“பிரிவு என்பதே உறவுக்காகத்தான் அன்பே”(பாடல்- வா வா அன்பே…)
ரகு முகம் முழுக்க யோசனையோடு அந்த இருக்கையில் அமர்ந்திருக்க, அவனுக்கு அருகில் இருந்த மற்றொரு இருக்கையில் அமர்ந்திருந்த கனகவேல் அவனை பார்ப்பதும் பின் வாசலை பார்ப்பதுமாக அமர்ந்திருந்தான்.
ரகுவிற்கு தான் அடுத்தடுத்து செய்யப்போகும் திட்டங்களை நினைத்து ஒருபுறம் யோசனை இருந்தாலும் மதியுடன் பேசாதது வருத்தத்தை கொடுக்க தான் செய்தது.
அவளை விட்டு வந்து மூணு மணி நேரம் கூட முழுதாக ஆகி இருக்காது. இருப்பினும் வேதனை கொள்ளாமல் இருக்க முடியவில்லை. இச்சூழலில் அவனை ஆறுதல் படுத்தும் விதமாக அந்த பாடலின் வரிகள் அவன் மனதில் ஒரு ஓரம் ஒலித்துக்கொண்டிருந்தது.
விமான நிலையத்திலிருந்து வந்து கொண்டிருந்த வழியில் மகிழுந்தில் அந்த பாடலை இசைக்கவிட்டது கனகவேல் தான். ரகுவின் முகத்தில் இருந்த உணர்ச்சி துடைத்த பாவனையை கண்டு அவனை இயல்புக்கு வர வைப்பதற்கான ஒரு சிறு முயற்சி தான் அது.
உண்மையில் அந்த முயற்சியில் ஒரு துளி வெற்றி தான். அந்த பாடலின் இறுதி வரிகள் தான் ரகுவிற்கு மனவலிமையும் ஆறுதலும் வழங்கி இருந்தது.
கனகவேல் மதுரையில் ஒரு முக்கியமான நபர். படப்பிடிப்புகள் கட்சிக் கூட்டங்கள் என அனைத்திற்கும் ஆள் சேர்ப்பது தான் இவன் முக்கிய பணி.
பெரிய அளவில் சொத்துக்கள் பரிமாற்றம் நடைபெறும் போதோ இல்லை பங்காளிகள் சொத்துக்களுக்குள் பிரச்சனை ஏற்படும் போதோ இருவர் பக்கமும் பாதிப்பு இல்லாமல் சுமூகமாக பிரச்சனைகளை முடித்துக் கொடுப்பதையும் மற்றொரு பணியாக செய்து கொண்டிருந்தான். சரியாக சொல்லவேண்டும் என்றால் கட்டப்பஞ்சாயத்து நடத்துவதும் இவன் வழக்கமாக இருந்தது. ஆனால் அதிலும் நியாயமும் நேர்மையும் கொண்டு செய்து முடிப்பவன்.
கனகவேலுக்கு படங்கள் பார்ப்பதில் பெரிதாக விருப்பம் இல்லை என்றாலும் பொழுதுபோக்குக்காக எப்போதாவது திரையரங்குகளுக்குள் சென்று அப்போதைக்கு வரும் படங்களை பார்த்துவிட்டு வருவது வழக்கம்.
அப்படி பார்த்த ரகுவின் முதல் படத்திலேயே அவனுக்கு ஒரு ரசனை ஏற்பட்டது. அடுத்தடுத்து அவன் கொடுத்த ஐந்து படங்களும் அவனுடைய ரசிகனாகவே மாற்றி விட்டது கனகவேலனை.
மற்ற பெரிய பெரிய நடிகர்களுக்கு கூட ரசிகனாக இல்லாத கனகவேல் இயக்குனரான ரகுநந்தனுக்கு ரசிகனானான். அவனை நேரில் சந்தித்த போது மதிப்பும் வந்தது அவனிடம்.
