பாகம்- ௨௰௨

எங்கவேணா போயிகோ

நீ என்ன விட்டு போயிடாம

இருந்தாலே அது போதுமே….!

தண்ணியத்தான் விட்டுபுட்டு

தாமரையும் போனதுன்னா

தரை மேல தலசாயுமே……!

மறைஞ்சு போனாலும்

மறந்து…………(கூட மேல கூட வச்சு..ரம்மி)

மகிழுந்து முழுக்க இசை மட்டும் மிதந்து கொண்டிருக்க, அதில் பயணித்துக் கொண்டிருந்த நபர்களிடம், அந்த மகிழ்ந்து புறப்பட்ட நேரத்தில் இருந்து மௌனம் மட்டும்.

பத்து வருடங்களாகும் இசையோடு இணைந்து வாழ்ந்து கொண்டிருந்தவனுக்கு அந்த இசை  தற்சமயம் மிகுந்த கோபத்தை ஏற்படுத்த பட்டென்று அதன் பொத்தானை அமுக்கி அணைத்து விட்டான்.

வெளியே போக்குவரத்து நெரிசலால் சூழ்ந்திருந்த கரைச்சல் சத்தம் கூட  நான்கு பக்கமும் மூடி இருந்த கண்ணாடி கதவுகளால் கேட்காமல் போக,  அத்தனை அமைதியோடு பயணித்துக் கொண்டிருந்தது அந்த மகிழுந்து.

மனம் முழுக்க வலி கோபம் என அத்தனை உணர்வுகளாலும் சூழப்பட்டிருந்த ரகு,  எதையும் முகத்தில் காட்டாமல் கல் போல் இறுகி அமர்ந்திருந்தான்.

ஆனால் அவன் வேதனையை முழுமையாக உணரந்திருந்த அவன் மனையாளோ, அதே வேதனையை தன் முகத்தில் பிரதிபலித்தபடி அமர்ந்திருந்தாள்.

கூட்ட நெரிசலில் மகிழுந்து தேங்கி நிற்க, விடாது ஒலிப்பானை அழுத்திக் கொண்டே இருந்தான்.

தொடர்ந்து அடித்துக் கொண்டே இருக்க வெளியே இருந்து சிலர் மகிழுந்தின் கண்ணாடி கதவை தட்டினர்.  மதி உடனே சூழலை புரிந்து கொண்டு, “ரகு ப்ளீஸ்”, என்று கெஞ்ச,

ஆனால் இப்போது முன்பைவிட  இன்னும் அழுத்தமாக ஒழிப்பானை அலறவிட்டான்.  மதி சட்டென்று அவன் இரண்டு கைகளையும் கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.

ரகு கைகளை பிரிக்க முயற்சிக்க, ஆனால் அவனால் முடியவில்லை. உண்மையில் அத்தனை இறுக்கமாக ஒன்றும் அவள் பிடிக்கவில்லை.

ஆனாலும் அவன் மனதில் இருந்த பலகீனம் அவன் உடலிலும் தெரிய சோர்வாக அப்படியே சாய்ந்து கொண்டான்.

அதைவிட பல மடங்கு சோர்வு மதியின் முகத்தில் இருக்க, அதனை கண்டு வேதனையோடு கண்களை மூடிக்கொண்டான்.

மதிக்கே தான் என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாத நிலையில், அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்ல என்று நிச்சயம் தெரியவில்லை.

நேற்று வரை ஏதோ ஒரு ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த நம்பிக்கை கூட, ரகுவை உ‌டைந்து போய் கண்ட நொடியில் இருந்து காணாமல் போயிருந்தது.

முன்னே நின்றிருந்த வண்டிகள் நகருவதை கண்டு, ரகுவை எழுப்பியாக வேண்டும் என்ற யோசனையோடு அவனை பார்த்து,  “ரகு..”, என்றாள்.

அவன் “ம்..” என்று மட்டும் குரல் கொடுத்தான்.

“முன்னாடி வண்டி நகருது ரகு.  வண்டி எடுங்க”, என்று கூற,

மீண்டும், “ம்” மட்டும் விடையாக கிடைக்க,  சில நொடிகளுக்கு பின்பு கண்களை திறந்து பாதையில் கவனம் வைத்தான்.

