுக்கு அப்புறம் தான் இது எல்லாமே மாறிடுச்சு. ஒரு மாசம் கூட இருக்காது ஆனா அவன் எவ்ளோ சந்தோஷமா இருந்தான் உனக்கு தெரியுமான்னு தெரியல. இந்த 10 வருஷத்துல அவன் இழந்த எல்லாத்தையுமே இந்த கொஞ்ச நாள் திருப்பி கொடுத்திடிச்சு.
அந்த அளவுக்கு சந்தோஷமா இருந்தான். ஆனால் இந்த ரெண்டு நாள் அவன் எப்படி மாறிட்டான் தெரியுமா. பத்து வருஷத்துக்கு முன்னாடி அப்பாவை இழந்து தவிக்கும் போது நான் எவ்வளவு வேதனையோடு ரகுவ பாத்தேனோ, அதே வேதனைய இப்ப பாக்குறேன்”, என்று சொல்லும்போது ரவியின் குரல் கலங்கி ஒலித்ததை உணர்ந்தாள் மதி.
ஏற்கனவே ரகுவின் மன நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. தன்னை கடினப்பட்டு திடமாக காட்டிக் கொள்கிறான் என்பதை புரிந்து வைத்திருந்தவள், இப்போது அதை ரவியின் வாயிலிருந்து கேட்டதும் இன்னும் அவளுக்குள் ஏதோ ஒன்று உடைந்தது.
இருந்தும் தன்னை யார் முன்பும் காட்டிக்கொள்ளும் பழக்கம் இல்லாதவளாக அமைதியாகவே அமர்ந்திருக்க ரவி மீண்டும் தொடர்ந்து பேசினான்.
“நீ உன்னை எவ்வளவு தூரம் வேகமாக மீட்டு எடுத்து வரீயோ? அந்த அளவுக்கு ரகு அவனும்…….. எனக்கு எல்லாமே அவன் தான். அவன் இல்லனா நானும் இல்ல. எங்க ரெண்டு உயிரையும் நீ தான் காப்பாத்தணும்”, என்று கடைசியில் கேலியான ஒரு புன்னகையுடன் முடிக்க, மதியின் முகத்திலும் அந்த புன்னகை தொத்திக் கொண்டது.
ஆனால் அவன் பேசிய 10 வருடம், அம்மாவிற்கான ஏக்கம், தந்தையின் இழப்பு அனைத்தும் அவளுக்கு வேறொரு விஷயத்தை நினைவூட்ட, அது குறித்து ரவியிடம் பேசினாள்.
அவள் பேசப் பேச ரவிக்கு மட்டுமல்லாது ஜீவா சக்தியின் முகங்களில் கூட பல பாவங்கள் வந்து போனது. அனைத்தையும் கூறி முடித்தவள், தன் யோசனையையும் கூறிவிட்டு, தனக்கு அவனுடைய உதவி தேவை என்றாள். கூடவே
“ரவி ணா, என்னால் இந்த வீட்டில இருந்து வெளியே வர முடியாது. ஆனால் சக்தியும் ஜீவாவும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க. அவர் வர்றதுக்குள்ள எல்லாத்தையும் நம்ம சரி செஞ்சு ஆகணும்”, என்று கூற,
“இது மட்டும் நடந்துச்சுன்னா? என்னைவிட இந்த உலகத்தில் சந்தோஷமா எவனுமே இருக்க மாட்டா மா”, என்றான் ரவி. கடைசியாக இதுக்கெல்லாம் ஏற்பாடு பண்றேன் என்றவன், மற்ற இருவரிடமும் சொல்லிவிட்டு வேகமாக அறையில் இருந்து வெளியேறினான்.
அவன் சென்றதும் மதி சில நொடிகள் யோசித்தவள், மற்ற இருவரையும் பார்த்தாள். இருவர் முகத்திலும் வேதனையும் ஒரு வித கோபமும் தெரிந்தது. அவர்களின் யோசனையை மாற்றும் விதமாக,
“ஜீவா, சக்தி நீங்க அண்ணாக்கு ஹெல்ப் பண்ணனும். அதே மாதிரி அத்தைகளுக்கும் உங்களால முடிஞ்ச ஹெல்ப் பண்ணனும். அவங்களுக்கு ரிசிப்சனுக்கு தேவையான சில ஹெல்ப் உங்க பக்கத்துல இருந்து கிடைச்சதுன்னா, அவங்க வேலை கொஞ்சம் ஈசி ஆகும்.