எப்போதும் படப்பிடிப்புகளுக்கு ஆட்களை அனுப்பி வைப்பது மட்டும் தன் பணி என்று இருந்து கொள்பவன், ரகுநந்தன் முதல் முறை மதுரைக்கும் படம் பிடிக்க வருகிறான் என்றதும் அவனுடைய ஆட்களுடன் தானும் வந்து சேர்ந்தான்.
இயல்பாகவே ரகுவுடன் பேசி பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான். ரகுவும் ஆள் பலமும் பண பலமும் கொண்ட கனகவேல் எந்த தவறான வழியிலும் செல்லாமல் தன் பலத்தை சரியான வழியில் மட்டும் பயன்படுத்துவதை அறிந்து அவன் மீது மதிப்பு வைத்தான்.
அதனால் தான் அவனுடன் இயல்பாக ரகுவாலும் பழக முடிந்தது.
ரகு மதுரைக்கு கிளம்பும் முன்பாக கனகவேலிடம் தான் முதலில் பேசினான். சிதம்பரம் குறித்த அனைத்து தகவல்களும் தனக்கு வேண்டும் என்றான்.
கனகவேலிடம் ரகு முதல் முறையாக தனக்கென்று தனிப்பட்ட முறையில் ஒன்று கேட்கிறான் என்றால் அதை செய்து கொடுக்காமல் விட்டு விடுவானா அவன்.
ஒன்று விடாமல் அனைத்து தகவல்களையும் திரட்டினான். அதேபோல் வாசுவிடமும், சரத் சந்திரனிடமும் பேசவும் தயங்கவில்லை ரகு. அவர்கள் இருவரையும் கைப்பேசியில் அழைத்து மறுநாள் சந்திக்க வருமாறு கூறி இருந்தான். அவர்களின் வருகைக்கு தான் இவர்கள் இருவரும் காத்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் வருவதற்கு முன்பு கனகவேல் திரட்டிய தகவல்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் கேட்டுக் கொண்டான்.
ஆரம்பத்தில் சிதம்பரம் எங்கு தன் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார் என்று தொடங்கி, கட்சியில் அவருக்கு என்ன நிலைமை என்பது வரை அனைத்தையும் ஒன்று விடாமல் இரவோடு இரவாக தன்னிடம் இருக்கும் பையன்கள் மூலம் திரட்டி இருந்தான் கனகவேல்.
தற்போதைய அவன் குடும்ப பிரச்சனை குறித்த தகவல் மட்டும் சற்று மேலோட்டமாக மட்டுமே அவனுக்கு தெரிந்திருந்தது. ஆனால் அதற்கும் ஆள் அனுப்பி இருந்தான்.
சரியாக சொன்ன நேரத்திற்கு வந்து சேர்ந்தனர் வாசுவும் சரத் சந்திரனும். இருவரும் உள்ளே வந்ததும் இவர்கள் இருவரும் எழுந்து நின்றனர் வரவேற்கும் விதமாக. ரகு சரத் சந்திரனிடம் கீற்று புன்னகையுடன் கைகுலுக்கி வரவேற்று “வெல்கம் சர்”, என்றான்.
வாசுவிற்கும் அதே போலான வரவேற்பை தந்தவன், இருவருக்கும் பொதுவாக கனகவேலை தன் நண்பன் என்று அறிமுகம் செய்து வைத்தான். அதைக் கேட்டதும் கனகவேலுக்கு உள்ளம் துள்ளி குதித்தது. ஏனெனில் இதுவரை நண்பன் போல் ரகு பழகி இருந்தாலும், யாரிடமும் நண்பன் என்று கூறவோ இல்லை அவனிடமே நீ என் நண்பன் என்றோ கூறியதில்லை.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அப்படி சொல்ல வாய்ப்பு எதுவும் கிட்டியதில்லை. அனைத்தையும் அவன் செயல் உணர்த்திடும்.