மெல்ல ஊர்ந்து ஒரு வழியாக அந்த சாலையைக் கடந்தவர்கள்,  தங்கள் வீடு இருக்கும் சாலைக்கு வந்து சேர்ந்தனர்.

அங்கு மக்கள் நடமாட்டம் பெரிதாக இல்லாததால், மகிழுந்து விரைவில் வீட்டு வாசலை நெருங்கி இருந்தது.

மதி கதவை திறந்து இறங்க எத்தனிக்க, அவளை தடுத்து நிறுத்தினான் ரகு.

“மதிமா ஒரு நிமிஷம். இதுக்கு அப்புறம் நான் சொல்ற வரைக்கும் நீ வேலைக்கு போக வேணாம். இப்ப வீட்டுக்கு போ”

“ரகு என்ன சொல்றீங்க? நான்….”

“நீ வேலைக்கு போகல. வீட்டுக்கு போ”

 என்ற வார்த்தைகள் அத்தனை அழுத்தமாக வந்து விழுந்தன.

அதற்கு மேல் அந்த வார்த்தைகளை மீறிட முடியுமா? நிச்சயம் முடியாது என்று தான் மதிக்கு தோன்றியது.

ஆனால் அவளால் வேலைக்கு செல்லாமலும் இருக்க முடியாது.

இரண்டு வாரத்தில் வரவேற்பு என்னும் பொழுது அதற்குள் தன் வேலையை முடித்தாக வேண்டுமே என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

வெகு நேரம் ஆகியும் இருவரும் வெளியே வராமல் இருப்பதை உள்ளே இருந்து கண்ட ரவி, வெளியே வந்து ரகுவின் பக்கம் இருந்து கண்ணாடியை தட்டினான்.

கண்ணாடியை இறக்கியதும், அவன் முகத்தில் இருந்த இறுக்கத்தை கவனிக்காது, “டாக்டர், என்ன சொன்னாங்க?” என்று கேட்டான்.

“சொல்றேன் நீ வண்டில ஏறு” என்றவன்,

“மதிமா இறங்கு”, என்க, சொன்ன வேகத்தில் சட்டென்று மதி வண்டியில் இருந்து இறங்க,

அவள் இறங்குவதை பார்த்த ரவி, “என்னம்மா ஆச்சு?” என்று அவள் புறமாக வந்து நின்றான்.

மதி, “ஒன்னும் இல்ல ண்ணா.  டென்ஷனா இருக்காரு. அவரை கொஞ்சம் பார்த்துக்கோங்க”, என்று கூறி  உள்ளே சென்றிட,  ரகுவின் பார்வை அவளிடம் தான் இருந்தது.

சரி என்ற ரவியும் ரகு அருகே அமரச் சென்றவன்,  இப்போது தான் அவன் முகத்தில் இருந்த இறுக்கத்தை கண்டான்.

கண்ட நொடி வேகமாக வண்டியில் இருந்து இறங்கி,  மறுபக்கமாக வந்து கதவை திறந்து ரகுவை வெளியே இழுத்தான்.

“என்னடா? எதுக்கு இழுக்குற?”என்று அவன் எரிச்சலும் கோபமும் கலந்த குரலில் கேட்க,

“நீ இருக்க டென்ஷனப் பாத்தா  என்னை கொண்டு போய் எங்கேயாவது பள்ளத்தில தள்ளி விட்டுடுவ”, என்று அவனை இழுத்து மறுபக்கமாக ஏற்றி கதவை சாற்றிய பின்பு தான், மகிழுந்தை இயக்கினான் ரவி.

ரவி அவனிடம் அதற்கு மேல் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.  அவன் அமைதியாகட்டும் என்று அவனும் அமைதி காத்தான்.

கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்த ரகுவிற்கு, முதல் நாள் இரவிலிருந்து மறுநாள் காலை மருத்துவர் சொன்னது வரை அனைத்தும் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

இங்கு வீட்டில் நேரம் பத்தை தாண்டி விட்டதால் வரவேற்பு அறையில் யாரும் இல்லாமல் இருக்க மதியும் வேகமாக வரவேற்பறையை கடந்து தங்கள் அறைக்குச் சென்றாள்.

