தன்னுடைய மகிழுந்தை தவிர்த்துவிட்டு அவர்கள் எப்போதும் குடும்பமாக செல்லும்போது மட்டும், எடுத்துச் செல்லும் மகிழ்ந்தை எடுத்துச் வந்தான்.

உண்மையில், மதியும் அவனும் மட்டும் செல்வதற்காக என்றே ஒரு புது மகிழுந்து வாங்கி வீட்டில் வைத்திருந்தான் ரகு.

இதுவரை அதில் செல்வதற்கான வாய்ப்பு இருவருக்கும் கிடைக்கவில்லை.  இப்போது முதல் முறை வெளிய போகிறார்கள், ஆனால் மருத்துவமனைக்கு.

மருத்துவமனை செல்லும் போது அதை எடுத்துச் செல்ல அவனுக்கு நிச்சயம் மனதில்லை.  அதனால் தான் மற்றொன்றை  எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.

சந்திப்பு நேரத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே இருவரும் அங்கு சென்று அமர்ந்திருக்க, மருத்துவமனையின் உள்ளே, கைகுட்டையும் தொப்பியும் அணிந்து முகத்தை மறைத்தவாறு  அமர்ந்திருந்தான்.

மற்றவர்கள் அவனை சற்று வினோதமாக பார்த்து சென்ற போதும், அவன் எண்ணம் எல்லாம் கையில் இருந்த மருத்துவ கோப்பிலும் மதியின் உடல்நிலைக் குறித்து மருத்துவர் சொல்லப் போகும் செய்தியிலும் மட்டுமே நிறைந்திருந்தது.

இவனுடன் தொலைபேசியில் கூறியது போல, சரியான நேரத்திற்கு அங்கு வந்து சேர்ந்திருந்தார் அந்த மருத்துவர்.

ரகுவும் தெளிவாக மதிக்கு என்ன பிரச்சனை என்பதையும் கேட்டு தெரிந்து கொள்ள ஆரம்பித்தான்.

மதிக்கு ஒரு வாரம் முன்பாக இருந்து இரவில் சுத்தமாக உறக்கம் இல்லாமல் இருந்தது.

இந்த ஒரு வாரத்தில் அவள் மொத்தமாகவே நான்கு அல்லது மூன்று மணி நேரம்தான் உறங்கி இருப்பாள்.

முதல் மூன்று நாட்களிலேயே அவளுக்கு உறக்கம் இல்லை என்பது புரிந்துவிட உடனே அவள் மருத்துவரை அணுகி இருந்தாள்.

அவர் முதலில் சில பரிசோதனைகளை எடுக்க செய்துவிட்டு,  பின் அவளிடம் சில கேள்விகள் கேட்க, அவள் பாதி கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளித்தாள்.

மீதியை அவள் கூற மறுத்துவிட,   அவள் மனதில் ஏதோ ஓர் அழுத்தம் இருக்கிறது, அது தான் இதற்கு முக்கிய காரணம் என்று மட்டும் அவருக்கு தெளிவாக புரிந்தது.

கடைசியாக அவர் கூறியது ஒன்றுதான்.  அவள் எப்போதும் போல் சாதாரணமாக ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் என்று உறங்கி எழ வேண்டும்,  அதற்கு அவள் மனதில் இருக்கும்  அழுத்தம் நீங்கி ஆக வேண்டும் என்றார்.

அவள் சில விஷயங்களை கூறாமல் மனதுக்குள் வைத்திருப்பதே இதற்கு மிகப்பெரிய காரணம்.

அதனால் அவள் பேச வேண்டும் என்று முயற்சியில் மருத்துவர்,  தூக்கமின்மையால் என்னென்ன பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று எடுத்துரைத்தார்.

முதலில் மிகுந்த உடல் சோர்வு ஏற்படும். பின் அவளுடைய யோசிக்கும் திறன் மொத்தமாக மங்கி போகும்.

கண்கள் விழித்திருக்கும் போதே கனவு போல் பல காட்சிகள் தோன்றி மறையும். அதாவது Hallucination ஏற்படும்.

பின் சோர்வினால் உடல் தளரும், கால்கள் நடுக்கம் ஏற்படும், ஒவ்வொரு உறுப்பாக்களாக செயல் இழக்க ஆம்பிக்கும்.

இதுவே மாதங்களாக தொடரும்போது மரணத்தைக் கூட எட்டிவிடும் என்பதையும் கூறினார்.