நீங்க வந்தது என்ன பாத்துக்க தான். அதே சமயத்துல இந்த ஃபேமிலில இருக்க மத்தவங்களையும் பார்த்துக்க வேண்டியது நம்மளோட பொறுப்பு”,
“இதை நீ சொல்லவே வேணாம் அக்கா. நாங்க எல்லாம் பிளான் பண்ணி தான் வந்திருக்கோம். அத்தைகள் நாளைக்கு தான் டிரஸ் காஸ்டியூம்ஸ் எல்லாம் ரெடி பண்ண போறாங்கன்னு சொன்னாங்க.
அதனால அது எல்லாத்துக்கும் பொறுப்ப நாங்க எடுத்துக்குறோம். ஒரு வேலையாவது அவங்களுக்கு குறையும். அதுபோக வேற ஏதாவது நாங்க பண்ண முடிஞ்சுதுனா. அதையும் பண்ணிடுவோம்.
அது மட்டுமில்ல, நீ சொன்ன மாதிரி ரவி அண்ணாக்கு ஹெல்ப் பண்ண வேண்டியதும் எங்களோட பொறுப்பு”, என்று தங்கள் பொறுப்பையும் பொறுப்பாக ஏற்றுக் கொள்ள, மதி மனம் ஒரு வகையில் நிம்மதியானது.
அதே நிம்மதியுடன் கண்களை மூடி உறங்க முடியுமா என்று முயற்சித்தாள். கண்களை மூடி வெகு நேரம் படுத்திருந்தவளுக்கு உறக்கம் மட்டும் தழுவுவேனா என்றது.
———————————————————————-
ரகுநந்தனுக்கு இப்போது வரை தான் கேட்ட அனைத்து செய்திகளும் குழப்பத்தில் தள்ளியது. என்ன தான் நடக்கிறது. தான் இங்கு வந்தது எதற்கு? இப்போது நடப்பது என்ன? இனி இதன் முடிவு தான் என்ன? என்று அடுக்கடுக்கான கேள்விகள் மனம் முழுக்க.
மதுரையில் வந்து இறங்கியதும் வாசு, சந்திரன் இருவரிடமும் பேசி முடித்த ரகு. பின் சந்திரனிடம் ஒரு உதவி கேட்டிருக்க, அவர் அலைபேசியை எடுத்துக்கொண்டு வெளியே சென்று இருந்தார்.
அந்த நேரம் தான் கனகவேல் அந்த ஆட்களை தான் பிடித்து வைத்திருக்கிறேன் என்று கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர் ரகு, வாசு இருவரும்.
அதிர்ச்சியில் இருந்து முதலில் மீண்டது ரகு தான். வேகமாக கனகவேலிடம், “என்னடா சொல்ற வேலு ?நீ யாரை பிடிச்சிட்டு வந்த?”, என்று கேட்க, அதற்கு அவன்,
“ஆமா ணா அந்த டிரைவரோடு சேர்ந்து இன்னும் ரெண்டு பேர் கூட இருந்து தான் இதை பண்ணிருக்கானுங்க. அண்ணியோட அப்பா அம்மா இருந்த வண்டியை ஏத்திருக்கானுங்க”,
“உனக்கு எப்படி டா அவங்களை தெரிஞ்சது”
“அதான் நீ சொன்ன இல்ல. அண்ணியோட அப்பா அம்மாவுக்கு ஆக்சிடெண்ட் நடந்திருக்கு அது சம்மந்தமா, அந்த ஆள் மேல சந்தேகமா இருக்குன்னு. அவன பத்தி விசாரிக்க சொன்ன. சரின்னு விசாரிச்சேன்.
விசாரிக்கும் போது ஆட்டோமேட்டிக்கா இவன் பையன் உள்ள இருக்கிறது. அது எதுனால? இப்படி நிறைய விஷயம் வெளியே வந்துடுச்சு. இதெல்லாம் யார் கிட்ட கேட்டா நல்லா தெளிவா புரிஞ்சுக்க முடியும்னு கண்டுபிடிச்சு, அந்த பிஏவ நேத்து நைட்டே தூக்கி அடிச்சு விசாரிச்சேன்.