வேற எதுவும் செய்ய தோன்றாமல் கட்டிலில் விழுந்தவளுக்கும் அதே தான் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

————————————————————–

மதி தோளில் கைவைத்து ரகு என்று அழைக்க சற்று நேரம் அசையாமல் அப்படியே இருந்தவன்,

வேகமாக அவள் கையை தட்டி விட்டு விட்டு, “நாளைக்கு ரெடியா இரு மதிமா.  ஒன்பது மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட்”, என்று கூறிவிட்டு உடனே குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

அவன் வெளியே வரும் வரை, அப்படியே நின்று கொண்டிருந்தாள் மதி. வெளியே வந்தவன் அவளை நேராக பார்த்து, “எனக்கு பசிக்குது சாப்பிட போகனும்”, என்று கூறினான்.

அதற்கு மேல் அவளும் அங்கு நிற்காமல், குளியல் அறைக்குச் சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வேகமாக வர,

அவள் வந்த நொடி, அறையிலிருந்து வெளியேறி படிக்கட்டுகளில் இறங்கி உணவு மேஜைக்கு சென்றான் அவன்.

அங்கு ரவி அப்போதுதான் உணவை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட,

“நாளைக்கு சூட்டிங்க்கு 11 மணிக்கு ஸ்டார்ட் ஆகும்னு சொல்லிடு. அதுக்கு முன்னாடி எல்லாத்தையும் அங்க அசிஸ்டென்ஸ் கிட்ட சொல்லி ரெடி பண்ணிடு”, என்று கூறிவிட்டு,

உணவு மேஜையில் அமர்ந்து கொண்டு தனக்கு தேவையானதை தட்டில் எடுத்து வைத்தான்.

மதி அவன் பேசுவானா மாட்டானா என்றவாறு  அவனை பார்த்தபடி நின்று இருக்க, இவன் எதுவும் சாப்பிடாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.

அதனை கண்டவள், இவன் தான் சாப்பிடாமல் சாப்பிட மாட்டான் என்ற உணர்ந்து, அவளும் அதேப் போல் உணவை தட்டில் எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

உணவு முடிந்த இருவரும் அறைக்கு சென்றிட,  கட்டிலில் அமர்ந்தவன்,  நிமிர்ந்து மதியை பார்த்தான்.  அவள் தன்னிடம் பேசத்  துடித்துக் கொண்டிருப்பது புரிந்தது.

இருந்தாலும், இப்போது தான்  அவள் எதை கூறினாலும் ஏற்கும் மனநிலையில் இல்லை என்பதையும் உணர்ந்திருந்தவனாக,

அவளிடம், “தூங்க முயற்சி பண்ணு மதி.  நிச்சயமா இப்போ உன்கிட்ட பேசற நிலைமையில நான் இல்லை” என்றான்.

கேட்டவள் பெருமூச்சுடன் கட்டிலில் மறுபக்கம் சென்று அவனுக்கு முதுகு காட்டியபடி படுத்துக் கொண்டாள்.

“பேச வேணாமா..”, முனுமுனுப்பாக தனக்குள் சொல்லிக் கொண்டவள், அடுத்த நொடி அவனின் இறுகிய அணைப்புக்குள் இருந்தாள்.

அவளின் தோள் வளைவில் முகத்தை வைத்து கொண்டு, எதுவும் பேசாமல் அப்படியே கண்களை மூடி படுத்து கிடந்தான் ரகு.  இவளும் அந்த நிமிடம் அந்த அணைப்பை முழுதாக உணர்ந்து கொண்டிருந்தாள்.

முதல் நாள் இரவு இருவருக்கும், இன்பத்திற்கு எல்லைகளே இல்லை என்னும் அளவிற்கு இனிமையான இரவாக அமைந்தது.

ஆனால் மறுநாளே இப்படி வேதனையில் தவித்து கொண்டிருப்போம் என்று இருவருமே எண்ணி இருக்கவில்லை.