உண்மையில் அவளை பயமுறுத்தும் நோக்கில் அல்லாமல் அவள் உண்மைகளை வெளியே சொல்ல வேண்டும் என்று நோக்கில் அவர் கூற,

ஆனால் மதியின் பிடிவாத குணம் அறியாதவர், அவளிடம்  பல பலவாறு பேசியும் தோல்வியை தழுவி இருந்தார்.

அதன்பின் வீட்டில் யாரையாவது அழைத்து வருமாறு கூற,  அழைத்த வருவதாக கூறிவிட்டு சென்றவள்,  அதன் பிறகு வரவே இல்லை.

அவரும் அவளுடைய தகவல்களை பயன்படுத்தி அழைத்து பேசலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த சமயம் தான் ரகுவிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்திருந்தது.

மருத்துவரின் அறைக்குள் சென்ற ரகு முதல் வேலையாக தன்னுடைய வேஷத்தை கலைக்க, அதை கண்டதும், மருத்துவர் அவன் டைரக்டர் ரகுநந்தன் என்பதை உணர்ந்து கொண்டு சற்று அதிர்ச்சி பாவனை காட்டினார்.

அதனை புரிந்து கொண்டவனாக ரகுவும் அவரிடம் தங்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்பதையும் வரவேற்பு இரண்டு வாரத்தில் வைத்து விடுவோம் அதற்கு தங்களுக்கும் அழைப்பு வைப்பதாக கூறிவிட்டு,

ஆனால் அதுவரை இது ரகசியமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான்.  அவரும் அதிர்ச்சியில் இருந்து சற்று விலகி, அவன் கூறியவற்றிற்கு ஒத்துக்கொண்ட பின்னே மதி குறித்து பேச ஆரம்பித்தார்.

நான்கு நாட்களுக்குப் பின் சந்தித்த மதியிடமும் அவளுக்கு தூக்கமின்மை எப்படி இருக்கிறது என்பதை விசாரித்துவிட்டே, ரகுவிடம் பேச ஆரம்பித்தார் அந்த மருத்துவர்.

முதலில் இதன் பின் விளைவுகளை பற்றி எடுத்துக் கூறாமல் இது பெரிய  பிரச்சனை என்று பொதுவாக கூறிக் கொண்டிருந்தார்.

ஆனால் ரகு,  என்ன நடக்கும் என்று திருப்பி துருவி கேட்கவும் தான் அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினார்.

அவன் கேட்டதும் கூட, இதனால் தோன்றும் பின்விளைவுகள் என்ன என்று அறிந்து, அதற்கு ஏற்ப அவளை கவனித்து கொள்ளும் எண்ணத்தில் தான்.

ஆனால் அவர் கூறியதை கேட்ட பின், சற்று முன்பு வீட்டில் மதியின் பேச்சால் இளகி இருந்த அவன் மனம் மொத்தமாக இறுகி போனது.

அவனால் அவர் கூறுவதை யோசித்து கூட பார்க்க முடியவில்லை.

மேலும்,  ஏற்கனவே மதிக்கு ஒரு வாரத்திற்கு மேல் தூக்கமின்மை இருப்பதால், இது ஒரு நாளிலோ அல்ல ஒரு வாரத்திலோ கூட அதிகமாகலாம் என்று கூறினார்.

கேட்டவனை மிகப்பெரிய இடி ஒன்று நெஞ்சில் பாய்ந்து மொத்தமாக சாய்த்தது போல் இருந்தது.

அதற்கு மேல் எதுவும் கேட்க முடியாத ரகு அவரிடம், தான் மீண்டும் அவரை அழைத்து பேசுவதாக கூறி, நன்றி தெரிவித்துவிட்டு அவர் கொடுத்த சில மருந்துகளை மட்டும் வாங்கிக் கொண்டு மதியுடன் அங்கிருந்து கிளம்பி வந்தான்.

———————————————————–

நினைவில் மூழ்கி இருந்த ரகுவிற்கு தொலைபேசி அழைப்பு வர, அதில் இருக்கும் பெயரைக் கூட வாசித்திடாமல், எப்போதும் செய்யும் செயலாக அதனை இயக்கி காதில் வைத்தான்.

 ஹலோ என்று அவன் கூறியதும், எதிர்ப்புறமாக ஜீவாவின் குரல், “அத்து என்னாச்சு காலையில இருந்து கால் பண்ணவே இல்ல?” என்று கேள்வியாக வந்து விழுந்தது.