ஆனால் முதல் முறை தன்னை நண்பன் என்று கூறியதும் தன் அபிமானியிடமிருந்து இப்படி ஒரு வார்த்தை வரும்போது மனம் மகிழ்ந்தானே செய்யும்.
அவர்கள் வந்திருப்பது கனகவேலின் இல்லம் என்பதால் அவர்களுக்கு அவனே குடிப்பதற்கு தேவையான பானத்தை கொடுத்து உபசரித்தான்.
அதுவரை சில நொடிகள் அமைதியாக கழிய, இப்போது சந்திரனே பேச ஆரம்பித்தார்.
“சொல்லுங்க ரகு எதுக்காக எங்களை கூப்பிட்டீங்க? அதுவும் மேகமதியை பத்தி பேசணும்னு சொன்னீங்களே?” என்று கேட்க,
“ஆமாம் மிஸ்டர் சரத் சந்திரன், மதி பத்தி தான் பேசணும். கூடவே சிதம்பரம் பத்தியும் பேசணும்”, என்றான் அவன்.
அவன் மதி என்று கூறியதை வாசு, சந்திரன் இருவருமே குறித்துக்கொண்டனர்.
மதி தன் பெயரை மூன்றாம் மனிதர்கள் யாரும் சுருக்கி கூப்பிட அனுமதித்ததில்லை. அவளுடன் நெருங்கி பழகும் நபர்களை மட்டுமே அப்படி கூப்பிட அனுமதிப்பாள். மற்ற அனைவரும் அவள் முழு பெயரையும் சொல்லி அழைப்பதை மட்டுமே ஏற்பாள்.
அதனால் தான் இவன் அப்படி உரிமையாக கூப்பிடும்போது இவனுக்கும் அவளுக்கும் என்ன பந்தம் என்று இருவருக்கும் இடையே கேள்வி தொக்கி நின்றது.
முதல் நாள் ரகுநந்தன் சந்திரனுக்கு அழைத்து தான் யார் என்று அவரிடம் அறிமுகம் செய்துகொண்டு, மேகமதியை பற்றி பேச வேண்டும் என்றிருந்தான். அவர் எதற்கு என்று விசாரிக்க, அதற்கு முன் அதை நேரடியாக வந்து பேசுவதாகவும் நேரத்தையும் குறிப்பிட்டு வந்து விடுங்கள் என்று கூறி வைத்து விட்டான்.
அவன் அப்படி கூறியதும் மதிக்கு அழைக்கலாம் என எண்ணிய சந்திரன், பின் தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு அவனைப் பற்றி சென்னையில் இருக்கும் தன்னுடைய ஆட்களின் மூலம் விசாரித்தார்.
ஏற்கனவே அவன் தரண் குழும்பத்தின் வாரிசு என்பது தெரிந்தாலும், அவனுடைய குணங்கள் பற்றி அறிய வேண்டி இருந்தது. அவன் நற்குணங்கள் பற்றி விசாரித்து அறிந்துக் கொண்டவர், நிச்சயம் தவறாக எதுவும் இல்லை என்பதையும் ஓரளவு புரிந்துக் கொண்டார்.
ஆனால் எதற்காக மேகமதியை பற்றி பேச விளைகிறான் என்ற குழப்பமும் அவர் மனதில் ஓடியது. வாசுவுக்கும் அதே குழப்பம் தான் இருந்தது.
இருவருக்கும் இன்னும் மதிக்கு திருமணம் நடந்த விஷயம் தெரியாமல் இருக்க, இவனுக்கு ரகசியமாக யாரோ ஓர் பெண்ணுடன் திருமணம் நடந்தது மட்டும் தெரிந்திருந்தது.