இருவருக்கும் ஒரு பொட்டு தூக்கம் கூட கண்களை எட்டவில்லை.  சிறிது நேரத்தில் மதியிடம் சிறு அசைவு தெரிய,

அவளுக்கு கழுத்து வலிக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு, அவளிடம் இருந்து விலகியவன், அவளை தன் புறமாக திருப்பி தன் மார்பு மீது சாய்த்துக் கொண்டான்.

பின் மெதுவாக விரல்கள் கொண்டு அவள் முடியை வருட,  அவனின் முயற்சி என்ன என்பதை புரிந்து கொண்டவளாக மதியும் கண்களை மூடி அவன் மார்பில் சாய்ந்து கிடந்தாள்.

வருடல் தொடர்ந்து கொண்டே இருக்க விடியும் வேலை வரை இருவரும் கண்களில் உறக்கம் இல்லாமல் இருந்தனர்.

ஆனால் விடியல் நெருங்கும் வேளையில் ரகு தன்னால் கண் அசந்து விட,  எப்போதும் போல் ஆறு மணிக்கு கண் விழித்து விட்டான்.

தான் உறங்கும் வரை கூட மதி உறங்கவில்லை என்பதை அவன் அறிவான், அதன் பின்னும் அவள் உறங்கவில்லை என்பதையும் எழுந்ததும் உணர்ந்து கொண்டான்.

இருந்தும் கண்மூடி அவன் மார்பிலேயே இருந்தாள், சற்று நேரத்தில் அவளை விலக்கிவிட்டு,  “ஹாஸ்பிடல் போகணும் மதி. சீக்கிரம் கிளம்பனும்” என்று கூறி,  குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான்.

இருவரும் தயாராகி கிளம்பி நிற்க, மதியிடம் வந்த ரகு, “கிளம்பலாம்” என்றான் அவளை பாராமல்.

அவள் அசையாமல் அவனையே பார்த்திருந்தாள்.  அவள் பார்வையை உணர்ந்து கொண்டவன், அவளை தலை திருப்பி பார்க்க, இப்போது அவள்,

“உன்கிட்ட சொல்றதுக்கு என்கிட்ட நிறைய இருக்குற ரகு.  ஆனா…” என்று அவள் ஆரம்பிக்கும் போது,

“ஆனா உன்னால என்கிட்ட இப்ப எதையும் சொல்ல முடியாது. அப்படி தான மதிமா”, என்றுவிட்டு அறையில் இருந்து வெளியேறினான்.

கீழே இவர்கள் இறங்கும்போதே,  அனைவரும் உணவு மேஜையில் கூடியிருக்க, பரத்தும் தன் பெட்டிகள் அனைத்தையும் வரவேற்பு அறையில் எடுத்து வைத்துவிட்டு காலை உணவை உண்டு கொண்டிருந்தான்.

அண்ணியை சந்திக்க செல்கிறான் என்பதை மனதில் சொல்லிக் கொண்ட ரகு, வேகமாக உணவு மேஜையில் வந்த அமர்ந்து கொள்ள,  மதியும் அவனை பின் தொடர்ந்து வந்து அமர்ந்தாள்.

தேவி, கௌதமி இருவருமே, அந்த புதுமண தம்பதிகளின் முகங்களில் நேற்று இருந்த பாவனைக்கும், இன்றைய இருவரின் பாவனைக்கும் இருக்கும் ஏழு வித்தியாசங்களை உணர்ந்தவர்களாக,

அவர்களிடம் அது பற்றி எதுவும் கேட்காமல் அமைதியாக இருக்க முடிவு எடுத்துக் கொண்டனர்.

கௌதமி பரத் இடம், “பரத் ரெண்டு வாரம் அங்க இரு.  அப்புறம் ரிசப்ஷனுக்கு மட்டும் இங்க வந்துட்டு போ. தீப்தியால இப்ப வந்துட்டு போக முடியாது.  அவ குழந்தை பெத்து தான் இங்க வர முடியும்.