உடனே நிமிர்ந்து அமர்ந்தவன், “ஒண்ணும் இல்லடா, ஜீவா குட்டி…அது…..ஒரு முக்கியமான வேலை அதான். அப்புறம் கூப்பிடலாம்னு நினைச்சேன்”,

“என்ன வேலை இருந்தாலும் சக்திக்கும் எனக்கு போன் பண்ணாம இருக்க மாட்டீங்க.  காலைல இருந்து சக்திக்கும் கால் பண்ணல, எனக்கும் பண்ணல.  அதான்  என்னாச்சோன்னு கால் பண்ணே.  ஒன்னும் பிரச்சனை இல்லையே?”,

“ஒன்னும் பிரச்சனை இல்ல. சரி காலேஜ் போயிட்டீங்களா?”

“ம்ம்ம். காலேஜ்ல தான் இருக்கேன்.  சக்தியும் போய்டேன்னு மெஸேஜ் பண்ணா…அத்து உங்க வாய்ஸ் ரொம்ப டல்லா இருக்கு என்ன ஆச்சு.  அக்காவுமே நேத்துக் கால் பண்ணப்போ டல்லா தான் பேசினா”

“ஒன்னும் இல்லடா.  ரிசெப்ஷன்னு அம்மா சொல்லிட்டாங்க இல்ல.  அதான் வேலையை முடிக்கணும்னு வேகமாக ஓட ஆரம்பிச்சிட்டோம்.”

“சரி  அத்து. நீங்க சொல்றீங்க நான் ஒத்துக்கிறேன். பட் எனக்கு நீங்க ஓகே இல்லைன்னு மட்டும் தெரிய வந்திச்சு….நானே கிளம்பி வந்திருவேன்.  ஓகேவா?

“ஓகே டா” முகத்தில் புன்முறுவலுடன் கூறினான்.

“ஆமா வீடியோஸ் பாத்தீங்களா அத்து. பாத்திட்டு கால் பண்ணுவீங்கன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அப்புறம் எப்படி தூங்கினேன்னே தெரியல”

“பாத்…..க்கும்…..பாக்கல டா. டைம் கிடைக்கில.  ஒரு நாள் பொறுமையா உக்காந்து பாக்கிறேன்.  இல்லைன்னா நீதான் ரிசப்ஷன்க்கு வருவல்ல.  அப்ப எல்லாரும் சேந்துப் பாக்கலாம்”

“எனக்கு டபுள் ஓகே…அச்சோ நீங்க ஏதோ முக்கியமான வேலைன்னு சொன்னீங்கள்ள. சாரி நீங்க கண்டின்யூ பண்ணுங்க. ஈவ்னிங்….இல்லை இல்லை. நாளைக்கு மார்னிங் பேசலாம்.  பாய் அத்து”என்று வைத்துவிட்டாள்.

இப்போது ரவி ஆரம்பித்தான், “”ரகு பிரச்சனை என்னவா வேணா இருக்கட்டும்.  அதை நீ என்கிட்ட பொறுமையா சொல்லு.  ஆனா முதல்ல நீ அமைதியாகுடா.

கல்யாணத்துக்கு அப்புறம் மதி மட்டும் சந்தோசம்னு உன்னை மறக்கிற நிலைல இருந்த.  இப்போ அதே மாதிரி மதிய நினைச்சு அதிகமா வேதனைல எல்லாத்தையும் மறக்கிற.

முதல்ல எல்லா விசயத்தையும் நார்மலா ஹேண்டில் பண்ண பழகுடா. அப்பா விஷயத்திலையும் சரி மதி விஷயத்திலையும் சரி, நீ ரொம்ப எமோஷன் தான் ஆகுற.  மத்த எந்த விஷயத்துல நீ இப்படி இல்லையேடா.

எல்லாத்தையும் சமநிலையில தான ஹேண்டில் பண்ணுவ.  ஏன் இவங்க ரெண்டு பேரும் விஷயத்துல மட்டும் இந்த அளவுக்கு வீக் ஆகுற.  ரிலாக்ஸ் ஆகுடா.

அவங்க ரெண்டு பேரும் உன்னோட பலம் தானே தவிர பலகீனம் கிடையாது. அதை முதல்ல புரிஞ்சுக்கோ” என்றான்.

அவன் கூறி முடிக்க படப்பிடிப்பு தளம் வந்திருந்தது, ரகு அவனுக்கு எந்த பதிலும் கூறாமல் மகிழுந்தில் இருந்து இறங்கி சென்றான்.

படப்பிடிப்புக்கு தேவையான அனைத்தும் தயார்நிலையில் இருக்க, அதனை ஒருமுறை சரிபார்க்க வருமாறு ரகுவின் உதவி இயக்குநர் அழைத்துச் சென்று, ஐந்து நிமிடங்கள் கடந்தும் அதே நிலையில் அமர்ந்திருந்தான் ரகு.