ரகு சிதம்பரத்தின் பெயரை எடுத்ததும் சந்திரன், “முத நீங்க உங்கள பத்தி சொல்லுங்களேன் மிஸ்டர் ரகுநந்தன். மேகமதிக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? எதுக்காக நீங்க மேகமதியை பத்தி கேட்க நினைக்கிறீங்க?”, என்று நேரடியாகவே கேட்க,
ரகு இப்போது ஒரு பெருமூச்சு விட்டவன், “ஓ…சாரி.. நான் பஸ்ட் என்னை தான் இன்டர்டியூஸ் பண்ணி இருக்கணும். அதை மறந்துட்டேன் பாருங்க. நான் மேகமதியை பத்தி பேச வந்தேன். அதுக்கு காரணம், மேகமதி இப்போ மிஸஸ். மேகமதி ரகுநந்தன். என்னோட மதின்றதுல தான்”, என்று குரலில் தானாக வந்து சேர்ந்த மென்மையும் பெருமையும் பொங்க கூறினான்.
அதைக் கேட்டு இருவருக்கும் அதிர்ச்சி என்றால், “அவங்களோட பிராப்ளம நான் முழுசா சால்வ் பண்ணனும்னு நினைக்கிறேன். அதுக்காக தான் உங்களோட ஹெல்ப் கேட்டு நான் வந்து இருக்கேன்”, என்று தொடர்ந்து அவன் கூறிய, அடுத்த வார்த்தைகள் அவர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது.
அப்படி என்றால் இரண்டும் சேர்த்து இப்போது இது இன்ப அதிர்ச்சி என்று சொன்னால் மிகையாகாது தானே?
இருவரையும், அவன் மதியின் கணவன் என்றதும் அதிர்ச்சியும் கூடவே அவன் அவள் மேல் வைத்திருக்கும் அக்கறையைக் கண்டதும் மகிழ்ச்சியும் சேர்ந்து தாக்கியது.
இருவரும் சில நொடிகள் வாயடைத்துப் போய் நிற்க, அவனும் அமைதியாக சில நொடிகள் அவர்கள் உண்மையை ஜீரணிக்க அனுமதித்தான்.
அவன் கூறியது உண்மைதான் என் அவன் கண்கள் கூறிய போதும் ஆதாரம் இல்லாமல் நம்புபவர்கள் இல்லை அந்த இரண்டு புலனாய்வாளர்களும்.
மீண்டும் ரகு, “மிஸ்டர் சரத் சந்திரன், மதி உங்க கிட்ட சொல்லலன்னு எனக்கு தெரியும். அதுக்கு காரணம் எங்க கல்யாணம் ரொம்ப சீக்கிரமாவே நடந்துருச்சு. இது ஜீவாக்கும் சக்திக்கும் மட்டும்தான் தெரியும் .
என் சைடு என்னோட மத்த ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லாருக்கும் தெரியும். அவ உங்ககிட்ட சீக்கிரம் சொல்ற ஐடியில் தான் இருந்திருப்பா. ஆனால் சிட்சுவேஷன் சரியில்லை. நீங்க புரிஞ்சிப்பீங்கன்னு நம்பிறேன்.
இப்ப நான் பேச வந்ததும் மதிக்கு ஒரு பெரிய பிராப்ளம். அந்த பிராப்ளம்ம சால்வ் பண்ணனும்னு நினைக்கிறேன். அதுக்கு உங்களோட ஹெல்ப் எனக்கு தேவை. இப்போ நீங்க தான் எனக்கு ஹெல்ப் பண்ண முடியும். பண்ணுவீங்க தானே?”
“மிஸ்டர் ரகு நீங்க சொல்றது சரிதான் நான் மதிக்கு கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவேன். பட் நீங்க தான் அவள் கணவன்னு சொல்றத நான் எப்படி நம்புறது”, என்ற அவர் கேள்வி நான் உண்மையில் மதிமேல் அக்கறை கொண்டவன் என்பதை நிரூபிக்கும் விதமாகவே இருந்தது.
ரகு அதைக் கேட்டதும் புன்னகையை பெரிதாக்கி தன் கைப்பேசியில் இருந்த தங்கள் திருமண சான்றிதழையும் புகைப்படத்தையும் எடுத்துக்காட்டினான்.