அப்ப வரைக்கும் ரிஷப்ஷன் தள்ளி போடுறது நல்லா இருக்காது.  அதனால தான் அவ இருக்கும் போது  வைக்க முடிலை. நானும் இதைப் பத்தி அவகிட்ட பேசி இருக்கேன்.

அப்புறம் எந்த டென்ஷனையும் எடுத்த தலையில் ஏத்திக்காத. நான் பாத்துக்குறேன். அதே மாதிரி நீ யார் யார்கிட்ட என்ன வேலை பாக்க சொல்லிருக்கியோ அவங்களும் சரியா பாப்பாங்க”, என்றவர்,

ரகுவும் தன் வேலையை சரியாக செய்ய வேண்டும் என்ற செய்தியையும் அதில் குறிப்பிட்டு கூறி இருந்தார்.

“பெரியம்மா, ரிசப்ஷன் வரை இருந்து பங்க்ஷன்ஸ் முடிஞ்சதும் போறேன்னு சொல்லறேன். நீங்க கேட்க மாட்றீங்க”

“முடிவு செஞ்சிட்டா அப்புறம் முத்தக் கூடாது.  இப்பயே நீ கிளம்பலன்னா.  அப்புறம் வேலைன்னு ஆரம்பிச்சிருவ.  அதனால உடனே புறப்படு”

இப்போது தேவி, “ஆமாண்டா பரத்.  நானும் கொஞ்ச நாள் ஆபிஸ் போய் பாத்திக்கிறேன்.  நீ உன் பொண்டாட்டியையும் குழந்தையையும் நல்லா பாத்துக்கோ. நம்ம வீட்ல இன்னும் அடுத்தடுத்து பங்ஷன்ஸ் இருக்கு.

நீயும் தீப்தி அதுல எல்லாம் ஒன்னுவிடாம கலந்துக்கிட்டு எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்ங்க யார் வேணாம்னா”, என்றவர்,

கௌதமி இடம், “அக்கா, நம்ம வீட்ல இப்ப ரிசப்ஷன் நடக்க போது, அடுத்து குழந்தை பிறந்ததும் பெயர் வைக்கிற பங்ஷன்,  அப்புறம் மதிக்கு வளைகாப்பு பங்க்ஷன் போய்கிட்டே இருக்கும்” என்று சிறுபிள்ளையின் குதூகலத்துடன் கூறினார்.

சற்று நேரம் மதியிடம் பேசாமல் அமைதி காக்கலாம் என்று மனதில் எடுத்திருந்த முடிவை மறந்து, “என்ன மதி சீக்கிரமே சொல்லிடுவ தான, குட் நியூஸ்?” என்று கேட்க,

“உடனே கூட நான் சொல்ல ரெடி தான்.  நீங்க கேட்க ரெடியா இருக்கீங்களா, அத்தை?” என்றாள் மதி.

“இது நீ எனக்கு சொல்ற பதில் மாதிரி இல்லையே.  வேற யாருக்கோ சொல்ற பதில் மாதிரி இருக்கு” என்று கேட்டார் தேவி.

உண்மைதான் அவள் ரகுவிற்கு தான் பதில் கூறினாள்.  அவனிடம் அனைத்தையும் இப்போதே சொல்ல தயாராக இருக்கிறேன். நீ கேட்ட தயாராக இருக்கிறாயா? என்று மறைமுகமாக கேட்க,

ரகு அவள் கூறுவது புரிந்தும் கேட்காதது போல் சாப்பிட்டு முடித்தவன்,  மதியிடம், “கிளம்பு.  உனக்கு லேட் ஆச்சுன்னு சொன்னல” என்று அவளை கிளப்பினான்.

மற்றவர்களுக்கு அவர்கள் மருத்துவமனைக்கு செல்கிறார்கள் என்ற தகவல் தெரியாமல் காக்கும் பொருட்டு,

ரவியிடம் “ரவி நான் மதிய போய் டிராப் பண்ணிட்டு வந்துடறேன்.  அப்புறமா நம்ம ரெண்டு பேரும் கிளம்பலாம்.  நமக்கு தான் டைம் இருக்குல்ல”, என்று ஒரு பொய்யையும் கூறிவிட்டு அங்கிருந்து மதியுடன் புறப்பட்டான்.