அவன் அந்த லாரி டிரைவரை ஏவிவிட்டு பண்ண வச்சாங்கன்றதுல இருந்து, அந்த ஆளுங்க இப்ப எங்க மறைஞ்சு இருக்காங்கன்ற வரைக்கும் ஒன்னு விடாம சொல்லிட்டான்.
தெரிஞ்சு நிமிஷம் ஒரு நொடி கூட வேஸ்ட் பண்ணாம என் ஆளுங்கள வச்சு. அவனுங்க இடத்துக்கே போய் பிடிச்சிட்டு வர சொன்னேன். காலைல ஆறு மணி இருக்கும் நினைக்கிறேன். அப்பதான் இங்க வந்தானுங்க. என்னோட குடோன்ல தான் அடச்சு வச்சிருக்கேன்”,
“எந்த குடோன் டா?” ,
“அதான் ணா. என்னோட ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் இருக்கில்ல அதுக்கு தேவையான பொருள் எல்லாம் ஒரு குடோன்ல தான் போட்டு வைப்போம். இங்க இருந்து கொஞ்ச தூரம் தள்ளி தான் இருக்கு. அங்க தான் இருக்கானுங்க. ஆட்கள் யாரையும் வரவேண்டான்னு சொல்லிட்டு அங்கே அடச்சி வெச்சி இருக்கேன்”
“என்ன டா பல நாள் இந்த வேலை பார்த்த மாதிரி பேசுற”,
“இல்ல ணா இது தான் ஃபர்ஸ்ட் டைம். இவ்ளோ பெரிய வேளை பண்ணி இருக்கானுங்க. கொலை பண்ணி இருக்காங்க ணா. அவங்கள சும்மா விட்ரதா. அவங்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டாமா. அதான் அவங்களை பிடிச்சுட்டு வந்தேன்”,
“டேய் வேலா, இவங்க எல்லாம் அம்பு டா. இந்த அம்பை எய்தவன் தான் நம்மளோட குறி. அதுவும் அந்த ஆளுக்கு ஆல்ரெடி பெரிய தண்டனை கிடைச்சிருச்சு. இதுக்கு அப்புறம் அவனுக்கு தண்டனை கொடுக்க வேண்டியது இல்ல. என்னை பொறுத்த வரைக்கும் அவன் இனிமே மதி பக்கம் திரும்பி வரக்கூடாது அவ்வளவுதான்”,
“நீ சொல்றது சரிதான். ஆனா இவனுங்க மூனு பேரும் காசுக்காக தானே இப்படி பண்ணியிருக்காங்க. இன்னும் வேற யாராவது காசு கொடுத்தா வேற யாரையும் கொல்ல மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்.
முக்கியமா அந்த சிதம்பரத்தை விட இவங்க தான் ரொம்ப டேஞ்சரான ஆளுங்க. அதுமட்டுமில்ல நீ சொன்னியே அண்ணிக்கி மனசுல தான் பிரச்சனை. அதுக்கு ஒருவேளை இவனுங்களுக்கு தண்டனை கொடுக்கிறது மூலம் சரியாகலாமில்ல. அதுக்கு தான் சொல்றேன்”,
“நீ சொல்றது சரிதான். மதிக்கு இதனால மட்டும் இந்த பிரச்சனை சரி ஆகும்னு எனக்கு தோணல. இருந்தாலும் இது ஒரு முயற்சி தானே. கனகவேலு அவன் அண்ணிக்காக செய்ற ஒரு முயற்சி. அதை ஏன் தடுக்கனும். பண்ணலாம் வா”, என்று கூறி,
“வாசு நீங்களும் வாங்க. சந்திரன் சாரையும் கூட்டிட்டு போலாம் அங்க. இவன் அவசரமா அவங்கள கூட்டிட்டு வந்துட்டான். அதுவும் இதெல்லாம் இவனுக்கு முதல் தடவை. ஏதாவது சட்ட சிக்கல் வந்துரபோது. நீங்க தான் எங்களுக்கு கைட் பண்ண போறீங்க”,என்று கூறி அழைத்தான்.
சந்திரனும் அப்போதுதான் உள்ளே நுழைய, அவரிடமும் வாசு விரிவாக கூற, இப்போது நால்வரும் புறப்பட்டு கனகவேல் சொன்னா அந்த குடோனுக்கு சென்றனர்.