பின்னர், “உங்களுக்கு இதுல இன்னும் சந்தேகம் இருந்துச்சுன்னா, சக்தி ஜீவா யார்கிட்ட வேணும்னாலும் நீங்க பேசலாம். அவங்க உங்க கால்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க”, என்று கூறியதும் சற்றும் தாமதிக்காமல் வாசு, சக்தியின் எண்ணுக்கு அழைத்தான்.
சக்தி உடனே அழைப்பை ஏற்றவள் “வாசுண்ணா அத்து வந்துட்டாங்களா?” என்று கேட்டாள்.
“அத்துவா? அது யாரு?” என உண்மையில் புரியாமல் கேள்வி எழுப்ப,
“ரகு அத்து தான் ணா”, என்றாள்.
“ஓ அக்கா வீட்டுக்காரரா அத்துன்னு கூப்பிடுற அளவுக்கு வந்தாச்சு. ஆனா இந்த விஷயத்தை அண்ணன் கிட்ட சொல்லணும்னு உனக்கு தோணல. திடீர்னு உங்க வீட்டுக்கு ஆள் எல்லாம் புதுசா வந்து இருக்காங்களேன்னு உங்க மதி அக்கா கிட்ட கேட்டா, அவங்க நான்தான் ஏற்பாடு பண்ணேன்.
ஏதோ ஹெல்ப் கேட்டாங்க அப்படின்னு எங்ககிட்டயே டகால்டி வேலை காட்றீங்க. என்னை உண்மையாவே அண்ணன்னு நினைச்சீங்களா இல்ல சும்மா பேருக்கு கூப்பிடுறீங்களா”, என்று அவன் உண்மையிலேயே ஆதங்கத்தில் கேள்வி எழுப்ப,
“வாசுண்ணா இப்படி எல்லாம் பேசாத ரொம்ப கஷ்டமா இருக்கு. அக்காவுக்கு திடீர்னு கல்யாணம் ஏற்பாடு பண்ணாங்க. மூனே நாள்ல கல்யாணம் முடிஞ்சிடுச்சு.
அக்கா வெளிய காட்டிக்கும்போது பெரிசா இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லங்குற மாதிரி இருந்தாலும், ரொம்ப ஆசையா தான் இந்த கல்யாணத்தை பண்ணிக்கிட்டா.
இதுல உங்க கிட்ட சொன்னா நீங்க எல்லாம் உடனே கல்யாணத்துக்கு ஒத்துப்பீங்களா? நாங்களாவது அத்து சொன்ன பேச்சைக் கேட்டு உடனே ஒத்துக்கிட்டோம். ஆனா நீங்க அப்படி எல்லாம் ஒத்துக்க மாட்டீங்க.
சரண்யா மேம் கிட்டயும் உன்கிட்டயும் சந்திரன் அங்கிள் கிட்டயும் சொல்லி நாங்க சம்பந்தம் வாங்குறதுக்குள்ள ஒரு வருஷம் ஆய்டும். ஆனா அத்துக்கு ஒரு வாரத்துல கல்யாணம் பண்ணனும்னு இங்க அத்து அம்மா ஒத்த கால நிக்கிறாங்க என்ன பண்ண முடியும் சொல்லு.
அக்கா பெருசா எதுவுமே யோசிக்கல. கல்யாணம் பண்ணிக்கிட்டு எல்லாருக்கும் பொறுமையா சொல்லலாம்னு நினைச்சா. நீங்க எல்லாரும் தான் அவளுக்கு ஃபேமிலி. ரிசப்ஷனுக்கு கூட அவ உங்கள தவிர வேற யாரையும் கூப்பிட போறது கிடையாது.
இதெல்லாம் கல்யாணத்துல அக்கா என்கிட்ட சொன்னா சப்பையான காரணம். எனக்கு அப்போ எதுக்கு இப்படி சொல்றான்னு புரியல. ஆனா இப்பதான் எனக்கு புரியுது. அவ ஏன் அப்ப அப்படி சொன்னான்னு.