ரவி அதற்கு மேல் காத்திருக்காமல் அவன் அருகே நெருங்கியவன்,  அவன் தலையை நிமிர்த்தி பார்க்கச் செய்து,

“என்னை பாரு ரகு, எந்த பிரச்சனை வந்தாலும் வேலையை மட்டும் தள்ளி போடக்கூடாது.

அதை சரியா செஞ்சுட்டா அடுத்து பிரச்சனையை பத்தி முழுசா யோசிக்கிறதுக்கான நேரம் நமக்கு கிடைக்கும்னு நீ தான் சொல்லி இருக்க.

நமக்கு பெரிய பிரச்சனை இருக்கு உண்மைதான்.  ஆனால் இப்ப நீ இந்த பிரச்சினைய தீர்க்கணும்னா, அதுக்கு நீ உன் மனைவி பக்கத்துல இருக்கணும்.  அதுக்கு முதல்ல நீ இந்த வேலையை முடிக்கணும்.

இந்த வேலைய நீ எவ்ளோ சீக்கிரம் முடிக்கிறியோ அவ்வளவு சீக்கிரம் உன் மனைவி கிட்ட போகலாம்.  அவளோட பிரச்சனையையும் தீர்த்து வச்சிடலாம்.

இப்ப சொல்லு நீ இப்படியே உட்கார்ந்தே இருக்க போறியா? இல்ல வேலைய முடிக்க போறியா?”என்று கேட்க,  ரகு அவன் சொன்ன செய்தியை முழுதாக உள்வாங்கினான்.

ரவியும் சில நொடிகள் அவனுக்கு நேரம் கொடுத்து ஒதுங்கி நிற்க, அடுத்த இரண்டு மூன்று நொடிகளிலேயே நன்றாக கண்ணை அழுத்தி தொடைத்துக்கொண்டு எழுந்து நின்ற ரகு,

“போலாம்” என்று எப்போதும் வேலை செய்யும் போது அவனிடம் இருக்கும் அதே தீவிர குரலில் கூறிவிட்டு முன்னே எட்டு வைத்தான். .

குரலில் இருந்த தீவிரத்தை செயலிலும் காட்டி, அன்றைய வேலையை விறுவிறுவென்று செய்ய ஆரம்பித்தான்.

அவனின் நல்ல நேரமோ என்னவோ அவன் படக்குழுவினரும் அவன் தீவிரத்தை கண்டு மிகுந்த உதவியோடு இருக்க,

அன்றைய படப்பிடிப்புக் காட்சிக்கு வந்து நடிகர்கள் நடிகைகள் என அனைவருமே அவனின் நேரத்தை வீணடிக்காமல் சரியாக வேலையை முடித்து புறப்பட்டிருந்தனர்.

அத்தனை தீவிரமாக வேலை செய்தபோதும் வீட்டிற்கு அழைத்து வேலையாட்கள் இடம் மதிக்கு மதிய உணவு கொடுக்க கூறியிருந்தான்.

கடைசி கட்டமாக அனைத்து பணிகளையும் முடித்துக் கொண்டு இருள் சூழும் நேரத்திற்கு முன்பாகவே அங்கிருந்து கிளம்பியும் இருந்தான்.

ஆனால் கிளம்பும் முன்பாக அவன் சில அழைப்புகளை மேற்கொண்டு தனக்கு தேவையான சில விஷயங்களையும் திரட்டி இருந்தான்.

தன் படப்பிடிப்பு வேலை முடிந்ததும் முதல் வேலையாக மருத்துவருக்கு அழைத்தவன், காலையில் அவர் சொன்ன விஷயத்தில் ஏதும் விடுபட்டு இருக்கிறதா என்பதை  கேட்டுக் கொண்டு,

கூடவே தன் சந்தேகங்கள் சிலவற்றையும் தெளிவுபடுத்திக் கொண்டவன், கடைசியாக தனக்கு ஒரு மனநல மருத்துவர் தேவை என்று அவரிடம் கேட்டான்.

ஆனால் அவரிடம் மதியை பற்றி தெரிவிக்கும் முன்பு அவரைப் பற்றி தான் முழுதாக அறிந்திருக்க வேண்டும்.  அதுவும் இன்றைக்கே அவர் குறித்த தகவல் தனக்கு வேண்டும் என்று கூற, சரி என்று அவரும் ஒப்புக் கொண்டார்.

அதன்படி அவன் வீட்டிற்கு செல்லும் முன்பாகவே மனநல மருத்துவர் குறித்த தகவல்கள் அவனுக்கு வந்திருந்தது.

அதை ரவியிடம் ஒப்படைத்தவன் அவரை பற்றிய விசாரித்துக் கூறும்படி கூறிவிட்டு மதியை சந்திக்க தன் அறை நோக்கி சென்றான்.

வீட்டின் உரிமையாளர்கள் மற்ற யாரும் இன்னும் வீடு திரும்பவில்லை.  தேவி கௌதமி இருவருமே பரத் இல்லாத காரணத்தால் வேலைப்பளு அதிகமாக இருக்க, அது குறித்து வெளியே சென்றிருந்தனர்.

அதுபோக வரவேற்பு வேலைகள் சிலவற்றை ரவி செய்தாலும், அது தவிர்த்து மற்ற அனைத்தும் அவர்கள் இருவரும் தான் செய்வதால் தாமதமாகதான் வீடு திரும்புவர்.

அறைக்கதவை திறந்ததும் தன்னவளை தேடி கண்கள் அழைப்பாய, அவள் அங்கிருந்த பெரிய ஜன்னலுக்கு அருகே ஒரு நாற்காலியை போட்டு அமர்ந்து கொண்டு,

தன் கையில் குழம்பி கோப்பையுடன், வானத்தில் தன் கூடு திரும்பிக் கொண்டிருந்த பறவைகளை பார்த்த வண்ணம் அமர்ந்து இருந்தாள்.

இந்த ஒரு வாரத்தில் அவளுக்கு ஏற்பட்ட சோர்வை காட்டிலும், அன்று காலையிலிருந்து மாலைக்குள் அவளுக்கு மிகுந்த சோர்வு ஏற்பட்டு விட்டதாக தோன்றியது.

முகத்தில் அத்தனை சோர்வும் கண்களில் வேதனையும் என அமர்ந்திருந்தாள்.

ரகுவின் பார்வை தீவிரமாக அவளை சூழ்ந்து இருந்தது. காலையிலிருந்து முழுமூச்சாக தன் வேலையில் கவனம் வைத்தாலும் மனதில் ஒரு ஓரம் மதியின் எண்ணம் இல்லாமல் இல்லை.

அவளுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டியவன், மனதில் பல எண்ணம் சூழ்ந்த போதும் மறவாமல் அவள் வயிற்றை கவனித்தவன், அவளுக்கு அழைத்து பேசிடவில்லை.

காலையில் பார்த்ததைவிட அதிக சோர்வுடன் தெரியும் அவள் மாற்றம் கண்டு, இம்முறை உடைந்து போக வில்லை அவன்.

மாறாக அதை மொத்தமாக தீர்க்க வேண்டும் என்று மனதில் உறுதி கொண்டான்.

சில நொடிகளிலேயே அவன் பார்வையின் தீவிரம் உணர்ந்த மதி,  திரும்பி பார்த்தாள்.

தன்னை பார்த்த வண்ணம் நின்றிருந்தவனை கண்டதும் எப்போதும் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சி இப்பொழுதும்  தோன்றிட, வேகமாக தன் கையில் இருந்த கோப்பையை அருகில் இருந்த மேஜையில் வைத்துவிட்டு எழுந்து ஒரு அடி எடுத்து வைத்தவள்,

ஏதோ நினைத்தவளாக மீண்டும்  அமர்ந்து கையை கட்டிக்கொண்டு பார்வையை வேறு புறமாக திருப்பிக் கொண்டாள்.

தன்னை வீட்டிலேயே இரு என்றவன்,  அத்தனை அக்கறை காட்டி உணவையும் மறவாமல் அனுப்பி வைத்தவன், காலையிலிருந்து தன்னிடம் பேசாமல் இருந்தது அவளுக்கு வேதனையை அளிக்க,

அவனை கண்டதும் அதனை கோபமாக வெளிக் காட்டினாள்.  ரகுவிற்கு அவளின் செயலில் முறுவல் தோன்ற, கதவில் நன்றாக சாய்ந்து நின்று கொண்டவன்,

அவளை போலவே கைகளை கட்டிக்கொண்டு அவளையே பார்த்திருந்தான்.

மதி இன்னும் அவனிடம் இருந்து எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் இருக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

புன்னகையோடு நின்றிருந்தவன், அவள் பார்வை தன்னை தீண்டியதும்  இமைகளால் கருவிழிகளை ஒருமுறை மூடி திறக்க,   அந்த அசைவின் மொழி புரிந்தவள், வேகமாக எழுந்து அவன் அருகே ஓடி சென்று அவனை இறுக அணைத்து கொண்டாள்.

காவல் புரிவா (ள்)ன்…..

மகா ஆனந்த் ✨